என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி தற்கொலையில் தாளாளர் உள்பட 3 பேரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:
     
    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் வண்ணான் குளம் மேற்கரையில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி, சித்ரா தம்பதியினரின் 3வது மகள் சுபாஷினி. சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்தார்.
    முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக பணம் கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளது.மேலும் பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வெளியே நிற்க வைத்து அவமான படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு பயிலும் சுபாஷினி கடந்த 30&ந்தேதி தாய் தந்தையர் வேலைக்கு வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் இதைத்தொடர்ந்து நாகூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு வழக்குப் பதிவு செய்து நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுசெய்து அங்கு பிணவறையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது நேற்று வரை தொடர்ந்து மூன்றாவது நாளாக சாலை மறியல் மற்றும் காத்திருப்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மாணவி சுபாஷினி உயிரிழப்பு குறித்து நாகூரில் அவர்களது இல்லத்தில் ஏடி.எஸ்.பி, ராமு, சுகுமாரன், டி.எஸ்.பி சரவணன், ரமேஷ் பாபு உள்ளிட்டோர் தாய் தந்தை மற்றும் உறவினர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது உயிரிழந்த மாணவியின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் காவல்துறையினரின் காலில் விழுந்து கதறி என் மகளுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்படக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுதனர்.

    அவர்களிடம் உயிரிழந்த மாணவியின் தந்தை சுப்பிரமணியத்திடம் வரும் 4ம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.நீதிபதி விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தாளாளர் உள்பட 3 பேரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளதால் மாணவியின் உடல் 4வது நாளாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை பிணவறையில் வைக்கப் பட்டுள்ளது.
    ரமலான் நோன்பு தொடக்கத்தையொட்டி நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

    பிறை தென்பட்டு வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு முஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.
    நோன்பு காலம் துவங்கியதை அடுத்து உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா மட்டுமில்லாமல் நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.
    வேதாரண்யம் சன்னதி கடல் திடீரென உள்வாங்கியது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சன்னதி கடல் திடீரென உள்வாங்கியது. கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கி உள்ளது.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது,

    கடல் உள்வாங்குவது இயல்பான ஒன்றுதான். இருந்தாலும் தற்போது அதிக தூரத்துக்கு உள் வாங்கி உள்ளது. இதனால் கடல் அலை சத்தம் ஏதும் இல்லாமல் அமைதியாக ஏரி போல் காட்சியளிக்கிறது.

    மேலும் கடலில் இருந்து கரைக்கு தள்ளப்பட்ட சேர் அலை இல்லாததால் அப்படியே படிந்து காணப்படுகிறது. மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு வந்த உடன் சேறு அலையால் அடித்து செல்லப்பட்டு விடும் என்றனர்.

    நாகை தெத்தி புதுரோட்டில் வீட்டின் வாசலில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்-.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே தெத்தி புதுரோடு அருகாமையில் தொழில் பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு சோப்பு கம்பெனிக்காக அமைக்கப்பட்ட மின்மாற்றி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

    5 ஆண்டுகளுக்கு காலமாக சோப்பு கம்பெனி இயங்காமல் உள்ளது. இந்நிலையில் 30 ஆண்டுகள் பழமையான மின்மாற்றியின் சிமெண்ட் மின்கம்பங்கள் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

    இப்பகுதி வழியாக தினந்தோறும் ஆயிரக் கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அச்சத்தோடு கடந்து செல்கின்றனர்.

    மேலும் காற்றுடன் மழை பெய்யும் நேரத்தில் விழும் அபாயத்தில் உள்ளதால் வீட்டு வாசலில் உள்ள மின்மாற்றியை பழுது நீக்கம் செய்வதோடு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேளாங்கண்ணி லாட்ஜில் சென்னையை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வேளாங்கண்ணி பகுதிகளில் அதிகாலை ஆய்வுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு தனியார் லாட்ஜில் ஒரே அறையில் 4 வாலிபர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. சங்தேகத்தின் பேரில் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் நாகூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் 4 பேரும் சென்னையை சேர்ந்த எழிலரசன்(வயது29), திவாகரன்(28), விக்னேஷ்(20), தேவசகாயம்(35) என்பதும், இவர்கள் மீது சென்னையை சுற்றியுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

