என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • துணை முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்னதாக கட்சி குறித்து தேர்தல் கமிஷனுக்கு தகவல்
    • யாருக்கும் கூட்டத்தை கூட்ட அதிகாரிம் கிடையாது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து உள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களுடன் வெளியேறியுள்ளார்.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு என்ற சண்டை தற்போது நடைபெற்று வருகிறது.

    நேற்று டெல்லியில் சரத்குமார் தலைமையில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது 82 வயது ஆனாலும் 93 வயதானாலும் தான் உத்வேகத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே அஜித் பவார், பதவியேற்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னதாகவே தேசிய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி குறித்து கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய சரத் பவார், இந்திய தேர்தல் ஆணையம் தங்களுக்கு தகவல் தெரிவிக்க தவறிவிட்டது என விமர்சனம் செய்துள்ளார். இதனால் தேர்தல் கமிஷன் சரத்பவாருக்கு தகவல் தெரிவிக்கும் என தெரிகிறது.

    அதேவேளையில் அஜித் பவார், சட்டப்பூர்வமாக இந்த செயற்குழு கூட்டியது சரியல்ல எனது விமர்சனம் செய்துள்ளார். கட்சி மற்றும் கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் கமிஷனில் விவாதம் உள்ளபோது, அதன் பிரத்யேக வரம்பிற்குள் யாருக்கும் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தார்.

    அஜித் பவார் தலைமையிலான கூட்டணி தேசிவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் குறித்து தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில 40 கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை எம்.எல்.ஏ.-க்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

    தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்னர். மூன்றில் இரண்டு பகுதியான 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அஜித் பவாருக்கு தேவை. இதுவரை அஜித் பவாருக்கு 32 எம்.எல்.ஏ.க்களும், சரத் பவாருக்கு 14 எம்.எல்.ஏ.-க்களும் ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.

    • இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக  குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும், பள்ளியில் மாணவிகள் மற்றும் மாணவிகளுக்கான கழிவறைகளுக்கு இடையே கேமரா பொருத்தப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளிக்குள் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிழிந்த சட்டையுடன் பள்ளி முதல்வர் படிக்கட்டில் ஏறுவதும், அவரை சிலர் துரத்துவதும் பதிவாகி உள்ளது. ஒரு நபர் முதல்வரை பின்னால் வந்து வேகமாக தாக்குகிறார். மற்றொரு நபர் அவரை தடுக்கிறார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று அந்த கும்பலை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சாவந்த் கூறியதாவது:-

    ஒரு சில பெற்றோர்கள், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பள்ளி முதல்வரை தாக்கி அவரது ஆடைகளைக் கிழித்துள்ளனர். மேலும், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட கேமராவானது, கழிவறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தினமும் காலையில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை பாடலை பாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த நபர்கள் கூறினர். ஆனால் "ஓ லார்ட்' என்று தொடங்கும் பொதுவான பிரார்த்தனை பாடல் இது. இது பைபிளில் உள்ள ஒரு வசனம் என்று பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் ஜெபத்தில் மதமாற்றம் குறித்தோ அல்லது பைபிளில் இருந்து எந்த வாசகமோ குறிப்பிடப்படவில்லை.

    பெற்றோர்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை. பள்ளி முதல்வரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பள்ளி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பள்ளி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்
    • மும்பையின் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்யும்

    இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடலோர மாநிலமான கோவாவிற்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு அபாய எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதன்படி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வலுவிழந்த மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் அருகில் மனிதர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (State Disaster Management Authority), வட கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் தலா ஒன்று என இரண்டு வெவ்வேறு உதவி எண்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.

    வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் அரபிக்கடலில் இருந்து மழைமேகங்கள் நெருங்கி வருவதாகவும், இதனால் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். மேலும், மழை பொழிவின்போது, பெரும்பாலும் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    இவ்வாறு அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

    கோவா நிலை இவ்வாறிருக்க, மும்பை நகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், 'ஆரஞ்சு' எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது.

    மும்பையில் நேற்று ஒரே இரவில் மிதமான அளவு முதல் கனமழை பெய்தது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில், "இன்று அதிக கனமழை பெய்யும் என்பதால் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடப்படுகிறது. மும்பையின் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும்," என்றும் தெரிவித்துள்ளது.

