என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தேவகோட்டை பகுதிகளில் 5ந்தேதி மின்தடை ஏற்படுகிறது.
    தேவகோட்டை

    சிவகங்கை  மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்  (5ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை,  கண்ணங்கோட்டை, பெரிய காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை   பனங்குளம்,  மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர்  ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.
    ஹரிவராசனம் பாடல் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தென் தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் பர்மா காலனி சிவானந்தா மகாலில் நடைபெற்றது.மாநில செயலாளர் ஆதிகணேசன் வரவேற்றார்.

    மாநில தலைவர் ராஜகோபால் துரைராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் கமலம் நீலகண் டன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். தேசிய பொதுச்செயலாளர் ராஜன், தேசிய செயலாளர் கணேசன் ஆகியோர் கொடியேற்றி பேசினர்.

    இதில் 1923ம் ஆண்டு கேரளாவின் கோனகத்து ஜானகியம்மாள் இயற்றிய ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழாவை வரும் ஜூன் மாதம் முதல் 2024 ஜனவரி வரை ஹரிவராசனம் நூற்றாண்டு விழாக்குழு அமைத்து கொண்டாடுவது, சபரிமலை வரும் பக்தர்களுக்காக 60 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒன்று என அன்னதான கூடங்கள் அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகங்கை மாவட்ட அய்யப்ப சேவா சமாஜத்தின் மாவட்ட உறுப்பினர்கள் மதி, சுந்தர், செல்வமணி, அண்ணாமலை, கணேசன், கரூர் செல்வம், வெங்கடேஷ், காரைக்குடி கரிசாமி, அய்யப்பா செல்வராஜ் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் இணைந்து பாடிய ஹரிவரா சனம் பாடலின் தமிழ்ப் பதிப்பு பாடப்பட்டது.
    தேவகோட்டையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.
    தேவகோட்டை

    தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் ஊரணி சாரதா நகரில் அமைந்துள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. 

    கடந்த 29ந்தேதி நவசக்தி ஹோமம், கணபதி ஹோமத்துடன் காப்புக் கட்டுதல் தொடங்கியது. மாலை சக்தி கரகம் எடுத்து வீதி உலா நடைபெற்றது.

     ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மீனாட்சி, காமாட்சி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஐஸ்வர்யா லட்சுமி, அங்காள பரமேஸ்வரி, கனகதுர்க்கை என சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். 

    விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்ற நம்பிக்கையில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். 

    திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனை நடைபெற்றது. 5ந்தேதி அம்மன் கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து வீதி உலா மற்றும் 6ந்தேதி காலை பால்குடம் எடுத்து பூக்குழி இறங்குதல் அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறும்.
    கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டி ஊராட்சியை சுற்றுலா தலமாக மாற்ற ஆய்வு நடக்கிறது.
    திருப்பத்தூர்

    கற்காலம் தொட்டு எத்தனையோ சங்ககால புலவர்கள் காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்கக்கூடிய பல இலக்கியங்களையும், கவிதைகளையும், அறநெறி நிறைந்த பாக்களையும், மக்களுக்காக வழங்கி சென்றுள்ளனர். 

    அப்படி எத்தனையோ புலவர்கள் வந்தபோதிலும், ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒற்றை குறல் அடிகளின் மூலம் முழு உலக மாந்தர்கள் அனைவரையும்  ஒன்றிணைத்த பெருமையை உலகத்திற்கு தந்த சங்ககால  புலவர்களில் ஒருவராக விளங்கும் கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அருகே மகிபாலன்பட்டியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    அதற்கான திட்டம் தயாரிக்கும் பணிக்காக  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பூங்குன்றனாருக்கு  எழுப்பப்பட்டுள்ள நினைவு துணை சுற்றியுள்ள பகுதிகளை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் தமிழக நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் முரளி, தேசிய நவீன நீர்வழிச்சாலை ஒருங்கிணைப்பாளர் தனுவேல்ராஜ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாசன் ஆகியோர் அடங்கிய குழு இப்பகுதியை ஆய்வு செய்தனர்.
     
    தமிழுக்காக பல சங்கங்கள் வைத்துமொழி உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதன் காரணமாக இன்றளவும் உலக மக்கள் வியந்து பார்க்க கூடிய அளவிற்கு பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் தமிழ் மொழி திகழ்ந்து வருவதற்கு சங்ககாலப்புலவர்கள் தமிழ் மொழி மீது கொண்ட பற்று  ஒன்றே என்றால் அது மிகையாகாது. 

