என் மலர்
திருநெல்வேலி
- பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.
- வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திசையன்விளை:
தமிழகத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இக்கோவிலில் சுவாமி லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி சந்திரசேகரர்-மனோன்மணி அம்மாள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மேளதாளம் முழங்க கொடி பட்டம் ஊர்வலம் நடந்தது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
விழாவில் தேர் கமிட்டி தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன், துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் உதய மார்த்தாண்ட அபிஷேகம், விநாயகர் வீதி உலா, இரவு சாய ரட்சை பூஜை, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்மாள் அன்ன வாகனம், கைலாய பர்வத வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில், சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி வீதி உலா நடக்கிறது. மேலும் இரவில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்தவாரியும், மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜையும், உச்சிகால பூஜை, உற்சவர் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 26-ந் தேதி காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்ம கர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் செய்து வருகிறார்.
- தென் சென்னை மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் அ. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
- அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.
சென்னை
தமிழ்நாடு மலர் காய்கனி வியாபாரிகள் நல சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா கோயம்பேடு கீரை மார்க்கெட் வணிக வளாகத்தில் தென் சென்னை மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் அ. முத்துக்குமார் தலைமை யில் நடைபெற்றது. பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.
பா. ம. க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வடக்கு மண்டல இணை பொது செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. மூர்த்தி, மாநில தேர்தல் பணி குழு செயலாளர் மு. ஜெயராமன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஈகை தயாளன், மாவட்ட தலைவர் கே. எம். ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் மு. தாமோதரன், நெடி பு. நல்லதம்பி, ஓம்சக்தி ஜெயமூர்த்தி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கீரை வை. கோவிந்தராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை
தமிழ்நாடு மலர் காய்கனி வியாபாரிகள் நல சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- சொத்து வரியை உயர்த்தமாட்டேன் என்று சொல்லிவிட்டு அதனை இரு மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி.
- துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யவும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொல்லி மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. பொருளாதாரம் உயரும் வரை சொத்து வரியை உயர்த்தமாட்டேன் என்று சொல்லிவிட்டு அதனை இரு மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. வழிகாட்டி மதிப்பு நியாயமாக நிர்ணயிக்கப்படும் என்று கூறி, அதனை உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. இந்த வரிசையில், கூடுதலாக ஒரு கிலோ உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் பொருட்களை நிறுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மொத்தத்தில், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

முதலமைச்சர் இதில் உடனடி கவனம் செலுத்தி, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யவும், கூடுதலாக உளுத்தம் பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்ற வாக்குறுதியினை நிறைவேற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தீவுகளாக மாறின.
- பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்ததால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதி பெய்த பெருமழை வெள்ளத்தில் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. டவுன் கருப்பந்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆற்றுப்பாலம் உடைந்து விழுந்தது. மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. இந்த பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி மத்திய குழுவினர் முதல்கட்டமாக நெல்லை வந்து ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து 2-வது முறையாக இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், மத்திய நிதி அமைச்சகத்தை சார்ந்த ரங்கநாதன் ஆதம், மின்சக்தி துறையை சேர்ந்த ராஜேஷ் திவாரி, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தை சேர்ந்த தங்கமணி, புதுடெல்லியில் உள்ள ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் கே.எம். பாலாஜி, மத்திய வேளாண் இயக்குனர் கே.பொன்னுசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 குழுவாக பிரிந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனர்.
இவர்களோடு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு முன்னும், மழை உள்ள பாதிப்பு அடைந்த போதும், மழை வெள்ள பாதிப்புக்கு பின் சீரமைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பு செய்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.
பின்னர் மழை வெள்ளம் பாதிப்படைந்த பகுதிகளை 2 குழுக்களாக சென்று பார்வையிட்ட மத்திய குழு அதிகாரிகள் நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி தரைமட்ட பாலத்தை ஆய்வு செய்தனர்.
மழை வெள்ள பாதிப்பால் சிதலமடைந்து 3 நாட்களில் சரி செய்யப்பட்ட பாலத்தின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்ததை பார்த்த அதிகாரிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பாலமும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக குழாய்கள் அமைக்கப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதிகாரிகள் மத்திய குழு அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய குழு அதிகாரிகளை பேட்டி எடுக்க முயன்றபோது, தமிழக அரசு மழை வெள்ள பாதிப்பு பணிகளை சிறப்பாக கையாண்டுள்ளது என என ஒரு வரியில் சொல்லி சென்றனர்.
