என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் பிரபாகரன்(வயது 27). இவர் நேற்று காலை பண்ருட்டி ராஜாஜி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், திடீரென பிரபாகரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து அவர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி துனை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஆகியோர் திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரை போலீசார் துரத்தி சென்றனர். அப்போது, அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்த அவரை போலீசார் பிடித்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

    விசாரணயில், அந்த வாலிபர் திருவதிகையை சேர்ந்த முருகன் மகன் தேவா என்கிற தேவநாதன் (26 ) என்பதும், பிரபாகரனிடம் பணத்தை வழிப்பறி செய்து தப்பி சென்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தேவாவை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆள் கடத்தல் என்று மொத்தம் 10 வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
    சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    கடலூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்ற 107 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால் கடலூரில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129-ஆக உள்ளது.

    கடலூரில் இதுவரை 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட 699 பேரும் கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்புடையவர்கள் என்றும் கடலூரில் கிராமங்கள் தோறும் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பிற மாவட்டங்கள் சென்றவர்களால் ஏற்பட்ட பாதிப்பு விவரம்:-

    கடலூர் - 129
    விழுப்புரம் - 76
    சென்னை - 63
    அரியலூர் - 42
    காஞ்சிபுரம் - 7
    பெரம்பலூர், தஞ்சாவூர் திருவாரூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு.
    வேப்பூர் அருகே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள பள்ளியில் கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.
    வேப்பூர்:

    வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பலர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்தனர். அங்கு பணி செய்த சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால் மார்க்கெட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால், அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். இவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி வேப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 195 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் நேற்று இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தடுப்பு நடவடிக்கைகள், உணவுகள், அத்தியாவசிய தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர், மேலும் தனிமைப்படுத்தபட்டுள்ளவர்களிடம் பயப்படாமல் அனைவரும், ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அப்போது அவருடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார்கள் விருத்தாசலம் கவியரசு, வேப்பூர் கமலா, தனி தாசில்தார் செல்வமணி, நில எடுப்பு தாசில்தார் ரத்னாவதி, சமூக நல தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பழனி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் திரும்பிய மேலும் 8 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை கோயம்பேட்டில் வேலைப்பார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய போலீஸ்காரர்கள் என பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகள் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பண்ருட்டி அருகே வடமாநில தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள முந்திரி தொழிற்சாலைகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் காடாம்புலியூர் தெற்கு மேல்மாம்பட்டில் உள்ள ஒரு தனியார் முந்திரி தொழிற்சாலையில் அசாம் மாநிலம் கரிவ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த சோஜேஸ்நாத்(வயது 40), பிஸ்வாஸ்நாத்(25), நரேந்திரமிஸ்நாத்(23) ஆகிய 3 பேரும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் காடாம்புலியூர் செட்டிதெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். இவர்களுடன் அதே மாநிலத்தை மேலும் 3 பேரும் தங்கியிருந்து ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

    இவ்வாறு சாப்பிடும் நேரத்தில் நரேந்திரமிஸ்நாத் அதிக அளவில் சாப்பிடுவதாக கூறி அவரை சோஜேஸ்நாத், பிஸ்வாஸ்நாத் ஆகிய இருவரும் அடிக்கடி கேலி செய்ததாக தெரிகிறது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் நரேந்திரமிஸ்நாத்தை சோஜேஸ்நாத், பிஸ்வாஸ்நாத் கேலி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரமிஸ்நாத் நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சோஜேஸ்நாத், பிஸ்வாஸ்நாத் ஆகிய இருவரின் தலையில் இரும்புக்குழாயால் சரமாரியாக தாக்கினார்.

    இதில் இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் இதுபற்றி காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சோஜேஸ்நாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பிஸ்வாஸ்நாத்துக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்ற நரேந்திரமிஸ்நாத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    கடலூரில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று காலை இந்த சிலையின் வலது கை மற்றும் தலை உச்சியில் செருப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் கழுத்தில் வாசகம் எழுதப்பட்ட அட்டை ஒன்றும் தொங்கவைத்து அவமரியாதை செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று சிலையின் மீது இருந்த செருப்பு மற்றும் வாசகம் எழுதப்பட்ட அட்டையையும் அகற்றினர்.

    இதற்கிடையே இதுகுறித்து அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு, சிலையை அவமதிப்பு செய்த நபரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு, அம்பேத்கர் சிலையை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தி, பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்தநிலையில் சிலையை அவமதித்த நபரை கண்டுபிடிக்க அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நேற்று காலை 9.30 மணி அளவில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிலையை அவமரியாதை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். 
    கடலூரில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வருகிற 3-ந் தேதி முழு ஊரடங்கை கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்து கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டம் சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 27 பேர் பாதிக்கபட்டு உள்ளனர்.

