என் மலர்tooltip icon

    குஜராத்

    • பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அகமதாபாத் :

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100). இவர் குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

    தாயார் ஹீராபென் மோடி, அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்து உடல் நலம் விசாரித்தார். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பிரதமரின் தாயார் இன்று காலை மறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது தாயார் இறந்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி
    • இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.

    அகமதாபாத் :

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து சென்று தாயாரைப் பார்த்தார்.

    அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தார். ஹீராபென் மோடியின் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் காலமானார். பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைகிறார். மேற்கு வங்காளத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • உடல் நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் காலமானார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(வயது 100) மோடி காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ந் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தனது தாயார் ஹீராபெனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 


    அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்தி நகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீரா பென்னைச் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

    குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவனின் உறவினர்கள் வகேலாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
    • உறவினர்கள் தாக்கியதில் ராணுவ வீரர் இறந்து போனார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் நாடியாட் மாவட்டத்தில் உள்ள சக்லசி கிராமத்தை சேர்ந்தவர் மெல்ஜிபாய் வகேலா. இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.

    குடும்பத்தை பார்ப்பதற்காக அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது மகளின் ஆபாச வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானதை கண்டு மெல்ஜிபாய் வகேலா அதிர்ச்சி அடைந்தார்.

    இது தொடர்பாக அவர் தனது மகளிடம் விசாரித்தார். அப்போது சக மாணவன் இதை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவனின் வீட்டுக்கு நியாயம் கேட்க மெல்ஜிபாய் வகேலா சென்றார்.

    அங்கு தகராறு ஏற்பட்டது. மாணவனின் உறவினர்கள் வகேலாவை கடுமையாக தாக்கியுள்ளார். அவர்கள் தாக்கியதில் ராணுவ வீரர் இறந்து போனார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆபாச வீடியோ வெளியானது தொடர்பாக தட்டி கேட்க சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரரையும், அவரது குடும்பத்தையும் பள்ளியில் படிக்கும் சக மாணவனின் உறவினர்கள் அவதூறாக பேசியுள்ளனர்.

    இதை எதிர்த்த எல்லை பாதுகாப்பு படை வீரரை அவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழே விழுந்த அதிர்ச்சியில் பியோங் மூனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • தென் கொரிய நபரின் சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தென் கொரியாவை சேர்ந்த ஷின் பியோங் மூன் (50) என்ற நபர் தனது நண்பருடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது குஜராத் சென்ற அவர்களில், மூன் மெஹ்சானா மாவட்டத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்தார். அப்போது திடீரென 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மூன் உயிரிழந்தார்.

    மாவட்டத்தின் காடி நகருக்கு அருகில் உள்ள விசாத்புரா கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

    அப்போது ஷின் பியோங் மூன் தனது பாராகிளைடரின் விதானம் சரியாக திறக்காததால் விபத்து ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக அவர் சமநிலையை இழந்த ஷின் பியோங் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    பலத்த காயங்களுடன் மயக்கத்தில் இருந்த அவரை நண்பர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மூன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கீயே விழுந்த அதிர்ச்சியில் பியோங் மூனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து காடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வதோதராவில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கொரிய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நபரின் சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாட்டில் கல்வி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • குருகுல கல்வி முறை மாணவர்களை நற்பண்புகளுடன் மேம்படுத்துகிறது.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சுவாமி நாராயண் குரு குல நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார் அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    நமது குருகுலங்கள் பல நூற்றாண்டுகளாக சமத்துவம், சேவை உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. புதிய கண்டுபிடிப்பும் ஆராய்ச்சியும் இந்திய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக இருந்தது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வி அமைப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. 


    நாட்டில் கல்வி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது அறுபத்தைந்து சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் மூலம், நாடு எதிர்காலத்திற்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்கி வருகிறது. இதன் விளைவாக, புதிய முறையில் கல்வி கற்கும் புதிய தலைமுறையினர் நாட்டின் சிறந்த குடிமக்களாக மாறுவார்கள்.

    குருகுல கல்வி முறை மாணவர்களை நல்ல எண்ணத்துடனும், நற்பண்புகளுடனும் மேம்படுத்துகிறது. குருகுல கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு வடகிழக்கு இந்தியாவுக்குப் பயணம் செய்து, தேசத்தை மேலும் வலுப்படுத்த மக்களுடன் இணைய வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றுடன் ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்கீழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குஜராத்தில் புதிய மந்திரிகளில் 16 பேர் கோடீசுவரர்கள் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
    • பணக்கார மந்திரிகளில் முதல் இடம் பிடித்திருப்பவர் பல்வந்த்சிங் ராஜ்புத். இவரது சொத்து மதிப்பு ரூ.372.65 கோடி.