    நள்ளிரவுக்கு பிறகு மழையின் தீவிரம் அதிகரித்து தாதர், மாஹிம், கர், மாடுங்கா மற்றும் குர்லா போன்ற பகுதிகளில், கடந்த 12 மணி நேரத்தில் 40 மி.மீ. முதல் 70 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது என்று மும்பை கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது.

    மத்திய ரெயில்வே மற்றும் மேற்கு ரெயில்வே ஆகிய இரு வழித்தடங்களிலும் உள்ளூர் ரெயில்கள் வழக்கம் போல் இயங்குவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சில பயணிகள் புறநகர் சேவைகள் தாமதமாகியதாகக் கூறினர்.

    ஒரு பகுதியில் 24 மணி நேரத்தில் 20 செ.மீ. அளவிற்கும் அதிகமான கன மற்றும் தீவிர கனமழை பெய்வதை 'சிகப்பு' என்றும் 24 மணி நேரத்தில் 6 செ.மீ. அளவிலிருந்து 20 செ.மீ. அளவிற்கு மிக கனமழை பெய்வதை 'ஆரஞ்சு' என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது.

    • இப்போது நான் வலுவாகிவிட்டேன்.
    • எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எங்களின் செயல்பாடு இருக்காது.

    மும்பை :

    ஒய்.பி. சவான் அரங்கில் சரத்பவார் தலைமையில் நடந்த கூட்டத்தில் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னையோ அல்லது வேறு எந்த நபரையோ ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் என் தந்தைக்கு எதிராக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். கட்சி தொண்டர்களுக்கு அவர் தந்தையை விட மேலானவர்.

    நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் இதேபோன்று பதவியேற்றப்போது நான் உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் இப்போது நான் வலுவாகிவிட்டேன். என்னை பலப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எங்கள் உண்மையான போராட்டம் பா.ஜனதாவின் செயல்பாட்டு முறைக்கு எதிராக இருக்கும். எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எங்களின் செயல்பாடு இருக்காது.

    நான் சிறிய வேதனை தரக்கூடிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு பெண் தான். ஆனால் நேரம் வந்தால் பெரிய மோதலுக்கு தயாராகும் வகையில் சத்ரபதி சிவாஜியின் தயார் ஜிஜாவாகவும், மராட்டிய பெண் ஆட்சியாளர் அகில்யாபாயாகவும் என்னை மாற்றிக்கொள்வேன்.

    தந்தைக்கு வயதாகி விட்டதாக கூறி வீட்டிற்குள் முடங்க வைக்க முயற்சிக்கும் மகன்களை விட மகள்களாகிய நாங்கள் மிக சிறந்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அஜித்பவார் நேற்று தனது உரையின்போது சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அவரை ஓய்வெடுக்குமாறு வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    சரத்பவாரின் அணியில் இருக்கும் முக்கிய தலைவரான ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், "அஜித்பவார் சமீபத்தில் கட்சியின் மாநில தலைவராக விருப்பம் இருப்பதாக கூட்டத்தில் பேசினார். கட்சியில் சில உள் விவகாரங்களை பொது மேடையில் பேசக்கூடாது என்று தெரிந்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அஜித்பவார் எனது காதில் அவரது ஆசையை கிசுகிசுத்திருந்தால் கூட நான் அவருக்கு பதவியை கொடுத்திருப்பேன். சரத்பவார் ஒரே ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அனைவரும் முன்பே பார்த்து இருப்பீர்கள்.

    2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் காரட் மற்றும் சத்தாராவில் நடத்திய பொதுக்கூட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவில் அவரது தாக்கத்தை நீங்கள் (அஜித்பவார் அணி) உணர்வீர்கள்" என்றார்.

    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.
    • பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி அஜித்பவார் மகாராஷ்டிரா பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் இரு அணியினரும் நேற்று தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி கூட்டம் நடத்தினர்.

    மும்பை பாந்திராவில் அஜித்பவார் கூட்டிய கூட்டத்தில் அதிக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு அளித்தனர்.

    இந்தநிலையில் கூட்டத்தில் சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அஜித்பவார் பேசியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் அவரவர் இன்னிங்ஸ் இருக்கிறது. அதிக உழைக்கும் திறன் கொண்ட வயது 25 முதல் 75 வரை ஆகும்.

    2004-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பை இழந்ததற்கு சரத்பவார் தான் காரணம். அந்த ஆண்டு காங்கிரசை விட தேசியவாத காங்கிரசிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் சரத்பவார் காங்கிரஸ் கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். எங்களை பொறுத்தவரை சரத்பவார் கடவுளை போன்றவர். அவர் மீது எங்களுக்கு ஆழமான மரியாதை உள்ளது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். அரசியலில் கூட பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை இதற்கு உதாரணமாக பார்க்கலாம்.

