என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றது.
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் காஸ்குட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    6-ம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டெனிஸ் சான்ட்கிரீனை (அமெரிக்கா) சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெரேட்டினி (இத்தாலி), மெட்வடேவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி) ஆகியோரும் இரண்டாவது சுற்றில் வெற்றி கண்டனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் புயல் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பிளின்கோவாவை (ரஷியா) விரட்டி 3-வது சுற்றை எட்டினார்.

    சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரான பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு) தன்னை எதிர்த்த ஜெர்மனியின் ஆன்ட்ரியா பெட்கோவிச்சை 7-5, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். அவர் தொடர்ச்சியாக சுவைத்த 14-வது வெற்றி இதுவாகும்.

    இதேபோல், கரோலினா முச்சோவா (செக் குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), செவஸ்தோவா (லாத்வியா), பாவ்லிசென்கோவா (ரஷியா) உள்ளிட்டோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 18-வது ஓவரை வீசிய பிராவோ டி காக், ஷம்சி மற்றும் நிகிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    செயின்ட் ஜார்ஜ்:

    வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சிம்மன்ஸ் 47 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.

    கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக ஆடினார். அவர் 25 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    அதிரடியாக ஆடி அரை சதமடித்த பொல்லார்டு

    இதையடுத்து, 168 ரன்கள் இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் மட்டும் கடைசி வரை போராடினார். அவர் 60 ரன்னில் வெளியேறினார். இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
    ஐசிசி வெளியிட்டுள்ள ஆல் ரவுண்டர் தவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை இழந்துள்ளார்.
    துபாய்:

    டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.

    இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிஆட்டத்தில் 49 மற்றும் 52 ரன்கள் வீதம் எடுத்து தங்கள் அணி மகுடம் சூடுவதில் முக்கிய பங்காற்றிய அவர் 15 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 901 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். 

    இதனால் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (891 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் (878 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும் (812 புள்ளி), இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (797 புள்ளி) 5-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

    பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், இந்தியாவின் அஸ்வின், நியூசிலாந்தின் டிம் சவுதி அப்படியே தொடருகிறார்கள்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சோபிக்கத் தவறிய இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் மீண்டும் முதலிடத்துக்கு வந்துவிட்டார்.
    இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. தனஞ்செய டி சில்வா சிறப்பாக ஆடி 91 ரன்னில் அவுட்டானார். ஷனகா 47 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இங்கிலாந்து அணி சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், வில்லே 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    5 விக்கெட் வீழ்த்திய சாம் கர்ரன்

    இதையடுத்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 29 ரன்னில் வெளியேறினார். ஜேசன் ராய் அரை சதமடித்து 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட்டுடன், கேப்டன் மார்கன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 43 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் 68 ரன்னுடனும், மார்கன் 75 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது சாம் கர்ரனுக்கு அளிக்கப்பட்டது.
    இந்த மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், சானியா மிர்சாவின் ஆட்டத்திறன் இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும்.
    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். 

    அமெரிக்க வீராங்கனை பெத்தானி மாட்டெக்குடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார் சானியா. இன்றைய முதல் சுற்று ஆட்டத்தில் சானியா-மாட்டெக் ஜோடி, 7-5, 6-3 என்ற நேர் செட்களில் அலெக்சா-டிசைரி ஜோடியை தோற்கடித்து, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. சானியாவுக்கு இது 121வது வெற்றியாகும். 

    ரோகன் போபண்ணா- திவிஜ் சரண்

    இந்த மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், சானியா மிர்சாவின் ஆட்டத்திறன் இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும். சானியா மிர்சா தனது தரவரிசையை 9-வது இடத்தில் தக்கவைத்ததால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். அங்கிதா ரெய்னாவுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாட உள்ளார்.

    விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, 6-7(6), 4-6 என்ற செட்கணக்கில் எட்வார்ட் ரோஜர்-வாஸலின் ஹென்றி ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, சானியா மிர்சாவுடன் இணைந்து விளையாட உள்ளார்.
    ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    முனிச்:

    ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

    24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி ஐரோப்பாவில் உள்ள 11 நகரங்களில் நடந்தது. கடந்த 23-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இதன் முடிவில் இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரியா, உக்ரைன், இங்கிலாந்து, குரோஷியா, செக் குடியரசு, சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச் சுக்கல், ஆகிய 16 அணிகள் 2-வதுசுற்றுக்கு முன்னேறின.

