என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலியாகி உள்ளனர்
    • விபத்து குறித்து வழக்குகள் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகளம்பூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 29). இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான மோகனுடன் (37) ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூருக்கு வந்தார். பின்னர் அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரபாகரன் ஓட்டினார்.

    பாடாலூர் டாஸ்மாக் கடையை தாண்டி தெரணி சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பாடாலூர் அருகே உள்ள ஸ்ரீதேவிமங்கலத்தில் இருந்து சென்னைக்கு சின்ன வெங்காயம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலையில் சென்றபோது, சிறுவாச்சூரில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும், டிராக்டரும் மோதிக்கொண்டன.

    இதில், மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரன் (45), அதே கிராமத்தை சேர்ந்த படையப்பா (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்குசென்று 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து, டிராக்டர் டிரைவர் செட்டிகுளத்தைச் சேர்ந்த சரத்குமாரை (22) கைது செய்தனர்.வெற

    • மாநிலத்தில் முதன் முதலாக தீயணைப்போர்களுக்கான தடைகளை தகர்க்கும் பயிற்சி களம் பெரம்பலூரில் தொடங்கப்பட்டது
    • பயிற்சி களத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் திறந்து வைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மாநிலத்தில் முதன் முதலாக தீயணைப்போர்களுக்கான தடைகளை (அப்ஸ்டகல்ஸ்) தகர்க்கும் பயிற்சி களம்  தொடங்கப்பட்டது. இதனை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் திறந்து வைத்து, பயிற்சியாளர்களுக்கான பயிற்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் வருகிற வடகிழக்கு பருவமழைைய முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் உள்ள சிறப்பு தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் ஊர்திகளை ஆய்வு செய்தார். தீயணைப்பு வீரர்களின் பிரமீடுகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து சிறந்த பயிற்சியாளர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    மேலும் அதிகாரி ஆபாஷ்குமார், நிருபர்களிடம் கூறுகையில், இந்த தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்போர்களுக்கான பயிற்சி களத்தை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வரும் நிதி ஆண்டில் தீயணைப்பு துறைக்கு அதிக நீதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன்மூலம் அதிகளவு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கான வாகனங்கள் வாங்கப்படவுள்ளது. தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்டப்படும். தேவைப்படும் இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கவும், புதிய தீயணைப்பு வீரர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல துணை இயக்குனர் கல்யாணகுமார், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர்கள் கோமதி, வீரபாகு மற்றும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள், அனைத்து நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் வங்கி அதிகாரி மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
    • வங்கி அதிகாரி உடலை கைப்பற்றி மருவத்தூர் போலீசார் விசாரணை

    குன்னம், 

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காந்தி நகர், வல்லாய் தெருவை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 44). இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.விஜயராமன் பெரம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.நிலக்கோட்டையில் இருந்து தினந்தோறும் ெபரம்பலூருக்கு வர முடியாததால், அய்யலூர் ஜீவா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அலுவலகம் சென்று வந்தார்.இந்த நிலையில் நேற்று அவர் பணிக்கு செல்லவில்லை, எந்த தகவலும் தரவில்லை. இதனால் அலுவலகத்தில் இருந்து அவரது செல் போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போனையும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள், உடனடியாக விஜயராகவன் வீட்டிற்கு வந்தனர்.அப்போது விஜயராமன் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் விஜயராமன் தங்கியிருந்த அறையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.வங்கி அதிகாரி மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெரம்பலூர் பாலையூரில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமி
    • பொதுமக்கள் கையில் சிக்காமல் மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவர் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி திடீரென மூதாட்டி செல்லம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் அந்த ஆசாமியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லெப்பைக்குடிகாடு கிராமத்தில் கஞ்சா விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டு உள்ளார்
    • அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு கிராமத்தில் சிலர் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஆலமரத்தின் அடியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஜமாலயா நகரை சேர்ந்த நியாஸ் அகமது (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • பெரம்பலூர் அருகே சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்
    • லிப்ட் கேட்டு ஏறியவருக்கு நேர்ந்த சோகம்

    குன்னம்,

    பெரம்பலூர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோவில், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலர்கொடி (வயது 47), பலூன் வியாபாரி.

    இவா் பல்வேறு ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு சென்ற பலூன் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வியாபாரத்தை முடித்து கொண்டு ஊருக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக துறையூர் நோக்கி சென்ற சரக்கு வாகனம் வந்தது. மலர்கொடி அந்த வாகனத்தில் ஏறி பயணம் செய்தாா்.

