என் மலர்
காஞ்சிபுரம்
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் மத்திய உளவுத்துறை போலீசாக நடித்து சம்பதிடம் ரூ.7லட்சம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசார் தாமோதரனை கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சம்பத். தி.மு.க. பிரமுகர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பத்திடம் தொலைபேசியில் பேசிய மர்மநபர் தான் மத்திய உளவுத்துறை போலீஸ் எனவும் நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்து உள்ளது.
நீங்கள் வருமானத்துக்கு கணக்கு கட்டாமல் உள்ளதால் உங்கள் மீது வழக்கு போட்டு உங்கள் கார், வீடு உள்ளிட்டவைகளை ஜப்தி செய்து விடுவோம். நடவடிக்கை எடுக்காமல் இருக்க எனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன சம்பத் ரூ. 7 லட்சத்தை தனது டிரைவரிடம் கொடுத்து அனுப்பினார். அதனை பெற்றுக்கொண்ட மர்ம நபர் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சம்பத் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவர் மத்திய உளவுத்துறை போலீசாக நடித்து சம்பதிடம் ரூ.7லட்சம் பறித்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சோமசுந்தரம், காதலியான டிக்டாக் இளம்பெண்ணுடன் உள்ள தொடர்பை குறைத்தார்.
- டிக்டாக் காதலியுடன் ஆட்டோவில் வந்த மற்றொரு பெண்ணும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள பெருநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சோமு என்கிற சோமசுந்தரம்.
இவர் காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவில் தலைமை தலைவராக இருந்தபோதே 'திக் திக் டாக்' என்ற செல்போன் செயலில் ஆட்டம் போட்டு வீடியோ பதிவிட்டு டிக்டாக்கில் பிரபலமான தாயார் குளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களது நட்பு தொடர்ந்து வந்தது.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சோமசுந்தரம், காதலியான டிக்டாக் இளம்பெண்ணுடன் உள்ள தொடர்பை குறைத்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிக்டாக் காதலி, சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்தை தேடி பெருநகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். மேலும் அவர் அங்கிருந்த போலீசார் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் உரிமையுடன் பேசி கடும் வாக்குவாதம் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் போலீஸ் நிலையத்திலேயே டிக்டாக் காதலியை சரமாரியாக தாக்கினார்.
மேலும் அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவருக்கும் 'பளார்' அறை விழுந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதல் காட்சியை போலீஸ் நிலையத்தில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த தாக்குதல் நடைபெற்றபோது டிக்டாக் காதலி தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் டிக்டாக் காதலியை தாக்கி செல்பேனை பறித்து உள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த காதலி, செல்போனை கொடுக்கவில்லை என்றால் ஆடையை கழற்றி போட்டு போராட்டம் நடத்துவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பயந்துபோன சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் செல்போனை திருப்பி கொடுத்து உள்ளார்.
இதேபோல் டிக்டாக் காதலியுடன் ஆட்டோவில் வந்த மற்றொரு பெண்ணும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த டிக்டாக் காதலி தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் காதலியின் தம்பி ஒருவரை வழக்கு ஒன்றில் போலீசில் மாட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த டிக்டாக் காதலி, சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்துடன் உள்ள தொடர்பு குறித்து அவரது மனைவி மற்றும் மாமனிடம் தெரிவித்து உள்ளார்.
இந்த தகராறில் கோபத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போலீஸ் நிலையத்துக்குள் வந்த மீண்டும் தகராறில் கோபத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போலீஸ் நிலையத்திற்குள் வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்ட காதலியை வசமாக கவனித்து அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது.
- கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
இதற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழ்விடத்தையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற போராடி வரும் 12 கிராம மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறியவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதியம் ஏகனாபுரம் கிராமத்துக்கு சென்றார்.
முன்னதாக அங்குள்ள காலி இடத்தில் கிராம மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக குவிந்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகள் வைத்து இருந்தனர்.
கிராம மக்களுடன் சீமான் கலந்துரையாடினார். அப்போது விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார். கிராம மக்கள் கண்ணீருடன் நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதே போல் பரந்தூரை சுற்றி உள்ள மற்ற கிராமங்களுக்கும் சீமான் சென்று அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் சால்டின், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற செயலாளர் ஈ.ரா. மகேந்திரன், மத்திய சென்னை நாடாளுமன்ற பொறுப்பாளர் வக்கீல் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி, நாகநாதன், ஆனந்தன், சந்திர சேகர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகி காசிம் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது, நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மோக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
நீர் நிலைகள் மாசடைவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள (சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை) போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ளது.
- அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ளது.
இதற்காக பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப் படுத்தப்படும் என்று தெரிகிறது.