    உங்களுக்கு (சரத்பவார்) தற்போது வயது 83, நீங்கள் நிறுத்தப் போவதில்லையா? எங்களுக்கு உங்களின் ஆசியை வழங்குங்கள், நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அஜித்பவார் கூறினார்.

    அஜித்பவாருக்கு 63 வயது ஆகிறது. இவர் சரத்பவாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஜித் பவாரை அரசில் இணைத்துக் கொண்டதால் ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
    • ஏக்நாத் ஷிண்டேதான் தொடர்ந்து முதல்வராக இருப்பார் அக்கட்சி தலைவர்கள் உறுதி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஸ்திரதன்மையற்ற நிலை இருந்து கொண்டே வருகிறது.

    முதலில் பா.ஜனதா, அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். அது உடனடியாக முடிவுக்கு வந்தது. அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசோன கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தன.

    திடீரென கடந்த வரும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அஜித் பவார் அமைச்சரவையில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி இருந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி அமைக்கலாம் என ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கொடி பிடித்தனர்.

    பால் தாக்கரே சித்தாந்தம் வேறு. தேசியவாத காங்கிரஸ் சித்தாந்ததம் வேறு. ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செல்ல வேண்டும் என பால் தாக்கரே நினைத்தது கிடையாது. அப்படி இருக்கும்போது அவரது கட்சியான சிவசேனா எப்படி அஜித் பவார் உடன் இணைந்து செயலாற்ற முடியும்? என்ற கேள்வியை எழுப்பினர்.

    இதற்கிடையே ஒருநாள் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அஜித் பவார் கூறியிருந்தார். மேலும், அஜித் பவார் கட்சி எம.எல்.ஏ.-க்களுக்கு மந்திரி பதவி கொடுக்கும் நிலையில், தங்களது நிலை என்னவாகும் என்பதாலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக இருக்க ஆதரவு தெரிவித்தனர்.

    மகாராஷ்டிர மாநில மந்திரி ஷம்புராஜ் தேசாய் ''முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.



     


    எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். ஏக்நாத் ஷிண்டேயின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.

    மற்றொரு மந்திரி உதய் சமந்த் ''வர்ஷா பங்களாவில் ஏக்நாத் ஷிண்டே உடன் சிவசேனா தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டியது, எப்படி பணிகளை முடிக்கி விடுவது, அமைப்புகளை எப்படி வளர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்படடது.

    யார் வருகையாலும் (அஜித் பவார் குரூப் வருகை) சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் மகிழ்ச்சியில்லாமல் இல்லை. ஏக்நாத் ஷிண்டே மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஏக்நாத் ஷிண்டே ராஜினிமா என்ற செய்து வதந்திகள். எம்.எல்.ஏ.- எம்.பி. தேர்தலை ஷிண்டே தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்'' என்றார்.

    மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே ''ஏக்நாத் ஷிண்டேயின் முதல்வர் பதவி குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.


    ஆனால், ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக செயல்படுவார். அவர் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்'' என்றார்.

    • அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தி.
    • சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்.

    மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, முதல்வர் இன்று அவரது அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு தனது இல்லத்தில் அவசர கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார் என்பதை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • சரத் பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • அஜித் பவார் தலைமையில் மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பையில் இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் தனித்தனியாக நடைபெற்றன.

    இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்களும், அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.

    இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் ஜூலை 6-ம் தேதி (நாளை) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.

    முன்னதாக, செய்தியாளர்களை இன்று சந்தித்த சரத் பவார், கட்சியின் பெயரும் சின்னமும் யாரிடம் செல்லப் போவது இல்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சரத் பவார் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
    • அப்போது பேசிய அவர், எங்களுக்கு அதிகாரப் பசி கிடையாது, மக்களுக்காக உழைக்கிறோம் என்றார்.

    மும்பை:

    மும்பையில் தனது எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் பேசியதாவது:

    மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளாக தேசியவாத காஙகிரஸ் கட்சி வலுவான தலைமையை உருவாக்கியுள்ளது. மக்கள் நலன்களைப் பற்றி கவலைப்படாதவர்களின் கைகளில் இந்தியாவின் ஆட்சி உள்ளது.

    எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம்.

