என் மலர்
சேலம்
- இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார்.
- பிளஸ்-2 பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் .
சேலம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கல்பாரப்பட்டி செவ்வாய்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். தறி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு பூங்கொடி மற்றும் அமுதா ஆகிய 2 மகள்கள். இதில் இளைய மகள் அமுதா, மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி தன்னுடைய மாமியார் வீட்டுக்கு செல்வதற்காக வெங்கடாசலம், தனது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகியோரை அழைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் மல்லூருக்கு சென்று விட்டு திரும்பியபோது கார் மோதி விபத்துக்குள்ளாகி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். பிளஸ்-2 பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் . ஆனால், பெற்றோரை இழந்ததால் அவரால் மேற்படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் பலரிடமும் உதவி கோரினார்.
இதுபற்றி அமுதா உருக்கமாக கூறியதாவது:-
கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அப்பா, அம்மா, அக்கா 3 பேருமே விபத்தில் இறந்துட்டாங்கா. எனக்கு உடல் சார்ந்த பிரச்சனை சின்ன வயதில் இருந்தே இருக்கு. நான் அதையும் மீறி படிக்கணும் என நோக்கமாக இருந்தேன். எனக்கு படிக்கணுங்கிற ஊக்கம் கொடுத்தது முதலில் உலகத்திலேயே ரொம்ப முதல் ஆசிரியர் யாருனு கேட்ட அப்பா, அம்மா என சொல்வேன்.
பள்ளிக்கு அக்கா தான் என்னை கூட்டிட்டு போயிட்டு வருவாங்க. நான் ரொம்ப சிரமப்பட்டு இருந்தேன் . அப்புறமாக நான் மெடிசன் எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போய் பார்த்தோம். அதற்கு அப்புறம் கொஞ்சம் சரியாயுடுச்சு.
அதற்கு அப்புறம் படிப்பு நல்லா தொடர முடிஞ்சுது. இப்ப நான், 11, 12-ம் வகுப்பு இரண்டுலையும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து இருக்கேன். ஆனாலும் இப்ப அந்த சந்தோஷத்தை கொண்டாட யாரும் இல்ல. கல்வி தொடரணும். கிரீன் இங்க்-ல சைன் போட்டு ஏழைகளுக்கு உதவனுங்கிறது தான் 3 பேருடைய ஆசையாக இருந்தது.
எனக்குனு என்னுடைய குடும்பத்தில யாரும் இல்லனாலும் குடும்பத்தில் ஒருத்தரா அரசு முன்வந்து உதவி செய்யணும் என எதிர்பார்க்கிறேன். இப்போது என்னுடைய ஆசை நிறைவேற்றனுன்னா தயவு செய்து அரசு தொடர்ந்து உதவி செய்யணும். இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு கல்லூரியில் சேர உதவி செய்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவி அமுதாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவியை நேரில் அழைத்து அவருக்கு கலெக்டர் கார்மேகம் ஆறுதல் தெரிவித்ததோடு, வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாகவும், மருத்துவ செலவு, கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான செலவை ஏற்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் மாணவிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டிக் கொள்ள வீரபாண்டி கல்பாரப்பட்டியில் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைக்கான ஆணையை நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் கார்மேகம் வழங்கியதோடு, வீடு கட்டிக்கொள்ள போதுமான நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.
இதை தொடர்ந்து மாணவி அமுதா, தன்னுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
- அழகாபுரம், அயோத்தியாபட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் 86 இடங்களில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 58 கோடி மோசடி நடந்தது.
- அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் அயோத்தி யாபட்டினம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் ரூ.2.92 லட்ச முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை.
சேலம்:
சேலம் அழகாபுரம், அயோத்தியாபட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் 86 இடங்களில் அமுதசுரபி சிக்கன கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 58 கோடி மோசடி நடந்தது.
அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் அயோத்தி யாபட்டினம் சங்கத்தில் பல்வேறு திட்டத்தில் ரூ.2.92 லட்ச முதலீடு செய்து அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. பாதிக்கப்பட்ட அவர் சேலம் பொருளாதார குற்றப்பிரி வில் புகார் அளித்தர்.
விசாரணையில் மோசடி அம்பலமானதால் சங்க தலைவர் ஜெயவேல் (வயது 67), கணக்காளர் கண்ணன் (27), இயக்குனர் தங்கப்பழம் (43) ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கடந்த 23-ந் தேதி அயோத்தி யாபட்டினத்தை சேர்ந்த சங்க இயக்குனர் சரண்யா (31) கைது செய்யப்பட்டார். அவரை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை டான் பிட் நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டனர்.
