என் மலர்
விளையாட்டு




லண்டன்:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
சவுத்தம்டனில் கடந்த மாதம் 18 முதல் 23-ந் தேதி வரை நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றது.
அடுத்து இங்கிலாந்துடன் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கியது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி முடிந்ததும் இந்திய அணியினருக்கு 20 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து வீரர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். சில வீரர்கள் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ கால்பந்து போட்டியை நேரில் சென்று ரசித்தனர். இதற்கிடையே இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அவர் கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது நண்பர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது.
ரிஷப் பண்ட், சமீபத்தில் யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-ஜெர்மனி ஆட்டத்தை மைதானத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் முகக்கவசம் அணியாமல் இருந்தார்.

மேலும் அவர் பல இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று சுற்றியதாக தெரிகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியினருக்கு இ-மெயிலில் ஒரு கருத்து அனுப்பி உள்ளார்.
இங்கிலாந்தில் டெல்டா வகை வைரசால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளார்.
ஜெய்ஷா அனுப்பிய இ-மெயிலில் வீரர்கள் நெரிசலான மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பை மட்டுமே வழங்கும். வைரசுக்கு எதிராக முழு நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷாவின் இந்த கடிதம் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ, சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடும் வகையில் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலை மீறி ரிஷப்பண்ட் யூரோ கால்பந்து போட்டியை பார்க்க நேரில் சென்றதாக தெரிகிறது.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விடுமுறையில் இருந்ததால் அவர் அங்கு சென்றுள்ளார். அனைத்து நேரத்திலும் முகக்கவசம் அணிந்து கொண்டு இருப்பது என்பது உடல் ரீதியாக சாத்தியமில்லாதது என்றார்.
இதையும் படியுங்கள்....கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட் என தகவல்
கொழும்பு:
இந்திய கிரிக்கெட்டின் 2-ம் தர அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு ஷிகர்தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதல் ஒருநாள் போட்டி வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இப்போட்டி தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா, காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறார்.
குசல் பெரேரா தோள்பட்டையில் காயம் அடைந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதி என்றும், காயத்தின் தன்மை அல்லது அவர் தொடரில் இருந்து விலகுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அணியின் டாக்டர் கூறும்போது, குசல் பெரேரா, ஆறு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் கேப்டனாக குசல் பெரேரா இருந்தார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை இலங்கை இழந்தது.
இதனால் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தான் அவர் காயம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காரணமாக விலகி உள்ளார்.
டோக்கியோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி ஒலிம்பிக் வருகிற 23-ந் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது.
இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இருந்து முன்னணி வீரர்-வீராங்கனைகள் விலகி உள்ளனர். காயம் மற்றும் ஓய்வு காரணமாக பெடரர், நடால், டொமினிக் திம் ஆகிய வீரர்களும், செரீனா வில்லியம்ஸ், ஹாலெப், கெர்பா, அசரெங்கா ஆகிய வீராங்கனைகளும் விலகி உள்ளனர்.
இந்த நிலையில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் கூறும்போது, ஒலிம்பிக்கில் தான் பங்கேற்பது 50 சதவீதம்தான் சாத்தியம் என்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோவுக்கு செல்கிறேன் என்று ஜோகோவிச் நேற்று உறுதிபடுத்தி உள்ளார்.
ஜோகோவிச் இந்த ஆண்டு இதுவரை நடந்துள்ள கிராண்ட்சிலாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். அமெரிக்கா ஓபன் செம்டம்பரில் நடக்கிறது.
ஜோகோவிச் ஒலிம்பிக்கில் தங்கமும், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றால் ஒரே ஆண்டில் நான்கு கிராண்சிலாம் பட்டங்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்த சாதனையை ஜெர்மனி வீரங்கனை ஸ்டெபிகிராப் (1988-ம் ஆண்டு) நிகழ்த்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்...டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்






