என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள சங்கந்திடலை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கழனிவாசல் நேதாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலைபார்த்து வந்தார். அப்போது அந்த வீட்டின் போர்வெல்லுக்கான மின்மோட்டார் வயர் இணைப்பினை கவனக்குறைவால் தொட்டுவிட மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து சென்றனர்.
    ஊட்டி:

    ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் காட்டுயானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் கல்லட்டி மலைப்பாதை 19-வது கொண்டை ஊசி வளைவில் காட்டுயானை ஒன்று நடமாடியது. சாலையோரம் நின்றபடி மேய்ச்சலில் ஈடுபட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தூரம் முன்பாகவே வாகனங்களை நிறுத்தினர். ஒரு மணி நேரம் அங்கேயே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். பின்னர் காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து சென்றனர்.
    கோவிலுக்கு வந்த கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூரை அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45).

    இவர் கோவை அருகே உள்ள சேரன்மாநகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதனால் குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார்.

    மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல அய்யப்பன் திட்டமிட்டார். அவருடன் உறவினர்கள் சிலரும் வருவதாக கூறினர்.

    இதனை தொடர்ந்து அய்யப்பன், அவரது மனைவி தேவி (37), மகள்கள் கிரிஜா (18), ஆர்த்தி (17), மகன் திருமலை (16) மற்றும் உறவினர்கள் காரில் நேற்று இரவு கோவையில் இருந்து புறப்பட்டனர். காரை உறவினரான குமார் ஓட்டினார்.

    இன்று காலை மானாமதுரை வந்த அவர்கள் வழிபாட்டுக்கு தேவையான பூ மற்றும் பூஜை பொருட்களை வாங்கினர். பின்னர் காரில் புறப்பட்ட அவர்கள் காலை 6.30 மணி அளவில் மானாமதுரை-தாயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    மாங்குளம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. வேகமாக சென்ற கார் அங்குள்ள தரைபாலத்தில் மோதி நின்றது.

    கார் தாறுமாறாக ஓடிய போது அதில் பயணித்தவர்கள் கூச்சலிட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    இந்த விபத்தில் காரில் வந்த பாண்டி, அய்யப்பன் மகள் ஆர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறினர்.

    பலத்த காயம் அடைந்த அய்யப்பன், அவரது மனைவி தேவி, மகள் கிரிஜா, மகன் திருமலை, மதியழகன், அவரது மகன் குமார் (27), திருஞானம் (24), வேல்முருகன் (20), கார்த்திகா (29) ஆகியோர் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கோவிலுக்கு வந்த கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேட்டூர் அருகே லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூரை அடுத்த காவேரி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் செல்ல வேலு (வயது34). லாரி டிரைவரான இவர் கடந்த 17-ந்தேதி கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். மர்ம நபர்கள் செல்லவேலுவை கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்ல வேலு உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

    கொலை நடந்து 3 நாட்களாக கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் துப்பு துலங்காமல் இருந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடினர். அப்போது இந்த கொலையில் செல்லவேலுவிடம் கிளீனராக இருந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    செல்லவேலுவுக்கு அந்த பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இது அந்த சிறுவனுக்கு தெரியவந்தது. செல்லவேலுவுக்கு தெரியாமல் சிறுவன் அந்த பெண்ணிடம் பழக ஆரம்பித்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணும் சிறுவனும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த வேளையில் அங்கு வந்த செல்லவேலு அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தார். சிறுவனை கண்டித்த செல்லவேலு இதுபற்றி அவனது பெற்றோரிடம் சொல்லிவிடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லவேலுவை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாளில் பிரான் மலையை சுற்றி உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பிரான்மலை கார்த்திகை தீபம் பார்த்தவுடன் தான் விரத வழிபாட்டை நிறைவேற்றுவார்கள் என்பது சிறப்பு.
    சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்திற்கு கட்டுப்பட்ட மங்கை பாகர் தேனம்மை திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தன்று இந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கார்த்திகை மகா தீபத்தை வணங்கிய பின்னரே கார்த்திகை விரதம் வழிபாடு நிறை வேற்றுவது வழக்கமான ஒன்று.