    ஆமதாபாத்:

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

    அவருடன் 16 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களில் 8 பேர் கேபினட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 2 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 6 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவார்கள்.

    அங்கு புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் 16 புதிய மந்திரிகள் பற்றி ஆராய்ந்து ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சுவாரசிய தகவல்களை வெளியிட்டுள்ளன. அது பற்றிய ஒரு அலசல் வருமாறு:-

    * புதிய மந்திரிகளில் 4 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீன் வளத்துறை ராஜாங்க மந்திரி பர்சோத்தம் சோலங்கி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 420 மற்றும் 465-ன் கீழ் மோசடி வழக்கு உள்ளது.

    * மந்திரிகள் ஹர்ஷ் சங்கவி, ருஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 188, 500-ன் கீழ் பொது ஒழுங்குக்கு கீழ்ப்படியாமை மற்றும் அவதூறு வழக்குகள் உள்ளன.

    * புதிய மந்திரி சபையில் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உள்பட 16 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

    * புதிய மந்திரிகளின் சராசரி சொத்து மதிப்பு ரூ.32.7 கோடி. (முந்தைய மந்திரிசபையில் மந்திரிகளின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.95 கோடிதான்).

    * பணக்கார மந்திரிகளில் முதல் இடம் பிடித்திருப்பவர் பல்வந்த்சிங் ராஜ்புத். இவரது சொத்து மதிப்பு ரூ.372.65 கோடி.

    * மந்திரிகளில் மிகக்குறைந்த சொத்துகளை உடையவர் பாச்சுபாய் காபத் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.92.85 லட்சம்தான்.

    * 6 மந்திரிகள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். 8 மந்திரிகள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 மந்திரிகள் பட்டயப்படிப்பு படித்தவர்கள். முதல்-மந்திரி பூபேந்திர படேலும் சிவில் என்ஜினீயரிங்கில் பட்டயப்படிப்பு படித்தவர்தான்.

    * 3 மந்திரிகள் 50 வயதுக்கு குறைவானவர்கள். ஹர்ஷ் சங்கவி (வயது 37) மிக இளைய மந்திரி ஆவார். கனுபாய் தேசாய்தான் மிக மூத்த மந்திரி. இவரது வயது 71.

    இவ்வாறு அந்த தகவல்கள் கூறுகின்றன.

    • குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
    • பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி 156 இடங்களை கைப்பற்றியது. கடந்த முறையை விட கூடுதலாக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. 60 தொகுதிகளை அந்த கட்சி இழந்தது. புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி 5 தொகுதிகளை வென்றது. பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் குஜராத் முதல்வரின் பதவி ஏற்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த ஆண்டு செப்டம்பரில் மாற்றப்பட்டு அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது.

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் மற்ற மந்திரிகளும் பங்கேற்றார்கள்.

    பா.ஜனதா ஆளும் முதல்-மந்திரிகளான யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), மனோகர்லால் கட்டார் (அரியானா), சிவ்ராஜ்சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), பசவராஜ் பொம்மை (கர்நாடகா), புஷ்கர்சிங்தாமி (உத்தரகாண்ட்) மற்றும் கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் சந்தோஷ், குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.பி.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    • அகமதாபாத்தில் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு.
    • குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது.

    குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 156 இடங்களை கைப்பற்றிய பாஜக 7-வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அந்த மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார். காந்தி நகரில் இன்று பிற்பகல் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங்,அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் விழாவில் கலந்து கொள்ளும் நிலையில், பணி காரணமாக இதில் பங்கேற்க முடியவில்லை என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


    இந்நிலையில் குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நேற்றிரவு அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, சாலை வழியாக வாகனம் மூலம் சென்று, பொதுமக்களை சந்தித்தார். அப்போது இருபுறமும் திரண்டிருந்த மக்கள் கை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    • மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
    • முதல்-மந்திரி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்கிறார்.

    ஆமதாபாத்:

    குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இதன்மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை பிடித்து, குஜராத் மாநிலம் பா.ஜனதாவின் கோட்டை என நிரூபித்து இருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் 64.33 சதவீத வாக்குகள் பதிவாகின. முந்தைய தேர்தலைவிட (68.41 சதவீதம்) இது 4.08 சதவீதம் குறைவு ஆகும்.

