என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக பிரமுகர் வீட்டில் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸ் சரகம் எனதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். அ.தி.மு.க. பிரமுகர் அவரது மனைவி சரளா (வயது 44). இவர் அங்குள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு சேகர் இறந்து போனார். எனவே சரளா தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல சரளா வேலைக்கு சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    நேற்று மாலை வேலை முடிந்து சரளா வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து சரளா புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் சென்று கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    கடலூர்:

    வெளி மாவட்ட, மாநிலம், நாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க கடலூர் மாவட்ட எல்லையில் 12 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமை, கொரோனா பாதித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் இருத்தல் போன்றவற்றால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கிடையில் தமிழக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருவோரை கண்காணித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளோம். அதன்படி மாவட்ட எல்லை பகுதிகளில் 12 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்து வருவோரை கண்காணித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    நாள் ஒன்றுக்கு 70, 80 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தி உள்ளோம். இதன் மூலம் 60 சதவீதம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா நோயாளிகளுக்காக மாவட்டத்தில் 4 ஆயிரத்து 185 படுக்கை வசதிகள் உள்ளது. இதை 8 ஆயிரமாக அதிகரித்து உள்ளோம்.

    45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டு வருகிறோம். தற்போது வரை 8 ஆயிரம் தடுப்பூசி இருப்பு உள்ளது. தேவைக்கேற்ப தடுப்பூசி பெறப்பட்டு பொதுமக்களுக்கு போடப்படும்.

    முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களிடம் ரூ.200 அபராதம் விதித்து உள்ளோம். அதன்படி நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 800 அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் இது வரை மொத்தம் ரூ.24 லட்சத்து 61 ஆயிரத்து 100 அபராதம் வசூலித்து உள்ளோம். ஆகவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. இதை போக்க ஆட்டோ மூலம், உள்ளூர் கேபிள் டி.வி. மூலமாகவும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

    இதையடுத்து மாவட்ட எல்லையில் 12 இடங்களில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி வழியாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்த வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து அவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பணியில் வருவாய்த்துறையினர், போலீசாரும் இணைந்து ஈடுபட்டனர்.
    கடலூரில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் தர்பூசணி, இளநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்து வருகிறது.
    கடலூர்:

    கடலூரில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சராசரியாக 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், கடலூரில் போதுமான மழை இல்லை. மாறாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    நேற்றும், காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயில் கொளுத்தியது. இந்த வெயிலுக்கு இதமாக கடலூரில் தர்பூசணி, இளநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    ஒரு கிலோ ரூ.20-க்கும், வெட்டிய சிறிய துண்டு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை அதிகம் பேர் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். தர்பூசணி காட்டுமன்னார்கோவில், சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளைகிறது.

    இருப்பினும் கடலூருக்கு மரக்காணம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் தர்பூசணி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோ ரூ.15-க்கு வாங்கி, வியாபாரிகள் ரூ.20-க்கு விற்பனை செய்கின்றனர். இருப்பினும் இது கடந்த ஆண்டை விட விலை அதிகம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர பழச்சாறு கடைகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பலி வாங்க ஆழ்துளை கிணறு ஒன்று காத்திருக்கிறது. இதை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பூதாமூர் பூந்தோட்டம் பகுதியில் பரங்கிப்பேட்டை -விருத்தாசலம் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆழ்துளை கிணறு 160 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டது.

    இதில் தண்ணீர் கிடைக்காததால், மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு முறையாக மூடாமல் அப்படியே போட்டுவிட்டு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியமாக சென்று விட்டனர்.

    சாலை ஓரத்தில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறு தற்போது உயிர் பலி வாங்க காத்திருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் இந்த ஆழ்துளை கிணற்றின் அருகில் சிறுவர்கள் பலர் ஆபத்தை அறியாமல் விளையாடுகின்றனர்.

    ஏற்கனவே திறந்தநிலை ஆழ்துளை கிணறுகளில் சிறுவர்கள் பலர் விழுந்து உயிரிழந்த துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. எனவே அதுபோன்ற விபரீத சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாக நெடுஞ்சாலை துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாட்டில் இல்லாத இந்த ஆழ்துளை கிணறை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராமநத்தத்தில் வீட்டு கதவை உடைத்து மர்ம மனிதர்கள் பணத்தை திருடி சென்றுவிட்டனர். மேலும் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
    ராமநத்தம்:

    திட்டக்குடி அடுத்த ராமநத்தம் சர்ச் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 34). 2 குழந்தைகள் உள்ளது. நாராயணன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு சென்றுவிட்டார். இதை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோ மற்றும் அலமாரிகளில் வைத்திருந்த ரூ.24 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

    இதேபோல், அதேபகுதியில் உள்ள கம்பன் தெருவை சேர்ந்த அம்பிகாபதி என்பவர் மாலத்தீவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா (34) , 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீடான சித்தூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் பீரோவை உடைத்துள்ளனர். அதில் பணம், நகை எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சகுந்தலா வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் நகை மர்ம மனிதர்கள் கையில் சிக்கவில்லை.