    இந்த ஆண்டு கார்த்திகை திதி நேற்றுமுன்தினம் மாலை ஆரம்பமாகி நேற்று நண்பகல் முடிந்தது. இதையடுத்து 2,500 அடி உயர பிரான்மலையில் காத்திகை மகா தீபம் ஏற்றப் பட்டது. முன்னதாக மெகா திரி தயார் செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள மெகா கொப்பரையில் சுமார் 100 லிட்டர் எண்ணெய் ஊற்றப்பட்டு வழிபாடு நடத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பாலமுருகனுக்கும் மலை தீபம் ஏற்றப்பட்டது.

    முன்னதாக நேற்று காலை பிரான்மலை அடிவாரத்தில் உள்ள அம்பாளுக்கும் வள்ளி தெய்வானையோடு உள்ள முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலை தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை கோவிலில் லட்ச தீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து அன்னதான விழாவை சிங்கம் புணரி ஆன்மிக நண்பர்களுடன் இணைந்து பிரான்மலை கிராமத்தார்கள் வழங்கினர்.

    கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாளில் பிரான் மலையை சுற்றி உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பிரான்மலை கார்த்திகை தீபம் பார்த்தவுடன் தான் விரத வழிபாட்டை நிறைவேற்றுவார்கள் என்பது சிறப்பு.

    கார்த்திகை மாத பவுர்ணமி அருணாச்சலேசுவரருக்கு உகந்த நாளையொட்டி பிரான்மலை பகுதியில் கார்த்திகை கிரிவலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
    கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    நான் கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவரை 6 மாதத்தில் பிரிந்து எனது பெற்றோர் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தேன். கருத்துவேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்ததால் என்னால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக 2-ம் ஆண்டுக்கான திறன் மதிப்பீட்டு அறிக்கையை என்னால் சமர்ப்பிக்க முடியவில்லை.

    இதனையடுத்து எங்களது துறை தலைவர் பேராசிரியர் விளாங்குறிச்சி மதி நகரை சேர்ந்த ரகுநாதன் (வயது 42) என்பவர் அவரது அறைக்கு வருமாறு அழைத்தார். நான் அறைக்கு சென்ற போது எதற்காக அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என கேட்டார். அதற்கு நான் என்னுடைய குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறினேன். அதற்கு ஆறுதலாக பேசிய அவர் திடீரென என்மேல் கையை வைத்து தகாத முறையில் நடந்து கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் கையை தட்டி விட்டு வெளியே வந்து விட்டேன்.

    பின்னர் அவர் எனக்கு உதவி செய்வது போல அறிக்கையை நான் சமர்ப்பிப்பதற்காக நோட்ஸ் கொடுப்பது போல காரில் எனது ஊருக்கு வந்தார். அங்குள்ள சந்தை அருகே நான் நின்று கொண்டு இருந்தேன்.

    அப்போது அவர் இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது காரை நிறுத்த முடியாது எனவே காருக்குள் ஏறு என கூறினார். நான் ஏற மறுத்ததால் கையை பிடித்து இழுந்து காருக்குள் ஏற்றினார். பின்னர் காரில் வைத்து ஆறுதலாக வார்த்தைகள் பேசி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அவரது மனைவியை விவாகரத்து செய்து விடுவதாகவும் கூறினார். நான் மறுத்து சத்தம் போட்டு விடுவதாக கூறினேன்.

    இதனையடுத்து அவர் நடந்த சம்பவங்களை வெளியே சென்னால் கொலை செய்வதாக மிரட்டி விட்டு சூலூரில் என்னை இறக்கி விட்டு சென்றார்.அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் நான் நடந்த சம்பவங்களை வெளியே செல்ல முடியாமல் இருந்தேன். மீண்டும் நான் கல்லூரி சென்றதும் இது குறித்து எனது தோழிகளிடம் கூறினேன். அவர்களுக்கும் துறை பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காரைக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலை கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுகட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    செம்பனார்கோவில் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வீட்டின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகுமார் (வயது 29) என்பதும், வீட்டின் அருகே சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    வைகையில் திறக்கப்பட்ட தண்ணீர், மழை நீரால் மானாமதுரை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது கட்டிக்குளம் கண்மாய். இந்த கண்மாய் மூலம் கொம்புக் காரனேந்தல், மேட்டுமடை, பெரும்பச்சேரி, கட்டிகுளம் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகின்றன.