    இன்று ஒட்டுமொத்த நாடும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது. நம் வழியில் தடைகள் இருந்தாலும் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

    நமது சின்னத்தை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டோம். யாரும் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார்.
    • அஜித்பவார் தரப்பும் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்தது

    மும்பை:

    எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர். ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார்.

    அஜித்பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடந்தது.

    இந்நிலையில், அஜித்பவார் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் பிரபுல் பட்டேல் பேசியதாவது:

    சிவசேனாவின் சித்தாந்தத்தை நாம் ஏற்கும்போது, பா.ஜ.க.வுடன் செல்வதில் என்ன ஆட்சேபணை?

    இந்தக் கூட்டணியில் நாங்கள் சுதந்திரமான அமைப்பாக இணைந்துள்ளோம்.

    மெகபூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வுடன் சென்று இப்போது எதிர்க்கட்சியினருடன் அங்கம் வகிக்கின்றனர்.

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சரத் பவாருடன் சென்றிருந்தேன் நான். அங்கிருந்த காட்சியைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது.

    அங்கு 17 எதிர்க்கட்சிகள் இருந்தன. அவற்றில் 7 கட்சிகளுக்கு 1 மக்களவை எம்.பி. மட்டுமே உள்ளனர். ஒரு கட்சிக்கு ஒரு எம்பியும் இல்லை. அவர்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறுகிறார்கள்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவு தேசத்துக்காகவும், எங்கள் கட்சிக்காகவும் தான். தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல என தெரிவித்தார்.

    • சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று களத்தில் இறங்குகின்றனர்.
    • அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததால் மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி மலர்ந்தது.

    இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித்பவார் கட்சியை உடைத்ததை அடுத்து சரத்பவார், அவரது ஆதரவாளர் ஜித்தேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார். மேலும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே எம்.பி.யை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

    இதேபோல மந்திரி பதவி ஏற்ற அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் சரத்பவார் தரப்பு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் கடிதம் கொடுத்தது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் சரத்பவார் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலை நீக்கி, அவருக்கு பதிலாக மாநில தலைவராக சுனில் தட்காரேயை நியமித்தது. மேலும் ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளது.

    தங்களுக்கு 40 எம்.எல். ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் தரப்பு கூறிவருகிறது. இதேபோல பதவி ஏற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அணியில் இருப்பதாக சரத்பவார் அணி கூறியுள்ளது. எனினும் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்ற விவரம் தெரியாமல் உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் நேற்று கூறுகையில், "அஜித்பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. கட்சி உடைந்தது தொடர்பாகவும் யாரும் மனு கொடுக்கவில்லை. அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜெயந்த் பாட்டீல் மனு கொடுத்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளதா அல்லது எதிர்க்கட்சியாக உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை" என்றார்.

    அஜித்பவாருக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோல சரத்பவாருக்கு ஆதரவாக ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், ரோகித் பவார், ராஜேஸ் தோபே, அனில் தேஷ்முக், பாலாசாகேப் பாட்டீல் உள்பட 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. 15 எம்.எல். ஏ.க்கள் எந்த அணியில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.

    இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் நெருக்கடி குறித்து சட்ட வல்லுனர்களிடம் சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று (புதன்கிழமை) களத்தில் இறங்குகின்றனர். இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    சரத்பவார் நடத்தும் கூட்டம் மதியம் 1 மணிக்கு ஒர்லியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. அஜித்பவார் நடத்தும் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில தலைவர் சுனில் தட்காரே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற உள்ள இரு அணிகளின் கூட்டங்கள் மூலம் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவர உள்ளது. கூட்டம் முடிந்த பிறகு பலம் அதிகம் உள்ள அணிகள் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே துரோகம் செய்தவர்கள் எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

    தெற்கு மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட அஜித்பவார் அணியின் புதிய அலுவலகத்தில் சரத்பவாரின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே விபத்து நிகழ்ந்துள்ளது.
    • 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று கண்டெய்னர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே இன்று காலை 10.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    பிரேக் பிடிக்காததால் சீறிப்பாய்ந்த கண்டெய்னர் லாரி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் மற்றொரு கண்டெய்னர் மீது அடுத்தடுத்து மோதியது. பின்னர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஓட்டலுக்குள் புகுந்து கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்த கோர விபத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    அந்த கண்டெய்னர் லாரி துலே மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி சென்றதாக தெரியவந்துள்ளது.

    ×