search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஜெயங்கொண்டம் அருகே மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய அதிமுக நிர்வாகி

    அரியலூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய அதிமுக நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சிவசங்கரி (வயது 23). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரண்ராஜ்(6) என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். சிவசங்கரி, தனது மகனுடன் அகரம் கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார். இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிவசங்கரியின் உறவினரான ஆண்டிமடம் அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் (65) என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு அப்பகுதியில் உள்ளது. அங்கு முந்திரி கொட்டைகளை பறிக்கும் பணிக்கு சிவசங்கரி சென்று வந்தார்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் முந்திரி தோப்பில் கொட்டைகளை பறித்து கொண்டிருந்த போது அங்கு வந்த செல்வராஜ், சிவசங்கரியிடம் நைசாக பேச்சுகொடுத்ததுடன் அவரை அங்குள்ள மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிவசங்கரி, நடந்த சம்பவம் பற்றி பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சிவசங்கரி கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டதுடன், அடிக்கடி மயக்கமும் அடைந்து வந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது, சிவசங்கரி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், இது பற்றி கேட்ட போது சிவசங்கரி நடந்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சிவசங்கரியின் தாய் பவானி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், செல்வராஜ் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் செல்வராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அ.தி.மு.க. நிர்வாகி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×