என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கூட்டமாக சுற்றி திரிவதால் போக்குவரத்து நெரிசல்
    • முதியவர்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்

    ராணிப்பேட்டை:

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வரலாற்று பின்புலத்துடன் தொழில் நகரமாகவும், அன்னிய செலவாணியை ஈட்டி தரும் நகரமாகவும் விளங்கியது ராணிப்பேட்டை நகரம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ராணிப்பேட்டை நகரம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டு மாவட்டத்தின் தலைநகர் என்ற அந்தஸ்தையும் பெற்றது.

    மாவட்டத்தின் தலைநகரான பின்னர் ராணிப்பேட்டையிலேயே கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுடன் நகர உள்கட்டமைப்பு வசதிகளிலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது.

    இவ்வாறு வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்களை சந்தித்திருந்த போதிலும் மாறாத சில நிகழ்வுகளும் தினந்தோறும் நடந்து, இதை மாற்றவே முடியாதா என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் ராணிப்பேட்டை பழைய பஸ் நிறுத்தம், உதவி கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது பல ஆண்டுகளாக மாறாமல் தொடர்ந்து வருகிறது.

    காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த இடத்தில் மாடுகள் சுற்றுகின்றன. குறிப்பாக மாலை நேரத்தில் அதிக அளவில் மாடுகள் சுற்றுகின்றன.

    இவ்வாறு கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோர்க்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

    சாலையில் கூட்டமாக நிற்கும் மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதாலும், சாலைகளில் ஓடுவதாலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்க கூடிய நிலை ஏற்படுகிறது.

    இந்த பகுதி வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திடீரென மாடுகளின் ஓட்டத்தால் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதிலும் சில மாடுகள் திடீரென சாலைகளில் நடந்து செல்வோர் மீது முட்ட வருவதால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையையும், மாடுகளையும் கடந்து செல்கின்றனர்.

    சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்க நகராட்சி சார்பில் அறிவிப்பு செய்வதும் , மாடுகளை பிடிப்பது பின்னர் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து மாடுகளை விட்டு விடுவது என தொடர்ந்து வருகிறது.

    கடந்த வாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையோரங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த நடவடிக்கை எப்போது தொடங்கும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 45). இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார துறை அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன.

    அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி தலைமையில் அதிகாரிகள், வள்ளி வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது வள்ளியின் வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பதும், இவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதி களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    இதே தொடர்ந்து அதிகாரிகள் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான வள்ளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதே போல் வாலாஜா ஒத்தவாடை தெருவில் போலி மருத்துவம் பார்க்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு பரத் (25) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

    சோதனையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.

    • 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்
    • பேரூராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்

    கலவை:

    கலவை பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் தினசரி தெருவிற்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்டுதோறும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு மூலம் தின கூலியாக ரூ.330 ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு பணி செய்து வருகிறோம், ஆனால் எங்களுக்கு தினசரி கூலியாக ரூ.305 தருகின்றனர்.

    போதிய சம்பளம் இல்லாததால் குடும்பம் வறுமையில் உள்ளது எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்த அங்கு வந்த பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 4 பேர் மீது வழக்கு பதிவு
    • போலீசார் தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம்,ஸ்ரீ ராம் நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கூழ் வாரத்தல் திருவிழாவும், இரவில் நாடகமும் நடைபெற்றது.

    அப்போது அப்பகுதியில் சுகுமார் என்பவரின் வீட்டின் அருகே சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர் .

    இதை சுகுமார் மற்றும் அவரது தாய் அமுதா, அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், பாலாஜி ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து அந்த வாலிபர்கள் சுகுமார் உள்பட 4 பேரையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த 4 பேரும் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இது தொடர்பாக சுகுமார் சிப்காட் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சீக்கராஜபுரம் மோட்டூரை சேர்ந்த விஜி(எ) கருணாகரன், மோகன்குமார், சதீஷ்குமார், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஏராளமானோர் பங்கேற்பு
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில், முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தி.மு.க அரசை வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முரளி தலைமை தாங்கினார். அ.ம.மு.க.நகர செயலாளர் தனசேகர் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க மண்டல பொறுப்பாளரும், மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கொடநாட்டில் கொலை,கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து உரிய விசாரணை

    நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

    மாவட்ட அவை த்தலைவர் பொ ற்கோ,மாவட்ட பொருளாளர் குத்புதீன், அ.ம.மு.க மாவட்ட அவைத்தலை வர் பாண்டு ரங்கன், மா வட்ட பொருளாளர் மூர்த்தி , பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுரேஷ் உள்பட அ.திமு.க.(ஓ.பி.எஸ்.அணி) மற்றும் அ.ம.மு.க . நிர்வாகிகள் , தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர செயலாளர் நித்யா நன்றி கூறினார்.

