என் மலர்tooltip icon

    நீலகிரி

    இளம் வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
    ஊட்டி:

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

    வருகிற சட்டமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. யாருக்கு வாக்குரிமை அளித்தால் ஜனநாயகம் சரியாக காப்பாற்றப்படும் என்பதை உணர்ந்து 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளில் விடுமுறை கிடைத்தால், அதில் நமது அன்றாட வேலையை கவனித்துவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாது. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பதை அறிந்து சுய சிந்தனையோடு முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும். நான் ஓட்டு போட்டால் மாற்றம் வருமா? என்று யோசிக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நமது வீட்டார், உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக்கூறி வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும். ஒரு வாக்கு கூட முடிவை மாற்றும். எனவே இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. அரசியல் கட்சியினர் தேர்தல் சமயத்தில் மக்களை சந்திப்பது, வாக்குப்பதிவு நாளில் ஓட்டு போடுவது போன்ற காட்சிகளுடன் நாடகம் நடித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஓட்டு போட்ட பிறகு அழியாத மை வைக்கப்படும் ஆள்காட்டி விரலை உயர்த்தி காண்பிப்பது போன்ற வடிவில் மாணவர்கள் நின்றனர்.
    அப்பர்பவானி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
    ஊட்டி: 

     நீலகிரி மாவட்டம் ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வனப்பகுதிகளில்  உள்ள புற்கள் கருகியும், மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்தும் கிடந்தன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருந்ததால், வனத்துறையினர் தீத்தடுப்பு கோடு  அமைத்து கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் மஞ்சூர் அருகே அப்பர்பவானி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. புல்வெளி, செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்தன.  இதுகுறித்து தகவல் அறிந்த குந்தா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

    உடனடியாக தீ தடுப்பு கோடுகள் அமைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து  வனத்துறையினருடன் அதிரடி படையினரும் சேர்ந்து தீயை அணைக்க போராடினர். 

    அங்கு அதிரடிப்படை முகாம் அருகே தீ பரவியதால் சுற்றி உள்ள செடி, கொடிகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு, முகாமுக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும்  அப்பர்பவானி வனப்பகுதியில் மின்வாரிய குடியிருப்பு அருகே காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கு அணை சீரமைப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள்  தங்கி உள்ளதோடு, பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. 

    உடனே தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பை சுற்றிலும் பரவிய காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். காட்டு தீயால் 5 ஏக்கருக்கும் மேலான  வனப்பகுதிகள் எரிந்து சாம்பலானது. 

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளதால் வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில் சிகரெட்  பிடித்து விட்டு கீழே போடக்கூடாது. சுற்றுலா பயணிகள் அடுப்பு வைத்து சமையல் செய்யக்கூடாது. காட்டுத்தீ ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்  என்றனர்.
    வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எல்.இ.டி. திரை மூலம் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்களை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் நடந்தது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மோனிகா தலைமை தாங்கி பேசும்போது, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய விதிமுறைகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதை கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

    தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எல்.இ.டி. திரை மூலம் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு நடைபெறும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதிக்கு முன்னதாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டு போடுவதற்கான பொருட்கள் அனுப்பப்படும்.

    இதனை அலுவலர்கள் சரிபார்த்து வாக்குச்சாவடியில் மேஜைகள், இருக்கைகள் போட்டு எந்திரங்களை பொருத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். இதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என உறுதி செய்யப்படும். பின்னர் மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு, தேர்தல் அன்று வாக்குப்பதிவு நடக்கும்.

    வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கவும், ஓட்டு போடுபவர்கள் கையில் அழியாத மை வைக்கவும் வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் குளோஸ் பட்டனை அழுத்தி சீல் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்துக்கு பின்னர் வரிசையில் நிற்பவர்களை டோக்கன் மூலம் வாக்களிக்க அனுமதிக்கலாம். மேலும் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியில் மொத்தம் பதிவான வாக்குகளை குறித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பயிற்சியில் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,700 பேர் கலந்துகொண்டனர்.
    சுற்றுலா பயணிகள் பார்வையிட நாடுகாணி தாவரவியல் மையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் வனக்கோட்டத்தில் ஓவேலி, கூடலூர், நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. இதில் நாடுகாணி வனச்சரகத்தில் தாவரவியல் மைய பூங்கா அமைந்துள்ளது. இது கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளின் கல்விச்சுற்றுலா மையமாக திகழ்ந்து வருகிறது.

    இயற்கை எழில் நிறைந்த பசுமை பள்ளத்தாக்குகள், அரிய வகை தாவரங்கள் பராமரிப்புக்கூடம், ஆர்கிட்டோரியம், திசு வளர்ப்பு மையம், பெரணி இல்லங்கள், வன விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடற்பாகங்கள் கொண்ட கண்காட்சியகம் உள்ளது. இது தவிர காட்சி முனை பகுதிகளும் இருக்கிறது.

    கடந்த காலங்களில் தாவரவியல் மையத்துக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே தாவரவியல் மையத்தை பயன்படுத்தி வந்தனர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதன் மூலம் நாடுகாணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தநிலையில் தாவரவியல் பூங்கா மையம் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடுகாணி தாவரவியல் மையத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து நாடுகாணி பகுதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்புகள் உருவானது.

    இருப்பினும் கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் தாவரவியல் மையத்தில் பராமரிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

    மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து தாவரவியல் மையம் மூடப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தாவரவியல் மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

    தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சுற்றுலா தலங்களும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தாவரவியல் மையம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே தாவிரவியல் மைய பூங்காவை திறக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, நாடுகாணி தாவரவியல் மையத்தை விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்றனர்.
    குன்னூர் ஏல மையத்தில் கடந்த 5 வாரங்களுக்கு பிறகு தேயிலைத்தூள் விலை உயர்ந்து உள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு தொழிற்சாலைகளும், தனியார் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

    விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர். அந்த பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது.

    அதன்படி நீலகிரியில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர்.

    இங்கு விற்பனை எண் 10-க்கான ஏலம் கடந்த 11, 12-ந் தேதிகளில் நடைபெற்றது. ஏலத்துக்கு 14 லட்சத்து 22 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 10 லட்சத்து 82 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 40 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

    இந்த ஏலத்தில் 12 லட்சத்து 2 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. அதன் மதிப்பு ரூ.14 கோடியே 74 லட்சம் ஆகும். இது 86 சதவீத விற்பனை. அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு இருந்தது. சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.277, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.250 என விற்பனையானது.

    சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.109 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.171 முதல் ரூ.211 வரை, டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.113 முதல் ரூ.117 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.171 முதல் ரூ.234 வரை ஏலம் போனது.

    அடுத்த ஏலம்(விற்பனை எண்-11) வருகிற 18, 19-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்கு 13 லட்சத்து 59 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது. கடந்த 5 வாரமாக தேயிலைத்தூளுக்கு தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருந்தனர். ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இது அவர்களுக்கு சற்று ஆறுதலை தந்து உள்ளது.
    முககவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை பிடித்து அதிகாரிகள் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முககவசம் அணியாமல் தொற்றை பரப்புபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.

    மேலும் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை பிடித்து அதிகாரிகள் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஊட்டியில் நடந்து செல்லும் மக்கள், வாகனங்களில் செல்வோர்கள் என அனைவரும் அரசின் விதி முறைகளை கடை பிடிக்கிறார்களா? முககவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவே களத்தில் இறங்கினார்.

    ஊட்டி ஸ்டீபன் சர்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அந்த வழியாக முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள், சுற்றுலா வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தார்.