    இந்நிலையில், இமாலய தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராஜினாமா செய்த குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல், இன்று நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    முதல் மந்திரி பதவிக்கான தலைவரை தேர்வு செய்வதற்காக குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் கூட்டம் காந்திநகரில் இன்று நடைபெற்றது. பூபேந்திர படேலின் பெயரை கானு தேசாய் முன்மொழிந்தார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பார்வையாளர்கள் ராஜ்நாத் சிங், பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்கிறார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது.

    அகமதாபாத் :

    குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் வெற்றி, தோல்விகள் குறித்த புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன. அது பற்றிய ஒரு பார்வை வருமாறு:-

    சவுராஷ்டிரா பகுதியில் பா.ஜ.க.வுக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. அங்கு மொத்தம் 48 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 40 இடங்களை பா.ஜ.க. தன்வசப்படுத்தி உள்ளது. கடந்த முறை இந்த பிராந்தியத்தில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களை பெற்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி அங்கு வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது.

    ஆம் ஆத்மிக்கு இந்தப் பகுதியில் 4 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரசை விட ஒரு இடம் ஆம்ஆத்மிக்கு கூடுதலாக கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

    சமாஜ்வாடி வேட்பாளர் காந்தல் ஜடேஜா குட்டியானா தொகுதியில் வெற்றிக்கொடி கட்டி இருக்கிறார்.

    பா.ஜ.க.வுக்கு சவுராஷ்டிரா பகுதியில் 48.23 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் காங்கிரசுக்கு 26 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆம் ஆத்மிக்கு 20 சதவீத ஓட்டுகள் விழுந்துள்ளன. காங்கிரசின் வீழ்ச்சிக்கு ஆம் ஆத்மி இங்கு வழிவகுத்துள்ளது.

    2017 தேர்தலில் காங்கிரசுக்கு 45.37 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 44.90 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

    கடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அதன் பலத்தை 99 இடங்களுடன் காங்கிரஸ் கட்டுப்படுத்தியது என்றால், அதற்கு பட்டிதார் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகள் கை கொடுத்ததுதான் காரணம் ஆகும்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரசில் இருந்து கட்சி தாவியவர்களுக்கும், புதுமுகங்களுக்கும் டிக்கெட் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

    மத்திய குஜராத் பகுதியில் பா.ஜ.க. 61-ல் 56 இடங்களைப் பிடித்துள்ளது. 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது.

    ஆம் ஆத்மி 8 தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் வந்துள்ளது.

    5 முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்த மது ஸ்ரீவஸ்தவ் சுயேச்சையாக வகோடியா தொகுதியில் களம் இறங்கினார். இங்கு பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வின் படேல் தோற்றார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மேந்திர வகேலா வெற்றி பெற்றிருக்கிறார்.

    ஆமதாபாத், வதோதரா, நாடியத், உம்ரெத், மட்டார் நகர்ப்புறங்களிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    வடக்கு குஜராத்தில் 32 இடங்களில் 22 இடங்கள் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வென்றுள்ளனர்.

    கடந்த 2017 தேர்தலில் இந்தப் பகுதியில் காங்கிரசுக்கு 17 'சீட்டு'களும், பா.ஜ.க.வுக்கு 14 'சீட்டு'களும் கிடைத்தன.

    தெற்கு குஜராத்தில் 35 இடங்களில் 33 இடங்களில் பா.ஜ.க. வென்றிருக்கிறது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் தலா ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது.

    சூரத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களையும் அப்படியே பா.ஜ.க. வாரிச்சுருட்டி விட்டது. கட்ச் பகுதியிலும் இதே கதைதான். 6 இடங்களையும் பா.ஜ.க. அள்ளியது. காங்கிரஸ் கட்சி இருந்த 2 இடங்களையும் இழந்துள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறாத போதும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது.

    ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய ஆம் ஆத்மிக்கு 5 இடங்களே கிடைத்தாலும், அதில் அந்தக் கட்சி திருப்தி அடைந்துள்ளது.

    இதுபற்றி அதன் மாநில தலைவர் கோபால் இடாலியா கருத்து தெரிவிக்கையில், "எங்கள் கட்சி குஜராத்தில் பா.ஜ.க.வின் கோட்டையில் குறிப்பிடத்தக்க அளவில் நுழைந்து இருப்பதே வெற்றிதான். இது கெஜ்ரிவாலின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி" என குறிப்பிட்டார். ஆனால் இவரும் சூரத்தில் உள்ள கட்டார்காம் தொகுதியில் தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×