என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய அதிமுக நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சிவசங்கரி (வயது 23). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரண்ராஜ்(6) என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். சிவசங்கரி, தனது மகனுடன் அகரம் கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார். இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிவசங்கரியின் உறவினரான ஆண்டிமடம் அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் (65) என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு அப்பகுதியில் உள்ளது. அங்கு முந்திரி கொட்டைகளை பறிக்கும் பணிக்கு சிவசங்கரி சென்று வந்தார்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் முந்திரி தோப்பில் கொட்டைகளை பறித்து கொண்டிருந்த போது அங்கு வந்த செல்வராஜ், சிவசங்கரியிடம் நைசாக பேச்சுகொடுத்ததுடன் அவரை அங்குள்ள மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிவசங்கரி, நடந்த சம்பவம் பற்றி பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சிவசங்கரி கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டதுடன், அடிக்கடி மயக்கமும் அடைந்து வந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது, சிவசங்கரி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், இது பற்றி கேட்ட போது சிவசங்கரி நடந்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சிவசங்கரியின் தாய் பவானி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், செல்வராஜ் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் செல்வராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அ.தி.மு.க. நிர்வாகி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
    அரியலூர்:

    மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள செய்ய பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in-லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளத் துறை துணை-இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பதாரர் மீன்வளத்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அரியலூர் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், அறை எண் 234, 2-வது மேல்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அரியலூர்- 621704. என்கிற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


    இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), டி.ஜி.வினய் (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    கொள்ளிடம் ஆற்றில் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் இரண்டாவது கட்டமாக மீண்டும் கடலில் கலப்பது விவசாயிகளிடையே மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    மேட்டூரில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்படும்போது வெள்ள பாதிப்பை தடுக்க திருச்சி முக்கொம்பு அணை மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். அந்த தண்ணீர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அணைக்கரை கீழணையை அடைந்ததும், வீணாக கடலுக்கு திறந்து விடப்படும்.

    இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவமழை கொட்டி தீர்த்ததால் கடந்த 10-ந்தேதி கீழணைக்கு முதற்கட்டமாக நீர் வர தொடங்கியது. அதில் கீழணை 8 அடிகள் எட்டிய நிலையில் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2120 கன அடி தண்ணீரும் , மீதமிருந்த உபரி நீரை கொள்ளிடம் வழியாக கடலுக்கு 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

    பின்னர் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்ததால் கடந்த 15-ந்தேதி கீழணையில் இருந்து கடலுக்கு திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டது. தற்போது கர்நாடக நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை அதிகரித்ததால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. இதனால் காவிரியில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    திருச்சி முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால், பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று பகலில் அணைக்கரை கீழணையை சென்றடைந்தது.

    வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையில் 7744 கன அடி தண்ணீர் வட வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. 2169 கன அடி தண்ணீர் வடக்கு ராஜன் பாசன வாய்க்காலிலும், 608 கன அடி தண்ணீர் தெற்கு ராஜன் வாய்க்காலிலும், 576 கன அடி தண்ணீர் குமிக்கி மண்ணாற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் இரண்டாவது கட்டமாக மீண்டும் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே இழப்பீட்டு தொகை வழங்காமல் வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே சாலையின் இருபுறமும் பொதுமக்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அரசு சார்பில் இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் வீடுகளை இடிக்க நேற்று காலை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை தடுத்துள்ளனர். இதில் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கையில் மண்எண்ணெய் கேன் மற்றும் தங்கள் குழந்தைகளுடன் வந்து அதிகாரிகளை கண்டித்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியவளையம் பிரிவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், முழு தொகை வழங்கப்பட்ட வீடுகள் மட்டுமே தற்போது இடிக்கப்படும். மற்ற வீடுகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய தீர்வு வழங்கப்பட்ட பின்னர் இடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

    இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டி.ஜி.வினயிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்களுக்கு கட்டிடத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், மாற்று இடத்தையும் தந்தால் மட்டுமே நாங்கள் காலிசெய்ய அனுமதிப்போம். மீறி வீடுகளை இடித்தால் தங்களது குழந்தைகளுடன் சாலையில் தீக்குளிப்போம் என்றனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்-மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து சமய நிறுவனங்களில், குடியிருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை சட்டப் பிரிவு 34-ன் படி பல தலைமுறைகளாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கோவில் சொத்துகளில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், சிறு வணிகம் செய்வோருக்கும் அந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து பயனாளிகளிடம் இருந்து கிரைய தொகையை தவணை முறையில் பெற்றுக்கொண்டு இடங்களை சொந்தமாக்கித் தர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்பவருக்கும் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒன்றிய அமைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் அம்பிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் இருந்த துணை தாசில்தார் பாஸ்கரிடம் மனு அளித்தனர்.