    இதேபோல் அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி பயணிகள் முககவசம் அணிந்துள்ளனரா? என ஆய்வு மேற்கொண்ட அவர், அப்படி அணியாதவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். தொடர்ந்து அந்த வழியாக முககவசம் அணியாமல் நடந்து சென்ற 50 பாதசாரிகளை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தற்போது மக்களிடம் முக கவசம் அணிவது குறைய தொடங்கி உள்ளது. முக கவசம் அணிவதை கண் காணிக்க கூடுதல் தனிக்குழு அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பஸ்சில் செல்லும் பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சி இதுவரை 9 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், பா.ஜனதா- காங்கிரஸ் கட்சிகள் இந்த முறை நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    மலைகளின் அரசி என்றும், 60 சதவீதம் காடுகளை கொண்ட பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இப்படி சிறப்பு வாய்ந்த மாவட்டத்தில்தான் உதக மண்டலம் சட்டமன்ற தொகுதி உள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளது.

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த தொகுதியாகவும் இது உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் விடுதிகள், காட்டேஜூகள் இயங்கி வருகின்றன. சுற்றுலா தலங்களை நம்பி ஏராளமான வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகிறார்கள். பொக்காபுரம் மாரியம்மன் கோவில், ஊட்டி முருகன் கோவில் உள்பட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களும், தேவாலயங்களும் உள்ளன.

    இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 98,353 பேர், பெண் வாக்காளர்கள் 1,06,775 பேர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2,05,138 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 9 முறையும், அ.தி.மு.க, தி.மு.க தலா 2 முறையும், சுதந்திரா கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

    தொகுதியில் குந்தா, ஊட்டி தாலுகாக்களும், சோலூர், கேத்தி பேரூராட்சிகளும், ஊட்டி நகராட்சியும், கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு தும்மனட்டி உள்பட பல்வேறு கிராமங்களும் நிறைந்து காணப்படுகிறது.
    65 ஆயிரம் விவசாயிகளின் முக்கிய பொருளாதாரமாக தேயிலை விவசாயம் உள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக பூண்டு, கேரட், உருளை, பீன்ஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இவை அனைத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி ஊட்டி எச்.பி.எப் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் விரும்பி பயணம் செய்ய மலைரெயில் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமான ஊட்டியில் சுற்றுலா பயணி களுக்காக உயர்ந்த மலை சிகரமான தொட்ட பெட்டாவில் இருந்து ஊட்டி படகு இல்லம் வரை ரோப் கார் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளை கடந்தும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.

    இதை கருத்தில் கொண்டு மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    மழை காலங்களில் கனமழை பெய்யும்போது சேரிங்கிராஸ், ரெயில்வே போலீஸ் நிலையம், கிரீன் பீல்டு ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிடுவதால் மக்கள் அவதி யடைகின்றனர். இதற்கு வடிகால் வசதிகள் செய்யப்படாததே காரணம். மேலும் சிறிய, சிறிய கால்வாய்களும் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே இதனை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காங்கிரஸ் வேட்பாளர்

    மலை உச்சியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல முடியாததால் வினியோகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி வாகனம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பார்சன்ஸ்வேலி 3-வது கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனை நிறைவேற்றி தந்தால் பயனடைவோம் என மலை உச்சியில் வாழ்பவர்கள் கருதுகின்றனர்.

    தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரம் பேர் உள்ளனர். தற்போது ஒரு கிலோ பச்சை தேயிலை ரூ.21-க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு விலை அதிகரித்து பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.30 முதல் ரூ.35 வரை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மஞ்சூரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊட்டியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஐ.டிபார்க் அமைத்து தர வேண்டும். வனவிலங்குகள் தாக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என இத்தொகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    அதிமுக கூட்டணியில் உதகமண்டலம் பா.ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே எம்எல்ஏ-வாக இருக்கும் ஆர். கணோஷ் களம் இறங்குகிறார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:


