என் மலர்
நீலகிரி
- மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது.
- மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டது.
மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது. உடனடியாக மலை ரெயில் கல்லாறில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதனால் இன்று ஒரு நாள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகள் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கக்கூடியது.
- வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய்ப்பரவல் ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி எச்சங்கள் மற்றும் கோழி தீவனங்கள் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிமாக கண்காணிக்க, கேரளா எல்லையோரம் உள்ள 7 சோதனை மற்றும் தடுப்பு சாவடிகள், கர்நாடகா மாநில எல்லையோர சோதனை-தடுப்பு சாவடி ஆகிய 8 சோதனை தடுப்பு சாவடிகளில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் போலீசார், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகள் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கக்கூடியது. வெளிநாடுகளில் இருந்து வரும் நோய் தாக்கிய வனப்பறவைகள் மூலமாகவும், இந்த நோய் நீலகிரி மாவட்டத்தில் நுழைய வாய்ப்பு உள்ளது.
எனவே பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதன்படி வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோழி, வாத்து, வான்கோழி ஆகிய பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.
இதர பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் பண்ணை உபகரணங்களை மாதம் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பறவைகளின் தலை மற்றும் கொண்டையில் வீக்கம், கொண்டையில் நீலநிலம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, உள்ளுறுப்பு மற்றும் கால்களின் மீது ரத்தக்கசிவு ஆகியவை பறவைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள்.
இந்த நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற-இறந்த கோழிகளை கையாளுவோருக்கும் இந்த நோய் சுவாசக்காற்று மூலம் பரவக்கூடும்.
காய்ச்சல், தொண்டை புண், இருமல் ஆகியவை மனிதர்களுக்கான பறவைக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஆகும். நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் இந்த நோய் பரவாது.
பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.
கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி எச்சம் மற்றும் கோழி தீவனங்களை வாகனங்களில் ஏற்றி வருவது மறுஉத்தரவு வரும்வரை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.
- குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகின்றன.
ஊட்டி:
உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக உற்சாகம், கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. மேலும் குளுகுளு காலநிலை, பசுமை சூழ்ந்த மலைகள், மிதமான பனி ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தன.
ஊட்டியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு டி.ஜே. இசை நிகழ்ச்சிகள், வண்ணமயமான வானவேடிக்கைகள், சிறப்பு விருந்துகள், பாரம்பரிய நவீன கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் களைகட்டின. சுற்றுலாப் பயணிகள் இசை, ஆடல், பாடலுடன் ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊட்டி முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தனியார் ஓட்டல்கள் மற்றும் அரசின் 'ஓட்டல் தமிழ்நாடு' அரங்கிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கியும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அதிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக்கு முன்பாகவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு, அறைகள் நிரம்பி வழிந்தன.
ஊட்டியில் தங்குமிடம் கிடைக்காத சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் லாட்ஜ்களில் தங்கி, அங்கிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் குன்னூர், ஊட்டிக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களில் குவிந்து புத்தாண்டை கொண்டாடி தீர்த்தனர்.
நீலகிரிக்கு வரும் சிறப்பு மலை ரெயில்களிலும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்திருந்தனர். இதன்காரணமாக குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், அங்குள்ள வியாபார கடைகள், உணவகங்கள் மற்றும் நினைவுப்பரிசு கடைகளில் விற்பனை சூடுபிடித்தது. இதனால் அங்கு சுற்றுலாவை சார்ந்து செயல்படும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மொத்தத்தில் குளுகுளு காலநிலை, இயற்கை அழகு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உற்சாகமான கொண்டாட்டங்களுடன் ஊட்டியில் அரங்கேறிய புத்தாண்டு விழா மறக்க முடியாத அனுபவமாக மாறி உள்ளது.
குன்னூரில் சிம்ஸ் பூங்கா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக்,காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் புத்தாண்டையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக குன்னூர்-கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் நகர-கிராமப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் உள்ளூர் மக்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள இயலாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் குன்னூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வரலாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு தினம், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறை வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து புறப்படும் வாகனங்கள் மேட்டுப்பாளையத்துக்கும் செல்ல வேண்டும்.
மேலும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது வருகிற ஜனவரி 5-ந்தேதிவரை அமலில் இருக்கும்.
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ் தவிர மற்ற அனைத்து சுற்றுலா பஸ்கள், வேன் மற்றும் மேக்சி-கேப் வாகனங்கள், எச்.பி.எப். கோல்ப்லிங்ஸ் சாலையில் நிறுத்தப்படும். அங்கு இருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்றுலா பஸ்சை பயன்படுத்தி கொள்ளலாம்.
மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், தலைகுந்தாமட்டம் கோழிப்பண்ணை புதுமந்து வழியாக ஸ்டிபன்ஸ் சர்ச் வந்தடையும். புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வரலாம்.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ்கள் தவிர அனைத்து சுற்றுலா வாகனங்கள் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பஸ்சை பயன்படுத்தி கொள்ளலாம்.
கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டி வந்தடையலாம்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சேரிங்கிராஸ், பிளாக் பிரிட்ஜ் வழியாக கோத்தகிரி நோக்கி திருப்பி விடப்படும்.
அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோலியம், கியாஸ் ஏற்றி வரும் வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களுக்கும் ஜனவரி 5-ந்தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை ஊட்டி நகருக்குள் நுழைய அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பைக்காரா, சூட்டிங்மட்டம், தலைகுந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.
- கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தை உணர முடிந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் உறைப்பனி கொட்ட தொடங்கியது. இதனால் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பனியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது.
இதனால் ஊட்டியின் வெப்பநிலை நேற்று முன்தினம் மைனஸ் ஒரு டிகிரிக்கு கீழ் சென்றது. இதனால் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, தலைக்குந்தா, கிளன் மார்க்கன், சூட்டிங் மட்டம், பைக்காரா, சாண்டி நல்லா, அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் வெள்ளை நிற கம்பளம் விரித்தாற்போல பனி படர்ந்து காணப்பட்டது.
பகல் நேரங்களில் வெயில் அடித்தபோதிலும் தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் நிழல் தரும் பகுதிகளில் கடுங்குளிரை அதிகமாக உணர முடிந்தது.
அதிலும் குறிப்பாக பைக்காரா, சூட்டிங்மட்டம், தலைகுந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டம்-மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் அவதிக்கு உள்ளாகினர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். உறைபனியின் தாக்கம் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உறை பனியுடன் அவ்வப்போது லேசாக சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் குளிரும் குறையவில்லை. இதனால் அங்கு நேற்று காலை அதிகாலை நேரங்களில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருந்தது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். அனைத்து சாலைகளிலும் மேக மூட்டம் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர்.
கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் அந்த பகுதியில் அதிகாலை நேரங்களில் கடுங்குளிரும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் காணப்பட்டது.
கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தை உணர முடிந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக பயணித்தன.
இருப்பினும் சாலையோர வியாபாரிகள், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மற்றும் மாலை நேரத்தில் பணிக்கு சென்று வீடு திரும்புவோர், பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடுங்குளிரிலும் அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.
- உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
- வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுவது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி அதிகளவில் காணப்படும்.
இந்த ஆண்டு 40 நாட்கள் கழித்து தாமதமாக கடந்த 12-ந்தேதி உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து சில நாட்களாகவே ஊட்டி, குன்னூரில் உறைபனி கொட்டி வருகிறது.
இன்றும் குன்னூர், ஊட்டி, மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. குறிப்பாக தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் அதிகளவில் உறைபனி கொட்டியது.
இன்று தலைக்குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 4.3 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.
கொட்டும் உறைபனியால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, படகு இல்லம், பைக்காரா, குதிரை பந்தய மைதானம், குன்னூர் ஜிம்கானா மைதானம் உள்ளிட்ட புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளித்தது. அங்குள்ள செடி, கொடிகள் மீது பனி படர்ந்து காணப்பட்டது.
இதுதவிர சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களிலும் உறைபனி காணப்பட்டது. வாகன ஓட்டிகள் காலையில் உறைபனியை அகற்றி வண்டியை எடுப்பதற்குள் சிரமப்பட்டனர்.
குன்னூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் மீதும் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று உறைபனி காணப்பட்டது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக அதிகாலையில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கூட பொதுமக்கள் அதிகாலையில் வெளியில் வர முடியவில்லை.
இதனால் ஊட்டி, குன்னூரில் உள்ள முக்கிய பஜார் பகுதிகளில் காலை நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு செல்வதை காண முடிந்தது. வெளியில் நடமாடிய ஒரு சிலரும் போர்வை, கம்பளி ஆடை, சுவர்ட்டர், சால்வை உள்ளிட்டவற்றை அணிந்தபடி சென்றனர்.
குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள பெரும்பாலானோர் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் தேயிலை செடிகள், மற்றும் மேரக்காய் பந்தல்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் உறைபனி தாக்கம் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்களும் உறைபனி காரணமாக வெளியில் வரமுடியாமல் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினர். உறைபனி குறைந்த பிறகே வெளியில் சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.
- மத்தியபிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டின் வரத்து அதிகரித்து உள்ளது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீலகிரி மலைப் பூண்டு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகி வந்தது.
ஊட்டி:
மத்தியபிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டின் வரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சந்தைகளுக்கு அதிக அளவில் பூண்டு கொண்டு வரப்படுவதால், நீலகிரி பூண்டின் விலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீலகிரி மலைப் பூண்டு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது கிலோ ரூ.65 முதல் ரூ.110 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
இதன்காரணமாக உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் நீலகிரி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நீலகிரி பூண்டுக்கு போதிய கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 24-ந் தேதி புலி தாக்கி நாகியம்மாள்(வயது60) என்பவர் உயிரிழந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் புலியை பிடிக்க புலி நடமாட்டம் உள்ள 5 இடங்களில் கூண்டு வைத்தும், 29 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
அப்போது அது அந்த பகுதியில் நடமாடி வந்த வயதான ஆண்புலி என்பதும், இந்த புலி தான் நாகியம்மாளை தாக்கி கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கினர்.
