என் மலர்tooltip icon

    ஈரோடு

    அதிமுக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் சி.கே. சரஸ்வதியும், திமுக சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் மோதும் மொடக்குறிச்சி தொகுதி கண்ணோட்டம்.
    மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் இந்த தொகுதியில் மஞ்சள், மரவள்ளி கிழங்கு, நெல் ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    புகழ்பெற்ற கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் இந்த தொகுதியில்தான் அமைந்து உள்ளது.

    மொடக்குறிச்சி தொகுதியில் புஞ்சை லக்காபுரம், புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி, சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, கண்ணுடையாம் பாளையம் புதூர், முத்தாயி பாளையம், ஈஞ்சம்பள்ளி,தானத்தம் பாளையம்,

    மொடக்குறிச்சி தொகுதி

    எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாமி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம்,எல்லைக்காடு விளக்கேத்தி, கொங்குடையம் பாளையம், முருங்கியம் பாளையம், அஞ்சூர், வள்ளிபுரம், இச்சிபாளையம்,வடிவுள்ள மங்கலம், அய்யம் பாளையம்,எழுநுத்து மங்கலம்,தேவகி அம்மாபுரம், ஆவுடையாபாறை மற்றும் நாகமநாயக்கன் பாளையம் ஆகிய கிராமங்களும்,

    அவல்பூந்துறை, மொடக்குறிச்சி, பாசூர், அரச்சலூர், வடுகப்பட்டி, கிளாம்பட்டி,வெள்ளோட்டம்பரப்பு, சிவகிரி, கந்தசாமி பாளையம், ஊஞ்சலூர், வெங்கம்பூர், கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன.

    மொடக்குறிச்சி தொகுதி

    இங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 952 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 493 பேர் உள்ளனர். இதர வாக்காளர்கள் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், சங்கத சோசலிச கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாடார்கள், வன்னியர்கள், ஆதிதிராவிடர் உள்பட பல்வேறு சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் தேவை, விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி இந்த தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக 120 பக்கம் கொண்ட வாக்குச்சீட்டு புத்தகம் அச்சிடப்பட்டது.

    மொடக்குறிச்சி தொகுதி

    இத்தேர்தலில் பழனிச்சாமி என்ற பெயரில் 60 பேரும், ராமசாமி என்ற பெயரில் 30 பேரும், கந்தசாமி என்ற பெயரில் 28 பேரும், சுப்பிரமணியம் என்ற பெயரில் 27 பேரும், சின்னசாமி என்ற பெயரில் 26 பேரும், முத்துசாமி என்ற பெயரில் 14 பேரும் போட்டியிட்டனர்.

    இதில் பழனிச்சாமி என்ற பெயரில் போட்டியிட்டவர்களில் 44 பேரும், ராமசாமி என்ற பெயரில் போட்டியிட்டவர்களில் 19 பேரும் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. இத்தொகுதியில் போட்டியிட்ட 1033 பேரில் 4 பேர் மட்டுமே 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றனர். 4 சுயேச்சைகளுக்கு மட்டுமே 100 ஓட்டுக்கு மேல் கிடைத்தது. ஆயிரத்து 30 சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து வாங்கிய ஓட்டு 7 ஆயிரத்து 480 தான்.

    ஒரு ஓட்டு கூட வாங்காதவர்கள் 88 பேர். ஒரு ஓட்டு மட்டும் வாங்கியவர்கள் 97 பேர், இரண்டு ஓட்டு வாங்கியவர்கள் 157 பேர், மூன்று ஓட்டு வாங்கியவர்கள் 108 பேர், நான்கு ஓட்டு வாங்கியவர்கள் 84 பேர், ஐந்து ஓட்டு வாங்கியவர்கள் 60 பேர். மீதி அனைவரும் 10 ஓட்டுக்கு மேல் வாங்கியவர்கள்.

    மேலும் இத்தொகுதியில் அப்போது 28 பெண்களும் போட்டியிட்டனர். இதில் 16 பேருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் இந்திய அளவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    மொடக்குறிச்சி தொகுதி

    விவசாயம் மட்டுமே நம்பி உள்ள இந்த தொகுதியில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்காலிக கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல் கொட்டும் போது மழை காலங்களில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர். இதே போல் கீழ்பவானி பாசன பகுதியில் மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 

