என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், முன்கள பணியாளர்கள் போலீசார் பலர் பாதிக்கப்பட்டனர்.
அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
இத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் கொரோனா தினசரி மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 906 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. ஏற்கனவே சூரம்பட்டி பெண் இன்ஸ்பெக்டர், வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர், கடம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவர், பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், முதல்நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு என 6 போலீசாருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து மற்ற போலீசாருக்கும் தொற்று பரவ தொடங்கியுள்ளது. நேற்றுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 30 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.
இவர்களில் ஒரு சிலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள போலீசாருக்கு தொற்று வேகமாக பரவி வருவதால் மற்ற போலீசார் கலக்கத்தில் உள்ளனர். தடுப்பு நடவடிக்கையாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்பகுதியில் ஈரோடு கிளை சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் கைதிகளில் ஒரு சிலருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் நேற்று மாலை மூன்று கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக கிளைசிறை முழுவதும் கிருமிநாசினி செலுத்தப்பட்டது. மற்ற கைதிகள் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மொத்தம் 10 வன சரகங்கள் உள்ளன.
இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனசரகத்தில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
தாளவாடி அடுத்த மல்லன்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் புட்டுசித்தா (60) விவசாயி. இவர் 6 மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் இவர் தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.
இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் மல்லன்குழி ஊருக்குள் புகுந்தது. பின்னர் விவசாயி புட்டுசித்தாவுக்கு சொந்தமான மாட்டு கொட்டகை தடுப்பு சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் யானைகள் உள்ளே கட்டப்பட்டு இருந்த ஒரு பசுமாட்டை குத்தி கொன்றது. அப்போது சத்தம் கேட்டு புட்டுசித்தா வெளியே வந்து பார்த்தார். அப்போது யானைகள் நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஊர் மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
பின்னர் ஊர் பொதுமக்கள் சத்தம் போட்டு பட்டாசு வெடித்து ஒரு மணி நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இது பற்றி கிராம மக்கள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானை இன்று ஊருக்குள்ளே புகுந்து மாட்டை கொன்றுள்ளது. ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தும் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இறந்த பசு மாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம், ஆசனூர் வனப்பகுதியில்இரவு காவல் பணியில் இருந்த 2 விவசாயிகள் ஒற்றை யானை தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் தாளவாடி பகுதியில் யானைகள் கிராமத்துக்குள் நுழைந்து பசுமாட்டை அடித்து கொன்ற சம்பவம் அநத பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