    மேலும் கொலை முயற்சி வழக்கில் 4 பேர் தலைமறைவாகி வேளாங்கண்ணி வந்து தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நாகூர் போலீசார் பிடிபட்ட 4 வாலிபர்கள் குறித்த தகவல்களை சென்னை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்களிடம் நாகூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் எதற்காக இங்கு வந்து 4 பேரும் தங்கினர். அறையில் தங்கி இருந்து ஏதாவது கொலைக்கான சதி திட்டம் தீட்டினரா என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    கீழ்வேளூர் அருகே தேவூர் தேவதுர்கை அம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூர் தேவதுர்கையம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. உலக அமைதி, விவசாயம் செழிக்க, தோஷங்கள் நீங்க வேண்டி வேதவிற்பனர்கள் வேத மந்திரங்களை ஓதி யாககுண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு ஹோமம் நடைபெற்றது.

    நிறைவாக யாகம் பூர்ணாஹீதியுடன் முடிவடைந்தது. பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார் வலம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.
    வேதாரண்யம் அருகே பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 6 மணி நேரம் வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியில் சென்ற ஆண்டு இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 519 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர்

    இவர்களில் 449 விவசாயிகள் வங்கியில் கடன் பெற்றவர்களும், 75 பேர் கடன்பெறத விவசாயிகளும் உள்ளனர். இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்த 75 பேருக்கு இன்றுவரை பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் போராட்டம் அறிவித்து இருந்தனர். வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் விவசாயிகளை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். ஆனால் நேற்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உம்பளச்சேரி ரவி, துளாசபுரம் வெங்கடாசலம் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு வங்கியை காலை முதல் முற்றுகையில் ஈடுபட்டனர்.

    தகவலரிந்து வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் சமாதானத்தை ஏற்க மறுத்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு துறையில் இருந்து அதிகாரிகள் வர வேண்டும் என வலியுறுத்தினர். சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு பிறகு வேளாண்மைத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் சொன்ன கருத்தை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனால் வங்கியில் இருந்து விவசாயிகள் கூச்சலிட்டனர்.

    போலீசார் விவசாயிகளை சமாதானம் செய்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தனர். இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். வங்கியை 6 மணி நேரம் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி சுபாஷனி தற்கொலைக்கு நீதிகேட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி  சுபாஷினி உயிர் இழப்புக்கு நீதி கேட்டு நாகை, நாகூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உறவினர்கள், இளைஞர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்ய வலியுறுத்தி நாகூரில் இளைஞர் அமைப்பினர் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நாகூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சாலை நடுவே சாமியானா பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது இன்ஸ் பெக்டர்கள் நாகூர் சிவராமன், கீழ்வேளூர் சோமசுந்தரம் ஆகியோர் சாலையில் சாமியான பந்தல் அமைக்க கூடாது என பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

    அப்போது சில இளைஞர்கள் காவல்துறையினரை மீறி சாலையில் மேலும் ஒரு சாமியான பந்தலை அமைத்தனர் தொடர்ந்து அங்கிருந்து நாகூர் காவல் நிலையத்தை முற்றுகையிட போராட்டக் காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    அவர்களை போலீசார் நடு வழியில் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை கலைத்து அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
    உப்பு உற்பத்திக்கு பொருளாதார நிலை அழிந்து விடாமல் இருக்க ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என உற்பத்தியாளர், தொழிலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    வேதாரண்யம்

    வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளர் ஐ.என்.டி.யூ.சி உப்பளத் தொழிலாளர்கள் சங்கம், வேதாரண்யம் உப்பு வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.. நகர மன்ற தலைவரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி., பி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க பொருளாளர் தென்னரசு, செயலாளர் செந்தில், வியாபாரி சங்க பொருளாளர் வேதரத்தினம் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கேடிலியப்பன் உள்ளிட்ட உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்தியா முழுவதும் சிறு குறு உப்பு உற்பத்தியை கார்ப்பரேட் மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தை கைவிடக் கோரியும் இந்திய உற்பத்தியில் தமிழகம் 2வது இடத்தை வகிக்கிறது தமிழகத்திற்குள் வேதாரண்யம் 2வது பெரிய உற்பத்தி மையமாகவும், இந்திய கரையோர நிலங்கள் 17,18ம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனியிடம் 1819ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து உள்ளது.