    கோரிக்கைகள்

    மஞ்சள் மார்க்கெட் ஈரோடு பகுதியில்தான் உள்ளது. இதனால் கொடுமுடி பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரம் மஞ்சள் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் பல விவசாய கூட்டுறவு சங்கங்கள் இருந்தாலும், மஞ்சள் இருப்பு வைக்கும் கிடங்கு வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே இந்த பகுதியில் மஞ்சள் கிடங்கு வசதி ஏற்படுத்தி மஞ்சள் மூலம் மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மஞ்சள் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    காலிங்கராயன் வாய்க்காலில் சாயநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபோல் இந்த தொகுதியில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மொடக்குறிச்சி பகுதியில் போதுமான நீர்த்தேக்க தொட்டி இல்லாததால் காவிரி குடிநீர் தேக்கி வைக்க முடியவில்லை. எனவே நிரந்தரமாக காவிரி குடிநீர் கிடைக்க நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மொடக்குறிச்சி தொகுதி

    மொடக்குறிச்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தும் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது இந்த தொகுதி மக்களின் குறையாக உள்ளது. மேலும் இந்த பகுதி மாணவர்களின் கல்வி தரம் உயர அரசு பொறியியல் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர். நெசவாளர்கள் அதிகம் உள்ள சிவகிரி, நஞ்சை ஊத்துக்குளி, தாண்டம்பாளையம், அவல்பூந்துறை ஆகிய பகுதியில் மத்திய அரசால் அமைத்த கிளஸ்டர் செயல்படுவதில்லை.

    கொக்கராயன்பேட்டை பெருந்துறை இணைப்பு வெளிச்சுற்று சாலையில் சில இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் 46 புதூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    மொடக்குறிச்சி தொகுதி

    1967- கே.ஆர். நல்லசிவம் (சங்கத சோசலிச கட்சி)
    1971- சின்னசாமி (தி.மு.க.)
    1977- சுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.)
    1980- பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
    1984- பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
    1989- கணேசமூர்த்தி (அ.தி.மு.க.)
    1991- கவி நிலவு தர்மராசு (அ.தி.மு.க.)
    1996- சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க.)
    2001- பி.சி.ராமசாமி (அ.தி.மு.க.)
    2006- பழனிசாமி (காங்கிரஸ்)
    2011- கிட்டுசாமி (அ.தி.மு.க.)
    2016- சிவசுப்பிரமணி (அ.தி.மு.க.)
    இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள கே.வி. ராமலிங்கம் மீண்டும் அதிமுக சார்பில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து கடந்த முறை தோல்வியடந்த சு.முத்துசாமி போட்டியிடுகிறார்.
    ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி ஈரோடு மேற்கு தொகுதி. ஈரோடு மாநகராட்சியின் 40-க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. கிராமங்களும், நகரங்களும் சரிபாதி அளவில் உள்ளது. தொகுதி வாக்காளர்களில் விவசாயத்தை 50 சதவீதம் பேரும், சாயம், தோல், நெசவு தொழிலை 50 சதவீதம் பேரும் சார்ந்துள்ளனர்.

    பெருந்துறை வட்டத்தில் வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், தென்முகம் வெள்ளோடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள் அடங்கியுள்ளன.

    ஈரோடு மேற்கு தொகுதி
    அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம்- திமுக வேட்பாளர் முத்துசாமி

    ஈரோடு வட்டத்தில் கரைஎல்லப்பாளையம், எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லாப்பாளையம், வில்லரசம்பட்டி, மேல்திண்டல், கீழ்திண்டல், கதிரம்பட்டி, ராயபாளையம், மேட்டுக்கடை, கூரபாளையம், தோட்டாணி, புத்தூர்புதுப்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் போன்ற கிராமங்களும் அடங்கியுள்ளன.

    ஈரோடு மேற்கு தொகுதியில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுத சாமி கோவில் உள்ளது. ஈரோடு மேற்கு தொகுதியில் அதிகளவில் கல்லூரிகள் உள்ளன. ஈரோடு மேற்கு தொகுதியில் ஈரோடு மாநகர் பகுதி, நசியனூர், சித்தோடு, சென்னிமலை போன்ற ஊர்களின் சில பகுதிகள் அடங்கி உள்ளது இந்த தொகுதியின் தனி சிறப்பாகும். 

    ஈரோடு மேற்கு தொகுதி

    ஈரோட்டின் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் இந்த தொகுதியில்தான் உள்ளது. 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் வெளிநாடுகளில் இருந்து 109 அரிய வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பிலிக்கன் பறவைகள் அதிகளவில் வருவது தனி சிறப்பாகும்.

