என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல்வேறு தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி சென்றனர்.

    வேண்டுதல்கள் நிறைவேற கடும் விரதம் இருந்து காளி, அம்மன் போன்ற சுவாமி வேடங்கள், குரங்கு, சிங்கம், பெண் போன்ற 100-க்கு மேற்பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து அதில் நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், கரகம், காவடி, டிஸ்கோ போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    தசரா குழுவினரின் கலை நிகழ்ச்சி மிகவும் அசத்தலாக இருந்தது. 10-ம் திருநாளான விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வசூல் செய்த காணிக்கையை செலுத்த தொடங்கினார்கள். இன்று பிற்பகல் வரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

    இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர். இரவில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    இதற்காக 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் வரும் தனியார் வாகனங்ளை நிறுத்த 30 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.

    மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு துறை என மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறையினர் குலசையில் முகாமிட்டுள்ளனர்.

     

     9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

     9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

    திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வோறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மேலும் தினமும் கோவில் கலையரங்கத்தில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இன்றும் காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைவார். அங்கு காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். பின்னர் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களையுதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள் (14-ந் தேதி) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன், செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் அறங்காவலர்கள் ரவிந்திரன் குமரன், மகராஜன், கணேசன், வெங்கடேஷ்வரி மற்றும் மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர்.

    திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி.வசந்தராஜன் தலைமையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தசரா உடை அணிந்த போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

    • கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இயக்குனரிடம் தெரிவித்து அந்த காட்சியை விரைவில் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    அதில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்பு கிளம்பி உள்ளது.

    இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இதுகுறித்து புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்திரிக்கப்பட்டு இருப்பதாக மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தனர். அந்தப் பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்தது. நான் அமைச்சராக இருந்த போது அதனை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியிருந்தேன். மேலும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளும் அந்த பள்ளிக்கு செய்து கொடுத்திருக்கிறேன்.

    இது சிறப்பான பள்ளி. பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வரும் பள்ளி. இந்த நிலையில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்களின் மனதை வேதனைப்படுத்தும் வகையில் உள்ளது.

    இதுகுறித்து வேட்டையன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், லைக்கா நிறுவனத்தின் நிர்வாகியுமான தமிழ்குமரனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளேன். இதுகுறித்து இயக்குனரிடம் தெரிவித்து அந்த காட்சியை விரைவில் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளனர். அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். இன்றைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.
    • தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    தசரா திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    ஒவ்வொரு தசரா குழுவிலும் காளி, சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், கிருஷ்ணர், நாராயணர், அனுமர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அரசன், குறவன், கரடி, கிளி, புலி போன்ற வேடங்களையும் சில பக்தர்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.

    தசரா குழுவினருடன் நாட்டுப்புற கலைஞர்களும் சென்று கரகாட்டம், சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம் போன்றவற்றை நடத்துகின்றனர். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும்.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருவதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இங்கு சத்ரு சம்ஹார பூஜை, குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.

    இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்த கோவிலில் சுப முகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது. தற்போது புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா நடப்பதால் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து தரிசனம் செய்வதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம்.


    அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமாளையும் ஒரு சேர தரிசிக்க வாய்ப்பு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதாலும் விடுமுறையை கொண்டாட பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    • கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினம் வந்து மாலை அணிந்தனர்.

    தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், செக்காரக்குடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தசரா பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் வரும்போது முன்னால் சென்ற வாகனங்களை டிரைவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே ஆலங்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவரான செக்காரக்குடியை சேர்ந்த சுடலைவீரன், பெருமாள் மகன் பெரும்படையான், ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல், சுப்பிரமணி, மாயாண்டி, மற்றொரு சுப்பிரமணி, சுடலைமணி, கிருஷ்ண பெருமாள், மற்றொரு சுடலைமணி, அய்யம்பெருமாள், அருணாச்சலம் ஆகிய 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் திருச்செந்தூர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பெரும்படையான், கிருஷ்ண பெருமாள், வடிவேல் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பெரும்படையான் (20), கிருஷ்ண பெருமாள் (25) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல் (வயது17) சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த டிரைவரான ஆலங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 38) என்பவரை பிடித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது.
    • ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.

    பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷண நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது, செப்டம்பர் முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை கடலில் சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் சரக்கு போக்குவரத்து ஒரு மாதம் தாமதமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல் தோணி போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, கடந்த 1-ந்தேதி மாலத்தீவுக்கு புறப்படும் தோணியில் காய்கறிகள், மண், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், எந்திர தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. அந்த சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது. இதனை தொடர்ந்து மற்றொரு தோணியில் சரக்கு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது.

    இதேபோன்று இலங்கைக்கும் சுமுகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டுமே தோணி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிபத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

    விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கைக்கும் விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தோணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அமைந்துள்ள அழகிய கடற்கரை நகரம் குலசேகரன்பட்டினம்.

    இங்கு வீற்றிற்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன். அம்மையும், அப்பனும் ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோவில்களில் காண இயலாத காட்சியாகும். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.


