என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • கொலை தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • பிரபாகருக்கும், பெருமாளுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் தகராறும் ஏற்பட்டு வந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நாராயண பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற பிரபாகர் பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்நிலையில் காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிரபாகர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பிரபாகரை வேலைக்கு அழைத்து சென்ற பெருமாள் என்பவர் அங்குள்ள ஏரியில் விழுந்து இறந்து பிணமாக மிதந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் பெருமாள் வசித்து வந்தார். இவர் பிரபாகரை எலக்ட்ரீசியன் வேலைக்கு அழைத்துச் சென்றார்.

    பிரபாகருக்கும், பெருமாளுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் தகராறும் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் எலக்ட்ரீசியன் பணிக்குச் சென்ற இருவரும் மதுபானம் அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளனர்.

    பொன்னேரி ஏரிக்கரை மேம்பாலத்தின் கீழே அவர்கள் தகராறில் ஈடுபட்டபோது இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக கடுமையாக தாக்கிக் கொண்டு உள்ளனர்.

    இதில் பிரபாகர் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழந்தார். அடிதடியில் மயங்கி ஏரியில் விழுந்து பெருமாள் நீரில் மூழ்கி இறந்து போய் உள்ளார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பெருமாள் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றினார்கள். கொடுக்கல் வாங்கல் தகராறில் மதுபோதையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிரிழந்து உள்ளது தெரியவந்தது.

    • ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர்.
    • அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

    நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர். நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர். விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மும்பையில் இருந்து அவர்கள் கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்தனர்.

    இந்த நிலையில் பொம்மன், பெள்ளி ஆகியோர் இந்த விமானத்தில் வருவது, விமானிக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் எழுந்து வந்து, உள்ளே இருந்த பயணிகளை பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கூறினார். அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் என்ன சொல்கிறார் என தெரியாமல் குழம்பி போய் இருந்தனர்.


    பொம்மன் -பெள்ளி

    தொடர்ந்து விமானி பேசுகையில், நம்முடன் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் கலைஞர்கள் 2 பேர் பயணிக்கிறார்கள். அவர்களுடன் பயணிப்பது நமக்கு பெருமையான தருணம். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது பொம்மனும், பெள்ளியும் விமானத்தின் முதல் இருக்கையில் இருந்து எழுந்தனர். உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி 2 பேரையும் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதை பார்த்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பதிலுக்கு அவர்களுக்கு கை கூப்பி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர். அப்போது விமானி, இவர்கள் நடிகர்கள் அல்ல. உண்மையான மனிதர்கள். நிஜ ஹீரோக்கள். இவர்களுடன் பயணிப்பதை பெருமையாக உணர்கிறோம் என தெரிவித்தார். மேலும் கோவை வரும் வரை பொம்மன், பெள்ளியிடம் பயணிகள் அனைவரும் பேசி கொண்டு வந்தனர். கோவையில் விமானம் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வரிசையாக நின்று கொண்டனர்.

    பொம்மன், பெள்ளி விமானத்தை விட்டு இறங்கி வரும் போது வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர். அத்துடன் அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்து அதனை தங்கள் சமூக வலைதளங்களில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுடன் ஒரு சந்திப்பு என தலைப்பிட்டு பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினர். பின்னர் பொம்மன், பெள்ளி ஆகியோர் கோவையில் இருந்து கார் மூலமாக நீலகிரி புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோவை சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவும் பகிர்ந்துள்ளார்.


    பொம்மன் -பெள்ளி தம்பதியை பாராட்டிய விமான பயணிகள்

    இதேபோல் இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பொம்மன், பெள்ளி பயணித்த வீடியோவை பகிர்ந்து, அதில் எங்கள் விமானத்தில் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த கலைஞர்கள் பயணித்தது எங்களுக்கு பெருமையான தருணமாகும் என தெரிவித்துள்ளது.

    நாங்கள் மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு நேற்று ஊர் திரும்புவதற்காக விமானத்தில் பயணித்தோம். அப்போது எங்களுடன் பயணித்தவர்கள் எங்களை வெகுவாக பாராட்டினர். இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காட்டுக்குள் இருந்த எங்களுக்கு அங்கிருந்து வெளியில் வந்து நகர பகுதியை பார்வையிட்டதும், அங்கு மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் மிகவும் அளப்பரியது.