    2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் ஈரோடு மேற்கு தொகுதி உருவானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்டது ஈரோடு மேற்கு தொகுதி ஆகும். இங்கு ஆண்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 913 பேரும், பெண்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 373 பேரும், மூன்றாம் பாலினம் 30 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 357 வாக்காளர்கள் உள்ளனர்.

    2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.வி. இராமலிங்கம் வெற்றிபெற்றார். 2011-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தற்போதைய த.மா.கா. மாநில இளைஞரணி தலைவராக உள்ள எம்.யுவராஜா, 2016-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோர் கே.வி. இராமலிங்கத்திடம் தோல்வியடைந்தனர். 

    ஈரோடு மேற்கு தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், முதலியார், வேட்டுவ கவுண்டர்கள், வன்னியர்கள், பட்டியல் வகுப்பினர், நாடார், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் கனிசமாக உள்ளனர்.

    கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்

    மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். மஞ்சள் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலைகளை உருவாக்க வேண்டும். மஞ்சள் சேமிப்புக்கு குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.

    ஈரோடு மேற்கு தொகுதி

    ழுமையாக நிறைவேற்றப்படாத நிறைவு பெறாத சுற்றுவட்ட சாலைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் போன்றவை வாக்காளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக்கப்பட வேண்டும். சாய, தோல் கழிவு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஈரோடு&சத்தி சாலையில் சித்தோடு முதல் ஈரோடு பேருந்து நிலையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

    விசைத்தறி தொழிலின் முக்கிய பிரச்னையான நூல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் போன்றவை இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    பெருந்துறை அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் வெங்கமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். அவருடைய மனைவி மணிமேகலை. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு பார்வதி (வயது 25) என்கிற மகள் இருந்தார். இவர் பி.ஏ.படித்துவிட்டு் வீட்டில் இருந்து வந்தார்.

    மேலும் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு பார்வதி வீட்டு வேலைகளை சரியாக செய்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனை மணிமேகலை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் பார்வதி மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.

    கடந்த 12-ந்தேதி இரவு வீட்டில் விஷத்தை குடித்தார். பின்னர் இதுபற்றி தனது தாயிடம் கூறினார். உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பார்வதி நேற்று மாலை இறந்தார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பெரிய கொரவம்பாளையம் என்ற பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பெரிய கொரவம்பாளையம் என்ற பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கப்பணம் இருந்தது.

    மேலும் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இது குறித்து சண்முகசுந்தரத்திடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் மசாலா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி என்றும் வசூலான பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
    அந்தியூரில் துப்புரவு பணிக்கு சென்றபோது பேரூராட்சி பேட்டரி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 தூய்மை பணியாளர்கள் காயம் அடைந்தனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஊராட்சி பச்சாபாளையம். இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி அந்தியூர் பெரியார் நகர். இங்கு துப்புரவு பணி மேற்கொள்வதற்காக 7 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 12 தூய்மை பணியாளர்கள் ஊராட்சிக்கு சொந்தமான பேட்டரி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    அந்தியூர் பெரிய ஏரிக்கடை அருகே சென்றபோது பேட்டரி வாகனம் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பச்சாபாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 53), கொல்லம்பாளையத்தை சேர்ந்த ராஜி (57), குப்பன் (60), விஜயலட்சுமி உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று காயம் அடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த 2 பேரும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மீதம் உள்ள 10 பேரும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் அருகே கடந்த மாதம் 21-ந் தேதி வாலிபர் ஒருவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ‘அவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் மகன் ஓட்டல் தொழிலாளியான அப்துல் ரசாக் (வயது 20)’ என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலையாளிைய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த விமல் (31) என்பதும், அவர்தான் அப்துல் ரசாக்கை கொன்றதும்,’ தெரியவந்தது.

    தகாத வார்த்தையால் திட்டினார்

    இதைத்தொடர்ந்து போலீசாரிடம் விமல் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:-

    நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். எந்த பகுதிக்கு செல்கிறேனோ அந்த பகுதியில் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு அங்கேயே தங்கி கொள்வேன். கொலை நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு சத்தியமங்கலம் வந்தேன்.

    சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நிற்பவர்களிடம் பணத்தை திருடி மது குடித்து அங்கேயே சுற்றித்திரிந்தேன். இதேபோல் கடந்த 20-ந் தேதி இரவு சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஒருவரிடம் ரூ.200 மற்றும் கருப்பு நிற பை ஆகியவற்றை திருடியதுடன், மது குடித்துவிட்டு அங்குள்ள வரசித்தி விநாயகர் கோவிலுக்கு வந்தேன். அங்கு கோவில் பகுதியில் படுத்துகிடந்த அப்துல் ரசாக்கிடம் திருட முற்பட்டபோது, அவர் விழித்துக்கொண்டார். உடனே அவர் என்ைன தகாத வார்த்தையால் திட்டினார்.