    1957-லிங்கா கவுடர்(காங்கிரஸ்)
    1962-கர்சண்(காங்கிரஸ்)
    1967-போஜன்(சுதந்திர கட்சி)
    1971-தேவராஜன்(தி.மு.க)
    1977-கோபாலன்(அ.தி.மு.க)
    1980-கல்லன்(காங்கிரஸ்)
    1984-கல்லன்(காங்கிரஸ்)
    1989-எச்.எம் ராசு(காங்கிரஸ்)
    1991-எச்.எம்.ராசு(காங்கிரஸ்)
    1996-குண்டன்(தி.மு.க)
    2001-எச்.எம் ராசு(காங்கிரஸ்)
    2006-கோபாலன்(காங்கிரஸ்)
    2011-புத்திசந்திரன்(அ.தி.மு.க)
    2016-கணேஷ்(காங்கிரஸ்)
    ஓட்டல் மற்றும் ஜவுளிக்கடையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பந்தலூர் பஜாரில் தாசில்தார் தினேஷ், வருவாய் ஆய்வாளர்கள் கிரிஜா, முரளி, கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது ஓட்டல் மற்றும் ஜவுளிக்கடையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 12,000 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
    ஊட்டி:

    சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 12,000 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12 டி படிவங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது வரை 2 ஆயிரத்து 314 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்காக பதிவு செய்து உள்ளனர். அவர்கள் தங்களது ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தனர்.
    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் குன்னூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்று.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா இந்த தொகுதியில்தான் உள்ளது. மத்திய அரசின் பாஸ்டியர் ஆய்வகம் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளது.

    ஆண் வாக்காளர்கள் 91,301 பேரும், பெண் வாக்காளர்கள் 99,999 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் - 7 பேர் என மொத்தம் குன்னூர் தொகுதியில் 1,91,307 வாக்காளர்கள் உள்ளனர். குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம்.

    குன்னூர் தொகுதி

    பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில், முருகன் கோவில், மைசூர் மன்னர் வாழ்ந்ததாக கூறப்படும் பக்காசூரன் மலை, ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், கேத்திரின் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களும் நிறைந்து காணப்படும் தொகுதியாக குன்னூர் தொகுதி உள்ளது. இதுதவிர வெலிங்டன் ராணுவ முகாமும் இந்த தொகுதியில் தான் இருக்கிறது.

    குன்னூர் தொகுதியில் படுகா, ஆதிவாசி மக்கள், தோடர், இருளர், குரும்பர், தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இதுதவிர கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    குன்னூர் தொகுதி

    இந்த தொகுதியில் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட தாலுகாக்களும், குன்னூர் நகராட்சியும், அதிகரட்டி, உலிக்கல் பேரூராட்சிகளும், எடப்பள்ளி, பர்லியார், மேலூர், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை, கோடநாடு, கீழ் கோத்தகிரி, சோலூர்மட்டம், உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகள் அதிகளவில் நிறைந்து காணப்படும் தொகுதியாக இது உள்ளது.

    குன்னூரை பொருத்தவரையில் விவசாயமே இங்கு பிரதான தொழிலாகும். குன்னூரில் முக்கியத் தொழிலாக தேயிலை, மலைகாய்கறி விவசாயம் பார்க்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டப் பணிகளுக்கு செல்கின்றனர்.

    200-க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இதுதவிர ஏல மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேயிலை ஏலத்தில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து வாங்கி செல்வார்கள்.

    குன்னூர் தொகுதி

    ஏலம் எடுக்கப்படும் தேயிலைகள் இங்குள்ள குடோனில் வைக்கப்பட்டு பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏல மையத்தை மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு சென்று விட்டதால் அதனை நம்பி தொழில் செய்து வந்த மார்க்கெட் வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    கோரிக்கை

    குன்னூர் நகரின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தை சுற்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த உரம் தயாரிக்கும் மையத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே இந்த உர மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே இந்த தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    குன்னூர் தொகுதி

    சுற்றுலா தளமாக பார்க்கப்படும் குன்னூரில் வாகன நிறுத்துமிடம் இல்லாதது பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அதனைப்போக்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் தேயிலைக்கு விலை நிர்ணயம், தேயிலைக்கு மாற்று பயிராக விளங்கும் கொய் மலர்களுக்கு ஏற்றுமதி மையம் ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி வாக்காளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    குன்னூர் தொகுதி

