என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் ஜூஜூவாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக சுப்பிரமணி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுப்பிரமணி இறந்து விட்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர் அருகே கார் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர்:

    சிவகங்கை மாவட்டம் மானமதுரை தாலுகா கீழ்மேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் (வயது 48). லாரி டிரைவர். சம்பவத்தன்று ஓசூர் வந்திருந்த அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் குமுதேப்பள்ளி அருகே நடந்து சென்றார். 

    அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதியதில் விவேக் பலியானார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பர்கூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பர்கூர்:

    கந்திகுப்பத்தை அடுத்த மேல்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரராவ் (வயது 57). விவசாயி. சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவி லட்சுமிபாய்க்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கஜேந்திரராவ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து கஜேந்திரராவ் தற்ெகாலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காவேரிப்பட்டணம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி தாலுகா பாரூர் கீழ் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் மஞ்சு பார்கவி (வயது 21). பி.எஸ்.சி. பட்டதாரி.உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி புறநகர் கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புறநகர் கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பணிமனை தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

    இதில் மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் பரமசிவம், சி.ஐ.டி.யு.சி. மண்டல தலைவர் சண்முகம், ஐ.என்.டி.யு.சி. சத்தியநாராயணன், ஏ.ஐ.டி.யு.சி. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

    இதேபோல் கிருஷ்ணகிரி நகர கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பேரவை மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மத்திய சங்க துணைத்தலைவர் பார்த்தீபன், தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், தொ.மு.ச. செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு.சி. ஜான்லூயிஸ், ஏ.ஐ.டி.யு.சி. பூபேஸ்குப்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 16-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். நிர்வாகங்கள் செலவு செய்த தொழிலாளர்களின் ரூ.7 ஆயிரம் கோடியை உடனே திருப்பி கொடுக்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில் செலுத்த வேண்டும். தமிழகத்தில் பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். அனைத்து பஸ்களையும் முழுமையாக இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் கிராம மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய வனப் பகுதிகளில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இடப்பெயர்ச்சியாகி முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் கூட்டம் பல குழக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளில் சென்று வருகின்றன. ஓசூர், சானமாவு, ஊடேதுர்க்கம், தேனிக்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அய்யூர் போன்ற பகுதிகளில் பல குழுக்களாக முகாமிட்டு இரவு நேரங்களில் விவசாய பயிர்களான ராகி, காய்கறி, கரும்புகளை காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி வருகின்றன. அதேநேரத்தில் பகல் நேரத்தில் வனப் பகுதிக்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொள்கின்றன.

    இந்த நிலையில் நேற்று சானமாவு காட்டில் இருந்து 30-க்கும் மேற்பட்ட யானைகள் நாகமங்கலம் செல்லும் சாலையை கடந்து சென்றன.

    இதனால் அந்த வழியாக சென்ற லாரிகள், பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், மற்றும் நடந்து செல்பவர்களும் அப்படியே நின்று விட்டனர். அப்போது யானைகள் கூட்டம் புழுதியை கிளம்பியப்படி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இடைவெளி விட்டு கடந்து சென்றன.

    இதை அப்பகுதி மக்கள், செல்போனில் வீடியோ எடுத்தனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஆங்காங்கே தனித்தனி குழுக்களாக முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் யானைகளை கர்நாடக மாநில வனப் பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகி றார்கள்.

    இதற்கிடையே யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் கிராம மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

    இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    ஓசூர்:

    இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளையே மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளது.

    இந்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லி, சென்னை வந்த விமானங்களில் பயணம் செய்த 6 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் இங்கிலாந்து இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    ஓசூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த 42 வயது ஆண், 40 வயதான அவரது மனைவி, 10 வயது மகன், 6 வயது மகள் என 4 பேர் நேற்றுமுன்தினம் லண்டனில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஓசூர் வந்தனர்.

    இதையறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். லண்டனில் கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்கள் திரும்பியதால் நேற்று அவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

    இதேபோல் ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த 30 வயது ஆண், இங்கிலாந்தில் இருந்து கடந்த 19-ந் தேதி திரும்பினார். அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனை செய்திருந்ததால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

    மேலும் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய காவேரிப்பட்டணத்தை சேர்ந்த 27 வயது ஆண், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:-

    இங்கிலாந்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 6 பேருக்கும் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. இருப்பினும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.

    வெளிநாட்டில் இருந்து பயணி வந்தால் கொரோனா தொற்று பரிசோதனைக்கு பிறகே விமான நிலையத்துக்கு அனுமதிக்கப்படுவர். பிறகு நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. 3-வது கட்டமாக சொந்த ஊரில் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேன்கனிக்கோட்டை அருகே தைலமரத்தோப்பில் முகாமிட்டுள்ள இருந்த 30 யானைகளை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு அஞ்சலகிரி, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள காப்புக்காட்டுக்குள் இடம் பெயர்ந்தன.

    இந்த யானைகள் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் தனித்தனி குழுவாக பிரிந்து தொடர்ந்து விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று சானமாவு, தளி மற்றும் அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு அங்குள்ள பயிர்களை நாசம் செய்தன. பின்னர் அந்த 30 யானைகள் கூட்டமாக நேற்று மதியம் ஓசூர் அருகே உள்ள அஞ்சலகிரி கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் யானைகள் முகாமிட்டு இருந்தது. இவற்றில் சில யானைகள் மட்டும் அங்கு இருந்த வாழைகள், மற்றும் ராகி பயிர்களை நாசம் செய்தன.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் முயன்றனர். ஆனால் அந்த யானைகள் கூட்டமாக நின்று காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே நின்றது.

    இதையடுத்து முகாமிட்டுள்ள அந்த யானைகள் மெதுவாக தைலமரத்தோப்பு பகுதிக்கு நள்ளிரவு சென்றது. அங்கு முகாமிட்டுள்ள இருந்த 30 யானைகளை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு அஞ்சலகிரி, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.

    மேலும் கிராம மக்கள் வனப்பகுதியையொட்டி உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கால் நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப காப்புக்காட்டுக்கு விவசாயிகள் வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    கெலமங்கலம் அருகே விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தை சேர்ந்த திம்மராஜ் (வயது 47). விவசாயி. இவர் கடன் தொல்லை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கெலமங்கலம் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள காடுகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன்தினம் பைரமங்கலம்- ஓசூர் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற வேப்பனப்பள்ளி ஈத்கா தெருவை சேர்ந்த ரசூல் (வயது 28),  சாதிக் (47), ராஜா (57), தேன்கனிக்கோட்டை மஜித் தெரு சபீர் அகமது (55) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
    சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே உள்ள குக்கலப்பள்ளியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×