என் மலர்
பெரம்பலூர்
- தீத்தொண்டு நாள் வார விழா நடைபெற்றது
- உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட, தீயணைப்பு வீரர்கள் சிலர், தீயில் கருகி வீரமரணம் அடைந்தனர். இதனால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன்படி பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அம்பிகா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர் அக்கீம்பாஷா மற்றும் நிலைய அலுவலர் உதயக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.பின்னர் தமிழ்நாடு தீயணைப்பு, மீட்பு பணித்துறை சார்பில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தீத்தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பாலக்கரை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்:
தமிழ் புத்தாண்டையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தமிழ்புத்தாண்டையொட்டி அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் குவிந்தனர். மேலும் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பல் மண்டல அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் மகாசித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினிமாதாஜி, தவயோகிகள் மகாலிங்க சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் ஸ்ரீபிரம்மரிஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஈசன் அம்பாள் மற்றும் உற்சவமூர்த்திகள் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசந்திரசேகரர் பஞ்சமூர்த்திகள் ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீவெள்ளந்தாங்கியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணியளவில் ஈசன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதே போல் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில், எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில், செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாசலஸ்வரர் கோவில், எஸ். ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களில் சுவாமிகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே காவல்துறை சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.
பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் முக்கியமான இடமாக உள்ள பகுதிகளில் கோடையின் தாக்கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோரினை எஸ்.பி. வழங்கினார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் எஸ்.ஐ.க்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற தடகள மாணவர்கள் 59 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்
- தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும்.
பெரம்பலூர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாட்டு மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த தடகள பயிற்சிக்கான தேர்வு போட்டியினை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடங்கி வைத்தார்.
இதில் பயிற்சியாளர்கள் துர்கா (தடகளம்), பரணி (டேக்வாண்டோ), உடற்கல்வி ஆசிரியர்கள், தற்காலிக பயிற்சியாளர்கள் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர். தடகள போட்டிகளில் மாவட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 100க் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பாக செயல்பட்ட 35 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு 11 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவர் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்தார்.
- லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளாதேவி உத்தரவின்பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மங்களமேட்டை அடுத்துள்ள சின்னாறு ஆர்ச் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீராளன் மேற்பார்வையில் மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுகொண்டிருந்த லெப்பைகுடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 43) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
- செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் படி பூஜை விழா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படி பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் படி பூஜை நடைபெற்றது. சித்திரை மாத முதல் நாளில் படி பூஜை நடத்தினால், அந்த ஆண்டும் முழுவதும் வாழ்க்கை படியில் முன்னேறி செல்லலாம் என்பது பக்தர்களின் ஐதீகம். படி பூஜை விழாவை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கணபதி பூஜை, கோ பூஜை நடைபெற்றது. இதில் படியின் இருபுறங்களிலும் அமர்ந்திருந்த பெண் பக்தர்கள் படியில் தேங்காய், பழம், பூ, பத்தி ஆகியவற்றை வைத்து படி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்கள் மற்றும் திரளான பெண்கள் கையில் செங்கரும்பை ஏந்தி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். படி பூஜையை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்
- உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர் ஹக்கீம் பாஷா, நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். வருகிற 20-ந் தேதி வரை தீ தொண்டு வார விழா "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்ற தலைப்பின் கீழ் கடைபிடிக்கப்படவுள்ளது. அப்போது மாவட்டம் முழுவதும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, தீ விபத்து, பேரிடர்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்.
- போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
- போலீசார் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோடை காலத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோா் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோரினை வழங்கினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 3 பேர் குணமாகியுள்ளனர்
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 7 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 31 பேரில், 3 பேர் குணமாகியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மீட்டனர்
- கிணற்றில் குளித்தவர் உயிரிழந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முருகேசன் (வயது 23). இவரும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான மருதையின் மகன் சாமிநாதன் (25), தொப்புளானின் மகன் விக்னேஷ் (23) ஆகிய 3 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றனர். அப்போது முருகேசன் அவரது சட்டை, லுங்கி, காலணி ஆகியவற்றை கழற்றி வைத்து விட்டு கிணற்றில் குளித்தார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் மேலே வரவில்லை.இந்த நிலையில் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சாமிநாதனும், விக்னேசும் இதுகுறித்து ஊருக்குள் சென்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் இருந்து முருகேசனை பிணமாக மீட்டனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொளுத்தும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர்
- பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர் பெரம்பலூர் குடை பிடித்தபடி செல்கின்றனர் கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.
நேற்றும் வெயில் கடுமையாக கொளுத்தியது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்றனர்.
வாகன ஓட்டிகள் சிரமம் வெயிலின் தாக்கத்தினால் சாலையில் கானல் நீர் தோன்றுகிறது. மேலும் வெயிலோடு சேர்ந்து அனல் காற்றும் வீசுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். வெயிலின் கொடுமையை சமாளிக்க முடியாமல் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கினர்.
- சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது
- 34 மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமையில் நேற்று நடந்தது. முகாமில் போலீசார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.