    இந்த போராட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஜெயங்கொண்டம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அரியலூரில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.
    அரியலூர்:

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1க்கான ஆசிரியர் தகுதித்தேர்வின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மற்றும் 28, 29-ந் தேதிகள் என 3 நாட்கள் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு நிலை-1க்கான இணையவழி ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், மனை அறிவியல், இந்திய காலாசாரம், இயற்பியல், வேதியியல், கணிதவியல், வணிகவியல், புவியியல், தாவரவியல், உயிரியல், விலங்கியல், அரசியல் அமைப்பு, வரலாறு, பொருளியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 போன்ற பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் நடை பெறும்.

    அரியலூர் மாவட்டத்தில் இத்தேர்விற்கு 400 தேர்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர். இத்தேர்வு தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு, பஸ் வசதிகள், மின்சார வசதிகள், கணினி வசதிகள், இணையதள வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண் 04329-220909 மற்றும் செல்போன் எண் 8248597781 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    அரியலூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசை கண்டித்து கோர்ட்டில் பெயிண்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). பெயிண்டரான இவர் இடப்பிரச்சனை காரணமாக அரியலூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஆஜராவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு சென்றார்.

    அரியலூர் பேருந்து நிலையம் அருகே செல்லும் போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அசோக்குமாரை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாகவும், தற்போது மது அருந்தவில்லை எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அரியலூர் கோர்ட்டுக்கு சென்ற அவர், கோர்ட்டு வளாகத்தில் திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் வக்கீல்கள், அசோக்குமார் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மது அருந்தாத தன்னை மது அருந்தியதாக கூறி போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    எனவே போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அரியலூர் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஜெயங்கொண்டம் அரிமா சங்கம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி வரவேற்றார்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்தின் பயன்கள் குறித்து வில்லுப்பாட்டு, கோலாட்டம், ஒயிலாட்டம், பேச்சுப்போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சியின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. சிறப்பு விருந்தினராக கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மேம்பாட்டு குழு தலைவர் கோமகன், ஜெயங்கொண்டம் அரிமா சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாவித்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா? என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினயுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், ஒட்டக்கோவில் மற்றும் ராயபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்கம் உள்ளதா? என அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினயுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அரசு கொறடா கூறியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் சராசரியாக 16 ஆயிரம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மக்காச்சோளத்தில் ராணுவப் படைப்புழு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் தடுக்க படைப்புழுக்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 653 எக்டர் பரப்பளவிற்கு மக்காச் சோளத்தில் ராணுவ படைப்புழுவின் தாக்குதலினால் பாதிப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக 16 ஆயிரத்து 472 விவசாயிகளுக்கு நிவாரணமாக இதுவரை ரூ.8 கோடியே 54 லட்சம் தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. இப்புழுவின் தாக்குதல் நடப்பாண்டிலும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் மையம் மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது இணை இயக்குனர் (வேளாண்மை) கிரு‌‌ஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் (வேளாண்மை) பழனிசாமி மற்றும் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் உள்பட விவசாயிகள் பலார் உடனிருந்தனர்.
    அரியலூர் அருகே இன்று காலை பள்ளி பஸ்-லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் அரியலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த  மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளி பஸ்சில் பெரம்பலூருக்கு செல்வது வழக்கம். அதுபோல் இன்று காலை அரியலூர் பகுதியை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் பெரம்பலூரை நோக்கி சென்றது.

    அரியலூர்-பெரம்பலூர் இடையே செந்துறை புற வழிச்சாலை பகுதியில் செல்லும் போது, பஸ்சின் கிளீனர் , ஊதுபத்திகொளுத்தி டிரைவர் அருகே உள்ள பகுதியில் வைக்க முயன்றார். அதனை டிரைவர் பார்த்தவாறு பஸ்சை ஓட்டியதில், திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் மோதியது.

    இதில் பஸ்சின் முன்பகுதியில் இருந்த மாணவர்களான அரியலூர் அம்மாக்குளத்தை சேர்ந்த இஸ்ரோ(வயது 14), மாலதி (11), அய்யப்பன்(11),கீழப்பளூரை சேர்ந்த நித்யா(17) உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பள்ளி பஸ் டிரைவர் மற்றும் கிளீனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை விமர்சித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மனோகரன், நகர தலைவர் ஜாக்சன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் விஜய்ஆண்டனி, மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    இதையடுத்து ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாலாஜாநகரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாலாஜாநகரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி வரவேற்றார். கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சரால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பாக இ-பொது சேவை மையங்களின் செயல்பாடு பற்றிய புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

    மேலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அரசு தலைமை கொறடா, கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன் (செய்தி), எழிலரசன் (விளம்பரம்), அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    ×