தொடர்ந்து நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு மற்றும் அதனை சரி செய்யப்பட்ட பணிகளையும், அம்பாசமுத்திரம், நெல்லை வட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் செய்த பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ரேசன் கடை ஒன்றில் எழுத்தராக லீமா என்பவர் பணியாற்றி வருகிறார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பாளையங்கோட்டை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சகோதரரின் இறப்பு செய்தி கேட்டும் பெண் ஊழியர் ஒருவர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிவிட்டு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ரேசன் கடை ஒன்றில் எழுத்தராக லீமா என்பவர் பணியாற்றி வருகிறார். லீமா ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்து கொண்டு இருந்தபோது அவருக்கு செல்போனில் அவரது சகோதரர் இறந்த செய்தி வந்தது. இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த லீமா கண்ணீரை துடைத்தபடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்து முடித்த அவர் பின்னர் கணக்குகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கூட்டரங்கு அமைக்கப்பட்ட நிலையில் ஒரு மாமன்ற உறுப்பினர் கூட பங்கேற்கவில்லை.
- நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கூடுதல் கால அவகாசமும் நிறைவடைந்தது.
நெல்லை:
தமிழகத்தில் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான நெல்லை மாநகராட்சி 55 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வார்டுகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி மேயராக சரவணன் பொறுப்பேற்ற நாள் முதல் அவருக்கும், தி.மு.க கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து கடந்த மாதம் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜனவரி 12-ந் தேதி (இன்று) நம்பிக்கை இல்லா தீர்மான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கிடையே மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானம் வெற்றி பெற்றால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கட்சி தலைமை கருதியது.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கவுன்சிலர்கள் அனைவரும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து குற்றாலம், கன்னியாகுமரி, கொடைக்கானல் என சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே மாநகராட்சி கமிஷனரின் அறிவிப்பின்படி இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் கூட்டத்திற்கு கமிஷனர் தலைமை தாங்கி அனைத்து முடிவுகளையும் எடுப்பார். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மேலும் மாநகராட்சி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் காலை 11 மணிக்கு மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். மாநகராட்சி கூட்ட அரங்கில் வழக்கமாக மேயர், துணைமேயர் கமிஷனர் ஆகியோருக்கு மேடையில் தனி இருக்கை ஒதுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் மாநகராட்சி கமிஷனருக்கு மட்டுமே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
கூட்ட அரங்கில் தீர்மானம் முன்மொழியப்படுவதற்கு முன்பு மாமன்ற உறுப்பினர்களுக்கு அருகே மேயர் மற்றும் துணைமேயருக்கு தனியாக இருக்கை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-ன் படி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு 5-ல் 4 பங்கு மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கிற்கு வந்திருக்க வேண்டும்.
நெல்லை மாநகராட்சியில் 55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் 5-ல் ஒரு பங்கு அதாவது 44 உறுப்பினர்கள் கூட்டரங்கில் இருந்தால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டம் நடத்தப்படும். ஆனால் இன்றைய கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை.
இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 11.30 மணி முடிவடைந்தது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டத்தில் பெரும்பான்மைக்கான மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் கூட்டம் நடைபெறாமலேயே தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனரால் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்மொழியப்படாமல் தீர்மானம் தோல்வி அடைந்தாலும் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு தீர்மான கூட்டத்தின் நிகழ்வு குறித்த அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் சரவணன் பதவி தப்பியது.
- ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.
- சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். மேயராக சரவணன் இருந்து வருகிறார்.
அவர் மேயராக பொறுப்பேற்றது முதல் அவருக்கும், கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் போக்கு இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் திருச்சி சென்று அமைச்சர் கே.என். நேருவை நேரில் சந்தித்து தங்களது புகார்களை எடுத்துக்கூறினர்.
தொடர்ந்து வார்டுகளில் பணி நடைபெறவில்லை. மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு பல்வேறு முன்னெடுப்புகளை கவுன்சிலர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இதனால் மாமன்ற கூட்டங்களையும் அவர்கள் புறக்கணித்து வந்ததால் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் அதன் பின்னரும் மாமன்ற கூட்டங்கள் நடைபெற்ற போது அதில் முறையாக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒரு கட்டத்தில் வார்டுகளில் பணி நடைபெறாததை கண்டித்து மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 2 கவுன்சிலர்கள் மற்றும் ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் ஆகியோரை கட்சியில் இருந்து 'சஸ்பெண்டு' செய்து தி.மு.க. தலைமை உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சுமார் 38 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனருக்கு கையெழுத்து போட்டு மனு அளித்தனர்.

அந்த மனுவில் உள்ள கையெழுத்துக்கள் உண்மையானது தானா என்பதை அறிய ஒவ்வொரு கவுன்சிலரையும் நேரில் அழைத்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜனவரி 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மாமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அதில் கவுன்சிலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் கமிஷனர் அறிவித்தார்.
இந்நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல சேர்மன்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில் அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவுன்சிலர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கவுன்சிலர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
எனவே தலைமை உத்தரவை ஏற்று நாளை (12-ந்தேதி) நடைபெறும் மாமன்ற கூட்டத்தை புறக்கணிக்க கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.
