என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    தேன்கனிக்கோட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டை ஏ.வி.எஸ். லேஅவுட் மாரியம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடியவர்களை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் திகடரப்பள்ளியைச் சேர்ந்த திம்மராஜ் (வயது 42), சங்கர் (46), ராஜப்பா (50), குர்ரப்பா (50), முரளி (33), ஸ்ரீதர் (30), என தெரியவந்தது.

    அவர்கள் 6 பேரையும் கைது செய்ததுடன், 300 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தன்சூர் ஏரி அருகே சூதாடிய பெல்லேலப்பா (26), கிருஷ்ணன் (42), திருமால் (35), ரமேஷ் (39) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல தேன்கனிக்கோட்டை போலீசார் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகே சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த சதாம் (22), பயாஸ் (27), சையத் பாஷா (32), ரப்பானி (40), காதர் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மைலான் லேப்ரட்ரீஸ் நிறுவனத்திற்கு ஆம்போடெரிசின்-பி மருந்து உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
    ஓசூர்:

    தமிழகம் முழுவதும் தகுதியான நிறுவனங்கள் ஆம்போடெரிசன்-பி மருத்தை உற்பத்தி செய்ய விண்ணப்பங்கள் அளித்தால் அதற்கு உடனடியாகஅனுமதி வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா தொற்றின் தீவிர பாதிப்புக்குள்ளாகி அதில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

    அதன்படி இதுவரை மாநிலம் முழுவதும் 550-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 20-க்கும் அதிகமானோர் இறந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஆம்போ டெரிசின் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், மேலும் அந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் மூன்று நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.

    மற்றொரு புறம் ஆம்போடெரிசின்-பி மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மைலான் லேப்ரட்ரீஸ் நிறுவனத்திற்கு ஆம்போடெரிசின்-பி மருந்து உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

    வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்துகொள்ளலாம்.

    ஆன்லைன் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி வரை பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    ஓசூரில் ரெயிலில் மது கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சங்கராபுரத்தை சேர்ந்த சாலமன் என்பவரது மகன் ஜாய்ஸ் பிரபாகரன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். ஓசூர் அருகே ரெயில்வே போலீசார் திடீரென சோதனை செய்தபோது ஜாய்ஸ் பிரபாகரன் 12 கர்நாடக மது பாட்டில்கள் மற்றும் 70 மது பாக்கெட்டுகளை (மொத்தம் 21.37 லிட்டர்) கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மது வகைகளையும் பறிமுதல் செய்து, ஜாய்ஸ் பிரபாகரனை கைது செய்தனர்.
    மத்தூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் மங்களவாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த ஜிஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாயாவதி (25) என்பவருக்கும் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இவர்கள் ஜிஞ்சம்பட்டி, சொரங்கம்வட்டத்தில் தற்போது வசித்து வந்தனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவனுடன் கோபித்துக் கொண்ட மாயாவதி, ஜிஞ்சம்பட்டியிலுள்ள தன் தாய் வீட்டிற்கு வந்தார். விரக்தியுடன் காணப்பட்ட மாயாவதி, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயாவதி உயிரிழந்தார். இதுகுறித்து மாயாவதி அண்ணன் மனோகரன் அளித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி போலீசார் கல்கேரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஓசூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நலன்கருதி காய்கறிகள் மற்றும் பழவகைகளை நடமாடும் வாகனம் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ஓசூர்:

    கொரோனா முழு ஊரடங்கையொட்டி, ஓசூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நலன்கருதி காய்கறிகள் மற்றும் பழவகைகளை நடமாடும் வாகனம் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நடமாடும் வாகனங்களில் விற்கப்படும் காய்கறிகள், பழவகைகளின் விலை, சந்தை விலையைவிட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இதனை தீவிரமாக கண்காணித்து, அதிக விலைக்கு விற்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். தவிர ஒசூரில் என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நடமாடும் வாகனம் வருவதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காவேரிப்பட்டணம் 7 இடங்களிலும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகள் உள்பட 17 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் 2,900 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் 17 இடங்களில் நடத்தப்பட்டது. அதன்படி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 1,065 பேர் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு கெலமங்கலம், பாகலூர், ஜெகதேவி, சாமல்பட்டி, ஊத்தங்கரை என 5 இடங்களிலும், 45 வயது மேற்பட்டவர்களுக்கு தளி, பாகலூர், சூளகிரி, ஜெகதேவி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் 7 இடங்களிலும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகள் உள்பட 17 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் 2,900 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    கிருஷ்ணகிரி அருகே கியாஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
    கிருஷ்ணகிரி:

    வேலூர் மாவட்டம் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் ரமேஷ் (வயது 35). இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வந்தார். ரமேஷ் பெங்களூருவில் வெல்டிங் பட்டறை வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ரமேஷ் தனது குடும்பத்தினருடன் ஆம்னி வேனில் குடியாத்தம் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று காலை அவர்கள் ஆம்னி வேனில் பெங்களூருவுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    கியாஸ் டேங்கர் லாரி மீது மோதியதில் நொறுங்கிய ஆம்னி வேனை படத்தில் காணலாம்.


    ஆம்னி வேனை ரமேஷ் ஓட்டி வந்தார். அவருடன், அவரது மனைவி தீபா (30), மகன் நித்தீஷ் (1) மற்றும் உறவினர்கள் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்த அஞ்சலி (34), வேலூர் மாவட்டம் கே.மோட்டூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சரளா (35), அவர்களது குழந்தைகள் சாரிகா (9), ஓவியா (5) ஆகியோர் இருந்தனர்.

    நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி அருகே ஆம்னி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் கியாஸ் டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த சமயம் கண்இமைக்கும் நேரத்தில் டேங்கர் லாரியின் பின்புறம் ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த ரமேஷ், அவரது மனைவி தீபா, குழந்தை நித்தீஷ், உறவினர் அஞ்சலி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். வேனில் இருந்த சரளா மற்றும் சிறுமிகள் சாரிகா, ஓவியா ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சிறுமிகள் சாரிகா, ஓவியா ஆகியோருக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் லோகநாதன் (வயது 16). இவர் மாதேப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மாணவர் லோகநாதன் தனது நண்பரை அழைத்து கொண்டு செம்படம்புதூரில் உள்ள தென்பெண்ணையாற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகநாதன் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் லோகநாதன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    கல்லாவி:

    கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் கல்லாவி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி போட்டு கொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 48 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கடந்த 25-ந் தேதி ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

    அதே போல 52 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 27-ந் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். 59 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 5-ந் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    கிருஷ்ணகிரியை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 20-ந் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 57 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 731 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 ஆயிரத்து 282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் 26 ஆயிரத்து 879 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 208 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×