என் மலர்
விளையாட்டு
11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 109-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- ஐதராபாத் எப்.சி. அணிகள் சந்தித்தன. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் ஐதராபாத்தும், டிரா செய்தாலே அரைஇறுதி வாய்ப்பு என்ற சூழலில் கோவாவும் களம் இறங்கின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் எல்லையை நெருங்கி வந்தார்களே தவிர கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இதனால் கோவா எப்.சி. அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அந்த அணி அரைஇறுதிசுற்றை எட்டுவது இது 6-வது முறையாகும். 29 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்த ஐதராபாத் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இரவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை தோற்கடித்தது.
லீக் சுற்று நிறைவில் டாப்-4 இடங்களை பிடித்த மும்பை சிட்டி (40 புள்ளி), ஏ.டி.கே. மோகன் பகான் (40 புள்ளி), நார்த் ஈஸ்ட் யுனைடெட் (33 புள்ளி), கோவா (31 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின. எஞ்சிய 7 அணிகள் வெளியேறின. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. 20 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அரைஇறுதி ஆட்டங்களில் மும்பை சிட்டி-எப்.சி. கோவா, ஏ.டி.கே. மோகன் பகான்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. அரைஇறுதி சுற்று வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
சர்வதேச மல்யுத்த போட்டி உக்ரைனில் நடந்தது. இதில் நேற்று நடந்த 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான கலாட்ஜின்ஸ்காயுடன் (பெலாரஸ்) மோதினார். இதில் தொடக்கத்தில் எதிராளியை மடக்கித்தள்ளி 4-0 என்று வினேஷ் முன்னிலை பெற்றார். அதன் பிறகு பதிலடி கொடுத்த கலாட்ஜின்ஸ் 4-4 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து மேலும் சில புள்ளிகளை பெற்று நெருக்கடி கொடுத்தார். 25 வினாடி மீதம் இருந்த போது கலாட்ஜின்சை நிமிர விடாமல் மடக்கி அமுக்கி தொடர்ச்சியாக 4 புள்ளிகளை வசப்படுத்திய வினேஷ் போகத் முடிவில் 10-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மல்யுத்த போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சில தினங்களுக்கு முன்பு டெஸ்டில் 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய 4-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவர் 77 டெஸ்டுகளில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே (619 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், வரும் ஆண்டுகளில் கும்பிளேவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதா? என அஸ்வினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
கும்பிளேவின் சாதனையை எட்ட வேண்டும் என்றால் இன்னும் 218 விக்கெட்கள் தேவை. என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற சாதனைகள் பற்றி சிந்திப்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நிறுத்தி விட்டேன்.
ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் என்னால் என்ன செய்ய முடியும், எப்படி ஆட்டத் திறனை மேம்படுத்துவது, அணிக்கு அதிக அளவில் எப்படி பங்களிப்பு அளிப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். தனிப்பட்ட முறையிலும், கிரிக்கெட் வீரராகவும் மேலும் சிறந்த முறையில் செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்.
கடந்த 15 ஆண்டுகளாக இதைத் தான் நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதையே தொடர விரும்புகிறேன் என தெரிவித்தார்.
சென்னை:
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிஷன் கைப்பந்து லீக் சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (1-ந் தேதி) தொடங்குகிறது. மார்ச் 10-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.), 2-வது இடத்தை பிடித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சுங்க இலாகா, இந்தியன் வங்கி, வருமான வரி, தமிழ்நாடு போலீஸ், ஐ.சி.எப், செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி, சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். கடந்த முறை பி டிவிஷனில் இருந்து வெற்றிபெற்ற சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப், 2-வது இடத்தை பிடித்த இந்தியன் வங்கி, தற்போது ஏ டிவிஷனுக்கு முன்னேறி உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சில போட்டிகளோடு ஆட்டம் கைவிடப்பட்டது. அந்த போட்டிதான் தற்போது நடத்தப்படுகிறது.
இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.3.5 லட்சம் ஆகும். டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் மையம் மற்றும் ஆச்சி குரூப் ஆப் கம்பெனிகள் இந்த போட்டிக்கு ஸ்பான்சர் செய்கின்றன.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்ரபாண்டியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
ஆமதாபாத் டெஸ்டில் 66 மற்றும் 25 ரன்கள் வீதம் எடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுழல் இன்றி நேராக வந்த பந்துகளில் தான் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் பேட்டிங்கின் போது நிறைய தவறிழைத்து விட்டோம். முதல் இன்னிங்சில் எங்களது பேட்டிங் சரியில்லை. ஆடுகளத்தில் பயமுறுத்தும் அளவுக்கு பூதமோ, பூச்சாண்டியோ இல்லை. பேட்டிங் செய்வதற்கு அருமையாக இருந்தது. நிலைத்து நின்று விட்டால் ரன் குவிக்கலாம் என்பதை பார்க்க முடிந்தது.
இது போன்ற ஆடுகளங்களில் விளையாடும் போது, மனஉறுதியும், ரன் எடுக்கும் முனைப்பும் அவசியமாகும். தொடர்ந்து தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டு கொண்டிருக்க முடியாது. களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பது மட்டுமல்ல, சீராக ரன் எடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதே சமயம் நல்ல பந்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் தான் எனது அணுகுமுறை இருந்தது. தெளிவான மனநிலையில் விளையாட வேண்டும். ஸ்வீப் ஷாட்டில் ஆட்டம் இழந்த அந்த பந்துக்கு முன்பு வரை எனது திட்டமிடல் சரியாகவே இருந்தது.
எனவே ஆடுகளத்தை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. சொல்லப்போனால் இது வழக்கமான இந்திய ஆடுகளம் என்பதே எனது கருத்து. 2-வது டெஸ்ட் நடந்த சென்னை சேப்பாக்கத்தில் இதை விட பந்து அதிகமாக சுழன்று திரும்பியது. ஆனால் அங்கு நிறைய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுத்தனர். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இங்கு நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பதே உண்மை.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.