    குன்னூர் நகர பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் பல கட்சிகள் ஆட்சிக்கு வந்து சென்றுள்ளன. இதுவரை இந்த பிரச்சினையை சரி செய்ய வில்லை. எனவே பேருந்து நிலையத்தை விரிவாக்க செய்ய வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பஸ் நிலையம் அருகே ரெயில்வே லெவல் கிராசிங்கில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொகுதியில் எந்தவித பெரிய தொழிற்சாலைகளும் இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி பல இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

    குன்னூர் நகரத்தின் பொதுமக்களுக்கு பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. தற்போது எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் குன்னூர் கிரேஸ் ஹில் பகுதிக்கு இந்த தண்ணீர் இணைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் சாலைகள் போடப்பட்டுள்ளன. 

    குன்னூர் தொகுதி

    1957- மாதே கவுடர்(காங்கிரஸ்)
    1962- மாதே கவுடர்(காங்கிரஸ்)
    1967- பி.கவுடர்( தி.மு.க)
    1971- கருணைநாதன்(தி.மு.க)
    1977- அரங்கசாமி(தி.மு.க)
    1980- அரங்கநாதன் (தி.மு.க)
    1984- சிவகுமார்(அ.தி.மு.க)
    1989- தங்கவேல்(தி.மு.க)
    1991- கருப்பசாமி(அ.தி.மு.க)
    1996- தங்கவேல்(தி.மு.க)
    1997- ரங்கநாதன்(தி.மு.க)
    2001- கந்தசாமி(தமிழ் மாநில காங்கிரஸ்)
    2006- சவுந்திர பாண்டியன்(தி.மு.க)
    2011- ராமசந்திரன்(தி.மு.க)
    2016- சாந்திராமு (அ.தி.மு.க)
    திமுக மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி கண்ணோட்டம்.
    மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குபுற சரிவிலும், கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது கூடலூர் தொகுதி. இந்த தொகுதியை சுற்றிலும் ஏராளமான காடுகள் உள்ளன. இதனால் எப்போதும் இந்த தொகுதியில் இதமான கால நிலையே நிலவி வருகிறது. இந்த தொகுதியில் ஏராளமான சிறு, சிறு குன்றுகள் உள்ளன. அதனால் அதிகளவில் தேயிலை பயிரிடப்படுகிறது.

    கூடலூர் தொகுதி

    ஊசிமலை காட்சிமுனை, தவளை மலை காட்சிமுனை, தொங்கு பாலம், ஜினிபூல் கார்டன், தேவலா மற்றும் சேரம்பாடி சுரங்கங்கள், சேரங்கோடு சுவாமி மலை, முதுமலை வனவிலங்கு சரணாலயம், குசுமகிரி முருகன் கோவில், சந்தனமலை முருகன் கோவில், மசினகுடி, மாயார், மற்றும் நெலாக்கோட்டை ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பு வாய்ந்த இடங்களாக கருதப்படுகிறது. இதுதவிர 3 மாநில எல்லையில் அமைந்துள்ளது இந்த தொகுதியின் கூடுதல் சிறப்பு.

    கூடலூர் தொகுதி

    கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களை உள்ளடக்கியதுதான் கூடலூர் தொகுதி. பொது தொகுதியாக இருந்த இந்த சட்டப்பேரவை தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 


    இந்த தொகுதியில் 92 ஆயிரத்து 108 ஆண் வாக்காளர்களும், 96 ஆயிரத்து 495 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 604 பேர் உள்ளனர்.