    அத்தகைய தமிழ் மொழியினை “செம்மொழி” என்று பறைசாற்றி வரும் தமிழக அரசு அதற்கான வளர்ச்சித்துறைகளையும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் மொழிக்காக வாழ்ந்த ஒரு சமுதாயம் என்ற  சரித்திரத்தை வருங்கால சந்ததியினரும் உணரும் விதத்தில் ஒரே வரியில் உலகை வியப்பில் ஆழ்த்திய பூங்குன்றனார் பிறந்த இந்த மண்ணை சுற்றுலா தலமாகவும், பல்வேறு சங்ககால  புலவர்களின் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் அடங்கிய ஒரு நினைவு மண்டபத்தையும் இப்பகுதிகளில் எழுப்ப வேண்டும் என்பது தமிழ் வளர்ச்சி வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது
    இரவு காவலாளி வட்டப்பன் பணியில் இருந்த போது வீட்டின் அருகே சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் மது அருந்தி உள்ளனர். இதனை கண்ட அவர் 4 பேரையும் கண்டித்துள்ளார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கருதாவூரணி கிழக்கு சாலையை சேர்ந்தவர் அழகப்பன் செட்டியார் (வயது 73), தொழிலதிபர். இவருக்கு சென்னை மற்றும் கோவையில் தொழில் நிறுவனங்கள், வீடுகள் உள்ளன. இதனால் பெரும்பாலும் அங்குள்ள வீடுகளிலேயே அழகப்பன் செட்டியார் குடும்பத்தினருடன் தங்குவது வழக்கம்.

    எனவே கருதாவூரணி வீடு பூட்டப்பட்டு இருந்தது. இங்கு இரவு காவலாளியாக முத்துப்பட்டினம் அருகே உள்ள வலனை கிராமத்தை சேர்ந்த வட்டப்பன் (65) பணி செய்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகப்பன் செட்டியார் தனது மனைவி ராசுவுடன் கருதாவூரணி வந்தார்.அவர் நேற்று இரவு வீட்டில் மனைவியுடன் இருந்தார்.காவலாளி வட்டப்பன் வீட்டின் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    இரவு 10 மணிக்கு அவர் கேட்டை அடைத்து விட்டு படுத்தார். இந்த நிலையில் சுமார் 11.30 மணியளவில் திடீரென வெளியில் இருந்து வீட்டு காம்பவுண்டுக்குள் பாட்டில் குண்டுகள் வீசப்பட்டன. அந்த பாட்டில் குண்டுகள் வட்டப்பனின் படுக்கை மீது விழுந்ததில், படுக்கை எரிந்து நாசமானது.

    மேலும் வட்டப்பனும் பலத்த காயம் அடைந்தார். பாட்டில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. அதன் பிறகு தீக்காயமடைந்த வட்டப்பனை சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 50 சதவீத தீக்காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நொறுங்கிக்கிடந்த பாட்டில் சிதறல்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். மர்ம மனிதர்கள் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து வீசியிருக்கலாம் என தெரிகிறது.

    பாட்டில் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    நேற்று இரவு காவலாளி வட்டப்பன் பணியில் இருந்த போது வீட்டின் அருகே சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் மது அருந்தி உள்ளனர். இதனை கண்ட அவர் 4 பேரையும் கண்டித்துள்ளார். மேலும் இங்கு மது அருந்தக்கூடாது என விரட்டியடித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 4 இளைஞர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்த முன் விரோதத்தில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவர்கள் பாட்டில் குண்டுகளை வீசி சென்றார்களா? அல்லது தொழிலதிபரை தாக்கும் நோக்கத்தில் யாராவது இதனை செய்துள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் சம்பவம் நடந்த வீட்டின் அருகே இருந்த 2 கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனையும் மர்ம கும்பல் தான் செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை அருகே வகுப்பறையில் கிடந்த 50 ரூபாயை எடுத்து ஆசிரியையிடம் கொடுத்ததால் 1-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு கவுரவம் தேடிவந்தது.
    மானாமதுரை:

    இன்றைய குழந்தைகள். நாளைய இந்தியாவின் தூண்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. வீட்டில் குழந்தைகள் இருப்பதை காட்டிலும் பள்ளிக்கூடங்களில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் தான் குழந்தைகளின் வளர்ப்பு பெற்றோராக அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.

    கல்வி கற்பதோடு, நல்ல ஒழுக்கத்தையும் ஆசிரியர்கள் கற்பித்து கொடுக்கிறார்கள். நல்ல சமூகம் அமைவதற்கு ஆசிரியர்களின் பங்கு அபரிமிதமானது. அதற்கு மானாமதுரை அருகே நடந்த இந்த நிகழ்வு, ஒரு எடுத்துக்காட்டாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பர்மா காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று வழக்கம் போல 1-ம் வகுப்பு மாணவி தீபா வந்திருந்தாள். வகுப்பறைக்கு சென்றபோது அங்கு 50 ரூபாய் நோட்டு கீழே கிடந்துள்ளது. அதை பார்த்த சிறுமி, எடுத்து வைத்துகொண்டு, பின்னர் ஆசிரியை ராமலட்சுமி வகுப்பறைக்கு வந்தவுடன், அந்த 50 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தாள். அப்போதுதான் ஆசிரியைக்கு, அதற்கு முந்தைய நாள் தன் 50 ரூபாயை தவறவிட்டது பற்றி ஞாபகம் வந்தது.

