என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • சிந்து அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே முத்துகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவரது மனைவி சிந்து (வயது25). இந்த நிலையில் நேற்று முன்தினம் சிந்து தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த செயின், தோடு உள்பட 6¾ பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிந்து அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து 3 நாட்களாக இரவு முழுவதும் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • இப்பகுதியில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததாலே மின்விநியோகம் தடை படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொம்மிடி மின் நிலையத்திற்கு உட்பட்ட வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து 3 நாட்களாக இரவு முழுவதும் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆங்காங்கே மின்தடைகள் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறுதூறல் விழுந்தாலே வேப்பிலைபட்டி கிராமம் முழுவதும் இரவு நேரங்களில் மின் விநியோகம் இல்லாமல் மக்கள் தூக்கம் இன்றி அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததாலே மின்விநியோகம் தடைபடுகிறது.

    பொம்மிடி மின் நிலையத்திற்கு உட்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொண்டால் மின் விநியோகம் துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் மின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமகொண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள சங்கடகர கணபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • கணபதி பூஜை, யாக பூஜை, கோ பூஜையைத் தொடர்ந்து, சங்கடகர கணபதிக்கு 12 வகை அபிஷேக பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்ட பென்னாகரம் அருகே ஏரியூரை அடுத்துள்ள ராமகொண்டஅள்ளியில் எழுந்தருளியுள்ள சங்கடகர கணபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடகர சதுர்த்தி அன்று அபிஷேக பூஜைகளும் ஆராதனையும் நடைபெறும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று ஆண்டிற்கு ஒருமுறை வரும், மகா சங்கடகர சதுர்த்தி தினம் என்பதால், இந்த கோவிலில் மகா சங்கடகர சதுர்த்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கணபதி பூஜை, யாக பூஜை, கோ பூஜையைத் தொடர்ந்து, சங்கடகர கணபதிக்கு 12 வகை அபிஷேக பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது.

    இந்த பூஜையில் பென்னாகரம், ஏரியூர், செல்லமுடி, ராமகொண்டஅள்ளி, சிடுவம்பட்டி, மலையனூர், கவுண்டனூர், சாமத்தால், சோளப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • மில்லில் வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் காணாமல் போயிருந்தது, இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மதியழகன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார்.
    • தனக்கு சொந்தமான மின் மோட்டார் இரும்பு கடையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்,

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியை அடுத்து எச்.புதுப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் மதியழகன் (வயது 60). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணற்றில் மின்மோட்டார் ஒன்றை வைத்து இருந்தார். அந்தமின் மோட்டார் பழுதடைந்ததால் அவற்றை கழட்டி எடுத்து அருகில் உள்ள தனது கிழங்கு அரவை மில்லில் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று திடீரென அந்த மில்லில் வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் காணாமல் போயிருந்தது, இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மதியழகன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார். மின்மோட்டார் கிடைக்கவில்லை. மோட்டார் திருடு போயிருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் ஏ,பள்ளிப்பட்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் வெங்கடேசன் (48) என்பவர் கடையில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது தனக்கு சொந்தமான மின் மோட்டார் கடையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். திருடு போன மின்மோட்டார் மதியழகனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

    • மாட்லாம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக காரிமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது.
    • காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக காரிமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்லாம்பட்டி கிராமத்தில் உள்ள புளியமரத்தடியில் சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அதேபகுதியை சேர்ந்த சண்முகம் (வயது59), செல்வம் (58), துரையரசன் (60), மனோகரன் (68) என்பது தெரியவந்தது, அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.450 பறிமுதல் செய்தனர்.

    • மன உளைச்சலுக்கு ஆளான காவ்யா வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • திருமணமாகி 7 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    பென்னாகரம் போடூர் காலனி பகுதியைச் சேர்ந்த காவ்யா (வயது 19). இவருக்கும் பாலக்கோடு அருகே எலுமிச்சனஅள்ளி பகுதியைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் விமல்குமார், மாமியார் பட்டு, கணவரின் அக்கா மஞ்சு ஆகியோர்கள் காவ்யாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது.

