என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரோனா இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
    புதுவை:

    தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை’ முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

    தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் 5 சிறுமிகளை கூட்டு வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு சாத்தமங்கலம் பகுதியில் வாத்து பண்ணையில், சிவகங்கையை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் சிலர் தங்களது பெண் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக, குழந்தைகள் நல துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் அறையில் அடைத்து வைக்கப்பட்டும், வாத்துகள் மேய்த்துக்கொண்டும் இருந்த 5 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள், அவர்களை அரசு காப்பகத்தில் தங்கவைத்தனர். மேலும் இதுதொடர்பாக புதுச்சேரி முதுநிலை எஸ்.பி-யிடம், அதிகாரிகள் புகார் அளித்தனர்.

    அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீட்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மீட்கப்பட்ட சிறுமிகளை ஒரு கும்பல் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. 

    இதனை தொடர்ந்து சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வில்லியனூர் பகுதியை சேர்ந்த கன்னியப்பன், ராஜ்குமார், பசுபதி, ஐயனார், சிவா மற்றும் மூர்த்தி ஆகிய 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிறுமிகளை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்ரவதை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    தேங்காய்திட்டில் சமையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு பால்நிலைய வீதியை சேர்ந்தவர் ஆழ்வார்(வயது 67). சமையல் தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர் தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து விரக்தி அடைந்த ஆழ்வார் வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க மறுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிராக கவர்னர் சதி செய்துள்ளார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வசதியாக 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அது தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு கவர்னர் கிரண்பேடி அனுப்பினார்.

    இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டசபை வளாகத்தில் அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மதியம் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மருத்துவக் கல்லூரிகளில் சேர அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுவைக்கான இடஒதுக்கீட்டு இடங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டதையடுத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று புதுவை அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விடாப்பிடியாக இருந்து வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க, கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை கருத்தில் கொண்டு நானும், அமைச்சர்களும் கலந்து ஆலோசித்து மருத்துவ கல்லூரிகளில் சேர வசதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் அந்த கோப்புக்கு அனுமதி தர மறுத்து இது கொள்கை சம்பந்தமான விவகாரம் என்று கூறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக மத்திய அரசின் பார்வைக்கு கவர்னர் கிரண்பேடி அனுப்பி உள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அதிக இடங்கள் கிடைக்க கூடாது என்பதற்காக இது போன்று திட்டமிட்டு சதி செய்துள்ளார்.

    தற்போது மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். இதற்கு காலம் இல்லை. எனவே இதுகுறித்து நானும், அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினோம். கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி உள்ளேன். நாளை (இன்று) அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இறுதி ஆண்டு தேர்வு பயத்தால் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    சென்னை பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி வசந்தா. இவர்களுடைய மகள் சீசா வயது (22). திருபுவனை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தார். மதகடிப்பட்டு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது தாயார் வசந்தாவுடன் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு சீசா தனது அறையில் தூங்கச் சென்றார். காலையில் நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த வசந்தா அறைக்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு சீசா பிணமாக தொங்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரித்ததில், அதிகம் பாடங்களை படிக்க வேண்டி இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட தேர்வு பயத்தாலும் சீசா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சீசா படித்து வந்த மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.
    இடி தாக்கியதில் புதுவை சட்டசபை கட்டிடம் சேதம் அடைந்தது. இதனை முதல்- அமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை பாரதி பூங்கா அருகில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் புதுவை சட்டமன்றம் இயங்கி வருகிறது. 

    சட்டமன்றத்தின் மைய மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டிடமாகும். அதனை சுற்றி புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மைய மண்டபம் செயல்படும் கட்டிடத்திற்கு பின்புறம் கடந்த 2006-ம் ஆண்டு 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் சட்டமன்றத்திற்கு பின்புறம் நுழைவு வாயிலும், முதல் தளத்தில் சட்டமன்ற செயலர் அலுவலகமும், 2-வது தளத்தில் அமைச்சரவை அலுவலகமும், 3 -வது தளத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் அலுவலகமும் கருத்தரங்க அறையும் உள்ளது. அதன் மேல் உள்ள மாடியில் குடிநீர் தொட்டிகள் பில்லர் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக புதுவையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 
    அதன்படி நேற்று முன் தினமும் இரவு மழை பெய்தது. அப்போது கடுமையாக இடி சத்தம் கேட்டது. இதில், சட்டமன்ற மைய மண்டபம் பின்புறம் உள்ள கட்டிடத்தின் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இடி தாக்கியது. இதனால் அந்த சுவர் சேதமடைந்து சரிந்து விழுந்தது. இதில், தரைத்தளத்தில் சபாநாயகர் அலுவலகம் மற்றும் சட்டமன்ற செயலர் பயன்படுத்தும் அலுவலக கார்கள் மீது இடிந்த சுவரின் சில பகுதிகள் விழுந்தது. 

