என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் வீரர்- வீராங்கனைகள் இடம்பெறுவதற்கான ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில் 2-வது மாநில பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி ஜூன் மாதம் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடக்கிறது.

    இந்த போட்டியில் சென்னை பிளையிங், கிரா விடி, கோவை கொம்பன்ஸ், மதுரை வீரன்ஸ், கரூர் ஸ்மார்சஸ், விழுப்புரம் பால்கன் பெதர்ஸ், மெரினா சூப்பர் கிங்ஸ், திருப்பூர் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து முன்னணி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் வீரர்- வீராங்கனைகள் இடம்பெறுவதற்கான ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

    இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சுரேஷ் ரெய்னா பங்கேற்றார். அவர் இந்த போட்டியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.

    சர்வதேச பேட் மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, நடிகை நிக்கி கல்ராணி, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாசலம், போட்டி அமைப்புக்குழு சேர்மன் சிவகுமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.


    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.
    ஆமதாபாத்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து நம்பர் ஒன் அணி என்பதை பறைசாற்றும் வகையில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சூப்பராக செயல்பட்டு கலக்கியது. அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை 124 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் (67 ரன்) மட்டுமே அரைசதத்தை கடந்தார். அதிரடி ஆட்டக்காரர்களான ரிஷாப் பண்ட் (21 ரன்), ஹர்திப் பாண்ட்யா (19 ரன்) ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

    பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) இந்தியா 22 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 1 ரன்னிலும், ஷிகர் தவான் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். இந்த ஆரம்ப சரிவில் இருந்து இந்திய அணி கடைசி வரை நிமிரவில்லை.

    இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலை கேப்டன் விராட்கோலியும் ஒப்புக்கொண்டுள்ளார். ‘நாங்கள் எங்களுடைய பேட்டிங் தரத்துக்கு தகுந்தபடி விளையாடாததால் தோல்வியை சந்திக்க வேண்டியதானது. இந்த மாதிரி தன்மை கொண்ட ஆடுகளத்தில் எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பவுன்சராக வரும் பந்துகளை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டம் உதாரணமாக இருந்தது. அதுபோல் ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் அதிரடி காட்ட வேண்டியது அவசியமானதாகும். அடுத்த ஆட்டத்தில் மைதானத்தில் எந்த பகுதியில் ஷாட்களை அடிக்க வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் விளையாடி சரிவில் இருந்து மீளுவோம்’ என்று விராட்கோலி தெரிவித்தார்.

    கடந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. ஆனால் இங்கிலாந்து அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தான் அங்கம் வகித்தார். இந்திய சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்தார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்‌ஷர் பட்டேல் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. ஆடும் லெவனில் ராகுல் திவேதியாவை சேர்க்க பரிசீலனை செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் வேகமாக மட்டையை சுழற்றி பவர்பிளேயில் 50 ரன்கள் திரட்டி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினர். அடுத்து வந்த டேவிட் மலான், பேர்ஸ்டோ ஆட்டம் இழக்காமல் அதிரடி காட்டி 27 பந்துகள் மீதம் வைத்து அணி வெற்றி இலக்கை எளிதாக எட்ட வைத்தனர். பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை கச்சிதமாக செய்ததால் அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை.

    வெற்றியுடன் தொடரை தொடங்கி இருக்கும் இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவதுடன், தங்களது வெற்றியை நீட்டிக்க முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் டெஸ்ட் போட்டி தொடரை போல் முதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்து பதிலடி கொடுத்து எழுச்சி காண இந்திய அணி எல்லா வகையிலும் முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    2-வது போட்டிக்கான ஆடுகளம் முதல் போட்டிக்குரியது போன்ற தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். பின் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு அனுகூலமாக அமையும். எனவே ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பீல்டிங்கையே தேர்வு செய்யும்.

    சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 8-ல் இங்கிலாந்தும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் அல்லது நவ்தீப் சைனி, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வுட்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான் எப்சி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), கோவா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
     
    மும்பை அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, இந்த முறை புகழ் பெற்ற மோகன் பகான் கிளப்புடன் இணைந்து ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் களம் கண்டது. அந்த அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பை சிட்டி, ஏ டி கே மோகன் பகான் எப்சி அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று இரவு நடைபெற்றது.

    கொல்கத்தா அணியின் வில்லியம்ஸ் 18வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் மும்பை அணியின் கோலை தடுக்க முயன்ற கொல்கத்தா வீரர் டிரி சேம் சைடு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பை வீரர் பார்தோலெமெவ் பாஸ் செய்த பந்தை அடித்த  பிபின் சிங் கோலாக மாற்றினார். 

    இறுதியில், மும்பை அணி 2-1 என்ற கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்களால் உள்ளூர் போட்டி அமைப்பாளர்களுக்கு, போட்டிகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
    கோலாலம்பூர்:

    உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை. ஒருபுறம் தடுப்பூசி போடும் பணி நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், பல்வேறு நாடுகளில் பரவி வரும், கொரோனாவின் புதிய அலை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, மக்கள் கூடும் நிகழ்வுகள் தடை செய்யப்படுகின்றன. 

    இந்நிலையில், கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவிருந்த அமெரிக்க ஓபன் பேட்மிண்டன், கனடா ஓபன் பேட்மிண்டன் ஆகிய இரண்டு தொடர்களையும் ரத்து செய்வதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    அமெரிக்க ஓபன் ஜூலை 6ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும், கனடா ஓபன் ஜூன் 29 முதல் ஜூலை 4ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டு, போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்களால், உள்ளூர் போட்டி அமைப்பாளர்களுக்கு, போட்டிகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, போட்டிகளை ரத்து செய்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடா பேட்மிண்டன் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதேபோல் ஒலிம்பிக் தகுதிப் போட்டியான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைக்கப்பட்ட தகவலையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது, டோக்கியோ ஒலிம்பிக் தரவரிசைக்கானது. ஆனால் ஒலிம்பிக் தகுதி காலத்திற்குள் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த முடியாது என்பதால், புள்ளிகள் இனி சேர்க்கப்படாது. மாற்று போட்டிகளும் சேர்க்கப்படாது என்று உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு கூறி உள்ளது.
    நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இந்த தோல்விக்கு நாளைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஐந்து 20 ஓவர் தொடரில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் நாளை (14-ந் தேதி) நடக்கிறது.

    நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இந்த தோல்விக்கு நாளைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்திய அணியின் பேட்டிங் நேற்று சுத்தமாக எடுபடவில்லை. ஆடுகளத்தின் தன்மைக்கேற்றவாறு பேட்ஸ்மேன்களால் ஆட முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமே. 124 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது பரிதாபமே.

    முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் இல்லாதது பேட்டிங்கில் பலவீனத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் நாளைய ஆட்டத்தில் அவர் இடம் பெறுவார்.

    ரோகித்சர்மா இடம் பெறும்பட்சத்தில் தவான் அல்லது லோகேஷ் ராகுல் அணியில் இருந்து நீக்கப்படுவர். ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நாளைய போட்டிக்கான அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பந்துவீச்சில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு குறைவே.

    முதல் போட்டியில் இந்தியாவை எளிதில் வீழ்த்தியதால் 2-வது ஆட்டத்திலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி உள்ளது.

    இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், கேப்டன் மார்கன், பென்ஸ் ஸ்டோக், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 15 முறை மோதி உள்ளனர். இதில் இந்தியா 7 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய 20 ஓவர் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    20 ஓவர் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, சுழற்பந்து வீரர் யசுவேந்திர சாஹல் ஆகியோர் அதிக விக்கெட் கைப்பற்றி சம நிலையில் இருந்தனர்.