    இதனால் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு காவ்யா தனது தாயார் வீட்டிற்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று விமல்குமார் காவ்யாவிடம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் காவ்யாவை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 7 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
    • மழை அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்து கொண்டிருந்தது. இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

    ஓகேனக்கல்:

    காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 9 ஆயிரத்து 70 கனஅடி தண்ணீரை அந்த மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. மழை அளவு குறைந்ததால், நீர்வரத்து படிபடியாக குறைந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக பரிசல்கள் காவிரி ஆற்றில் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து வாரவிடுமுறை நாளான இன்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால், பரிசலில் சவாரி செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • பாலக்கோடு அருகே நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் , தாபாக்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
    • தரமற்ற உணவுகளை விநியோகம் செய்த ஓட்டல்கள், பேக்கரிகள் என 4 கடைகளுக்கு தலா ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பாலக்கோடு:

    மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலை, ஹைவே, பைபாஸ் சாலைகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்கள் மற்றும் உணவகங்கள், சாலை ஓரதுரித உணவகங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் சுகர்மில், மாதம்பட்டி, வெள்ளிச்சந்தை, மல்லுப்பட்டி மகேந்திரமங்கலம் மற்றும் ஜிட்டாண்டஅள்ளி பகுதிகளில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், சாலை ஓர உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வில் உணவகங்களில் உரிய சுகாதாரம் பின்பற்றப்படுகிறதா, உணவுப் பொருள்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, மூலப் பொருட்கள் உரிய காலாவதி தேதி உள்ளனவா மேலும் சட்னி, தயிர், இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய் தரமாகவும், குடிநீர் விநியோகம், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் தேயிலை தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    சுமார் 25-க்கும் மேற்பட்ட உணவகங்கள், தாபாக்கள், பேக்கரிகள் ஆய்வு செய்ததில் 2 உணவகங்களில் இருந்து பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 3 லிட்டர், சில உணவகங்களில் இருந்து செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்கள், 2 உணவகங்களில் காலாவதியான தயிர் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு மளிகை கடை மற்றும் பேக்கரியில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட வறுத்த பச்சை பட்டாணி 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    நியமன அலுவலர் அறிவுறுத்தல்படி 4 கடைக்காரர்களுக்கு தலா ஆயிரம் வீதம் 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் ஜிட்டான்டஅள்ளியில் ஒரு டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கடைக்காரருக்கு ரூ.5ஆயிரம் உடனடியாக அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • பாப்பாரப்பட்டியில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • முன்னால் சென்ற டிராக்டர் திடீரென்று பிரேக் போட்டதால் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் காயமடைந்து உயிரிழந்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பிக்கிலி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் துரைமுருகன் (வயது18). இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் துரைமுருகன் தனது உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பி.கொல்லப்பட்டிக்கு வந்தார். அங்கு அவரை வீட்டில் விட்டுவிட்டு பின்னர் அவர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது அவர் ஜோனபாறை என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற டிராக்டரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் துரைமுருகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அந்த டிராக்டர் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காய மமைடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக் கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இரவு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக அளவிலான கோ-கோ போட்டியில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • பாப்பிரெட்டிப்பட்டியில் சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடமும், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடமும், பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், சாலையை நேராக அமைக்க கோரிக்கை எழுந்ததால், 4 வழிச்சாலை மாற்றுப்பணி நடைபெற்று வருகிறது.
    • ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே கணவாய் பகுதியில் சாலை சீரமைக்கும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி ஆய்வு செய்தார்.

    தருமபுரி :

    தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே கணவாய் பகுதியில் உள்ள வளைவான சாலையால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது இந்த சாலை 4 வழிச்சாலையாக மாற்றுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் கோவிந்தசாமி எம.எல்.ஏ. சாலையை நேராக அமைத்தால் விபத்துகள் குறையும் என்று கூறினார்.

    அப்போது அந்த சாலை நேராக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே உள்ள கணவாய் பகுதியில் அமைக்கப்படும் 4 வழிச்சாலை பணியில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அந்த சாலை நேராக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை கோவிந்தசாமி எம்.எல்.ஏ, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்துக்கள் நடைபெறாத வகையில் சாலை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் ெபான்னுவேல், அங்குராஜ், கந்தசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ஒகேனக்கல் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் மீட்டனர்.
    • வீட்டில் இருந்து மாயமானவர் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால், பிணமாக மீட்கப்பட்டார்.

    பென்னாகரம்:

    பென்னாகரம் அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலத்தினை போலீசார் மீட்டனர். பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் பாசக்கல்சுனை பகுதியில் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியபடி பிணம் இருப்பது வனத்துறையினருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நபர் பென்னாகரம் அருகே போடூர் இருளர் காலனி பகுதியைச் சேர்ந்த ஊமையன் மகன் ஜடையன் (வயது 60) என்பதும், ஆடிப்பெருக்கின்போது மது அருந்த பணம் தராததால் மனைவியிடம் தகராறு செய்து வீட்டில் இருந்து மாயமானதாகவும், அவருடைய மகன்கள் தந்தையை தேடி வந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×