    இதனால் நான் வேறு இடத்துக்கு சென்று படுத்துக்கொண்டேன். மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் எழுந்து மீதம் இருந்த மதுவை குடித்தேன். என்னை தகாத வார்த்தையால் திட்டிய அப்துல் ரசாக் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை கண்டுபிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து விமலை போலீசார் கைது செய்தனர்.
    ஊஞ்சலூர் அருகே ரோட்டில் நடந்து சென்றபோது வாகனம் மோதி பேரூராட்சி பணியாளர் பலியானார்.
    ஊஞ்சலூர்:

    ஊஞ்சலூர் அருகே உள்ள தாமரைப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (45). இவர்களுடைய மகன் மணீஸ்வேல். அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் மணீஸ்வேல் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ரவி நேற்று முன்தினம் இரவு ஒத்தக்கடையில் இருந்து வீட்டுக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    தாமரைப்பாளையம் ரேஷன் கடை அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    வேலை வாங்கி தருவதாக கூறி பெருந்துறை வாலிபரிடம் ஆன் லைனில் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள கம்புளியம்பட்டி அடுத்த தாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32).

    இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து இருந்தார்.

    இதையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கோவிந்தராஜிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் உ.பி. மாநிலத்தில் இருந்து அரவிந்த்குமார் பேசுகிறேன். நீங்கள் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து உள்ளீர்கள். பதிவு கட்டணமாக ரூ.3250 கட்ட வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து கோவிந்தராஜ் அவரது வங்கி கணக்குக்கு ஆன்-லைன் மூலம் பணம் அனுப்பினார். தொடர்ந்து கோவிந்தராஜிடம் அடிக்கடி தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணம் அனுப்ப வேண்டும் என கூறினர். இதை நம்பி வேலைக்காக அடிக்கடி ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என மொத்தம் இதுவரை ரூ. 12 லட்சத்து 22 ஆயிரம் பணம் செலுத்தினார்.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்தவருக்கு போன் செய்தார். ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கோவிந்தராஜ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    அதில் ஆன்-லைனில் வேலை வாய்ப்புக்காக பணம் செலுத்தி உள்ளேன். ஆனால் அவர்கள் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறி உள்ளார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 14 ஆயிரத்து 939 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். 14 ஆயிரத்து 696 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 93 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    பவானி குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வந்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் காசி பாளையம் பகுதியில் இரவு 1.30 மணியளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வேனில் வந்த திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த முத்தமிழ் செல்வன் என்பவரிடம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் நெல், வாழைக்காய் வியாபாரம் செய்து வருவதாகவும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் டிராக்டர் வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் பணத்துக்கு எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் ஒப்படைத்தனர். பணத்துக்கான ஆவணத்தை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு வியாபாரி முத்தமிழ் செல்வனிடம் கூறி அனுப்பி வைத்தனர்.

    இதே போல் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் தன்ராஜ், அவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் 2 பேரும் மேட்டூரில் இருந்து பவானிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். பவானி குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வந்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    கோபிசெட்டிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பெரிய மொடச்சூர் சங்கரன் வீதியை சேர்ந்தவர் சங்கர் (46). விசைத்தறி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அதே பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது திருவிழாவுக்கு வரி போடுவது குறித்து சங்கருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (42), மோகன்ராஜ் (48), ஆகியோருக்கும் இடையே தகராறு வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் அங்கு இருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு வெளியே சென்று விட்டு சங்கர் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை முருகன், மோகன்ராஜ் ஆகியோர் வழிமறித்து முன்விரோதம் காரணமாக தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், மோகன்ராஜ் ஆகியோர், சங்கரை கடுமையாக தாக்கினர்.

    இதனால் வலி தாங்க முடியாமல் சங்கர் மயக்கம் அடைந்தார். இதைப்பார்த்த முருகன், மோகன்ராஜ் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் மயங்கி கிடந்த சங்கரை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து கோபி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகன், மோகன் ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 2பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.18 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 4 ரோடு தொப்பம் பாளையம் என்ற பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் என்பவர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவரிடம் ரூ.85 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

    இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் பணத்துக்கான ஆவணங்கள் கேட்டனர். அதற்கு சிவசங்கர் தான் வளர்த்த கோழிகளை ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்து விட்டு பணத்தை கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனாலும் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.18 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    ×