நேற்று 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி செந்தில்குமார் உத்தர விட்டார். இதையடுத்து சரண்யாவை சேலம் அழைத்து வந்து போலீசார், விசாரணை நடத்தி வரு கிறார்கள். விசாரணை முடி வில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்ப தால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்க மாக உள்ளது.
- இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
சேலம்:
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி முதல்-அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோ றும் ஜூன் 12-ந் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்க மாக உள்ளது. இந்த ஆண் டும் குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரை நம்பி டெல்டா விவசாயிகள் தற்போது, சுமார் 5 லட்சம் ஏக்கர்களில் நடவுப்பணி மற்றும் நேரடி நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை பொழியாததாலும், அணை யில் இருந்து பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி தன்ணீர் திறந்துள்ளாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது.
குறுவை சாகுபடிக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேவைப்படு கிறது. கடந்த சில ஆண்டு களாக ஜூன் மாதம் கர்நா டகாவிலும், தமிழகத்திலும் பருவமழை இயல்பாக பெய்ததால், குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு அணையில் இருத்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முழுமையாக கடைமடை வரை சென்று சேரவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவ தால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்று டெல்டா விவசாயிகள் அச்சத்தில் உள்ளார்கள்.
காவிரி நதி நீர் ஆணை யத்தின் உத்தரவின்படி, கர்நாடக அரசு ஜூன் மாதம் 9.1 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இதை வழங்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக நீர் பாசனத்துறை மந்திரி சிவகுமார் பிடிவா தமாக பேசி வருகிறார்.
காவிரி நதி நீர் ஆணை உத்தரவுப்படி இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்க வேண் டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கி னால்தான், தமிழக டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.
எனவே காவிரி டெல்டா விவசாயிகளன் நலன் கருதி, தமிழக முதல்-அமைச்சரும், நீர்ப்பாசன அமைச்சரும், கூட்டணி கட்சியான காங்கி ரஸ் ஆட்சி செய்யும், கர்நா டகா அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, காவிரியில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் தரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- தென்கரை பகுதியில் கடையில் மது குடிக்க அனுமதித்த பெண் கைதானார்.
- அங்கு பதுக்கி வைக்கப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள தென்கரை பகுதியில் பீடா கடையுடன் சேர்த்து சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் முனியம்மாள் (வயது 40). இவர் கடையில், மது குடிக்க அனுமதிப்பதாக வீரகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார், அந்த கடையில் சோதனை நடத்தியதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்படடது. இது தொடர்பாக முனியம்மாளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் தேர்விற்கான நேர்காணல் நடைபெறுகிறது.
- சேலம் தலைமை அஞ்சலகம் மூன்றாவது தளத்தில் உள்ள கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சேலம்:
சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் வருகிற 7-ந் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் தேர்விற்கான நேர்காணல் நடைபெறுகிறது.
எனவே, ஆர்வம் உள்ள அனைவரும் அன்றைய தினம் சேலம் தலைமை அஞ்சலகம் மூன்றாவது தளத்தில் உள்ள கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது, கல்வி சான்றிதழ், ஆதார், பான் கார்டு நகல் மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்கா ணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலில் பங்கேற்க 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த நேர்காணலில் ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சேலம் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் பணி புரிய வேண்டும். மேலும், ரூ.5 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். நேரடி முகவர்கள் நியமனம் இலாகா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளரின் முடிவே இறுதியானது.
இந்த தக வலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்து உள்ளார்.
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- இதை ஒட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சேலம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதை ஒட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. ஏற்காட்டில் மாலை 5 மணிக்கு சாரல் மழையாக பெய்ய தொடங்கியது.
பின்னர் 4 மணி நேரம் கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மழையை தொடர்ந்து ஏற்காட்டில் ஏழு மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் அதிகாலை ஒரு மணி அளவில் தான் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஏற்காடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாநகரில் இரவு 8 மணி அளவில் மழை பெய்தது மாணவரில் அஸ்தம்பட்டி கொண்டலாம்பட்டி அம்மாபேட்டை ஜங்ஷன் உள்பட அனைத்து பகுதிகளிலும் பெய்த மழையால் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது எடப்பாடி மற்றும் கவுண்டம்பட்டி பல்லாண்டு வலசு வெள்ளநாயக்கன்பாளையம் வீரப்பம்பாளையம் நாச்சிபாளையம் கொங்கணாபுரம் புதுப்பாளையம் தாதாபுரம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரம் கனமழை பெய்தது இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காடையாம்பட்டி 20, பெரிய கோவில் 19, சேலம் 14, ஆனை மடுவு 12, வீரகனூர் 11, பெத்தநாயக்கன்பாளையம் ஏழு, தம்மம்பட்டி ஆறு, ஆத்தூர் 5.4, ஓமலூர் 4.6, எடப்பாடி ஒன்று புள்ளி நான்கு மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 168.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்றும் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
- ஏற்காடு பிலியூரில் உண்டு உறைவிட பள்ளியில் விடுதி காப்பாளர் மாற்றப்பட்டார்.