    எங்களுக்கு கிடைத்த இந்த பெருமை எல்லாம் குட்டி யானைகளான ரகு, பொம்மியைவே சாரும். அவர்களால் தான் நாங்கள் இந்த அளவுக்கு பிரபலமாகி உள்ளோம். எங்களை எங்கு பார்த்தாலும் அனைவரும் அடையாளம் கண்டு பாராட்டு தெரிவிப்பதோடு எங்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தில் நடித்தாலும் அவர்கள் 2 பேரும் எவ்வித கர்வமும் இல்லாமலும், அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சர்வ சாதாரணமாக அதனை கடந்து செல்கின்றனர். அத்துடன் மீண்டும் தங்கள் பணியை தொடங்கி விட்டனர். ஆம் அவர்கள் 2 பேருக்கும் தற்போது வனத்துறையினர் வேறு ஒரு குட்டி யானையை பராமரிக்கும் பணியை கொடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது. அந்த யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்க்க எவ்வளவோ முயற்சித்தும் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குட்டி யானையை பராமரிக்கும் பணி ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு ள்ளது. அவர்கள் அந்த யானையை தங்கள் பிள்ளையை போல் பாவித்து பராமரித்து வளர்க்க தொடங்கி உள்ளனர்.

    • காஞ்சிபுரம் மவாட்டத்தில் உள்ள நல்லுறவு கூடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • நேரடி கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே நெல் கணக்கிட்டு எடுக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நல்லுறவு கூடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறுகையில், "நேரடி கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே நெல் கணக்கிட்டு எடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 35 மூட்டைகளாவது நெல் கணக்கிட்டு எடுக்க வேண்டும்" என்றார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரி குளங்களில் மீன் பிடிக்க ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்தார்.

    ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாக ஏலம் போக வேண்டிய ஏரி மீன்களை உள்ளூர் பிரமுகர்கள் சிலருடன் அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு ரூ.28 ஆயிரத்துக்கு மட்டுமே ஏலம் விடுவதாக புகார் தெரிவித்தார்.

    • சந்தேகம் அடைந்த கோபிநாத் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரிடம் புகார் அளித்தார்.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க எஸ்.பி.சுதாகர் உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காஞ்சி சாலையில் பிரபல பட்டு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கோபி நாத். இவருக்கு ஒருவர் போன் செய்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பேசுவதாக கூறினார்.

    பின்னர் அதே அழைப்பை வாங்கி மற்றொருவர் பேசினார். அவர், தான் மாவட்ட கலெக்டரின் சிறப்பு உதவியாளர் என்றும் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், வங்கி கணக்கிற்கு ரூ.75 ஆயிரம் பணம் அனுப்புமாறும் கூறி வங்கி கணக்கு எண்ணை அனுப்பினார்.

    இதில் சந்தேகம் அடைந்த கோபிநாத் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரிடம் புகார் அளித்தார். இதனை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க எஸ்.பி.சுதாகர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் சதீஷ், ஆல்பர்ட் ஜான், ஆசைத்தம்பி குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்கிற சந்தான பாரதி ஆள் மாறாட்டம் செய்து தொலைபேசியில் பணம் கேட்டது தெரிய வந்தது. அவர் டிரைவர் ஆவார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் வேறு ஒரு வழக்கில் தஞ்சாவூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில், மீண்டும் அவரை இவ்வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

    சந்தானம் இதே போல் பல்வேறு மாவட்ட கலெக்டர்களின் பெயரை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    • காஞ்சிபுரம் புதிய ரெயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிரபாகர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.
    • பிரபாகர் இறந்து கிடந்த இடம் அருகே அவர் கொண்டு சென்ற எலெக்ட்ரிக்கல் பொருட்கள் இருந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நாராயண பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் பிரபாகர். இவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார்.

    கடந்த 10 ஆண்டுகளாக பட்டுச்சேலை விற்பனை கடையில் வேலை பார்த்து வந்த பிரபாகர் தற்போது எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற பிரபாகர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் காஞ்சிபுரம் புதிய ரெயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிரபாகர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரபாகர் இறந்து கிடந்த இடம் அருகே அவர் கொண்டு சென்ற எலெக்ட்ரிக்கல் பொருட்கள் இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் பிரபாகரை வழிமறித்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்ததா? அல்லது முன்விரோதத்தில் தீர்த்து கட்டப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்பநாய் புதிய ரெயில் நிலையம் அருகே வரை சென்றது. பிரபாகருக்கு வேறு யாருடனும் தகராறு உள்ளதா? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
    • அதிகமான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது.

