என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • மதுபோதையில் இருந்த 5 பேர் கும்பல் விக்னேசை வழிமறித்தது.
    • பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (26). போட்டோ கிராபர். இவர் தனது உறவினரை சந்திக்க டெம்பிள் சிட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 5 பேர் கும்பல் விக்னேசை வழிமறித்தது. புரோட்டாவுக்கு சால்னா வாங்கி கொடுக்கும்படி தகராறில் ஈடுபட்டனர். இதற்கு அவர் மறுத்ததால் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்பிள்சிட்டி பகுதியை சேர்ந்த ஹரீஷ், கன்னியப்பன், சரவணன், எல்லப்பன், பெரியதனுஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    • ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் காமராஜ் ஊழியராக வேலை செய்து வந்தார்.
    • காமராஜ் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வீராச்சாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 34). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் காமராஜ் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றார். இதற்கிடையே நேற்று அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் காமராஜ்க்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில், மர்ம நபர்கள் காமராஜ் கோவிலுக்கு சென்றதை நோட்டம் விட்டு வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • உத்திரமேரூர் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சதீஷ்.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சதீஷ். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென இறந்ததாக காஞ்சிபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சங்கீதா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    சதீசும், சங்கீதாவும், கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்துள்ளனர். நேற்று இரவு அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சங்கீதா இறந்து இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் சதீசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடி பகுதியை சேர்ந்த டிரைவர் கதிர்வேல் லாரியை ஓட்டினார்.

    காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் வந்தபோது கண்டெய்னர் பழுதடைந்தது. இதனை சரி செய்வதற்காக டிரைவர் கதிர்வேல் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    • கலெக்டர் மா.ஆர்த்தி தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
    • கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அண்ணல் காந்தியடிகள் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி கலந்துகொண்டு, பொதுமக்களுடன் உணவருந்தினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்த போவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆர்ப்பாட்டம்
    • சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் பகுதியில் சர்வதேச புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து 12க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குழப்பமான மனநிலை மக்களிடையே நீடித்து வருகிறது.

    மேலும் மாவட்டத்திலேயே பசுமை நிறைந்த பகுதியாக ஏகனாபுரம், நாகப்பட்டு ,நெல்வாய் உள்ளிட்ட கிராமங்கள் விளங்கி வருகின்றன. இந்நிலையில் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் தமிழக அரசு கையகப்படுத்த போவதாக மக்களிடையே தகவல் வெளியானதை அடுத்து மேற்கண்ட கிராமங்களில் அப்பகுதி மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவை முன்னிட்டு மேற்கண்ட பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். விமான நிலையம் வருவதை கண்டித்து இக்கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனையொட்டி மேட்டு பரந்தூர், நாகப்பட்டு ,காட்டுப்பட்டூர், நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளிலும், சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டு அவர்கள் ஒப்புதலுடன் கிராம சபை கூட்டத்தில் விமான நிலையம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதியாக கருதப்பட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மகள் வராததை பார்த்த மணிகண்டன் மீண்டும் வயலுக்கு சென்று மகளை தேடி பார்த்தபோது அவர் கிணற்றில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சிறுமி கிணற்றின் அருகே சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் பேரூராட்சி பட்டஞ்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கனிஷ்கா (10) என்ற மகளும் ஹரித் (7) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் தனது வயலில் உள்ள கிணற்றின் அருகே துணி துவைப்பதற்காக மணிகண்டன், மனைவி, மகன், மகளுடன் சென்றார். துணி துவைத்து முடித்த உடன் வீட்டுக்கு கிளம்பலாம் என்று நினைத்தபோது மகள் சைக்கிளில் வீட்டுக்கு வருவேன் என்று கூறியதால் மனைவி மற்றும் மகனுடன் மணிகண்டன் வீட்டுக்கு திரும்பினார். குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னரும் மகள் வராததை பார்த்த மணிகண்டன் மீண்டும் வயலுக்கு சென்று மகளை தேடி பார்த்தபோது அவர் கிணற்றில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கிணற்றில் இறங்கி அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுமி கிணற்றின் அருகே சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • இணை மானிய திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டை காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டு பேசினார்.
    • மின்னணு பணபரிவர்த்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு இணை மானிய திட்டம் குறித்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் இணை மானிய திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டை வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைக்கு வழிவகுத்தல் மற்றும் நிலையான வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் குழு தொழில்களுக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் இணை மானிய திட்டம் என்ற செயல்பாடு செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் தொழில் புரிய ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனை வழங்குதல், தொழில் திட்டம் மற்றும் முன்மொழிவு தயார் செய்திட உதவி செய்தல், தொழில் தொடங்க தேவையான பதிவு சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பெற்று தருதல், மற்றும் மின்னணு பணபரிவர்த்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணைமானிய திட்டத்தை ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் வழங்கி ஊரக பகுதிகளில் தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மூலிகைத் தோட்டம் பள்ளி கணித ஆசிரியர் அந்தோனி ராஜ் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது.
    • மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளயில் அரியவகை மூலிகை தோட்டம் மற்றும் மலர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள் தலைமையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் அந்தோனி ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    மூலிகை தோட்டத்தில் சித்தரத்தை, ஆடாதொடா, கருநொச்சி, சிறியாநங்கை பெரியாநங்கை, வெட்டிவேர், சிறுகுறிஞ்சான், தழுதாழை, உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகள், மற்றும் மலர் செடிகள் நடப்பட்டுள்ளது.