    • 5 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கலவை:

    காஞ்சிபுரத்திலிருந்து நேற்று மாலை கலவை நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டது.

    இந்த பஸ்சில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் நந்தியம்பாடியைச் சேர்ந்த சாம்பசிவம் (வயது 47) டிரைவர் மற்றும் வடமன ப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (48) கண்டக்டராக பணியாற்றினார்.

    கலவை அடுத்த மேச்சேரி அருகே இரவு 8 மணி அளவில் வரும்போது திடீரென பஸ் கியர் பாக்ஸ் உடைந்தது.

    இதனால் நிலை தடுமாறிய அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மீது மோதியது.

    புளிய மரம் முறிந்து விழுந்தது. தொடர்ந்து அந்த பஸ் அங்குள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. அதைத்தொடர்ந்து இறுதியாக அருகில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தால் பஸ்சின் முன்புறம் முழுவதும் நொறுங்கி சேதமானது. இதில் டிரைவர் சாம்பசிவம் மற்றும் பஸ் பயணிகள் கலவை அடுத்த அல்லாளச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி குப்பு( 60) மற்றும் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(68) கலவையான் பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (60)அகரம் மேட்டு தெருவை சேர்ந்த தயாளன்( 62)ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் டிரைவர் சாம்பசிவம், குப்பு, முருகேசன் ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    திருநெல்வேலி அடுத்த தலைவன்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜா குணசேகரன்(வயது 40).இவர் மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

    நேற்று மாலை இந்த ரயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தபோது திடீரென ராஜா குணசேகரன் நடைமேடையில் இறங்கி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர்.

    பின்னர் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்க்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட95 வாகனங்கள் பொது ஏலம் மூலம் அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கையில் வாகன உரிமையாளர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் 95 வாகனங்களையும் யாரும் உரிமை கோராததால் அரசுடைமையா க்கப்பட்டது.

    மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 9-ந் தேதி காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாகனங்களை 6,7ஆகிய தேதிகளில் பார்வையிடவும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 8-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.15 ஆயிரம் முன் வைப்புத் தொகையை ராணிப்பேட்டை ஆயுதப்படையில் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    9-ந்தேதி காலை 10 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி.தொகையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

    • 1,213 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
    • தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் 1213.43 ஏக்கரில் தொழில் பேட்டை அமையும் இடத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 1,213 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது. தொழிற்பூங்காவுக்கு தேவையான நிலம் நெடும்புலி, துறையூர், பெருவளையம், அகவலம் ஆகிய கிராமங்களிலிருந்து கையகப்படுத்தபட்டது. இதில் சுமார் 300 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு ஆகும்.

    அப்பூங்காவில் 351.89 ஏக்கர் பரப்பிலான நிலம் சிப்காட் மூலம் கையகப்படு த்தப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனம் இப்பூங்காவில் 300 ஏக்கர் நிலபரப்பில் பெரும் தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதில் 201 ஏக்கர் நிலபரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகிறது.

    அந்தசிறப்பு பொருளாதார மண்டலத்தில் 125 ஏக்கர் நிலபரப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு கொள்கை ஒதுக்கீட்டு ஆணைப்படி நில ஒதுக்கீடு ஆணைப்படி வழங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் நிறைவு செய்ய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின் போது மேலாண்மை இயக்குனர் சிப்காட் சுந்தரவல்லி,ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவஇரக்கம். ராணி ப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, நில எடுப்பு துணை ஆட்சியர் அகிலாதேவி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு. பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா, நில எடுப்பு வட்டாட்சியர் ஜெயபி ரகாஷ். நெமிலி வட்டாட்சியர் பாலசுந்தர், சயனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி, நெமிலி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தனது மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • சிறுமியின் தாய் அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அரக்கோணம்:

    காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கிராம நிர்வாக அலுவலர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

    அதேபகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தனது மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்ததால் மாணவி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.

    இது குறித்து சிறுமியின் தாய் அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிராம நிர்வாக அலுவலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும்
    • ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது, மழை காலங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும். நீர் நிலைகளில் தவறி விழுந்தால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • நீரில் மூழ்கியவரை பிணமாக மீட்பு
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ஜாகீர்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 84). இவருக்கு கலைச்செல்வன் (44) என்ற மகன் உள்ளார்.

    நடராஜ் நேற்று வழக்கம்போல் தன்னுடைய விவசாய நிலத்திற்கு துணி துவைக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இதையடுத்து அவரது மகன் கலைச்செல்வன் மற்றும் உறவினர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே நடராஜ் வேட்டி கிடந்தது.

    இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் நடராஜ் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை அவர்கள் மீட்டனர்.இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×