    20 ஓவர் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, சுழற்பந்து வீரர் யசுவேந்திர சாஹல் ஆகியோர் அதிக விக்கெட் கைப்பற்றி சம நிலையில் இருந்தனர். சாஹல் 45 ஆட்டத்திலும், பும்ரா 50 போட்டியிலும் தலா 59 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தில் இருந்தனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய 20 ஓவர் போட்டியில் சாஹல் 1 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் பும்ராவை முந்தி 60 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தை பிடித்து உள்ளர். அவர் 25 ரன் கொடுத்து 6 விக்கெட் கைபற்றியதே சிறந்த பந்துவீச்சாகும். திருமணம் செய்ய இருப்பதால் பும்ரா 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை. இதனால் சாஹலால் அவரை முந்த முடிந்தது.

    அஸ்வின் 52 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்திலும், புவனேஷ்வர்குமார் 41 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 39 விக்கெட் கைப்பற்றி 5-வது இடத்திலும் உள்ளனர். இதில் அஸ்வின் 20 ஓவர் போட்டிக்கான அணியில் ஓரம் கட்டப்பட்டு உள்ளார். டெஸ்டில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். 


    வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது.
    ஆன்டிகுவா:

    வெஸ்ட்இண்டீஸ்- இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    விக்கெட் கீப்பர் சண்டிமால் 74 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் ஹசரங்கா அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 47 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் மொகமது 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லெவிசும், ஷாய் ஹோப்பும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தது.

    எவின் லெவிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார். ஷாய் ஹோப் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கு வழங்கப்பட்டது.
    வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜாசன் ஹோல்டர் இருந்து வந்தார். கொரோனா அச்சம் காரணமாக அவர் விலகியதால் புதிய கேப்டனாக கிரேக் பிராத்வெய்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    ஆன்டிகுவா:

    வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜாசன் ஹோல்டர் 2015-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். அவரது தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி 37 டெஸ்ட் போட்டியில் ஆடி 11 வெற்றி, 5 டிரா, 21 தோல்வி கண்டது. கடந்த மாதம் நடந்த வங்காளதேச டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக ஜாசன் ஹோல்டர் விலகினார். இதனால் அந்த தொடருக்கு தொடக்க ஆட்டக்காரர் கிரேக் பிராத்வெய்ட் கேப்டனாக செயல்பட்டார். அவரது தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. 

    இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக 28 வயதான கிரேக் பிராத்வெய்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருகிற 21-ந் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். பிராத்வெய்ட் இதுவரை 66 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8 சதம் உள்பட 3,876 ரன்னும், 10 ஒருநாள் போட்டிகளில் 278 ரன்னும் எடுத்துள்ளார்.
    முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரரும், தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மனுமான ஏ.கே.சித்திரைபாண்டியன் சென்னை பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
    சென்னை:

    முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரரும், தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மனுமான ஏ.கே.சித்திரைபாண்டியன் சென்னை பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. நெல்லை பிரண்ட்ஸ் கிளப் செயலாளர், டாக்டர் சிவந்தி கிளப் தலைமை செயல் அதிகாரி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். 

    1980 முதல் 1985-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச கைப்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். தேசிய சீனியர் போட்டியில் இந்தியன் ரெயில்வே அணிக்காக 6 முறையும், தமிழக அணிக்காக 8 முறையும் விளையாடி இருக்கிறார். அத்துடன் தமிழக அணியின் கேப்டன் பொறுப்பை 2 முறை வகித்துள்ளார். சென்னை மாநகராட்சி, ஐ.சி.எப்., ஐ.ஓ.பி. அணிகளுக்காகவும் ஆடி இருக்கிறார். 