- இதனால் மாணவர்கள் உணவின்றி தவிப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு பிலியூரில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் அசோக் என்பவர் காப்பாளராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென கருமந்துறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அந்த விடுதியில் தங்கி படித்த 41 மாணவ, மாண விகள் சாப்பாடு கிடைக்கா மல் தவித்து வருகிறார்கள்.
எனவே உடனடியாக இந்த உண்டு உறைவிட பள்ளிக்கு ஒரு காப்பாளர் நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கி ணைப்பாளர் சரஸ்ராம் ரவி, கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்துள்ளார்.
- சேலம் அணைமேடு ரெயில்வே கேட் மினி வாகனம் மோதி உடைந்தது.
- இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம்:
சேலத்தில் இருந்து அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம் வழியாக அரூர், பேளூர், ஆத்துார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், பாண்டிச்சேரி, திருப்பதி, திருப்பத்துார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணைமேடு ரெயில்வே கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும் .
காலை மாலை என இரு வேளைகளிலும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் படிக்கும் மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்கள் செல்லும் ஆட்டோக்கள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் ரெயில்வே கேட் பகுதியாக அணைமேடு ரெயில்வே கேட் இருந்துவருகிறது.
சேலம் - விருதாச்சலம் நெடுஞ்சாலை பிரிவில் இந்த இடம் அமைந்துள்ளது. ரெயில் செல்லும் ஒவ்வொரு சமயத்திலும், கேட் அடைக்கப்படும்போது இப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இந்த ரெயில்வே கிராசிங் பகுதியில் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு, மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை ரெயில்வே கேட்டில் மினி வாகனம் மோதியது. இதனால் கேட் சேதமானது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கேட் உடைந்ததால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற 657 வீரர், வீராங்கனைகளும் சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற சென்றனர்.
சேலம்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் நடைபெற்றது. இதில் நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், மேசைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 657 வீரர், வீராங்கனைகளும் சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற சென்றனர்.
இதில் முதற்கட்டமாக கடந்த 29-ந்தேதி சேலம் மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி பிரிவைச் சார்ந்த கபடி, வாலிபால் ஆண், பெண் அணிகளும், பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த சிலம்பம் ஆண், பெண் அணிகள் என 64 மாணவ, மாணவிகள் சேலத்திலிருந்து சென்னை சென்றனர்.
இதில் கல்லூரி அளவில் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் ஜாக்சன் வெள்ளிக் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, அலங்கார வீச்சுப் பிரிவில் குமரேசன் வெள்ளிக் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும்,
சுருள்வாள் வீச்சுப் பிரி வில் மல்லூர் அரசு பள்ளி யில் பயிலும் கிருஷ்ண மூர்த்தி வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, மேச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் ஓவியா ஸ்ரீ வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, கல்லூரிப் பிரிவில் ஜெனிபர் வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்று வெற்றி பெற்றனர்.
சிலம்பம் பிரிவில் சேலம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களைப் பெற்று வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மாவட்ட கலெக்டர் கார்மே கம் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ்.சிவரஞ்சன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
- சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது.
சேலம்:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஏ.டி.ஜி.பி. மாற்றப் பட்டதை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது. இதில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி யது உட்பட பல்வேறு விதி மீறல் தொடர்பாக 8 ஆயி ரத்து 971 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. போதையில் வாக னம் ஓட்டிய 213 பேரிடம் வாக னம் பறிமுதல் செய்து அப ராதம் விதித்தனர். மாநகரில் உள்ள 824 ரவுடிகளில் 424 பேரை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்றிரவு பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
- இதில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்றிரவு பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது. சந்தன அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தருமராஜர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணபகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
- இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
வாழப்பாடி:
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க கிராமங்கள், ஊராட்சிகளை தூய்மை செய்தல், டெங்கு கொசுக்கள் உருவாகும் காரணிகளை அப்புறப்படுத்துதல், குடிநீர் மற்றும் மேல்நிலைத்தொட்டிகள் பராமரித்தல் மற்றும் குளோரினேசன் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம மக்களுக்கு டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற செயலர்கள், பேளூர் மற்றும் திருமனூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.