    துருக்கி, பின்லாந்து, 1960-ம் ஆண்டு சாம்பியனான ரஷியா,வட மாசிடோனியா, ஸ்காட்லாந்து, சுலோவாக்கியா, போலந்து ஆகிய 8 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 26-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதன் முடிவில் டென்மார்க், இத்தாலி, செக் குடியரசு பெல்ஜியம், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    3 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 தடவை யூரோ கோப்பையை வென்ற பிரான்ஸ், நடப்புச் சாம்பியன் போர்ச்சுக்கல், 1988-ம் ஆண்டு பட்டம் பெற்ற நெதர்லாந்து, வேல்ஸ், ஆஸ்திரியா, குரோஷியா, சுவீடன் ஆகியவை 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

    2 நாள் ஓய்வுக்குப் பிறகு கால்இறுதி ஆட்டங்கள் நாளை ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி லீக் ஆட்டங்களில் சுலோவாக்கியாவை வென்றது. சுவீடன், போலந்துடன் டிரா செய்தது. 2-வது சுற்றில் 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இந்த போட்டி தொடரில் ஸ்பெயின் அணி இதுவரை 11 கோல்கள் போட்டுள்ளது. 4 கோல்கள் வாங்கியுள்ளது.

    சுவிட்சர்லாந்து லீக் ஆட்டங்களில் துருக்கியை தோற்கடித்தது. வேல்சுடன் டிரா செய்தது. இத்தாலியிடம் தோற்றது. 2-வது சுற்றில் பிரான்சை பெனால்டி ஷூட்அவுட்டில் தோற்கடித்தது. 7 கோல்கள் போட்டுள்ளது. 8 கோல்கள் வாங்கியுள்ளது.

    ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதி போட்டியில் பெல்ஜியம்-இத்தாலி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெல்ஜியம் லீக் ஆட்டங்களில் ரஷியா, டென்மார்க் பின்லாந்து அணிகளை வீழ்த்தியது. 2-வது சுற்றில் போர்ச்சுக்கலை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. பெல்ஜியம் அணி 8 கோல்கள் போட்டுள்ளது. ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது.

    1968-ம் ஆண்டு சாம்பியனான இத்தாலி லீக் ஆட்டங்களில் துருக்கி, சுவிட்சர்லாந்து, வேல்ஸ் அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்றில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. 9 கோல்கள் போட்டுள்ளது. ஒரு கோல் வாங்கி உள்ளது.

    3-ந் தேதி நடைபெறும் 3-வது மற்றும் 4-வது கால் இறுதி ஆட்டங்களில் டென்மார்க்-செக்குடியரசு (இரவு 9.30 மணி), இங்கி லாந்து-உக்ரைன் (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன. 

    சந்தீப் வாரியர் தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பவுலராக இருப்பதும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடுவதும் குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரை ஜூலை 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதியை பொறுத்து போட்டி நடத்தப்படும்.

    இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்ட்ன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மொத்தம் 40 வீரர்கள் அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியம், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தேர்வு செய்தது.

    இந்த சீசனில் கேரளா அணியில் இருந்து தமிழக அணிக்கு இடம் மாறிய சந்தீப் வாரியரை தேர்வு செய்ததன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் பந்து வீச்சு தாக்குதல் மேலும் வலுவடையும் என்று அந்த அணியின் கேப்டன் கவுசிக் காந்தி தெரிவித்தார். சந்தீப் வாரியர் தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பவுலராக இருப்பதும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடுவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த சீசனுக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வருமாறு:-

    பி.அருண், விஜய்குமார், ஆர்.சதீஷ், ராம் அர்விந்த், ஜெகநாத், சீனிவாஸ், சந்தான சேகர், எம்.சித்தார்,சுஜய், ஹரிஷ்குமார், அருண்குமார், பிரதீஷ் ஆகாஷ், சாய் கிஷோர், ஆர்.ஜெகதீசன், சாய் பிரகாஷ், கவுசிக் காந்தி, அலெக்சாண்டர், சசிதேவ், சோனு யாதவ், டி.ராகுல், சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன்.

    ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்
    புதுடெல்லி:

    இத்தாலி தலைநகர் ரோமில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று சர்வதேச நீச்சல் போட்டி நடந்தது. இதன் கடைசி நாளில் தனியாக நடத்தப்பட்ட தகுதி நேர போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

    அத்துடன் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ‘ஏ’ தர தகுதி இலக்கையும் (53.85 வினாடி) எட்டினார். இதர போட்டியாளர்கள் இன்றி நடைபெறும் தகுதி நேர போட்டியில் இலக்கை எட்டுபவர்களுக்கு சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் அங்கீகாரம் அவசியமானதாகும். ஸ்ரீஹரி நடராஜனின் தகுதி நேரத்துக்கு சர்வதேச நீச்சல் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக அங்கீகாரம் அளித்தது. இதனை தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த 20 வயதான ஸ்ரீஹரி நடராஜ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 2-வது இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் ஆவார். ஏற்கனவே கேரளாவை சேர்ந்த 27 வயதான சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் தகுதி பெற்று சாதித்து இருந்தார்.
    இந்த ஆண்டுக்கான கேல்ரத்னா விருதுக்கு இந்திய பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் மிதாலி ராஜ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதாகும்.

    இந்த ஆண்டுக்கான கேல்ரத்னா விருதுக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரும், தமிழக கிரிக்கெட் வீரருமான அஸ்வின் மற்றும் வீராங்கனை மிதாலிராஜ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மிதாலி ராஜ் - அஸ்வின்

    இந்த இருவரது பெயரையும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மிதாலிராஜ் இந்திய பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார்.

    இதே போல தவான், கே.எல்.ராகுல், பும்ரா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    5 போட்டிக்கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருந்தது.

    செயின்ட் ஜார்ஜ்:

    வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 168 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 51 பந்தில் 71 ரன்னும் (5பவுண்டரி, 2 சிக்சர்), வான்டர் டூசன் 24 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய் 4 விக்கெட்டும், பிராவோ 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசுக்கு 15 ரன் தேவைப்பட்டது. ரபடா வீசிய அந்த ஓவரில் முதல் பந்து வைடானது. அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் ஆலன் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் ரன் கொடுக்கவில்லை. 4-வது பந்தில் 2 ரன் எடுத்தார். இதனால் கடைசி 2 பந்தில் 8 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ரபடா அபாரமாக யார்க்கர் வீசி ரன் கொடுக்கவில்லை. கடைசி பந்தில் ஆலன் சிக்சர் அடித்தார்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருந்தது. 4-வது போட்டி நாளை நடக்கிறது.

    உலகின் 6-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான ரோஜர் பெடரர் தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த அட்ரியன் மனாரினோவை எதிர் கொண்டார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 6-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த அட்ரியன் மனாரினோவை எதிர் கொண்டார்.

    இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றி இருந்தனர். முடிவை நிர்ணயம் செய்யும் 5-வது செட்டில் மனாரினோ காயத்தால் விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு அதிஷ்ர்டம் இருந்தது.

    மற்ற ஆட்டங்களில் 2-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷ்யா), 4-வது வரிசையில் உள்ள சுவரேவ் (ஜெர்மனி) வெற்றி பெற்றனர்.

    மற்ற ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    1966-ம் ஆண்டுக்கு பிறகு நாக் அவுட் சுற்றில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வீழ்த்துவது இது முதல் நிகழ்வாகும்.
    லண்டன்:

    ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் லண்டனில் நேற்று நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

    பரம எதிரிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி நின்றனர். கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு நழுவ விடுவதுமாக ஆட்டத்தின் முதல் பாதி சென்றது.

    இரண்டாவது பாதியில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணியினர், ஜெர்மனியின் தடுப்பு கோட்டையை தகர்த்தனர்.

    75-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக் கொடுத்த பந்தை இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டெர்லிங் கோலுக்குள் தள்ளிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

    ஜெர்மனி வீரர்கள் சுதாரித்து மீள்வதற்குள் 86-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்து எதிரணியை முற்றிலும் நிலைகுலைய வைத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    வெற்றியை கொண்டாடும் உக்ரைன் அணியினர்

    இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் ஸ்வீடன், உக்ரைன் அணிகள் மோதின. முதல் பாதியின் 27வது நிமிடத்தில் உக்ரைன் அணி ஒரு கோல் அடித்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 43வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போதும் எந்த அணியும் கோல் போடவில்லை.

    இதையடுத்து, கூடுதலாக 5 நிமிடம் அளிக்கப்பட்டது. ஆட்டத்தின் 121வது நிமிடத்தில் உக்ரைன் அணி மற்றொரு கோலை அடித்தது.

    இறுதியில், உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. 
    ×