என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோகுல் கொலை வழக்கில், ரவுடி கவுதமுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரத்னபுரி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது28). ரவுடியான இவர் மீது கோவை நகரில், 15-க்கும் மேற்பட்ட அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கோவை கோர்ட்டு அருகே நடந்த கோகுல் கொலை வழக்கிலும், ரவுடி கவுதமுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து போலீசார் ரவுடி கவுதமை தேடி வந்தனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கவுதம் சென்னையில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    பின்னர் அவர் புழல் ஜெயிலில் இருந்து கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில் ரவுடி கவுதமிடம் விசாரணை நடத்த வேண்டி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ரத்னபுரி போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஜே.எம்.3 கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ரவுடி கவுதமை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். இதையடுத்து போலீசார் ரவுடி கவுதமை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் 4 மாவட்ட போலீசாருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமை தாங்கினார்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் இன்று ஆலோசனை நடத்தினார்.

    குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது. வழக்குகள் சம்பந்தமான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்வது. ரவுடிகள் கண்காணிப்பை தீவிரப் படுத்துவது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

    பிரதமர் மோடி நாளை மறுநாள் முதுமலைக்கு வருகிறார். இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், என்னென்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ஆலோசித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கோவை, திருப்பூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராக பணிபுரிந்து வரும் போலீசாரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை காக்க வைக்க கூடாது. அவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வந்ததும், என்ன பிரச்சினை என கேட்டு அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். குறைகளை கேட்டு உடனே அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் போலீஸ் நிலையங்களுக்கு வரும் மக்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

    பின்னர் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளராக பணியாற்றும் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

    • திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    கோவை,

    கோவை பட்டணம் அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது23).

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டணம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் யோகேஸ்வரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரிடம் பேசுவதையும் தவிர்க்குமாறு கூறியதாக தெரிகிறது.

    இருப்பினும் காதல்ஜோடியினர் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் தங்களை சேர விடமாட்டார்கள் என நினைத்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று காதல் ஜோடியினர் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரியவரவே பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர்களான பாலாஜி, யோகேஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    மனுவில், நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மிரட்டலும் விடுக்கின்றனர். எங்களது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    • வினோத்குமாரிடமிருந்து லிப்ட் கேட்பது போல நடித்து ரூ.200 பணத்தை பறித்து சென்றார்.
    • போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை,

    கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

    மோட்டார் சைக்கிள் போத்தனூர் ராமசாமி வீதி வழியாக சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் லிப்ட் கேட்டார்.

    இதனை பார்த்த வினோத்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்து சென்றார்.

    இது குறித்து வினோத்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிப்ட் கேட்பது போல நடித்து பணத்தை பறித்து சென்ற கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த ஆறுபடையப்பன் (18) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக வேன் மோதி உயிரிழந்தார்.
    • முகமது அஷிப் என்பவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.

    கோவை,

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஜெகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் இவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரது நண்பர் ஜெகநாதனுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    மேல் சிகிச்சைக்காக ஜெகநாதனை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோமங்களம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் முருகன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல திருப்பூர் காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது அஷிப் (22). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் அன்னூரில் இருந்து அவினாசி சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வெளிநாடுகளில் இருந்த கோவைக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் விமானத்தில் வந்த கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து அவரை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்காக மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்த கோவைக்கு வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் தொற்று அதிமுள்ள பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 157 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    • இந்த ஆண்டு 668 கோவில்களுக்கு திருப்பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்.
    • ரூ.17 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசியதாவது:-

    கிணத்துக்கடவு பேரூராட்சியில் பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் திருப்பணி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியோடு நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி, கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால், உபயதாரருடைய பணி அனைத்தும் ஓரளவுக்கு முடிந்துவிட்டது. எனவே இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் திருப்பணியை மீண்டும் தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    அதேபோல, மாசாணியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 2010 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் நேதி நடைபெற்றது. இப்போது 14 ஆண்டுகளாகிவிட்டன. அந்த மாசாணியம்மன் கோவில் திருப்பணிக்கும் உரிய கும்பாபிஷேகப் பணியை தொடங்கி சிறப்பாக நடத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது:-

    வேலாயுதசுவாமி திருக்கோவில் என்பது உபயதாரர்கள் மற்றும் ஆணையர் பொது நல நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உபயதாரர்கள் நிதியில் மேற்கொள்ளப்படுகிற பணிகள் 80 சதவீதம் அளவிற்கு நிறைவுற்றிருக்கி றது. அதேபோல, சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி தொடங்கப்பட்டு, பணிகள் எவ்வளவு முடிவுறுகிறதோ, அதற்கேற்றாற் போல் ஆணையர் பொதுநல நிதியில் வழங்கப்பட்ட அந்தத்தொகைக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகின்றது. இன்னும் போர்க்கால அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுத்து, அந்த சுற்றுச்சுவர் பணியை வேகப்படுத்துவோம்.