    கட்டிகுளத்தில் கண்மாய், கால்வாய் ஆகியவை சரிவர தூர் வாராததால் கண்மாய்க்கு வரும் மழை தண்ணீர் வெளியேறி பெரும்பச்சேரி கிராமத்தில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சூழ்ந்ததால் நீரில் மூழ்கின. மேலும் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளே சிக்கின. அவற்றை விவசாயிகள் மீட்டனர்.

    வைகையில் திறக்கப்பட்ட தண்ணீர், மழை நீரால் மானா மதுரை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. கண்மாய் நிரம்பும் அளவிற்கு கண்மாய் பல இடங்களில் தூர் வாராமல் பல இடங்களில் தண்ணீர் வெளியேறி வயல்வெளிக்குள் சென்று வருகிறது.

    மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் கட்டிகுளம் கண்மாய்க்கு வரும் தண்ணீர் வெளியேறி பெரும்பச்சேரி கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெல், கரும்பு ஆகியவை நீரில் மூழ்கி உள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் வீணாகி உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து பெரும்பச்சேரி விவசாயி சந்திரமோகன் கூறுகையில், கட்டிகுளத்தில் கண்மாய், கால்வாய் ஆகிய வற்றை தூர்வாரவில்லை. வைகையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கண்மாய் நிரப்புவதில் இருக்கும் அக்கறை, கண்மாய், கால்வாயை தூர்வாருவதில் காட்டவில்லை. இதனால் கண்மாய் தண்ணீர் வெளியேறி 8 நாட்களுக்கு மேலாக தண்ணீர் நின்று வருகிறது. இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 417 பேராக உள்ளது.
    சேதமடைந்ததால் சீரணி அரங்கத்தில் பள்ளி வகுப்பறை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    எஸ்.புதூர்:

    எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இங்குள்ள 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கட்டிடம் பழுதடைந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் வகுப்புகள் நடத்த இயலாமல், அங்குள்ள சீரணி அரங்கத்தில் ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் கூறினார்.

    தற்போது பெய்து வரும் தொடர்மழையை கருத்தில் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் அமைத்து தருமாறு ஊராட்சி தலைவர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் நடந்த 68-வது கூட்டுறவு வார விழாவில் 869 பயனாளிகளுக்கு ரூ.5.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில், மாவட்ட அளவிலான 68-வது கூட்டுறவு வார விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு துறை மண்டல இணைப் பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்று பேசினார்.

    விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, கூட்டுறவு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் 869 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் நேரடியாக பயனடையும் மிக முக்கியமான துறை கூட்டுறவு துறை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கூட்டுறவு துறை சரியாக செயல்படவில்லை என்றாலும், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 6 மாதத்திற்குள் கூட்டுறவு துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளும் உலகமே பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

    இந்த மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 120-ம், இதர கூட்டுறவு நிறுவனங்கள் 57-ம், மத்திய கூட்டுறவு வங்கிகள் 22-ம் உள்ளன. 2006-ம் ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 64,102 பேருக்கு ரூ.244 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு 120 சங்கங்கள் மூலமாக 28,400 பேருக்கு ரூ230.79 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது ரூ.376 கோடி நகை கடன் தள்ளுபடி செய்ய உள்ளது.

    இந்த மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கு ரூ.57.90 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மழை, வெள்ளம் பகுதிகளுக்கு தினமும் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகிறார். தேர்தலின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். எனவே, தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவின் போது, ரூ.1 கோடி மதிப்பில் தளி, உத்தனப்பள்ளி, நல்லராலப்பள்ளி, அஞ்செட்டி ஆகிய கூட்டுறவு சங்கங்களின் அலுவலகங்களை அமைச்சர் திறந்து வைத்தார். விழாவில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன், முன்னாள் எம.்பி. வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிருஷ்ணகிரி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வம் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
    ×