என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடியில் மீன் கடை வைப்பதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 29). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துமணி (26) என்பவருக்கும் இடையே காரைக்குடி வாரச்சந்தையில் மீன் கடை வைப்பதில் தகராறு இருந்து வந்தது.

    ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தையில் இவர்களுக்குள் மீண்டும் மீன் கடை வைப்பதில் தகராறு மூண்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு திருச்செல்வமும், முத்துமணியும் வாரச்சந்தை பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவருக்கொருவர் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த திருச்செல்வம் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முத்துமணிக்கும் உடலில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இன்று காலை அங்கு வந்த பொதுமக்கள் திருச்செல்வம் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் அங்கு சென்று திருச்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துமணியை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த தந்தை-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், கச்சாத்தநல்லூரை சேர்ந்தவர் முருகன்(வயது 45). இவரது மகன் வீரகெவின் பிரகாஷ்(22).

    அதே ஊரை சேர்ந்தவர் தாமோதரன்(26). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் கச்சாத்தநல்லூர் கிராமத்தின் சாலையோரம் டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து அந்த வழியாக தறிகெட்டு ஒடியபடி வந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே முருகனும், தாமோதரனும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோரம் பள்ளத்தில் பாய்ந்து நின்றது. உடனே காரை ஓட்டிய நபர், தப்பி ஓடி விட்டார்.

    உயிருக்கு போராடிய வீரகெவின் பிரகாசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.

    போலீஸ் விசாரணையில், காரை ஓட்டியவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்த மாப்பிள்ளைதுறை மகன் பிரசாத் என்ற பிரகாசம் (22) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இவர் அன்றைய பரமக்குடியில் இருந்து கீழப்பெருங்கரைக்கு காரில் வந்த போது, பரமக்குடியில் ஒரு பெண் மீது மோதியதாகவும், வைகை நகர் பகுதியில் பசுமாடுகள் மீது மோதியதாகவும் புகார் எழுந்து உள்ளது. அதன்பிறகே சாலையோரம் நின்றிருந்த 3 பேர் மீது மோதிய சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    சிவகங்கையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் அங்கு வந்து சோதனை செய்தனர்.

    அப்போது அந்த குடோனில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான சுமார் 220 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம். இந்த புகையிலை பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தெரிவித்தார்.
    சிங்கம்புணரி பகுதியில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரிமா சங்கம் லயன்ஸ் கிளப் சார்பில் சிங்கம்புணரி தனியார் விடுதியில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி பகுதியில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரிமா சங்கம் லயன்ஸ் கிளப் சார்பில் சிங்கம்புணரி தனியார் விடுதியில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் மருத்துவர் முத்துலெட்சுமி மற்றும் அரிமா சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முன்னதாக 45 வயதானவர்களுக்கு முகாமில் டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அவர்களின் ஆதார் கார்டுகளை சரி பார்த்து அவர்கள் இதற்கு முன்பு தடுப்பூசி போட்டு கொண்டார்களா? என்பது குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இச்சிறப்பு முகாமில் 317 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போது சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசு பொதுமக்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதைதொடர்ந்து மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். மது அருந்துவது மற்றும் உணவுகள் குறித்து தடுப்பூசி போட்டு போன்றவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். இதில் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் தினகரன், மதியரசு, உதவியாளர்கள் எழில்மாறன், முகமது பஷீர் மற்றும் செவிலியர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் முகாமை நடத்தினர்.
    சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    சிவகங்கை:

    சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி கலெக்டர் அலுவலக முகப்பு வாயிலில் வைக்கப்பட்டு இருந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், உதவி ஆணையர் சிந்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, வட்டாட்சியர்கள் ராஜா, தர்மலிங்கம், ஆதிதிராவிடர்நல அலுவலக கண்காணிப்பாளர் கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.. எனவே மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதியில் சுகாதார துறை மருத்துவர்கள் காய்ச்சல் தடுப்பு முகாமை நடத்தி வருகின்றனர். மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதேபோன்று, சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், தொண்டி சாலை, மதுரை விலக்கு சாலை, மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி, திருப்பத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது முக கவசம் அணியாமல் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இதுதவிர, பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். இதுதவிர, மாவட்டத்தின் எல்கையான மணலூர், பூவந்தி, மானாமதுரை, எஸ்.எஸ்.கோட்டை, கானாடுகாத்தான், இளையான்குடி ஆகிய பகுதிகளிலும் போலீசார் வாகனச் சோதனை நடத்தி முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதன்காரணமாக பெரும்பாலான வாகனங்களில் வருவோர் முககவசம் அணிந்து வருகின்றனர்.

    சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அக்கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதார துறையின் மூலம் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி ஊராட்சியை சேர்ந்த சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் 136 மக்கள் வசிக்கின்றனர்.

    இந்த கிராமத்தில் வெளியூர் சென்றவர்கள் தவிர 92 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதார துறையின் மூலம் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையிலான வருவாய்த் துறையினர், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் தலைமையிலான ஊரகத்துறை அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி நபிஷா பானு தலைமையிலான சுகாதாரத்துறை பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் சுகாதார பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்,

    மேலும் அந்த கிராமத்தில் முகாமிட்டு கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஒவ்வொரு வீடாகச் சென்று அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் அந்த கிராமத்தில் தற்சமயம் வாழ்ந்து வரும் 92 பேர்களுக்கு நோய் தோற்று சம்பந்தமான மாதிரிகள் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சுகாதார பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மேலும் சேர்வைகாரன் பட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிராம உதவியாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதைத்தொடர்ந்து இக்கிராமத்திற்கு அருகில் உள்ள பிரான்மலையில் தனியார் மருந்து கடைக்கு சென்று தனி நபர்களுக்கு காய்ச்சலுக்காக மருந்துகள் வழங்கக்கூடாது, காய்ச்சல் தேவைகளுக்காக மருந்து வாங்க வருபவர்கள் பற்றிய விபரங்கள் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    காளையார்கோவில் அருகே ரூ.4¾ கோடிக்கு செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக செங்கல்பட்டு பெண் மற்றும் டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை:

    செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி வரலட்சுமி (வயது 45). இவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பழைய செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.

    அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாக மாற்றி தருவதாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த அருள்சின்னப்பன் கூறி இருக்கிறார். இதை நம்பி வரலட்சுமி, தனது தம்பி அசோக்குமாருடன் செல்லாத ரூபாய் நோட்டுகளை 3 பைகளில் நிரப்பிக்கொண்டு காரில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார்.

    அவர்கள் நேற்று மாலை காளையார்கோவில் அருகே வளையம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்சின்னப்பன் (43) வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை அருள்சின்னப்பனிடம் கொடுத்தனர். இதற்கிடையே இது பற்றிய ரகசிய தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காளையார்கோவில் போலீசார் அருள்சின்னப்பன் வீட்டை சுற்றி வளைத்து அவர்களை பிடித்தனர்.

    மொத்தம் ரூ.4 கோடியே 80 லட்சம் அளவுக்கு செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    கைது

    உடனடியாக வரலட்சுமி, அவரது தம்பி அசோக்குமார், அருள்சின்னப்பன் ஆகிய 3 பேரையும் காளையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் அருள்சின்னப்பன் பிசியோதெரபி டாக்டர் என்பது தெரியவந்துள்ளது.
    இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் 6 பேர் உள்பட 50 பேருக்கு நேற்று ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதில் அதிகபட்சமாக சிவகங்கையை அடுத்த இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உள்ள 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த மையத்தில் உள்ள 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

    இது தவிர காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கும் நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 126 பேர் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 20 பேர் நேற்று வீடு திரும்பினர்.
    மானாமதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் வீடு சீல் வைக்கப்பட்டது.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் மானாமதுரை பகுதியில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கொரோனா பாதித்த 6 பேர் வசித்த வீட்டை சுற்றிலும் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர். அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

    அதோடு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும், கொரோனா விழிப்புணர்வையும் பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தங்கத்துரை தலைமையில் ஊழியர்கள் எடுத்துரைத்தனர். தொடர்ந்து அந்த பகுதி மக்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது
    காரைக்குடி:

    நாடு முழுவதும் தற்போது கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்தடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்தநிலையில் தற்போது கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன. இதையடுத்து இந்த வாக்குச் சாவடி மையத்திற்கு வாக்கு செலுத்துவதற்காக ஏராளமாக பொதுமக்கள் வந்து சென்றனர்.

    இதுதவிர மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு அவர்களும் வந்து வாக்களித்து சென்றனர். இதையடுத்து இந்த வாக்குச்சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்பில் அதன் பணியாளர்கள் பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.. காரைக்குடி ராமநாதன்செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.

    மேலும் வருகிற 3-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து பள்ளி முகப்பு பகுதி, வாக்குச்சாவடி மையம் செயல்பட்ட அறை, தலைமை ஆசிரியர் அறை, வரவேற்பு அறை மற்றும் பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

    கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதோடு கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதியில் சுகாதாரத்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    ×