    ஆகம விதிப்படி 12 ஆண்டுகளில் எந்தெந்த கோவில்களில் எல்லாம் திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டுமோ, அவற்றையெல்லாம் கணக்கெடுத்து, இந்த ஆண்டு 668 கோவில்களுக்கு திருப்பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். எனவே மாசாணியம்மன் கோவிலுக்கு மண்டலக் குழு, தொல்லியல் குழு, அதேபோல், மாநிலக் குழு ஆகிய மூன்றும் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.17 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்ததை ஒருவர் சமூக வலைதளத்தில் பரப்பினார்.
    • போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் புதிய பஸ் நிலையம் முன்பு டூரிஸ்ட் வேன் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

    அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்தது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பினார். இது சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த சூலூர் போலீசார் புதிய பஸ்நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

    பின்னர் ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 வேன்களும் ஒரே நபருக்கு சொந்தமானது என தெரியவந்தது. டூரிஸ்ட் வாகனங்களை வைத்துக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு கான்டிராக்ட் முறையில் இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர் விசாரணையில் அவரிடம் உள்ள வாகனங்களுக்கு ஆர்.சி.புத்தகம் மட்டுமே இருப்பதாகவும், குறிப்பிட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிந்துரை செய்த சூலூர் போலீசார் மேல்நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வேறு யாராவது ஒரே பதிவெண்ணில் பல வாகனங்களை இயக்குகிறார்களா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.
    • திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளது.

    கோவை:

    கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

    கண்காட்சியின் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்கிறார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிடுகிறார். இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.

    திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளது.

    இந்த கண்காட்சி தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை காண அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் வந்து கண்காட்சியை பார்வையிட்டு, திராவிட இயக்கத்தின் வரலாறு, மு.க.ஸ்டாலின் சந்தித்த போராட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்கள்.

    கோவை:

    கோவை-சென்னை இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையை நாளை (8-ந் தேதி) மாலை பிரதமர் மோடி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.

    இதற்கிடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதன்கிழமையை தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரெயில் இரவு 10 மணிக்கு கோவை ரெயில் நிலையத்திற்கு வருகிறது.

    பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரெயில் (ரெயில் எண்:20644) புறப்படுகிறது.

    இந்த ரெயில் 6.35 மணிக்கு திருப்பூர், 7.12 மணிக்கு ஈரோடு, 7.58-க்கு சேலம், 9.35-க்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று, பின்னர் முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல்-கோவை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) மதியம் 2.25 மணிக்கு புறப்படுகிறது. 4.40 மணிக்கு ஜோலார்பேட்டை, 5.48 மணிக்கு சேலத்துக்கும், 6.32க்கு ஈரோடு, 6.13 மணிக்கு திருப்பூர் வந்து, இரவு 8.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

    இந்த வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்கள்.

    வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரம் அறிவித்ததை அடுத்து இன்று முதல் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இந்த ரெயிலில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இன்று காலை முதலே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கோவை-சென்னை இடையே நாளை முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல் நிலை இருக்கைகளும் உள்ளன.

    முதல் நிலை இருக்கைக்கு ரூ.2,310-ம், இரண்டாம் நிலை இருக்கைக்கு ரூ.1215 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரெயில் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.

    தற்போது இந்த ரெயிலில் பயணிப்பதற்கான முன்பதிவுகள் தொடங்கி உள்ளது. பயணிக்க விரும்புவோர் இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

    புதன்கிழமையை தவிர வாரத்தில் 6 நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படும். இந்த ரெயிலின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கோவையிலேயே நடக்கும். பயணிகளின் வரவேற்பை பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் 2 கட்டமாக நடந்தது. கடந்த 30-ந் தேதி காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.20 மணிக்கு கோவைக்கு வந்தது.

    முதல் சோதனை ஓட்டத்தின்போது சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் வந்தே பாரத் ரெயில் கோவை வந்தது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது கட்டாக சோதனை ஓட்டம் நடந்தது. காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கோவைக்கு வந்தது. 2 கட்டமாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களும் வெற்றியடைந்தது.

    • மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் எப்போதுமே மருதமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிக மாக காணப்படும். குறிப்பாக விஷேச நாட்களில் அதிகளவிலான கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் மருதமலை முருகன் கோவிலில் மின்தூக்கி(லிப்ட்) அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் மற்றும் ரூ.3.51 கோடியில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் உள்ள தார்சாலையை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    பூமிபூஜையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். கோவையில் நடந்த விழாவில், கலெக்டர் கிரந்திகுமார், இந்து சமயஅறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி, துணை மேயர் வெற்றிச் செல்வன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அதை தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    இதில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 12ந் தேதிக்குள் 5 மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு.
    • கோவையில் 250 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை லட்சுமிமில் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டம். மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 12ந் தேதிக்குள் 5 மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆய்வு தொடங்கி விட்டது. இன்று கோவையில் உள்ள கூர்நோக்கு இலங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வின் போது கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்துள்ளது.

    கோவையில் எந்த புகாரும் இல்லை. கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நேஷனல் கமிஷன் பாராட்டுக்கள் தெரிவிக்கிறது.

    இதுவரை 14 இடத்தில் ஆய்வு செய்து முடித்துள்ளோம். அடுத்ததாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்களையும் ஆப் மூலமாக கண்காணித்து வருகிறோம்.

    கோவையைப் பொறுத்தவரை கூர் நோக்கு இல்லம் சிறப்பாக உள்ளது. கோவை மாவட்ட போலீஸ் துறை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவையில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. இந்த தகவல் வந்ததும் அதிகாரிகள் திருமணங்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை கோவையில் 250 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் விரைவில் ஒரு தனிக்குழு அமைக்கப்படும். அந்த குழுவினரிடம் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவித்து கொள்ளலாம்.

    நீட் தொடர்பாக ஒரு மாணவி ரெயில் முன் பாய்ந்து பலியானதாக செய்தி வந்தது. ஆணையத்தின் சார்பில் அந்த மாணவிக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளத்தில் நீட் குறித்து அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

    தமிழக அரசு தேசிய குழந்தைகள் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். சில இடங்களில் மதமாற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்கள் அதிகம் வருகிறது. ஆனால் கோவையில் அதுபோன்று ஒரு புகாரும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கோவை வடக்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×