    இங்குள்ள குடோனில், தயாரான பட்டாசுகளை சேமித்து வைப்பது வழக்கம். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து உள்ளனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின.

    இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி (வயது 53), பள்ளூரை சேர்ந்த முருகன் (50), குருவிமலையை சேர்ந்த தேவி (34), காஞ்சிபுரத்தை சேர்ந்த சுதர்சன், குருவிமலை முருகன் கோவிலை சேர்ந்த சசிகலா (35), காஞ்சிபுரம் அருகே வளர்த்தோட்டத்தை சேர்ந்த கங்காதரன் (68), அவரது மனைவி விஜயா (38), காஞ்சிபுரத்தை சேர்ந்த கவுதம் (15), குருவிமலையை சேர்ந்த கோட்டீஸ்வரி (48) என மொத்தம் 9 பேர் பலியானார்கள்.

    வெடிகள் வெடித்து சிதறியதில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. பலரது உடல்கள் சிதறி வீசப்பட்டு கிடந்தன. மேலும் வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் வெடிவிபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பட்டாசுகள் வெடித்து சிதறியபோது அதன் சத்தம் சுமார் 3 கி.மீட்டர் தூரத்துக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். வெடிகள் வெடித்த அதிர்வில் குருவிமலை பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. வெடிவிபத்து அதிர்ச்சியில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை.

    இதற்கிடையே குருவிமலை, வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிக அளவு பட்டாசு மூலப்பொருட்களை குடோனில் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்களை பயன்படுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    இது தொடர்பாக வேலூர் மண்டல தீயணைப்புத்துறை இயக்குனர் சரவணகுமார் கூறும்போது:-

    இந்த பட்டாசு ஆலைக்கு 2024-ம் ஆண்டு வரை உரிமம் உள்ளது. பட்டாசு குடோனில் அதிக வெப்பநிலை, மூலப்பொருட்கள் உராய்வால் ரசாயன மாற்றம் மற்றும் மருந்து பொருட்களை கையாளுதல் தவறு உள்ளிட்டவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    பட்டாசு ஆலையில் அதிகமான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் பணியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் வெடிவிபத்து ஏற்பட்ட போது அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    • பட்டாசு குடோன் உரிமையாளரான நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே இன்று பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர். 12 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

    இதேபோல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். 

    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. குடோன் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் நரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

    • பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விளைநிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கு அதை சுற்றியுள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது.

    பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏகனாபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் புதிய விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தமிழ்வாணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
    • குடிபோதை தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள சதாவரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது23). இவரும் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவரும் நண்பர்கள்.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் குணாவின் தந்தை ரகு அங்கு வந்தார். அவர் மகனிடம் தகராறில் ஈடுபட்ட தமிழ்வாணனை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. ரகுவும், அவரது மகன் குணாவும் சேர்ந்து தமிழ்வாணனை தாக்கினர்.

    மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் அரிவாளால் தமிழ்வாணனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தமிழ்வாணன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    உடனே ரகுவும், அவரது மகன் குணாவும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தமிழ்வாணணை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் தமிழ்வாணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ரகு மற்றும் குணாவை தேடி வருகின்றனர். குடிபோதை தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடோனில் இன்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட் டோர் வேலைபார்த்து வருகிறார்கள்.

    இங்குள்ள குடோனில் இன்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.

    • தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா பறிமுதல் செய்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அவர்களிடம் இருந்த கூடையில் உயிருள்ள பொருள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் அந்த கூடையை திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அதில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சதுப்பு நில காடுகளில் வசிக்கும் டி பிரஸ்ஸாவின் குரங்கு, நைஜீரியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் மாண்டட் கெரேசா என்ற குரங்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளில் வாழும் சிலந்தி குரங்கு என அரியவகை 4 குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி பயணிகளிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை குட்டிகள் என்பதால் வீட்டில் வளர்க்க எடுத்து வந்திருக்கிறோம் என்று கூறினர்.

    ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவர்களிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.

    ஆனால் இதில் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா பறிமுதல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் அவை அபூர்வ வகையை சேர்ந்தது என்பதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து குரங்கு குட்டிகளை மீண்டும் மலேசிய நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×