    இதனால் அங்கிருந்த 2 கார்கள் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற செயலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அதிர்ஷ்டவசமாக மைய மண்டபம் இயங்கும் பழமையான கட்டிடத்தின் மீது இடி தாக்கவில்லை. அப்படி தாக்கியிருந்தால் அந்த கட்டிடமே முழுமையாக சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளது.  இரவு நேரத்தில் இடி தாக்கியதால் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
    தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வழங்கும் கோப்பிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்ட செலவினங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    அதன்படி கடந்த வாரம் கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 கோப்புகளில் 19 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில், தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வழங்கும் கோப்பிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசு வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. செலுத்துவோரை தவிர, மற்ற அனைவருக்கும் இலவச சர்க்கரை வழங்க அனுமதி வழங்கியுள்ளார்.

    அரசு அச்சகம் மூலம் ஆண்டு தோறும் அச்சிடப்படும் அரசு காலண்டர், டைரி பிரிண்ட் செய்வதற்காக ரூ.1 கோடியே 14 லட்சத்து அனுமதி கேட்டு அனுப்பிய கோப்பிற்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி தர மறுத்துள்ளார். இந்த கோப்பை மத்திய உள்துறையின் முடிவுக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.

    சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் சம்பளத்திற்கு ரூ. 75 லட்சத்து 72 ஆயிரம் வழங்கவும், 2 சாராயக்கடை 12 கள்ளுக்கடைகளுக்கு மின்னணு ஏலம், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பணி இடங்கள் ஒதுக்கீடு மற்றும் இடமாற்றம், பாட்கோ ஊழியர்கள் மற்றும் அலுவலக செலவினத்துக்கு ரூ. 1 கோடியே 97 லட்சம் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளார்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,838 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,07,754 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 559 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,121 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,68,968 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 49,082 பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,838ஆக உயர்ந்துள்ளது.
    அதிகாரிகள் கோப்புகளை கண்காணிக்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    முக்கியமான கோப்புகளின் முடிவுகள் நிலுவையில் இருக்கும்போது நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையின் கோப்புகளை கண்காணிப்பது அந்தந்த செயலாளர்களின் கடமையாகும். அத்தகைய முக்கியமான கொள்கை மற்றும் ஒப்புக்கொள்ளும் விஷயங்களின் கோப்புகளை வைத்திருக்க வேண்டும். கவர்னர் கோப்புகளை ஆய்வுசெய்யும்போது அந்த நிழல் கோப்புகள் நிர்வாக பணிகளில் தாமதங்களை குறைத்து செய்திகளை புரிந்துகொள்ள உதவுகிறது.

    கடந்த காலங்களில் நிழல்கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்பட்டன. சட்ட அதிகாரிகள் இந்த கோப்புகளை கண்காணிக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நினைவூட்டல் கோரிக்கை எப்போதுமே அடுத்த மேலதிகாரிக்கு அனுப்பப்படலாம்.

    நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். இது சந்தேகங்களை தெளிவுபடுத்த உதவும். வரவிருக்கும் வாரத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள செயலர்களுடனான நேருக்கு நேர் ஆலோசனையின்போது அமைச்சர்கள் அல்லது அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோரிடம் நிலுவையில் உள்ள கோப்புகள் தொடர்பாக விவாதிக்கும்போது இது உதவும்.

    திறமையான நிர்வாகத்தில் விரைவான முடிவெடுப்பதும் அடங்கும். கோப்புகளை கண்காணிக்காமல் நிலுவையில் உள்ளவை குறித்து விவாதிக்க மற்றும் தீர்வுகாண வாய்ப்புகளை தேடாமல் முடிவு என்பது சாத்தியமில்லை.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    எந்த குற்ற வழக்குகள் இருந்தாலும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறை உயரதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்- அமைச்சர் நாராயணசாமி , தீபாவளி நேரத்தில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எந்த குற்ற வழக்குகள் இருந்தாலும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

    கடைகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் வலியுறுத்தினார்.
    பாகூர்:

    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் வலியுறுத்தினார்.

    இது குறித்து மணவெளி தொகுதி வட்டார காங்கிரஸ் செயல் தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்த முறையில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் இணையதளங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகி சீர்கெடும் நிலை அதிகரித்து வருகிறது.

    ஆன்லைன் மூலம் கல்வி பயிலும் மாணவர்கள், இணையதளத்தில் பல புதிய தேடலை தேடுகிறார்கள். இதனால் பல்வேறு விளையாட்டுகளால் கண் பார்வை பாதிக்கப்பட்டு, உடல் மற்றும் மனரீதியான அழுத்தத்தில் சிக்கி சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்களும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

    புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் கல்வி வகுப்புகளால், மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட, தீமைகளே அதிகம். எனவே மாணவர்களின் எதிர்காலம், பெற்றோர், சமூக நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் கல்வி வகுப்புகளை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்களை நடத்த கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் கடை வீதிகளில் அலைமோதி வருகிறது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

    இதைத்தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், வணிக நிறுவன பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்களை நடத்த கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
    ×