    கூடலூர் தொகுதி

    1967 முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க 6 முறையும், அ.தி.மு.க 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2006 முதல் நடந்த தேர்தலில் தொடர்ச்சியாக 3 முறை தி.மு.க.வே இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதும் தி.மு.க.வை சேர்ந்த திராவிட மணி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

    கூடலூர், நெல்லியாளம் ஆகிய 2 நகராட்சிகளும், 3 பேரூராட்சிகளும், 5 ஊராட்சிகளும் இந்த தொகுதியில் கீழ் வருகிறது. இங்கு ஆதிவாசி மக்கள், தாயகம் திரும்பிய தமிழர்கள், இதர மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

    கூடலூர் தொகுதி

    இந்த தொகுதி மக்களின் பிரதான தொழிலே விவசாயம்தான். இங்கு அதிகளவில் தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல், ஏலக்காய் அவரை, புடலங்காய், பாகற்காய், பஜ்ஜி மிளகாய் என அனைத்து வகையான காய்கறிகளும் விளையும் தொகுதியாக இது உள்ளது.

    கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் இந்த சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ளதால், இங்குள்ளவர்கள் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு பக்கத்து மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

    கோரிக்கைகள்

    கூடலூர் தொகுதியில் வருவாய் அல்லது வனத்துறைக்கு என ஒதுக்கப்படாத நிலங்கள் சட்டப்பிரிவு 17-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வகை பிரிவு நிலத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரிவு 17-ன் கீழ் உள்ள நிலத்தில் ஏராளமான தேயிலை தோட்டங்களும் உள்ளது. நில பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

    கூடலூர் தொகுதி

    கூடலூரில் இருந்து கோவைக்கு செல்ல 7 மணி நேரம் ஆகிறது. இதனால் கூடலூர், மசினகுடி, சிறியூர் வழியாக சத்தியமங்கலம், கோவைக்கு செல்லும் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் புலிகள் காப்பக வனப்பகுதி என்பதால் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே இந்த சாலையை திறந்து விட வேண்டும் என்பதே மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

    மருத்துவ வசதி என்பது இந்த தொகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. அவசர மற்றும் ஆபத்தான சமயங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கோவை அல்லது கர்நாடகா, கேரள போன்ற பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடலூர் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி தர வேண்டும் என கூறுகின்றனர். கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு முதல் கேரள மாநிலம் நிலம்பூர் வரை கூடலூர் வழியாக ரெயில் பாதையை விரிவுப்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.

    கூடலூர் பகுதியில் நேந்திரன், வாழை, நெல் மற்றும் காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்களை நியாயமான விலைக்கு விற்பதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். 3 மாநிலங்களை இணைக்கும் கூடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இங்குள்ள சாலைகளை விரிவுபடுத்த வேண்டும்.

    இந்த தொகுதியின் முக்கிய பிரச்சினையே வனவிலங்குகள் ஊருக்குள் வந்து பயிர்களை சேதம் செய்வது தான். பயிர்களை மட்டுமல்லாமல் மனிதர்களையும் தாக்கி வருகிறது. சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்த தீர்வு காண வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கூடலூர் தொகுதி
    கூடலூர் தொகுதி


    1967- நஞ்சன்(காங்கிரஸ்)
    1971- கே.எச்.பொம்மன்(சுதந்திரா கட்சி)
    1977- கே.ஹட்சி கவுடர்(தி.மு.க)
    1980- கே.ஹட்சி கவுடர்(தி.மு.க)
    1984- கே.ஹட்சி கவுடர்(அ.தி.மு.க)
    1989- எம்.கே.ஹரீம்(காங்கிரஸ்)
    1991- கே.ஆர்.ராசு(அ.தி.மு.க)
    1996- பி.எம்.முபாரக்(தி.மு.க)
    2001- மில்லர்(அ.தி.மு.க)
    2006- கே.ராமச்சந்திரன் (தி.மு.க)
    2011- திராவிடமணி (தி.மு.க)
    2016 திராவிடமணி (தி.மு.க)
    ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் திறந்த நிலையில், வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமல் வந்தனர். இதனால், வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்கள் மாநில அரசிடம் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உள்ளூர் வாசிகள் பலர் முகக்கவசம் அணியவில்லை என தொடர்ந்து புகார் எழுந்த நிலையில், ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

    மேலும், முகக்கவசம் இன்றி செல்பவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×