    உடனே சிறுமி தீபா பிரபாவின் நேர்மையை பாராட்டி ஆசிரியை கைகுலுக்கினார். மற்ற மாணவ-மாணவிகளையும் கைதட்ட சொல்லி அவளை ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு மாணவியை தலைமை ஆசிரியர் ஞானசேகரிடம் அழைத்துச் சென்று, மாணவியின் செயலை கூறி உள்ளார்.

    இதனால் வியந்த தலைமை ஆசிரியர் ஞானசேகர், மாணவியை கவுரவிக்க முடிவு செய்தார். 6 வயது சிறுமியின் நேர்மை மற்ற மாணவ-மாணவிகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும் என நினைத்தார். உடனே சிறுமி தீபா பிரபாவை தலைமை ஆசிரியர் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். ஒருநாள் முழுவதும் தலைமை ஆசிரியராக இருக்கும்படி அந்த மாணவியிடம் எடுத்துக்கூறி கவுரவப்படுத்தினார். நேற்று பணி நேரம் முடியும் வரை சிறுமி, தலைமை ஆசிரியர் இருக்கையை அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சியில் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக பணியாளர் மகாலட்சுமி பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு அன்றாடம் கல்வி கூடங்கள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் சிறுவர்களை தொழில் செய்யும் இடங்களில் அமர்த்துதல், மனரீதியாக சிறார்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், அதனை தடுக்கும் விதமாக கையாளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார்.

    பேரூராட்சி செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி, குழந்தைகள் பாதுகாப்பு உதவி அலுவலர் ஜூலி மற்றும் பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சிவகங்கையில் புத்தக திருவிழா வருகிற 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை 11 நாட்கள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புத்தகம் வாசிப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமானதாகும். பொதுமக்களின் எண்ணம் மற்றும் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குவதற்கும் அடிப்படையாக அமைகிறது.

    தற்சமயம் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிடும் செய்திகளை மட்டுமே வைத்து பொதுமக்கள் தங்களின் பொது அறிவுத்திறனை வளர்த்து வருகிறார்கள். புத்தக வாசிப்புத்திறனை அதிகப்படுத்திடும் போது அறிவுத்திறனை மேம்படுத்த முடியும்.

    புத்தகவாசிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை நகர்ப்பகுதியில் முதன் முறையாக பெரிய அளவில் புத்தகத் திருவிழாவினை பபாசி அமைப்புடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த புத்தகதிருவிழா வருகிற 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை 11 நாட்கள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்த புத்தகத்திருவிழா புத்தக பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் ஆகியோர்களைக் கொண்டு நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் 110அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதில், 100 அரங்குகள் புத்தகக் கண்காட்சிகளுக்கும், 10அரங்குகள் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு அறிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்படவுள்ளது.

    மேலும், 600 பேர் அமரும் வகையில் மிகப்பெரிய அரங்கு அமைக்கப்பட்டு, அதில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகளிடையே இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகள் மற்றும் 1 மணிநேரம் கூட்டாக புத்தக வாசிப்பு நிகழ்ச்சியும், சிறுவர்களுக்கான குறும்படங்களை அனைத்து மொழிகளிலும் திரையிடுவதற்கென சிறிய திரையரங்கும் மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேச்சாளர்கள், பட்டிமன்றங்கள், நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்ட கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய உணவுப் பொருட்களை கொண்ட உணவகங்களும் அமைக்கப்பட உள்ளது.

    புத்தகத்திருவிழாவினை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி களைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தினந்தோறும் வருகை புரிந்து பார்த்து பயன்பெறும் வகையில், தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மக்கள் வருகை புரிவதற்கும், சம்பந்தப் பட்ட ஊராட்சி மன்றத்தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, குடிநீர் வசதி, கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

    பொதுமக்களுக்கு வாசிப்புத்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இப்புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டரின்நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், செய்திமக்கள்தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

    வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என பரமக்குடி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பரமக்குடி

    பரமக்குடி நகராட்சி ஆணையாளர் திருமால்செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-

    பரமக்குடி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர்வரி, கடைகள் வாடகை உள்ளிட்டவை ரூ.6 கோடிக்குமேல் வராமல் பாக்கியாக உள்ளது. 

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீசு கொடுத்தும் நகராட்சி அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. ஆனாலும் இந்த வரிகளை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

    வரி செலுத்த வருபவர்கள் பகல் நேரத்தில் எந்நேரமானாலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கவுண்டரில் வரிபாக்கியை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். 