    ஆலத்தூர் கேட்-துறையூர் சாலையில் குரூர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் செய்த மலர்கொடி உள்பட 6 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட் மோதி நடந்து சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
    • பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பார்வதி (வயது 42). இவா் பெரம்பலூர்-துறையூர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆலத்தூர் தாலுகா, காரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வல்லரசுவின் மகன் நல்லதம்பி (19) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராதவிதமாக பார்வதி மீது மோதியது. இதில் பார்வதியும், நல்லதம்பியும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். நல்லதம்பிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கிழுமத்தூர் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவில் கிழுமத்தூர், பெருமத்தூர், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கிழுமத்தூர் கிராமத்தில் சௌந்தரிய நாயகி அம்மன், சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை தீர்த்த ஊர்வலம், கோ பூஜை, அதனை தொடர்ந்து மறுநாள் திருப்பள்ளி எழுச்சி, முதல் கால வேள்வி வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல், மருந்து சாத்துதல் நடைபெற்றன.தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி வழிபாடு திருமுறை விண்ணப்பம், அருளார் அமுதம் வழங்குதல், அருட்பிரசாதம் வழங்குதல், நடைபெற்றன.

    நேற்று காலை மூன்றாம் கால வேள்வி வழிபாடு, நாடி சந்தன வழிபாடு, கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க திருகலசங்கள் புறப்பாடும் நடைபெற்றன.

    தொடர்ந்து வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில் கிழுமத்தூர், பெருமத்தூர், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை குன்னம் காவல்துறையினர் செய்திருந்தனர்

    இதேபோல் அத்தியூர் குடிகாட்டில் திரோபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில்அத்தியூர், ஒகளூர், ஆடுதுறை, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை மங்களமேடு காவல்துறையினர் செய்து இருந்தனர்

    • சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டு உள்ளது
    • பராமரிப்பு பணிகள் நடைபெற போவதால் மின் நிறுத்தம் என அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர், பெரகம்பி ஆகிய பகுதிகளிலும், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.

    பெரம்பலூர் கிராமியத்துக்குட்பட்ட எசனை துணை மின் நிலையத்தை சேர்ந்த கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக கீழப்பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
    • ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜிக்கு கவுன்சிலர்கள் வாழ்த்து

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜ் உள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் கற்பகம், சுதந்திர தின விழாவின் போது சத்யா காமராஜிடம் பாராட்டி வழங்கினார்.

    மேலும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் காடூர் ஊராட்சியையும் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ்க்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி, வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு, சுப்பிரமணியன் தொட்டி , புவனேஷ்வரி, ஜோதி, சீதா, ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • குன்னம் அருகே விஷம் குடித்த புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
    • கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பரவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சரத்குமார். இவருக்கும், அதேபகுதி சமத்துவபுரம் ரோட்டை சேர்ந்த சின்ன தம்பியின் மகள் பட்டதாரியான மீராவுக்கும் (வயது 22) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மீராவின் பெற்றோர் சரத்குமாருக்கு வரதட்சணையாக நகையும், சீர்வரிசையாக வீட்டு உபயோக பொருட்களையும் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் சரத்குமார் சவுதிக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து மீரா தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மீராவை அவருடைய பெற்றோர் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள சரத்குமார் செல்போனில் மீராவை தொடர்பு கொண்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மீரா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனைக்கண்ட அவருடைய குடும்பத்தினர் மீராவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மீரா பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக மீராவின் பெற்றோர் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த மீராவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி விசாரணை நடத்தி வருகிறார்.

    • 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. புதிய பிரதமரை தேர்வு செய்து நீட் தேர்வை ஒழிக்கும் என்று பெரம்பலூரில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்
    • தி.மு.க. இளஞைரணி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேச்சு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட்தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், நகராட்சி துணை தலைவருமான ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்ககமல், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

    திமுக துணை பொதுச்செயலாளர் ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், மத்தியில் தர்பார் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கும்பலை வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் விரட்டியடிப்போம், புதிய பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் தி.மு.க. இருக்கும். அப்போது நீட் ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.

    மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாவட்ட அவை தலைவர் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், நூருல்ஹிதா, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், ஜெகதீசன், நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, டாக்டர் செங்குட்டுவன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் மாரிக்கண்ணன், நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன் மீனாம்பாள், ராமலிங்கம், பிரபா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்கரீம் வரவேற்றார். முடிவில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரினோபாஸ்டின் நன்றி கூறினார்.


    ×