இதற்கு அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விளை நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என்று கிராம மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதுத்தொடர்பாக ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றியும், பேரணியாகவும் சென்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற 15 நாட்களுக்கு பொதுக் கூட்டம், பேரணி நடத்த தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வரும் நாட்களில் விழாக்கள் வர உள்ளதால் மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இந்த சமயங்களில் மோதல் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் சட்டம் 30 (2) அமல்படுத்தப் பட்டுள்ளது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிற 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளை நடத்தவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், பொதுக் கூட்டம் நடத்துபவர்களும் போலீசாரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போடப்பட்டதாக கூறப்படுகிறது.
- விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பாமக சார்பில் பரந்தூர் விமான நிலையம் குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கருத்து கேட்பு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்து கொண்டு கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
- காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 58). இவர் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். துலுங்கும் தண்டலம் கிராமத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்ய துலுங்கும் தண்டலம் கிராமத்திற்கு மின் ஊழியர் பக்கிரிசாமி டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு மின்மாற்றி மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி துடி துடித்தார். இதுகுறித்து ஆம்புலன்சு மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் வருவதற்குள் மின்ஊழியர் பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் பக்கிரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர்.
- மர்ம நபர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தரை சரமாரியாக வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (20). இவர்கள் இருவரும் மணிமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே நேற்று முன்தினம் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தரை சரமாரியாக வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
வெட்டு காயங்களுடன் கிடந்த இருவரையும் மணிமங்கலம் போலீசார் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக மணிமங்கலம போலீஸ் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி்ச் சென்ற கொலையாளிகளை தேடிவந்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக மணிமங்கலம் பெரிய காலனி பகுதியை தெருவீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் (22), மணிமங்கலம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (19), மேற்கு மாடவீதியை சேர்ந்த லோகேஸ்வரன் (19), இந்திராநகர் பகுதியை சேர்ந்த டில்லிபாபு(21) ஆகியோரை வரதராஜபுரம் அருகே போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணிமங்கலம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த மார்ச் மாதம் தேவேந்திரன் (23) என்பவர் மணிமங்கலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நண்பர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே இருவரையும் வெட்டி படுகொலை செய்தோம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர். இவர்களிடம் இருந்து கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார்.
- தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, ரவிக்குமாரை கைது செய்து மேலும் விசாரணைக்கு தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.
ஆலந்தூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (43). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவரை கைது செய்ய தஞ்சாவூர், புதுக்கோட்டை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் இவர் போலீசிடம் சிக்காமல் தப்பியோடி, வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டார்.
இதை அடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ரவிக்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும், எல்.ஓ.சி. போடப்பட்டிருந்தது.
தனது 23 வயதில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய ரவிக்குமார், 20 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு வராமல், வெளி நாடுகளிலேயே தங்கி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாா்.
இனிமேல் போலீசாா் தேட மாட்டார்கள் என்று நினைத்து துபாயில் இருந்தவர் சொந்த ஊருக்கு செல்ல சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரவிக்குமாரின் பாஸ்போா்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர், 20 ஆண்டுகளாக தஞ்சாவூர் போலீசாரால், திருட்டு வழக்குகளில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், ரவிகுமாரை வெளியே விடாமல் தடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுத்தனா். தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, ரவிக்குமாரை கைது செய்து மேலும் விசாரணைக்கு தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.
- இரண்டு அறைகளில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு தங்க நகைகள் கொள்ளை
- கைரேகை நிபுணர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் வந்து ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரி கரை பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் குடியிருப்பு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த குடியிருப்பில் 104 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சொக்கலிங்கம் என்பவரின் மகன் சதீஷ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி பிரவசத்துக்காக சென்னை சென்று உள்ளார்.
இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சதீஷ் ஷிப்ட் முடிந்து நேற்று நள்ளிரவு வீட்டுக்கு வந்த பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
இரண்டு அறைகளில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் வங்கிப் புத்தகம் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் வந்து ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- எடை குறைந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
- விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்தது.
காஞ்சிபுரம்:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் புதிதாக எடை குறைந்த நவீன சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வகை சிலிண்டர்களில் முன்னா 2 கிலோ, சோட்டு 5 கிலோ, காம்போசிட் சிலிண்டர் 5 கிலோ, 10 கிலோ ஆகிய எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது விநியோகம் செய்யப்படும் வழக்கமான இண்டேன் சிலிண்டரைவிட இது கூடுதல் வலுவானது, பாதுகாப்பானது. இந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சிலிண்டர்கள் குறித்தும், வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடம் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வாகனத்தை கடந்த 5 தேதி இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு வாகனம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 29 விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வாகனம் நேற்று மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்தது. அங்கு மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு கேஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது. காஸ் கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைக் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
15 நாட்கள் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
- சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.
காஞ்சிபுரம்:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட சிலைகளை கரைப்பதற்கு சர்வதீர்த்த குளம் பொன்னேக்கரை ஆகிய 2 இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகளை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