    இச்சிறப்பு மிக்க தசரா திருவிழாவையொட்டி நேற்று காளி பூஜையும், அன்ன தானமும் நடந்ததது. நேற்றுஇரவு 9 மணிக்கு அம்மனுக்குகாப்பு கட்டினர். இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கடலில் நீராடி புனித நீரை சுமந்து கோவிலுக்கு வந்தனர். ஓம் காளி ஜெய் காளி என்று கோஷமிட்டனர்.

    கோவில் கலையரங்கத்தில் சிவலூர் தசரா குழு சார்பிலும், கடற்கரையில் சந்தையடியூர் தசரா குழு சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று முதல் தினசரிமாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் கலையரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடியேற்றம் நடந்தவுடன் கோவில் பூசாரி விரதம் இருந்து வந்த பக்தர்களுக்கு காப்பு கட்டினார். இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா நடக்கிறது.

    நாளை (4-ந் முதல் வருகிற 11-ந்தேதி வரை தினசரி காலை முதல் இரவு வரைசிறப்பு அபிஷேக ஆரா தனையும் மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது.

    2-ம் திருநாளில் அன்னை கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலம், 3-ம் நாள் திருவிழாவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம், 4-ம் திருநாளில் அன்னை மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம், 5-ம் திருநாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம், 6-ம் திருநாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலம், 7-ம் திருநாளில் அன்னை பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம், 8-ம் திருநாளில் கமல வாகனத்தில் கச லெட்சுமி திருக்கோலம், 9-ம் திருநாளில் அன்னை அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம் என ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு அன்னை வீதி உலாவரும்.

    வருகிற 8-ந்தேதி 6-ம் திருவிழாவில் இருந்து தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுவினர் காப்பு கட்டி வேடம் அணிந்து மேளம், டிரம் செட், தாரை தப்பட்டையுடன் கரகாட்டம், டிஸ்கோ நடன கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்துவார்கள்.

    அப்போது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா குழு வினர்கள் காட்சியளிப்பார்கள்.

    மிக முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி 10-ம் திருநாள் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷே ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைந்ததும்.

    காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் தெரு பவனியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 

    • மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள்.
    • விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.

    திருச்செந்தூர்:

    புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மாதம்தோறும் அமாவாசை திதி வரும் அந்த திதிகளில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதில் சிலர் தை மாதம் வரும் அமாவாசை, ஆடி மாத அமாவாசை நாட்களில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    இந்த நாட்களில் வரும் அமாவாசைக்கு திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அவ்வாறு செய்தால் ஒரு வருட அமாவாசையில் திதி கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் அவர்களை நினைத்து விரதம் மேற்கொண்டு கடல், ஆறு ஆகிய பகுதிகளில் நீராடி எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்தால் நம் வீட்டிற்கு வந்த மூதாதையர்கள் அகம் மகிழ்ந்து நம்மை வாழ்த்திப் செல்வார்கள் என்பது ஐதீகம்.

    அதேபோல் விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம். 

    • பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.
    • ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜைகள்.

    தூத்துக்குடி:

    நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி தூத்துக்குடி பாகம்பிரியாள்-சங்கர ராமேஸ்வரர் கோவிலில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    மேலும் சிவன் கோவில் சன்னதியில் உள்ள மூலவர், சண்முகர், பிள்ளையார், நடராஜர் தளங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.

    இதேபோல் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பள்ளி வாசல் ஆகியவைகளுக்கு சென்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ஜெயபால், கண்ணன், ரமேஸ் கார்த்திகேயன், மாரிமுத்து, புதிய துறைமுகம் லெட்சுமணன், வெலிங்டன், உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். 

    • சுபமுகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.
    • பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இங்கு குறிப்பாக எதிரிகளை வீழ்த்தும் சத்ரு சம்ஹார பூஜை நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். சுபமுகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமானையும் தரிசிக்க வாய்ப்பு உளளதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 

    • மண் சுவர்களால் ஆன வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது.
    • அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மாலை பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றில் அங்குள்ள ஓட்டு வீடுகளில் ஓடுகள் தூக்கி வீசப்பட்டது. சுப்பிரமணியன், ஜோதி, சுடலை, பெருமாள், மகரஜோதி ஆகியோரது வீடுகளின் சுவர் மற்றும் ஓடுகள் சேதம் அடைந்துள்ளன.

    மேலும் மண் சுவர்களால் ஆன வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர். பொருட்கள் மட்டும் சேதமடைந்தது. ஓடுகள் உடைந்த வீட்டினை தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்விரவிக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாபாண்டியன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

    • முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
    • பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரைவு தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது.

    கந்த சஷ்டி திருவிழாவின் போது ஆயிரம் ரூபாய் செலுத்தி விரைவு தரிசனத்தில் சென்று முருகப்பெருமானை தரிசிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 1000 ரூபாய் விரைவு தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும் பொது தரிசனமும், ரூ.100 சிறப்பு தரிசனம் மட்டுமே அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 

    ×