என் மலர்
இமாச்சல பிரதேசம்
- வெடி விபத்தால், நான்கு முதல் ஆறு கடைகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிம்லாவின் மையப்பகுதியில் உள்ள மால் சாலையில் தீயணைப்புப் படை அலுவலகத்தை ஒட்டியுள்ள உணவகத்தில் நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.
மால் சாலை கீழே உள்ள மிடில் பஜாரில் அமைந்துள்ள ஹிமாச்சலி ரசோய் என்கிற உணவு உண்ணும் இடத்தில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தால், நான்கு முதல் ஆறு கடைகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்பால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பல மைல்களுக்கு சத்தம் கேட்டது. அந்த இடம் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ளதால், மீட்புப் பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டன.
சிலிண்டர் வெடித்துச் சிதறியிருக்கலாம் என சந்தேகிப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குண்டுவெடிப்புக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு எரிவாயு கசிவு ஏற்பட்டதாக புகார் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது.
- உள்ளூர் நிர்வாகம் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட மிக கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது.
ஸ்பிதி பகுதிக்கு அருகே அமைந்துள்ள கோலாக்சா என்ற கிராமத்தில் இருந்த வீடுகளும், விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி சின்னாபின்னமாகின. உள்ளூர் நிர்வாகம் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.
அந்த கிராமத்தில் வாழும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்துமே தற்போது வீடற்றவர்களாக இருக்கின்றனர்.
- இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளக்காடானது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சல பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. வெள்ள, நிச்சரிவில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, சுற்றுலாத் தளங்களில் பயணிகள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், பயணிகளை மீட்பதற்கான உரிய நடவடிக்கையை இமாச்சல் அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவித்த 60,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று காலை 9 மணி வரை, மொத்தம் 60,000 சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நான் தற்போது குலுவில் கடந்த மூன்று நாட்களாகத் தங்கி, நடந்து வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறேன்.
சாலை சேதம் காரணமாக கசோல் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சாலை சேதமடைந்த இடத்திலிருந்து டிரான்ஸ்- ஷிப்மென்ட், ஜீப்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கி உள்ளோம்.
தற்போதைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிர மற்றும் சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்கள் ஏழு நபர்களை காப்பாற்றுவதன் மூலம் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினர்.
மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக திருமண ஏற்பாடுகளை சரிவர செய்ய முடியவில்லை.
- இரு வீட்டாரும் கலந்து பேசி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு ஜோடிக்கு ஆன்லைன் மூலம் திருமணம் நடைபெற்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்லாவில் உள்ள கோட்கர் பகுதியை சேர்ந்த ஆஷிஷ் சிம்ஹா என்ற வாலிபருக்கும் குலு பகுதியை சேர்ந்த ஷிவானி தாக்கூர் என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை நடைபெற இருந்தது.
இந்நிலையில் அங்கு பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக திருமண ஏற்பாடுகளை சரிவர செய்ய முடியவில்லை. இதையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதற்கு மணமக்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக திருமணம் நடைபெற்றது. ஒரு பாதிரியார் உதவியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். அப்போது திருமண பந்தத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து வழக்கமான சடங்குகளும் ஆன்லைன் மூலமாக உண்மையாக நடத்தப்பட்டது. இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் மணமக்களை வாழ்த்தி பதிவிட்டனர்.
- இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது.
- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிம்லா:
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில பேய்மழை பெய்தது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.
சிம்லா - மணாலி, சண்டிகர் - மணாலி, சிம்லா - குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 16 பேரை காணவில்லை என்றும், 100 பேர் காயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என அறிக்கை வெளியிட்டுள்ளது.
- முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தல்.
- இமாச்சலப் பிரதேசத்தில் இன்று முதல் கனமழையின் தீவிரம் குறைய வாய்ப்பு.
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடமான பர்வானூ என்ற பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில்அடித்து செல்லப்பட்டன. இதன் வீடியோ வைரலாகி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கனமழையால் தெருக்கள் பொங்கி வழியும் நீர்வழிப்பாதைகளாக மாறிவிட்டன. பாலங்கள் அடித்துச் செல்லபட்டு, சாலைகள் செல்ல முடியாத நிலையில் உள்ளன.
இதனால், அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நிலச்சரிவு மற்றும் பல இடங்களில் வெள்ளம் காரணமாக சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சிம்லா-கின்னூர் சாலையும் சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதால் வாகனப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.
அரசு அறிக்கையின்படி, இழப்பு மதிப்பீடு நடந்து வருவதாகவும், அது ரூ.3,000-4000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் இன்று முதல் கனமழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சிம்லா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள சப்பா மின் நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
- இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளது.
சிம்லா:
வட மாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
குறிப்பாக இமாச்சல பிரதேசத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பியாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் மண்டி மாவட்டத்தில் உள்ள பஞ்ச வக்த்ரா கோவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
சிம்லா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள சப்பா மின் நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
குலு மாவட்டத்தில் தசோல பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
சட்லஜ் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் இரு பகுதிகளையும் இணைக்கும் இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
சிம்லாவில் காற்று, மழை காரணமாக ஒரு வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. இதனால் வீடு இடிந்தது. அந்த இடிபாடுகளில் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதையடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டனர்.
கனமழையால் இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவில் ஒரு கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.
பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் மின் இணைப்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இமாச்சல பிரதேச மாநிலம் உன்னா பகுதியில் அதிக பட்சமாக இதுவரை 22.8 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி உள்ளது.
சோலன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளது.
கங்ரா, சம்பா, குலு, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சோலன், சிம்லா, சிர்மாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் டெல்லியில் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் மத்திய மந்திரிகளின் வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கிரேட்டர் கைலாஸ், பெரோசா சாலை, ரபீக் பார்க், வோதி ஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் மூழ்கடித்தது. குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உளளனர். ஐ.ஓ.டி. பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கனமழை காரணமாக டெல்லி சுந்தர் நகர் மார்க்கெட் பகுதியில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.ரோகினி பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்றும் கன மழை பெய்தது. கன மழையால் அரியானா மாநிலம் குருகிராமில் போக்குவரத்து முடங்கி உள்ளது. டெல்லி-மனேசர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகத்து நிற்கின்றன. குருகிராமில் பல பகுதிளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு மின்சாரமும் தடைபட்டுள்ளது.
டெல்லியில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்து பலியானார். பிரகதி மைதான சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கபாதை மூடப்பட்டு அங்கு போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது. யமுனா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பலத்த மழை காரணமாக டெல்லி, நொய்டா குரு கிராமில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக அம்மாநில அதிகாரிகளுடன் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
அரியானா மாநிலத்தில் மழை வெள்ளம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்பாக அவர் அதிகாரிகளின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலும் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இங்கு பெய்த கன மழை காரணமாக உதம்பூர் பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
குஜராத் மாநிலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள கடியா, தோரா பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு சாலைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராம்கர் என்ற பகுதியில் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக அதில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக வட மாநில நதிகளில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கார்கள், வாகனங்கள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றன. கங்கை நதியிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
வட மாநிலங்களில் பெய்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் மால்வா மற்றும் டோபா பகுதியில் பலத்த மழை காரணமாக கால்வாய்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தில் 5 நதிகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நெல், பருத்தி ஆகியவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மீட்பு பணியில் ஈடுபட முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தர விட்டுள்ளார்.
இதே போல் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்க ளிலும் மழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் இன்னும் 3 முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று இயல்பை விட 81 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அங்கு மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
- அடுத்த இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
- இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்
பருவமழை கொட்டித்தீர்த்ததன் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளாகாடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கனமழை அச்சுறுத்தல், வெள்ளத்தால் மாநிலம் தத்தளித்து வரும் நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தில் ''அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். நாங்கள் 1100, 1070, 1077 ஆகிய மூன்று உதவி எண்களை அறிவித்துள்ளோம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியிருக்கும் நிலை ஏற்பட்டால் உதவிக்கு இந்த எண்களை அணுகலாம். உங்களுக்காக நான் எந்த நேரமும் உதவி செய்ய தயாராக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், எம்.எல்.ஏ.-க்கள் தங்களுக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு உதவ கேட்டுக்கொண்டள்ளார்.
- இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது.
- இதனால் மாண்டி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிம்லா:
வட மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் இன்று காலை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் லஹால் மற்றும் ஸ்பிடி நகரில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பல்வேறு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டது.
ஸ்பிடியில் இருந்து மணாலி நோக்கிச் சென்ற கல்லூரி மாணவர்கள் 30 பேர் நடுவழியில் சிக்கி கொண்டனர். அவர்கள் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அங்குள்ள மாண்டி மாவட்டத்தின் ரியாஸ் ஆற்றில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாண்டியில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாண்டி நகர துணை காவல் ஆணையாளர் அரிந்தம் சவுத்ரி தெரிவித்தார்.
- விவசாயி தானமாக கொடுத்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
- 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலாஸ்பூர்:
இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார், மற்றொரு மகன் டாக்சி டிரைவராக உள்ளார்.
இந்நிலையில், அவரது கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வருவாய்த் துறையின் கணக்காளர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது. நிலம் வாங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த விவசாயி பாகீரத் சர்மா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வருவாய்த்துறைக்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
அந்த அலுவலகம் கட்டப்பட்டால் 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாதாரன நிலத் தகராறுகளால் சண்டை ஏற்பட்டு சில நிமிடங்களில் உறவுகள் முறியும் இந்த காலகட்டத்தில், பாகீரத் சர்மா, ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 187 ரன்களை எடுத்தது.
தரம்சாலா:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் தரம்சாலாவில் இன்று நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ல் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னும், அதர்வா தாயீட்19 ரன்னிலும், ஷிகர் தவான் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 9 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது.
5வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா ஜோடி 64 ரன்கள் சேர்த்த நிலையில், ஜிதேஷ் சர்மா 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சாம் கர்ரன் 49 ரன்னும், ஷாருக் கான் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.
- மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ரூ.25 ஆயிரத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மஷாலா அருகே 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்திலேய 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கோதுமை ஏற்றிச் சென்ற லாரி, உததாகரன் பஞ்சாயத்து அருகே சாலை வழியாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சுனில் காந்த், அவரது மனைவி சீதா தேவி, மகள் த்ரிஷா தேவி, ஆர்த்தி மற்றும் மிலாப் சந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் தாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்ததோடு, உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ரூ.25 ஆயிரத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.






