என் மலர்tooltip icon

    நீலகிரி

    கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜாமீனில் உள்ள 2 குற்றவாளிகள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. 

    ஒவ்வொரு தனிப்படையினரும் பிரிந்து சென்று பலரிடம் விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சம்சீர் அலி, மனோஜ்சாமி மற்றும் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரித்தனர். 

    கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்க்க கூடிய ஊழியர்கள், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமை யாளர் என இதுவரை 150க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு ஆதாரங்களை திரட்டினர்.

    மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகரும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

    விபத்தில் இறந்த கனகராஜின் செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்தல் மற்றும் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை யும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களி டம் பல கட்டங்களாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இதுவரை ஊட்டி எஸ்.பி. அலுவலகத்தில் நடந்து வந்த  விசாரணை தற்போது நிர்வாக காரணங்களுக்காக கோவை போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. 

    கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு சம்மன் அனுப்பினர். 

    அதன்படி கடந்த 22-ந்தேதி அவர் கோவை போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

    அவரிடம் கொடநாடு எஸ்டேட் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை கேட்டு  அவர் அளித்த பதில்களை பதிவு செய்தனர். 

    தற்போது மீண்டும் கொடநாடு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் அடுத்த கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய 10-வது குற்றவாளி ஜிதின் ஜாய் மற்றும் உதயகுமார் ஆகிய  2 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்னர். 

    இதற்காக அவர்கள் 2 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ள தனிப்படையினர் 7 மற்றும் 8-ந்தேதிகளில் கோவை போலீஸ் பயிற்சி மையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

    அதன்படி 7-ந்தேதி ஜித்தின் ஜாயிடமும், மற்றொரு குற்றவாளியான உதயகுமாரிடம் 8-ந்தேதியும் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    அவர்களிடம் இந்த கொலை, கொள்ளை சம்பவ த்தில் அவர்களின் பங்கு என்ன? எப்படி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை 2 பேரிடம் கேட்க உள்ளனர்.

    இதனால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
    ஒரே நாடு ஒரே ரே‌ஷன் திட்டத்தில் 50 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர் என்று மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே வருகை தந்தார்.

    அவர் ஊட்டியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்தில் இருந்து அரிசி கொள்முதல் செய்த அளவு மும்மடங்காக உயர்ந்துள்ளது. 9 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 29 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் உயர்ந்துள்ளது.

    அதேபோல, பெட்ரோல் நுகர்வில் நாட்டில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் 20 சதவீத எத்தனால் கலப்பு ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் நடப்பு ஆண்டில் எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு 10 சதவீதம் உயரும். வேளாண் கழிவுகளும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். 82 கோடி லிட்டர் எத்தனால் தேவை உள்ள நிலையில், 11 டிஸ்டிலரிகள் மூலம் 10 முதல் 11 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எத்தனால் கலப்பு பெட்ரோல் உற்பத்தி மூலம் வேலை வாய்ப்பு பெருகுவதோடு, சுற்றுச்சூழல் மாசும் குறையும். அத்துடன் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.

    தமிழகத்தில் உணவு தானியங்களை சேமிக்க போதுமான வசதிகள் உள்ளன. இருப்பினும் தொலைவான பகுதிகளிலும் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொது வினியோக திட்டம் நாட்டிலேயே சிறப்பானது.

    பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது.

    ஒரே நாடு ஒரே ரே‌ஷன் திட்டத்தில் 50 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் 43 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ரூ. 34 ஆயிரம் கோடி மானியம் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரே‌ஷன் திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘மேரா ரே‌ஷன்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி 13 மொழிகளில் உள்ளதால் பயன்படுத்துவது எளிது. எனவே, அவர்கள் பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, தமிழக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ராஜாராமன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் உடனிருந்தனர்.
    புலி நன்கு குணம் அடைந்தவுடன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மசினகுடியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த டி23 என்ற புலி 4 பேரை அடித்து கொன்றது.

    இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர், வனத்துறையினர் இணைந்து புலியை பிடிக்கும் பணியை தொடங்கினர்.

    ஆனாலும் புலி வனத்துறையினர் கண்ணில் சிக்கினாலும், பிடிபடாமல் போக்கு காட்டி வந்தது. நீண்ட நாட்கள் போராடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    புலியை பிடித்தபோது, அதன் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதை அறிந்த வனத்துறையினர் உடனடியாக புலிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர்.

    அதன்படி இரும்பு கூண்டில் புலியை அடைத்து கர்நாடக மாநிலம் மைசூரு வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வனத்துறையின் கால்நடை மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    தற்போது அந்த புலியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புலி நன்கு குணம் அடைந்தவுடன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்நீரஜ் குமார் மைசூரு வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு சென்றார். அங்கு ஆட்கொல்லி புலியின் உடல் நிலை குறித்து மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்து, புலியை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஆட்கொல்லி புலிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்டபோது மெலிந்து காணப்பட்ட புலி தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. அதன் உடல் எடை 200 கிலோ அதிகரித்துள்ளது. உடலில் இருந்த 2 பெரிய காயங்கள் குணம் அடைந்து விட்டன. சில இடங்களில் உள்ள காயங்கள் குணமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மருத்துவக் குழுவினரின் உத்தரவுக்கு அந்த புலி கட்டுப்படுகிறது. இருந்த போதிலும் அதன் ஆக்ரோ‌ஷம் இன்னும் மாறவில்லை. எனவே அந்த புலி இரும்புக் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 10 கிலோ மாட்டிறைச்சி சாப்பிடுகிறது. அடிக்கடி பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி அந்த புலிக்கு எந்தவித தொற்றும் ஏற்படவில்லை. மேலும் சில மாதங்களுக்கு புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    நீலகிரி மாவட்டத்தில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 90 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்
    ஊட்டி:

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிற்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. 