    இது குறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி எல்.என். புரத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் சோழராஜன் (வயது 36). தையல் மெஷின் பழுது பார்க்கும் மெக்கானிக்காக உள்ளார். சம்பவத்தன்று இரவு, அந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த சோழராஜன் வீட்டிற்குள் புகுந்து, சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

    உடன் சிறுமி கூச்சலிடவே அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். அதற்குள் சோழராஜன் தப்பி ஓடினார். இருப்பினும் கிராம மக்கள் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து, சோழராஜனை கைது செய்தார்.
    உளுந்தூர்பேட்டை அருகே நர்சு கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தி.மு.க.வை சேர்ந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது வேல்முருகன் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் பகுதியை சேர்ந்த வீரமணி மகள் நர்சான சரஸ்வதியை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அவரது உடலை கழிவறையில் வீசி சென்றுள்ளனர். இது காட்டுமிராண்டிதனமான செயல். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    அதேவேளை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய் துள்ளதை பாராட்டுகிறோம். அதேநேரம் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட நர்சு சரஸ்வதி கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றினார். அவரது தாயும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார்.

    இந்த கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து, குற்றவாளிகள் 3 பேருக்கும் அதிக பட்ச தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்க வேண்டும்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக உண்மை நிலை தெரியாமல் சிலர் சமூக வலை தளங்களில் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கட்சி தலைவர்களையும் அவதூறாக பதிவிட்டு வருகிறார்கள். இது பற்றி அறிக்கை விடுகிறவர்கள் இறந்த குடும்பத்திற்கு உதவி செய்தால் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கூறுகையில், இந்த கொலையை நாங்கள் அரசியல், சமூகம், சாதி சார்ந்து பார்க்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். சமூக வலைதளங்களில் இவ்வாறாக கருத்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து வேல்முருகன், சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சத்தை பாதிக்கப்பட்ட தந்தை வீரமணி, தாய் ஜெயகாந்தியிடம் வழங்கினர்.
    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் சுரேந்தர், வக்கீல் அணி சுந்தர், மாணவரணி அருள், இளைஞரணி செந்தில், நகர செயலாளர் கமலநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் கேரளாவில் இருந்து நல்லூர் வந்த ஒருவர், அந்தமானில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், ஆந்திராவில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், பெங்களூருவில் இருந்து கடலூர் வந்த ஒருவர், ராஜஸ்தான், சென்னை, வேலூரில் இருந்து பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி வந்த 5 பேருக்கும், சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 32 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 61 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 775 பேர் குணமடைந்து வீடு திரும்பி நிலையில், நேற்று 120 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 298 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதன் விவரம் வருமாறு:-

    அண்ணாகிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொரோனா பாதித்த 713 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 347 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 277 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் தற்போது மேலும் 8 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

    இதனால் வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒரே தெருக்களில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையிலும், வெளிநபர்கள் அந்த பகுதிக்குள் செல்வதை தடுக்கும் வகையிலும் கட்டுப்பாட்டு பகுதியில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு, போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் 10 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 8 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது அண்ணாகிராமம் அடுத்த பி.என்.பாளையம் ரெயில் நிலைய தெரு, திருப்பாதிரிப்புலியூர் மூன் சேடவ் சேம்பர் வீதி, குறிஞ்சிப்பாடி காந்தி நகர் பெரியசாமி தெரு, காட்டுமன்னார்கோவில் வளையகார தெரு, சிதம்பரம் வாகீசன் நகர் 3-வது குறுக்கு தெரு, நெய்வேலி வட்டம் 8 மெழுகுவர்த்தி தெரு, வட்டம் 13 அளவுகோல் தெரு, வட்டம் 15-ல் உள்ள 3ஜி டைப்-1 ஆகிய இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாகும். இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் 18 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
    கடலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 5-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செய்முறை தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

    அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது. இந்த செய்முறை தேர்வை 236 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 27 ஆயிரத்து 76 மாணவ- மாணவிகள் எழுதினர்.

    இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 180 மையங்களில் செய்முறை தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் செய்முறை தேர்வு மைய வளாகம், தேர்வு நடைபெற உள்ள மையத்தின் மேஜை, ஜன்னல் மற்றும் ஆய்வக அறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளும் முன்கூட்டியே கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நேற்று காலை செய்முறை தேர்வுகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகள் முக கவசம் அணிந்தபடி பள்ளிக்கு வரத்தொடங்கினர். அவர்களை பள்ளியின் நுழைவுவாயில் அருகிலேயே நிறுத்தி ஆசிரியர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தனர். அதன் பிறகு முக கவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து மாணவர்களுக்கு சானிடைசர் திரவம், சோப்பு கொடுத்து அதை பயன்படுத்தி கைகளை கழுவிய பிறகே செய்முறை தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

    இந்த செய்முறை தேர்வானது ஒவ்வொரு குழுவிலும் 25 மாணவர்கள் வீதம் 3 குழுக்களாக மாணவ- மாணவிகளை பிரித்து நடத்தப்பட்டது. அதாவது காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் என 3 குழுக்களாக செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.

    இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியியல், கணினி அறிவியல், புவியியல், கணக்கு பதிவியலும் தணிக்கையியலும் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வை மாணவ- மாணவிகள் முக கவசம், கையுறை அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் செய்தனர்.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த செய்முறை தேர்வு வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், செய்முறை தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியலை வருகிற 24-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு செய்முறை தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் வருகிற 28-ந் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, செய்முறை தேர்வில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு, பின்னர் மாற்று தேதி அறிவிக்கப்பட்டு செய்முறை தேர்வு நடத்தப்படும் என்றார்.

    இதேபோல் விருத்தாசலம் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த தேர்வை விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது பள்ளி துணை ஆய்வாளர் தெய்வசிகாமணி, தலைமை ஆசிரியர் செல்வகுமாரி, உடனிருந்தனர்.
    விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
    விருத்தாசலம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்டம் தோறும் முதன்மை செயலர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு கண்காணிப்புஅதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த டாக்டர்களிடம், மருத்துவமனையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

    இது வரை எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்று தற்போது எல்லா மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பொதுமக்கள் அனைவரும் எப்போதும் முககவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்லக்கூடாது. ஒரு சிலர் முககவசம் இல்லாமல் செல்கின்றனர்.

    அவ்வாறு யாரும் செல்லக்கூடாது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை எடுத்துகொள்ளக்கூடாது. சிகிச்சைக்கு தாமதிக்கும் போது நுரையீரலை நோய் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    அதனால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் விருத்தாசலம் கடைவீதி பாலக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் நடந்து சென்றவர்களிடம், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும் அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சில் ஏறிய ககன்தீப்சிங் பேடி, பஸ்சில் முக கவசம் அணியாமல் வந்த பயணிகளிடம் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது கலெக்ர் சந்திரசேகர் சாகமூரி, விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார், டாக்டர்கள் எழில், குலோத்துங்கன், சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    கடலூர் அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் முதல் கட்ட பரவலில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்தது. இதை தடுக்க ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய படுக்கை வசதிகள் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டன.

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், இங்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதை நோயாளிகளுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், இங்கு ரூ.18 லட்சம் செலவில் 6 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன் தொட்டி பொருத்தப்பட்டது. இதில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமின்றி, மகப்பேறு போன்ற முக்கிய சிகிச்சைகள் அளிப்பதற்கும் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

    தற்போது கொரோனா 2-வது அலை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆக்சிஜன் 5 அல்லது 6 நாட்களுக்கு போதுமானதாக உள்ளதாகவும், தேவைப்படும் போது ஆக்சிஜன் நிரப்பப்பட்டு நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா ஆகியோர் தெரிவித்தனர்.

    இது பற்றி கண்காணிப்பாளர் சாய்லீலா கூறுகையில், இந்த மருத்துவமனையில் 91 ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நாள் ஒன்றுக்கு 140 சிலிண்டர்கள் வரை நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வசதி உள்ளது. திரவ நிலையில் உள்ள மருத்துவ ஆக்சிஜன் வசதி இங்கு தான் முதன் முதலில் பொருத்தப்பட்டு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தற்போதைய நிலையில் தயாராக உள்ளது என்றார்.
    ×