என் மலர்
நீலகிரி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. இங்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் தமிழக அரசு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வந்தனர். இதன் காரணமாக தினமும் 2 ஆயிரக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர். இதில் பலர் சுற்றுலா நோக்கத்தோடு வந்து ரகசியமாக தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும், சுற்றுலா பயணிகள் வருவதை கட்டுப்படுத்தவும் நீலகிரிக்கு வர கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 26-ந் தேதி முதல் மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற அவசிய, அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு உத்தரவை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்தார். இதன்படி மாநிலம் முழுவதும் இ-பாஸ் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க, மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் நீலகிரியில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவை இல்லை. ஆனால், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி வருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். நீலகிரி வரும் பொதுமக்களை, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்று தீவிரமாக கண்காணித்த பின்னரே உள்ளே அனுமதிப்பார்கள். ஒருவேளை இ-பாஸ் பெறாமல் வந்தால் கண்டிப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க கலெக்டர் அனுமதியுடன் அவசிய காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்க அரசு அனுமதித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். மேலும் நீலகிரியில் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் திறப்பது குறித்து கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது,
நீலகிரி மாவட்டத்துக்கு தினந்தோறும் 2 ஆயிரம் முதல் 2,500 பேர் வரை வருகை தருகிறார்கள். தற்போது தமிழக அரசு இ-பாஸ் பெறும் முறையை எளிமைப்படுத்தியதால் பல்வேறு நபர்கள் வருகை தருகிறார்கள். இதை பயன்படுத்தி சுற்றுலாவுக்காக நீலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
சுற்றுலா சம்பந்தமாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. சுற்றுலா பயணிகள் வர தடை நீடிக்கிறது. சுற்றுலா நோக்கத்தோடு நீலகிரிக்கு வருகிறவர்கள் திரும்பி அனுப்பப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் செயல்படுகிறதா? என்று உள்ளாட்சி துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கு பயணிகள் தங்குவது கண்டறியப்பட்டால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தேவையான பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று வர வேண்டும். தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இ-பாசை தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு இல்லாமலும், இ-பாஸ் பெறாமலும் பயணம் செய்யும் நபர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும். கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை அறைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 270 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் 200 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
நீலகிரியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் தாமதமாக வந்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய முன்வர வேண்டும். தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 34 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டது. மேலும் 30 ஆயிரம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின. 42 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தது. 400 வீடுகள் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளன. 8 பாலங்களும் சேதம் அடைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை கடசனகொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர், கேத்தன்(வயது33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி மதுகுடித்து விட்டு வந்து ஊருக்குள் சத்தம் போட்டார். இதை அப்பகுதியை சேர்ந்த மாறன் என்பவர் தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கேத்தன் மாறனை கத்தியால் வெட்டினார். இதுகுறித்து தேவர்சோலை போலீசார் கேத்தனை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு கூடலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பாபு, குற்றவாளி கேத்தனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு இன்கோசர்வ் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாகு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி சிகிச்சைகளை அளிக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து அவர்களுடன் தொடர்புடைய முதல், இரண்டாம் நிலை நபர்களை கண்டறிந்து அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவர்களையும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் அறிகுறியுடன் நபர்கள் வந்தால் அவர்களின் முழு முகவரிகளை சேகரித்து அந்த பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தினமும் கபசுரக் குடிநீர், ஜிங்க் மாத்திரைகள் ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதோடு அவர்களது உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக முககவசங்கள் அணிவது, அடிக்கடி கை கழுவுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் ஊட்டி மருத்துவ கல்லூரி டீன் ரவீந்திரன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