இதற்காக 40 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூண்டுகளை வைத்தும் காத்திருந்தனர்.
ஆனால் புலி கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளையும் புலி வேட்டையாடி வந்தது. இதனால் ஆடு, மாடுகளை வைத்து வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் புலி நடமாட்டத்தால் அச்சத்திலும் இருந்து வந்தனர். பள்ளி மாணவர்கள் கூட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு வந்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மாவனல்லா பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் டி-37 புலி சிக்கியது.
புலி சிக்கியதை அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிடிபட்ட புலியை பார்வையிட்டனர். அப்போது அது 12 வயது மதிக்கத்தக்க ஆண்புலி என்பதும், வேட்டையாட முடியாததால் ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் தாக்கி வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிக்கிய புலியை வனத்திற்குள் விடலாமா? அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்பி வைக்கலாமா? என வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 16 நாட்களாக மசினகுடி, மாவனல்லா மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த டி-37 புலி சிக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
- கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.
கேரட்... இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் இருக்கும்.
இது அனைவரும் அறிந்ததே...!
ஆனால், கருப்பு நிறத்திலும் கேரட் இருக்கிறது.
அதுபற்றி தெரியுமா...?
ஆம்...அந்த கருப்பு கேரட் சாகுபடியில் களமிறங்கி இருக்கிறது, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை.
டெல்லியில் இருந்து விதைகள்
இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேயிலை சாகுபடிக்கு அடுத்ததாக பிரதான சாகுபடியாக கேரட் உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.
இதற்கான விதைகள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நர்சரியில் அந்த விதைகள் விதைக்கப்பட்டன.
அத்துடன் தோட்டக்கலைத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட மண்ணுயிர் உரம் இடப்பட்டது. இந்த பணியில் பூங்கா மேலாளர் லட்சுமணன் தலைமையில் தோட்டக்கலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். இவை வடமாநிலங்களில் பல்வேறு உணவு வகைகள், கேக் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிற கேரட் விளைவிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், கருப்பு கேரட் விதைத்து, அதன் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. வளர்ந்த பிறகு, அதில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த வகை கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பொட்டாசியம், வைட்டமின் கே உள்ளது. சோப்பு தயாரிப்பில் இயற்கை வர்ணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றனர்.
- கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
- குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பனியும் குளிரும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் கடும் குளிர் அதிகரித்து உள்ளது.
அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக இயக்கப்படுகின்றன. இதேபோல மாலையிலும் பனி மூட்டம் வலுப்பெறுவதால் ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
மேலும் பகலில் வெயில் குறைந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ச்சியான சாரல்மழை காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், பூங்கா மற்றும் ஏரி பகுதிகளில் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.
உள்ளூர் மக்கள் கடும் குளிரால் காலை-மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுகின்றனர். இதேபோல விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வெம்மை தரும் ஆடைகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றுடன் வலம் வருகின்றனர்.
குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குன்னூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபயணம் மேற்கொள்வோர் வெளியே வர இயலாமல் வீட்டுக்குள் முடங்கினர்.
மேலும் குன்னூரில் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் விரைவில் உறைபனியின் தாக்கமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+2
- குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
- வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.
ஊட்டி:
நீலகிரி மலைப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் புல்வெளி பகுதிகளில் காட்டு டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துகுலுங்கி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.
சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரும் இந்த டேலியா மலர்கள் ஊட்டி சாலையோரங்கள், கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலைகள், மலைச்சரிவுகள் மற்றும் தொட்டபெட்டா மலைச்சாலைகளில் பூத்து பரவி உள்ளது.
மலையின் குளிர்காற்றில் சூரியஒளி படும்போது இந்த காட்டு மலர்கள் ஆடும் தோற்றம், பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற அழகிய இயற்கை காட்சியாக அமைந்து உள்ளது.
ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், "இத்தனை வண்ண மலர்கள் இயற்கையாகவே இங்கு மலர்கின்றன என்பது ஆச்சரியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி மலையின் இயற்கை சமநிலையை பேணுவதில் இத்தகைய காட்டு மலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை பறிப்பது அல்லது சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீலகிரி மலைப்பகுதிகளில் பசுமையும் மலர்களும் இணையும் இந்த காலத்தில் ஊட்டியில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் சிறந்த அனுபவமாக திகழ்கின்றன.
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், டைத்தோனியா டைவர்சிபோலியா எனப்படும் மெக்சிகன் காட்டு சூரியகாந்தி விதைகள், குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.
வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசம் இல்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக சூரியகாந்தி செடிகள் செழுமையாக வளர்ந்து இருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கி இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
- வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.
- மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மலைரெயில் பாதையில், கல்லார் ரெயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை உள்ள ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. பல்வேறு இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.
இதனால் கடந்த 5 நாட்களாக மலை ரெயில் ரத்து செய்யப்பட்டு, பாறைகள், மண்சரிவுகளை அகற்றி, தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. அதன்படி இன்று காலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