    பிரிட்டிஷ் அரசின் காலத்தில் 1930ல் மகாத்மா காந்தியின் தலைமையில் தண்டியில் உப்பு யாத்திரையும் வேதாரண்யத்தில் ராஜாஜி, சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பிறகு காந்தி& இர்வின் ஒப்பந்தப்படி இந்திய மக்கள் உப்பு உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இந்திய அரசின் உப்பு துறை 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்கனவே தானாக முன்வந்து உப்பு உற்பத்தி செய்யும் சிறு மற்றும் குறு நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு குத்தகையை புதுப்பித்து தந்து கொண்டிருந்தனர்.

    இதனால் 700&க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், 10 ஆயிரம் உப்பள தொழிலாளர்களும் பயனடைந்து வந்தனர் தற்போது ஒன்றிய அரசு குத்தகையை புதுப்பிக்காமல் டெண்டர் ஏல முறையை கொண்டு வருவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க எத்தனிக்பதாக கருதுகிறோம். இதனால் வேதாரண்யம் பகுதியில் 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது

    கடல் நீரையும், சூரிய வெப்பத்தையும், மனித உழைப்பையும் மட்டுமே முதலீடாக கொண்ட இந்த உப்பு உற்பத்தி மண்ணின் சமூக பொருளாதார நிலைமையை அழித்து விடாமல் இருக்க ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். இப்பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சரை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து சங்கப் பிரதிநிதிகள் நேரடியாக மனு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
    தமிழக எல்லைக்குள் புகுந்து 3 மீனவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன். மீனவர்கள். 

    இவர்கள் கோடியக் கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள் பறித்து கடலில் கொட்டியதோடு 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதபடுத்தினர். 

    பின்னர் 3 மீனவர்களிடம் இருந்த செல்போன்களை எடுத்து சென்று விட்டனர். 

    இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் கரை திரும்பி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.பின்னர் 3 பேரும் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

    இதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் அத்துமீறி தமிழக எல்லைக்குள் புகுந்ததோடு, தமிழக மீனவர்களை தாக்கி பல லட்சம் பொருட்களை பறித்து சென்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கி விட்டனர்.
     
    எனவே இலங்கை கடற்படையினர் மீது தமிழக எல்லைக்குள் புகுந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே வேன் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பூப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). வேன் டிரைவர்.

    இவர் சவாரி சென்று விட்டு வேதாரண்யம்& திருத்துறைப் பூண்டி சாலையில் வெட்டுக்குளத்தில் வேன் நிறுத்துமிடத்தில் வேனை நிறுத்தி இறங்கி உள்ளார்.

    அப்போது அங்கு அமர்ந்திருந்த வேன் டிரைவர்கள் கணேசன் (39), ராஜகிரி (34), ஆனந்தபாபு (35) ஆகிய 3 பேரும் பாண்டியனை தரக்குறைவாக பேசி கட்டையால் தாக்கி உள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்&இன்ஸ்பெக்டர் தேவ சேனாதிபதி ஆகியோர் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்க விரித்த வலையில் 300 கிலோ வலையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    வேதாரண்யம்:

    வேதராண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டவர்-. இவர் தனக்கு சொந்தமான படகில் சக மீனவர்கள் சிலருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

    கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் சுமார் 650 கிலோ வலையை விரித்து விட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் படகில் அனைவரும் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எழுந்து பார்த்த மீனவர் ஆண்டவர் தாங்கள் விரித்திருந்த வலையை மீன்கள் கிடைத்திருக்கும் என்ற நிலையில் படகில் இழுத்து போட்டனர்.

    அப்போது சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடையிலான வலையை காணவில்லை எனக் கூறப்படுகிறது. யாரோ நள்ளிரவில் இவர்களது வலையில் பாதியை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி அறிந்த மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
    கடலில் மீன் பிடித்தபோது வலைகள் திருட்டு போன சம்பவம் சக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×