இன்றும் சில கவுன்சிலர்கள் சுற்றுலா செல்ல உள்ளதாகவும், எனவே நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கெடுக்க மாட்டார்கள் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சை சோதனை செய்தனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து தும்பேரி வழியாக தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெலத்தி காமணிபெண்டா மலை கிராமம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ் மூலமாக தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவில் ரேசன் அரிசி கடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் பஸ் மலை கிராமத்திற்கு வாணியம்பாடியில் இருந்து புறப்பட்டு சென்றது.
அப்போது தும்பேரி அருகே மலையடிவாரத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சென்றபோது தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சை சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தன அதனை பறிமுதல் செய்தனர். அப்போது பொதுமக்கள், தினமும் இந்த பஸ் மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.
அதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பஸ் டிரைவர் மற்றும் அரிசி கடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. பஸ்சில் கடத்தப்பட்ட250 கிலோ ரேசன் அரிசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் செல்லும் வரை வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்லும்.
- குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக இன்று தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் உத்தரவுப்படி மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசன பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் 445 கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டம், பாளை, நாங்குநேரி, திசையன்விளை, தூத்துக்குடி மாவட்ட வட்டங்களில் உள்ள சுமார் 23 ஆயிரத்து 152 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கடந்த டிசம்பர் 17-ந்தேதி வெள்ளநீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொழுமடை குளம் உடைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அன்றைய தினம் அதிக கனமழையால் உடைப்பு ஏற்பட்டது. இந்த கால்வாய் திறக்கப்பட்டதாலேயே அந்த ஊர் பாதுகாக்கப்பட்டதாக கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின் தெரிவித்து உள்ளனர்.
தற்போது அந்த உடைப்பு சரிசெய்யப்பட்டு வெள்ளநீர் கால்வாயில் நேற்று முன்தினம் முதல் 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பல விமர்சனங்கள் வந்தாலும் வெள்ளநீர் கால்வாய் மூலம் நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, திருச்செந்தூர், சாத்தான் குளம் ஆகிய பகுதிகள் பயன்பெறும்.
பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் செல்லும் வரை வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்லும்.
முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில் அதிக முதலீடு வந்துள்ளது என கூறியுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உத்தரப்பிரதேசம், குஜராத்தில் முதலீடு செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தை விட அங்கு முதலீடுகள் அதிகமாக உள்ளது. அந்த மாநில அரசுகள் செலுத்தும் வரியில் அவர்களுக்கு 2 ரூபாய் 19 பைசா திருப்பி அளிக்கப்படுகிறது. நமது மாநிலத்திற்கு அப்படி திருப்பி அளிக்கப்படுவதில்லை.
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கு இதுபோன்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதுவே அங்கு அதிக முதலீடுகள் செல்ல காரணம்.
கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் மிச்சாங் புயல், தென் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவைகளை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.
- மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதன்படி பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு 2,358 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 2,547 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு 1,728 கனஅடி நீர் வரும் நிலையில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுதவிர கடனா அணையில் இருந்து 303 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் மொத்தமாக இன்று காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஓடியது. மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.

தற்போது தைப்பூச திருவிழாவிற்காக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரை வரும்போது ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்து காணப்படுவதால் அங்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் இன்று காலை முதல் குளிக்க வந்தவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர்.
மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 8.2 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 7.7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 37 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, அம்பை, ராதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.
குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை, கன்னடியன் கால்வாய் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடனா அணை பகுதியில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் அங்கு இன்றும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஏற்கனவே பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் ஒரு சில இடங்களில் வடியாமல் இருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பாறு, சூரன்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமழை, கடம்பூர், கயத்தாறு ஆகிய இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
- தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரியும் கடனா அணையில் இருந்து 200 கன அடி நீர் ஆற்றில் வருகிறது.
- சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்டவற்றுக்கு நீர் வரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. 3 அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதாலும், தொடர் மழையினாலும் தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இரவில் மழை பெய்யும்போது அதிக அளவு நீர் திறக்கப்படுவதும், பகலில் நீர் திறப்பு குறைவதுமாக உள்ளது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 1509 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1666 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வரும் 1,458 கனஅடி நீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதுதவிர தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரியும் கடனா அணையில் இருந்து 200 கன அடி நீர் ஆற்றில் வருகிறது. இவ்வாறாக இன்று காலை நிலவரப்படி சுமார் 4 ஆயிரம் கனஅடி வரை நீரானது ஆற்றில் செல்கிறது.
மலை பகுதியில் தொடர்மழையால் சொரிமுத்து அய்யனார் கோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு தடை நீடிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் 35 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 31 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 37 மில்லிமீட்டரும் மழை பெய்து.
மாவட்டத்தில் சேரன்மகா தேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 5 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேலும் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 4.5 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை கொட்டியது. அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் தொடர் மழையால் விவசாயிகள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி தென்காசியில் 19 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் அதிக அளவில் கொட்டும் தண்ணீரில் அய்யப்ப பக்தர்கள் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
- தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருருப்பதாவது:-
கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகபடியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாற்று ஓடை கரையோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