    மூலிகைத் தோட்டம் பள்ளி கணித ஆசிரியர் அந்தோனி ராஜ் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கஞ்சா விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மர்ம நபர்கள் கஞ்சா விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனாஸ் ரூட் (வயது 33), பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார் (26) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் 2 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் இருவரும் தண்டலம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வருவதும், 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு கஞ்சா விற்று வருவதும் தெரியவந்தது.

    அதே கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில் 50 பேர் பெண் வாடிக்கையாளர்கள் என்றும் கூகுள்பே மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    • காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் மண்டல இணை பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.

    காஞ்சிபுரம்:

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் தேசியக் கொடியினை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து ரூ.1 கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, முதன்மை கல்வி அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் மண்டல இணை பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார்.

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

    செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறந்த காவலருக்கான மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை மாவட்ட நீதிபதி காயத்ரி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமார், செயலாளர் மகேஷ் குமார், பொருளாளர் பிரேம் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார். நகர மன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டார். பின்னர் அவர் போலீசரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

    மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 20 காவலர்களுக்கு பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கினார். இதேபோல் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் போலீஸ் சூப்பிரெண்ட் சீப்பாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் , மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஜெயகுமார், சப்- கலெக்டர் மகாபாரதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, ஜேசுதாஸ்,, வட்டாட்சியர் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமாரும், திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமியும் தேசியக் கொடியை ஏற்றினர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் ரவி தேசிய கொடி ஏற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், வல்லூர் ஊராட்சியில் தலைவர் உஷா ஜெயகுமார், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர்பாபு, பஞ்சட்டி ஊராட்சியில் தலைவர் சீனிவாசன், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், தாங்கள் பெரும்புலம் ஊராட்சியில் தலைவர் ஞானவேல், கோலூர் ஊராட்சியில் தலைவர் குமார், பிரளயம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் இலக்கியா கண்ணதாசன், ஆவூர் ஊராட்சியில் தலைவர் டில்லி பாபு ஆகியோர் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

    மாமல்லபுரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வீடுதோறும் தேசியக்கொடி இலவசமாக கொடுக்கப்பட்டது.

    அர்சுனன்தபசு அருகே தன்னார்வலர்கள் 1,000 பேர் ஒன்று திரண்டு தேசியக் கொடியின் மூவர்ண கலரில் டீ-சர்ட் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

    பூஞ்சேரி டோல்கேட் ஓ.எம்.ஆர் சாலையில் இருந்து பண்டிதமேடு வரை சுதந்திர தின மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதனை இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம், மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், தொல்லியல்துறை, தீயணைப்பு துறை, மாமல்லபுரம் பேரூராட்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    ஊத்துக்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தேசிய கொடியை ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரமேஷ் கொடியேற்றினார். இதில் சிறப்பு தாசில்தார் லதா, துணை தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் மாலா, துணைத்தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய தொழிற்படை போலீசார் தேசியக் கொடியை பிடித்தபடி பேரணியாக சென்றனர்.
    • பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் சுற்றி விட்டு மீண்டும் பழவந்தாங்கலை வந்தடைந்தது.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற்படை போலீசார், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். 100 மோட்டார் சைக்கிள்களில் மத்திய தொழிற்படை போலீசார் தேசியக் கொடியை பிடித்தபடி பேரணியாக சென்றனர்.

    பேரணியை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பழவந்தாங்கல் மத்திய தொழிற்படை குடியிருப்பில் இருந்து தொடங்கிய பேரணி ஜி.எஸ்.டி. சாலை வழியாக மீனம்பாக்கம், திரிசூலம் சென்று விமான நிலையம் சென்றடைந்தது. பின்னர் பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் சுற்றி விட்டு மீண்டும் பழவந்தாங்கலை வந்தடைந்தது.

    ×