    முதற்கட்டமாக மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து முன்கள பணி யாளர்களுக்கு செலுத்தப் பட்டது. தொடர்ந்து 60 மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. 

    அதன் பின் தற்போது தகுதி வாய்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஒமைக்ரான் எனப்படும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வர கூடிய சூழலில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியது. 

    நீலகிரி மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 212 பள்ளிகள் உள்ளன. இங்கு 15 வயது முதல் 18 வயது உடைய மாணவ, மாணவிகள் 24 ஆயிரம் பேர் உள்ளனர். 

    2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்து இருக்க வேண்டும். ஆதார் எண் அல்லது பள்ளி அடையாள அட்டை எண்ணை கோவின் என்ற இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறியதாவது:-

     நீலகிரி மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வய திற்குட் பட்ட 24 ஆயிரத்து 342 சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கு படிக்கும் பள்ளி களிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

    இதற்காக டாக்டர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள்,   பணியாளர்கள் அடங்கிய 90 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் பள்ளிகளில் முகாமிட்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவார்கள்.

    நீலகிரியில் 2 நாட்களுக்குள் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து சிறுவர் களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  

    இவ்வாறு அவர் கூறினார். 
    நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    ஊட்டி : 

    நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன. 

    இதில் பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, 9-வது மைல் சூட்டிங் மட்டம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    அப்போது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தனரா?  என்பதனை கேட்டறிந்து, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை சிறிது நேரம் கண்காணித்து, பின்னர் அவர்களை அனுப்பி வைக்க வேண்டுமென அறிவுறுத்தினார். 

    அதைத் தொடர்ந்து கலெக்டர் அம்ரித் கூறுகையில்  நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 5 லட்சத்து 17,897 பேர், 2-ம் தவணையாக 4 லட்சத்து 91,769 பேர் என மொத்தம் 10 லட்சத்து 9,666 பேர் கொரோனா   தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.  

    தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

    பின்னர் பைன் பாரஸ்ட் பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா?  என ஆய்வு செய்தார். 

    நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், குப்பைகளை சாலையோரங்களில் கொட்டுவதை தவிர்க்கவும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனவும் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
     
    இந்த ஆய்வின்போது, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்  துரைசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்  இப்ராகிம் ஷா,  ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன், நகர் நல அலுவலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு போக்குவரத்து விதி மீறியதாக 2.31 லட்சம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
    ஊட்டி:

    கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் 2.31 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏதுமற்ற ஒரு ஆண்டாக 2021 முடிவடைந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில்  76 குற்ற வழக்குகளும், 2021-ம் ஆண்டில் 97 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளது.  

    போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக 2021-ம் ஆண்டில் தலைக்கவசம் அணியாமல் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 810 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 346 வழக்குகள் ,அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 1432 வழக்குகள், 

    செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டியது தொடர்பாக 4099 வழக்குகள், சீட் அணியாதது தொடர்பாக 36 ஆயிரத்து 140 வழக்குகள்,  இதர வழக்குகள் 63 ஆயிரத்து   943  என  2 லட்சத்து 31 ஆயிரத்து 768 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொலை வழக்குகளில் 14 குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டனர். பாலியல் குற்றங்கள் தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 114 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.  

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 687 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. சைபர் கிரைம் செல்போன் காணாமல் போனதாக 349 புகார்கள் பெறப்பட்டு அதில் 72 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக் கப்பட்டன. 

    ஆன்லைன் பண மோசடி தொடர்பாக 286 புகார்கள் பெறப்பட்டு, விசாரணை மேற்கொண்டு 40 லட்சத்து 63 ஆயிரத்து 780 பணம் கைப்பற்றப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

    இது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டில் கஞ்சா விற்பனை தொடர்பாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா விற்பனை தொடர்பாக 318 வழக்குகள் விற்பனை செய்யப்பட்டு 171 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    நக்சல் தடுப்பு பிரிவினர்   391 முறை எல்லையோரங்களில் தணிக்கை செய்தும், 381 முறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 

    எல்லையோர பழங்குடியினர் கிராமங்களில் 6 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2,187 பழங்குடியின மக்களிடமிருந்து 956 மனுக்கள் பெறப்பட்டது. 

    இதில் பழங்குடியின மக்களுக்கு 262 சாதி சான்றிதழ்கள், 66 முதியோர் உதவித்தொகை, 735 குடும்ப அட்டைகள், 89 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன. 

