search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
    X
    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- பேராசிரியர் சிறையில் அடைப்பு

    கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    நான் கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவரை 6 மாதத்தில் பிரிந்து எனது பெற்றோர் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தேன். கருத்துவேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்ததால் என்னால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக 2-ம் ஆண்டுக்கான திறன் மதிப்பீட்டு அறிக்கையை என்னால் சமர்ப்பிக்க முடியவில்லை.

    இதனையடுத்து எங்களது துறை தலைவர் பேராசிரியர் விளாங்குறிச்சி மதி நகரை சேர்ந்த ரகுநாதன் (வயது 42) என்பவர் அவரது அறைக்கு வருமாறு அழைத்தார். நான் அறைக்கு சென்ற போது எதற்காக அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என கேட்டார். அதற்கு நான் என்னுடைய குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறினேன். அதற்கு ஆறுதலாக பேசிய அவர் திடீரென என்மேல் கையை வைத்து தகாத முறையில் நடந்து கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் கையை தட்டி விட்டு வெளியே வந்து விட்டேன்.

    பின்னர் அவர் எனக்கு உதவி செய்வது போல அறிக்கையை நான் சமர்ப்பிப்பதற்காக நோட்ஸ் கொடுப்பது போல காரில் எனது ஊருக்கு வந்தார். அங்குள்ள சந்தை அருகே நான் நின்று கொண்டு இருந்தேன்.

    அப்போது அவர் இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது காரை நிறுத்த முடியாது எனவே காருக்குள் ஏறு என கூறினார். நான் ஏற மறுத்ததால் கையை பிடித்து இழுந்து காருக்குள் ஏற்றினார். பின்னர் காரில் வைத்து ஆறுதலாக வார்த்தைகள் பேசி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அவரது மனைவியை விவாகரத்து செய்து விடுவதாகவும் கூறினார். நான் மறுத்து சத்தம் போட்டு விடுவதாக கூறினேன்.

    இதனையடுத்து அவர் நடந்த சம்பவங்களை வெளியே சென்னால் கொலை செய்வதாக மிரட்டி விட்டு சூலூரில் என்னை இறக்கி விட்டு சென்றார்.அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் நான் நடந்த சம்பவங்களை வெளியே செல்ல முடியாமல் இருந்தேன். மீண்டும் நான் கல்லூரி சென்றதும் இது குறித்து எனது தோழிகளிடம் கூறினேன். அவர்களுக்கும் துறை பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×