    கைப்பந்து போட்டியில் தலைசிறந்த ஷெட்டராக முத்திரை பதித்த ஏ.கே.சித்திரைபாண்டியன் விளையாட்டில் மட்டுமின்றி நிர்வாகத்திலும் சிறந்து விளங்கினார். அவரது திறமையான நிர்வாகத்தால் பல்வேறு வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். நெல்லை பிரண்ட்ஸ், டாக்டர் சிவந்தி கிளப் மூலம் மாணவ-மாணவிகளுக்கு இலவச கைப்பந்து பயிற்சி முகாம்களை நடத்தி பாராட்டு பெற்றுள்ளார். அவரது திடீர் மறைவு செய்தி கேட்டு கைப்பந்து நிர்வாகிகளும், வீரர், வீராங்கனைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

    எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் உள்ள நெல்லை பிரண்ட்ஸ் கிளப் கட்டிடத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தொழில் அதிபர்கள் ராஜா சங்கர், ஜெயமுருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் பொன். கவுதம சிகாமணி, பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, எஸ்.டி.ஏ.டி. பொதுமேலாளர் (பொறுப்பு) டேனியல் உள்பட பல்வேறு விளையாட்டு நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் வீரர்- வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மறைவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள முதலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. ஏ.கே.சித்திரைபாண்டியனுக்கு டெய்சி என்ற மனைவியும், எமிமா, ஷிபா ரத்னா ஆகிய மகள்களும் உள்ளனர்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-மும்பை அணிகள் மோதுகின்றன.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த நவம்பர் 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), கோவா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், பெங்களூரு, சென்னை, ஈஸ்ட் பெங்கால், கேரளா பிளாஸ்டர்ஸ், ஒடிசா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    மும்பை அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, இந்த முறை புகழ் பெற்ற மோகன் பகான் கிளப்புடன் இணைந்து ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் களம் கண்டது. அந்த அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கோவாவில் இன்று இரவு நடைபெறும் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் ஏ.டி.கே.மோகன் பகான்-மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மும்பை அணி 2 லீக் ஆட்டங்களிலும் ஏ.டி.கே.மோகன் பகான் அணியை சாய்த்து இருப்பதால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டங்களில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து மகுடத்தை கைப்பற்ற மோகன் பகான் அணி மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மோகன் பகான் அணியில் ராய் கிருஷ்ணா இதுவரை 14 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோவா வீரர் இகோர் அன்குலோவுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். இறுதிப்போட்டியில் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தால் அதிக கோல் அடித்தவருக்குரிய தங்க காலணியை வெல்ல முடியும். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
    அபுதாபி:

    ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் அரை சதம் அடித்து 72 ரன்னில் வெளியேறினார். ஹஷ்மத்துல்லா ஷஹிதியும், அஸ்கர் ஆப்கனும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.

    அஸ்கர் ஆப்கன் 164 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஷஹிதி இரட்டை சதமடித்து அசத்தினார். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 160 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செதனர்.  

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரின்ஸ் மாஸ்வேர் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். கெவின் கவுசா, முசகண்டா ஆகியோர் தலா 41 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    சிக்கந்தர் ரசா பொறுப்புடன் ஆடி 85 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் சபக்வா 33 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் பாலோ ஆன் பெற்ற அந்த அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.

    மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி  விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அமீர் ஹம்சா 3 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
    இங்கிலாந்து அணிக்கு, துவக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், வெற்றிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
    அகமதாபாத்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரரான கேஎல் ராகுல் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்ட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அடில் ரஷித் பந்து வீச்சில் வெளியேறினார். தவான்-4, ரிஷப் பண்ட்- 21 ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறினர்.

    ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர்  36 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், அடில் ரஷித், ஜோர்டான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்க வீரர்கள் ஜேசன் ராய் (49), ஜோஸ் பட்லர் (28) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், வெற்றிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ ஜோடி வெற்றியை உறுதி செய்தது. 16வது ஓவரில் மாலன் சிக்சர் அடிக்க, இங்கிலாந்து அணி 130 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் மாலன் 24 ரன்களுடனும், பேர்ஸ்டோ 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, 5 போட்டி கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
    ×