    போலீசார் குற்றங்களைக் கண்டுபிடித்து தடுப்பது, பொது அமைதி காப்பது உள்ளிட்டவற்றுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்து உள்ளனர். இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

     இவ்வாறு அவர் கூறினார்
    புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஊட்டி:

    தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 2-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, தொடர் விடுமுறையை கொண்டாடும் வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    நீலகிரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். குறிப்பாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் எந்திரப் படகு, மிதி படகு, துடுப்பு படகு உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து குளு குளு காலநிலையை அனுபவித்தனர். தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை , இந்திய வரைப்படம் ஆகிய வற்றில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஊட்டி வருகை புரிந்ததாகவும், சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக குளு, குளு காலநிலையை அனுபவிக்க இங்கு வந்துள்ளதாகவும் பகல் வேளையிலும் பனி சூழ்ந்த நிலையில் உலக புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவில் மலர்களை கண்டு ரசிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவை நேற்று ஒரே நாளில் 11 ஆயிரம் சுற்றுலாபயணிகள் ரசித்தனர். அதற்கு முந்தைய நாள் 7 ஆயிரம் பேரும், 30-ந் தேதி 9,369 பேரும் தாவரவியல் பூங்காவை கண்டுகளித்துள்ளனர்.

    இதேபோல நீலகிரி மலை ரெயிலிலும் பயணம் செய்ய சுற்றுலாபயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். 

    நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
    ஊட்டி:

    கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. 

    கடந்த ஒரு மாதமாக ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது.

    இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    இதனால், இங்கும் மீண்டும் தொற்று அதிகரித்து விடுமோ என உள்ளூர் மக்கள் அச்சப்படுகிறார்கள்.

    இதனை கட்டுப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மாநில எல்லைகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் அம்ரீத் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    மாநில எல்லைகளில் மருத்துவ குழுவினர் கொண்டு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. 

    இதுவரை நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை, என்றார்.
    குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 4-ம் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு  கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பள்ளி செல்லும் குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக குழந்தை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். 

    குழந்தை திருமணத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், கிராம, வட்டார, நகர பஞ்சாயத்து, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி, அந்தந்தப் பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

    ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், இளைஞர் நீதிக் குழும முதன்மை நடுவர்  பாரதிராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நசாருதீன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
    ஊட்டி:

    நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், இன்று இரவு 12 மணிக்கே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.

    இதன் காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிறபகுதிகள், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் நீலகிரிக்கு வந்து, இங்குள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகள், ரிசார்ட்டுகள் நிரம்பி வழிகின்றன.

    புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    இன்றும், நாளையும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தொட்டபெட்டா மலைசிகரம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதனால், சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க நீலகிரி காவல்துறை அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    போக்குவரத்துக்கு இடையூறாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    சுற்றுலா தலங்களில் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    இந்த ஆண்டில் நீலகிரியில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குழந்தை திருமணங்கள் மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதான போக்சோ வழக்குகள் அதிகரித்து உள்ளது. இதில் பள்ளிகளில் படித்து வந்தவர்கள், இடைநின்ற மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றவர்கள் போன்றோரும் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் வழக்குகள் அதிகரித்து இருக்கிறது.

    கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்து உள்ளது.

    இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சைல்டு லைன், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை திருமணம் செய்யும் நபர்கள், அதற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 15 குழந்தை திருமணங்களை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    குழந்தை திருமணம் செய்துகொள்ள முயற்சித்த சிறுமிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி திருமணத்தை நடத்திய பெற்றோர், பாதுகாவலர், மணமகன், மதத்தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் குற்றம் செய்ததாக கருதப்படுகிறது. இது பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். நீலகிரி மாவட்டத்தில் ஏதேனும் இடத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட சமூக நல அலுவலர் 9655988869, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 9715310135 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றனர்.
    ஊட்டியில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் ஊட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கொரோனா கால கட்டுப்பாட்டுக்கு பிறகு நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதில் தற்போது ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவித்து செல்கிறார்கள். நேற்று முன்தினம் ஊட்டியில் 2 டிகிரி பதிவாகியது.

    இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலை குந்தா, பார்சன், மஞ்சூர் மற்றும் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் காலை நேரத்தில் பனி கொட்டுகிறது. கடந்த 2 நாட்கள் முன்பு தலை குந்தா பகுதியில் கடும் பனி பொழிவு ஏற்பட்டது. இதனால் நீரோடை ஒன்று உறைந்தது.

    குறிப்பாக ஊட்டி அருகே சோலூர் தேயிலை தோட்டம் மற்றும் அங்கர்போர்டு, பைக்காரா, சிங்கார பகுதியில் தேயிலை தோட்டங்களில் பனி பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருக தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளார்கள்.

    ஊட்டியில் காலையில் வெயிலும் மாலையில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெப்ப ஆடைகளை அணிந்துகொள்வதோடு, ஜெர்க்கின், மப்ளர் ஆகியவற்றை வாங்குகின்றன. இதனால் அந்த வியாபாரம் சூடுபிடித்து உள்ளது. மேலும் ஊட்டி மக்கள் தீ மூட்டி குளிரை சமாளித்து வருகிறார்கள்.

    ஊட்டியில் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
    ×