    நீண்டகால பாக்கியாக நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். முதல்கட்டமாக அவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். பின்பு மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    அதேபோல் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களது பாக்கிகளை செலுத்த வேண்டும். இல்லை என்றால் கடைகளுக்கு  சீல்வைத்து பூட்டு போடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசபஸ் பயணச்சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் 2 நாட்கள் நடக்கிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறது.  மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யவும் பல்வேறு துறைகளுடன் ஒன்றிணைந்து பல நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறது. 

    அந்தவகையில் நாள்தோறும் பள்ளி, கல்லுரி, மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த பணிகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த வழித்தடங்களுக்கான இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கிவருகிறது.

    அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயணச்சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 31ந்தேதி அன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்  மற்றும் 1ந்தேததி மற்ற வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பஸ் பயணச்சலுகை அட்டை புதிதாகவும்  மற்றும் பழைய அட்டையினை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. 

    இந்த சிறப்புமுகாமில் மாற்றுத்திறனாளிகள் கீழ்கண்ட சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 
    தேவைப்படும் சான்றுகள் விவரம் வருமாறு:&

    மாற்று திறனாளிகளுக்கான தேசிய  அடையாள அட்டை அசல் மற்றும்  நகல் 1, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்  மற்றும் வாக்காளர் அட்டை நகல், பணிபுரியும் நிறுவன சான்று&கல்வி நிறுவனம் சான்று, சுயதொழில் சான்று, கடந்த நிதியாண்டு பெற்ற பஸ்பயணச்சலுகை அட்டை அசல்.

    மேற்கண்ட சான்றுகளுடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர்/பெற்றோர் மேற்காணும் நாட்களில் விண்ணப்பித்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    விருதுநகர்-காரைக்குடி ரெயிலை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரை,

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 ஜங்சன் ரெயில் நிலையங்கள் உள்ளது. 

    கொரோனா காலத்தில் ஏராளமான பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் அனைத்து பயணிகள் ரெயில்களும் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்பட்டு வருகின்றன. 

    இதில் எப்போதும் அதிக பயணிகள் பயணம் செய்யும் விருதுநகர்&திருச்சி டெமுரெயில் தற்போது எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. 

    விருதுநகரில்  இருந்து திருச்சி வரைஏராளமான பயணிகள் குறைந்த கட்டணத்தில் குறைவான பயண நேரத்தில் மதுரை செல்லாமல் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி புதுகோட்டை வழியாக எளிதாக பயணம் செய்ய முடிந்தது.

    தற்போது  எக்ஸ்பிரஸ் ரெயிலாக காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் வரவேற்பு இன்றி வெறும் ரெயிலாக சென்று திரும்புகிறது. அதேபோல் காலை 6மணிக்கு புறப்படுவதால் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ&மாணவிகள் சரியான நேரத்திற்கு பயணம் செய்யமுடிவதில்லை. 

    தினமும் பயணிகள் ரெயிலாக சாதாரண கட்டணத்தில் விருதுநகரில் இருந்து  காலை 5மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை இயக்கினால் விருதுநகர், சிவகங்கை, புதுகோட்டை மாவட்ட பயணிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகளுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும்.

    சாதாரண கட்டணத்தில் விருதுநகரில் இருந்து திருச்சி வரை டெமுரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க மதுரை ரெயில்வேகோட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகளை திருடியது மட்டுமின்றி, வீட்டிற்கும் மர்மநபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை நாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு மனைவி மற்றும் மகளுடன் சென்று விட்டார்.

    இந்தநிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அது பற்றி பூமிநாதனுக்கு செல் போனில் தகவல் தெரிவித்தனர்.

    மேலும் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பூமிநாதன் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார்.

    வீட்டில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததும், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ, மரச்சாமான்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25½ பவுன் தங்க நகைகளை காணவில்லை.

    இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் வாசிவன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பூமிநாதன் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    பூமிநாதன் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து தடயங்கள் எதுவும் போலீசுக்கு கிடைத்து விடாமல் இருப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.

    இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது.

    பூமிநாதனின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள், அவரது பக்கத்து வீடான நாச்சியப்பன் என்பவரது வீட்டிலும் புகுந்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு நகை, பணம் எதுவும் கிடைக்காததால் அப்படியே சென்று விட்டனர்.

    பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகளை திருடியது மட்டுமின்றி, வீட்டிற்கும் மர்மநபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தேவகோட்டை பகுதியை பொருத்தவரை அங்குள்ள போலீஸ் நிலையத்தில் போதுமான அளவிற்கு போலீசார் இல்லை எனவும், இதனால் ரோந்து, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் போலீசார் முழு வீச்சில் ஈடுபடமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக தேவகோட்டை பகுதியில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தேவகோட்டையில் போதுமான அளவில் போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×