    எனவே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வருகிற 3-ந் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கபட்டு உள்ளது.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகமெங்கிலும் பரவியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்நோய் தொற்றினை தற்போது உலகளாவிய தொற்று நோயாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் இந்நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுத்திட தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்டம் முழுவதும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் முழு கடையடைப்பு மற்றும் ஊரடங்கு கடை பிடிக்கப்படும்.

    எனவே மருந்தகங்களை தவிர ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மேற்படி ஆணையை கடை பிடிக்காதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் கொள்ளை நோய்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ஊரடங்கு தடை உத்தரவால் பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு ஏற்றுமதி ஆகாததால் இளநீர் வியாபாரம் முடங்கி போய் உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையம், பூண்டி, வரிச்சிப்பாக்கம், திருவாம்பூர், சேமக்கோட்டை, அண்ணா கிராமம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளது. இங்கு காய்க்கும் இளநீர் பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் இளநீர் அனுப்பப்பட்டு வந்தது.

    தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக லாரி போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் சென்னைக்கு இளநீர் அனுப்ப முடியவில்லை. தொடர்ந்து ஊரடங்கு தடை உத்தரவு உள்ளதால் இளநீர் வியாபாரம் முடங்கி போய் உள்ளது. இந்த தொழிலை நம்பி 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்களும் வேலை இன்றி தவிக்கிறார்கள்.

    கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல் குடையுடன் வந்தால்தான் பொருட்கள் கிடைக்கும் என்று நெல்லிக்குப்பம் போலீசார் அறிவித்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் பொதுமக்கள் கூடுகின்றனர்.

    அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். இதனை சரி செய்வதற்காக நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல் பொதுமக்கள் கடைக்கு வரும்போது கட்டாயம் குடையை எடுத்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

    குடை எடுத்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். இல்லையெனில் கடை சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்தார்.

    குடையுடன் வருபவர்கள் எப்படியும் சமூக இடைவெளியை கடைபிடிப்பார்கள் என்ற நோக்கத்தில் போலீசார் இந்த முறையை கையாண்டுள்ளனர். அதன்படி நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்கள் கடைக்கு வரும்போது குடையுடன் வந்து சமூக இடைவெளியை கடை பிடித்தனர்.
    அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்ல பொதுமக்கள் அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் 3 வண்ணங்களில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி சீட்டை கொண்டு வராத வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

    இதன்படி கடலூர் நகரில் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, டவுன்ஹால், சாவடி, இம்பீரியல் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதை நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    டவுன்ஹாலில் உள்ள சோதனை சாவடி வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அனுமதி சீட்டு உள்ளதா? என்று அவர்கள் விசாரித்தனர். அனுமதி சீட்டு இல்லாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதை கண்காணித்த கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அனுமதி சீட்டு இல்லாமல் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து அவர்கள் சாவடி, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சோதனை சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதன்பிறகு பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டை கலெக்டர் பார்வையிட்டு, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    பின்னர் இது பற்றி கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்லும் பொதுமக்கள் கட்டாயம் அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். முக கவசம் அணியாமல் வெளியே செல்லும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்கள் கடைக்கு வரும் போது கூடையுடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் பொதுமக்கள் கூடுகின்றனர். இதனை சரி செய்வதற்காக நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல் பொதுமக்கள் கூடை எடுத்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். இல்லையெனில் கடை சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்தார்.

    அதன்படி நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்கள் கடைக்கு வரும் போது குடையுடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

    விருத்தாசலத்தில் கொரோனா பாதித்த பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர்கள்.

    இதையடுத்து விருத்தாசலம் நகராட்சியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்துக்குட்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதியில் வசிப்போர் வெளியே செல்லவும், வெளிநபர்கள் உள்ளே வரவும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் வீரபாண்டியன் தெருவை சேர்ந்த ஒருவரும், ஆலடி சாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் திடீரென இறந்தனர். இவர்கள் கொரோனா பாதித்த பகுதியில் வசித்ததால் நோய் தொற்று இருக்கும் என கருதி யாரும் அங்கு செல்லவில்லை.

    இது குறித்து சுகாதாரதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரமா தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர். 2 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டது. அவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னர் 2 பேர் எப்படி இறந்தனர்? என்பது பற்றிய விவரம் தெரியவரும்.

    அடுத்தடுத்து 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ×