என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • உலக புவி தினத்தை முன்னிட்டு அரசுப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை வகித்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் துரையரசன் மற்றும் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு உலக புவி தினம் குறித்து எடுத்துரைத்தனர்.

    அப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, கார்பன் வெளியேற்றும் வாகனத்திற்கு பதிலாக மின்சார வாகனங்கள், சைக்கிள் பயன்படுத்துவது, மரங்களை நடுவது, மறுசுழற்சி செய்த பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையை பாதுகாத்திட முடியும் என்றும், பசுமையான வளமானதாக இந்த பூமியை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றனர்.


    • புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் நில கையப்படுத்துவது குறித்த கூட்டம் நடைபெற்றது
    • மாவட்ட தனிநபர் பேச்சுவார்த்தை குழு (பத்தாம் கட்டம்) கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை, ஏப். 22-

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவேரி-வைகை -குண்டாறு இணைப்பு க்கால்வாய் திட்டத்திற்காக நில எடுப்பு செய்யப்படவுள்ள நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகப்படுத்த அமைக்கப்பட்ட மாவட்ட தனிநபர் பேச்சுவார்த்தை குழு (பத்தாம் கட்டம்) கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    காவேரி- வைகை- குண்டாறு இணைப்பு க்கால்வாய் திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர், மண்டையூர், செட்டிபட்டி, பூங்குடி, சீமானூர், வாலியம்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆகிய 8 கிராமங்களில் தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகம் செய்யப்படவுள்ள 92 பட்டா தாரர்களின் 91 புலஎண்களில் மொத்த கையக பரப்பு 11.71.23 ஹெக்டேர் நிலத்திற்கு மற்றும் மரங்கள், கட்டிட ங்கள், கிணறுகள் நில உரிமை யாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக, மாவட்ட அளவிலான தனிநபர் பேச்சுவார்த்தை குழு கூட்டம் (பத்தாம் கட்டம்) மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    மேலும் காவேரி-வைகை- குண்டாறு இணைப்புக்கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்ம ந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • புதுக்கோட்டையில் 8662 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
    • விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகள் பயனடைந்துள்ளன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு மனைக்கு வீட்டுமனைப் பட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆலங்குடி வட்டத்தில் 1,282 பயனாளிகளுக்கும், திருமயம் வட்டத்தில் 993 பயனாளிகளுக்கும், கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 768 பயனாளி களுக்கும், கறம்பக்குடி வட்டத்தில் 387 பயனாளிகளுக்கும், புதுக்கோட்டை வட்டத்தில் 426 பயனா ளிகளுக்கும், இலுப்பூர் வட்டத்தில் 539 பயனாளி களுக்கும், குளத்தூர் வட்டத்தில் 864 பயனாளிகளுக்கும், பொன்னமராவதியில் 840 பயனாளிகளுக்கும், விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகளுக்கும், அறந்தாங்கி வட்டத்தில் 874 பயனாளிகளுக்கும், ஆவுடை யார்கோயில் வட்டத்தில் 354 பயனாளிகளுக்கும், மணமேல்குடி வட்டத்தில் 655 பயனாளிகளுக்கும் என ஆக மொத்தம் விலையில்லா வீட்டுமனைப் பட்டா நத்தம் பிரிவில் 8,662 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.





    • ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் அரிசி வழங்கும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ச.ச. முகமது சருக் தலைமை வகித்தார்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் த.மு.மு.க. சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு 29-ம் ஆண்டு அரிசி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் ச.ச. முகமது சருக் தலைமை வகித்தார் . செயலாளர் அப்துல் லத்தீப், தமுமுக மாவட்ட துணைசெயலாளர் அக்பர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக நகர தலைவர் சையது முகமது வரவேற்றார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரமலான் பித்ரா அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமுமுக உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஜமாத் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றிலை ராஜா நன்றி கூறினார்.


    • மயிலாடுதுறையில் கபடி தேசிய சிறப்பு மையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்
    • கபடி தேசிய சிறப்பு மையத்தை அமைத்து தருமாறு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர்விடம் பிரிவு பாஜக மாநில விளையாட்டு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

    கந்தர்வகோட்டை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சார்பாக தமிழகத்தில் மயிலாடுதுறையில் தமிழர்களின் வீர விளையாட்டான கபடி தேசிய சிறப்பு மையத்தை அமைத்து தருமாறு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் விடம் தமிழ்நாடு விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, விளையாட்டு பிரிவு மாநில பார்வையாளர் சுமதி வெங்கடேசன், விளையாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன். மாநில செயலாளர் கார்த்திக் மற்றும் அமைச்சர் கபடி கழக உறுப்பினர்களுடனும் பாஜக மாநில விளையாட்டு பிரிவு நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடு துறையில் கபடி தேசிய சிறப்பு மையத்தை மத்திய அரசு அமைத்து தரும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உறுதியளித்தார்.இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டுமே கபடி தேசிய சிறப்பு மையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    • விவசாயிகள் கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்தலாம் என ேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை கூறினார்
    • உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி நஞ்சுள்ள உணவு உற்பத்தியை மட்டும் தான் பெருக்க முடிகிறது.மேலும் சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது.

    திரவ உயிர் உரங்கள் பல்வேறு அளவுகளில் பிரத்யேகமான கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகிறது. திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 மாதங்கள் ஆகும்.அகில இந்திய அளவில் தமிழகத்தில்தான் முதன் முறையாக பாக்டீரியவை பிரித்தெடுக்கும் இணை ஒட்ட திரவ வடிப்பான் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது. உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்க கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும்.

    விதைகளை பூஞ்சான கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்தான் கடைசியாக உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்ய வேண்டும். எனவே விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து நிகர லாபம் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


    • புதுக்கோட்டையில் நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று ஆட்டுசந்தை களைகட்டியது
    • ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை

    புதுக்கோட்டை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை கலைக்கட்டி வருகிறது, 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது, விலை அதிகரித்த போதும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    புதுக்கோட்டை சந்தை ப்பேட்டையில் வார ம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறு வது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோ ட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட ங்களிலிருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் அதிக அளவு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர்.இந்நிலையில் நாளைய தினம் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டா டப்பட உள்ள நிலையில் இந்த ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டி வருகிறது. வழக்கத்தை விட ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ளது.

    செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் இந்த ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு ஒன்றுக்கு 3000 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. விலை அதிகரித்துள்ள போதும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று நடைபெறும் ஆட்டு சந்தையில் ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





    • அறந்தாங்கி மார்க்கெட்டில் முத்திரையிடா 21 மின்னனு தராசுகள் பறிமுதல் செய்தனர்
    • தொழிலாளர்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தினசரி சந்தையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை முறையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. காய்கறிகளை எடை அளவீடு செய்வதற்கு எடைக்கற்கள், தராசு மற்றும் மின்னனு தராசுகள் பயன்படுதப்படுகின்றன.எடை போடும் தராசுகள் போலியானதோ, தேய்மானம் ஏற்பட்டோ, எடைகற்கள் உடைந்தோ காணப்பட்டால் நுகர்வோர் பாதிக்கக் கூடும் என்பதற்காக தொழிலாளர் துறை சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை எடை தராசுகள் சரிபார்க்கப்பட்டு முத்திரை பதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தினசரி காய்கறி சந்தை மற்றும் தினசரி மீன் சந்தை ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முத்திரையிடப்படாத 21 மின்னனு தராசுகள் மற்றும் எடை கற்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடை கற்கள் அறந்தாங்கி தொழிலாளர் துறை அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சோதனையில் மாவட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர்கள் குணசீலன், லெட்சுமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அறந்தாங்கி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறித்த 3 வாலிபர்கள் அதிரடி கைது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கிடங்கிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆவுடையார் கோவிலில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளாதேவி (வயது 40). இவர்கள், குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 3 மர்ம ஆசாமிகள் வீ்ட்டிற்குள் புகுந்து மஞ்சுளாதேவி கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.இதையடுத்து மஞ்சுளாதேவியின் சத்தத்தை கேட்டு கண்விழித்த ஆறுமுகம், மர்ம ஆசாமிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.அப்போது ஆறுமுகமும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் ஆகியோர் தப்பியோடிய மர்ம ஆசாமிகளை விரட்டி பிடித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மனோஜ்பட்டியை சேர்ந்த ரவி மகன் பிரபாகரன் (30), ராமசாமி மகன் ரமேஷ் (33), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபாகரன் (25) என்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம ஆசாமிகளிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலியை போலீசார் கைப்பற்றினர்.

    • ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்
    • பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடற்கூறு செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் புதுக்கோட்டை இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் நலப்பணிகள்) டாக்டர் ராமு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை பார்வையிட்டு அவர் கூறுகையில், மொத்தம் 6 மருத்துவர்கள் இங்கு பணியாற்ற வேண்டும் , அதில் 5 மருத்துவர்கள் தற்போது உள்ளார்கள். ஒரு மருத்துவர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவர். இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் தரதேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு அதிக அளவில் தொகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடற்கூறு செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆய்வின் போது புதுக்கோட்டை தேசிய நலவாழ்வு குழும ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சரவணன் மற்றும் ஆலங்குடி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


    • அறந்தாங்கி பகுதிகளில் தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் பாகநிலை முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணமேல்குடியில் வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். அப்போது புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இரட்டை பதிவு மற்றும் இறந்த வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவது, கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைப்பது உள்ளிட்ட பணிகளை பாகநிலை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதே போன்று ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வடக்கு, தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் உதயம் சண்முகம், பொன்துரை ஆகியோர் ஏற்பாட்டிலும், அறந்தாங்கி நகரத்தில் நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டிலும் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி, நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகர்மன்றத் துணை தலைவர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஹரி விமலாதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    • புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
    • சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது.

    புதுக்கோட்டை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களை கட்டியது. 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்த நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட ரூ.500 முதல் ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்தது.

    விலை அதிகரித்த போதிலும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

    இந்த சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது. ஆடு ஒன்று ரூ.3000 முதல் ரூ.25000 வரை விற்கப்பட்டது. ரம்ஜானையொட்டி இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×