என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
    • பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை.

    வேப்ப இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை. பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் அசாதாரண ஆற்றல் அதற்கு உண்டு. அதனால்தான் இப்போதும் பல்வேறு வழிகளில் பயன்பாட்டில் இருக்கிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வதால் பல நன்மைகளை பெறலாம். அவை குறித்து பார்ப்போம்.

    1. ரத்தத்தை சுத்தப்படுத்தும்:

    வேம்பு ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது ரத்தத்தில் சேரும் நச்சுகள் மற்றும் அசுத்தங்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்:

    வேம்பில் ஆன்டி ஆக்சிடெண்டுகள், பிளாவனாய்டுகள், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உண்பது உடலின் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

    3. செரிமானத்தை தூண்டும்:

    செரிமானத்திற்கு உதவவும், இரைப்பை குடல் பிரச்சினைகளை போக்கவும் பாரம்பரிய வழக்கமாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது செரிமான செயல்பாடுகளை தூண்டும். வயிறு வீக்கம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு வித்திடும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை விரட்டியடிக்கும்.

    4. நச்சுக்களை நீக்கும்:

    உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நச்சுத்தன்மை நீக்க செயல்முறைகளை விரைவுபடுத்தி, ஒட்டுமொத்த நச்சுக்களை வெளியேற்ற செய்யும். உடலை சுத்தப்படுத்தும் செயல்முறையையும் ஊக்குவிக்கும்.

     5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்:

    வேம்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகளை கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது மற்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

    6. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

    வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி தொற்று, பல் சொத்தை, ஈறு நோய்களை தடுக்க உதவும். வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, வாயில் பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வாய்வழி சுகாதாரத்தையும் பாதுகாக்கும்.

     7. சரும ஆரோக்கியம் காக்கும்:

    பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளிட்ட சருமத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை உட்கொள்வது முகப்பரு, தோல் அழற்சி, தோல் தடிப்பு உள்பட பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், சரும அழகை மேம்படுத்தவும் உதவும்.

     8. கூந்தலுக்கு வலு சேர்க்கும்:

    உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும் சத்துக்கள் வேம்பில் உள்ளன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வெறும் வயிற்றில் வேப்ப இலை சாப்பிடுவது, முடியின் வேர்களை வலுப்படுத்தும். பொடுகுத்தொல்லையை குறைக்கும். முன்கூட்டியே நரை முடி எட்டிப்பார்ப்பதையும் தடுக்கும்.

    • மன அழுத்தம் வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது.
    • மன நலனை சீராக பராமரிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.

    இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்கு ஆளாக்குகிறது. சில உணவு வகைகளை அன்றாடம் உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு வித்திடும் அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். ஏனெனில் மன நலனை சீராக பராமரிப்பதில் உண்ணும் உணவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.

    வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை மன அழுத்தம் ஆட்கொள்ள வாய்ப்பிருக்கிறது. மனநிலையிலும் அதன் தாக்கம் வெளிப்படும். மனம் தெளிவின்றி தடுமாறிக்கொண்டிருக்கும். காளான், முட்டை, சோயா பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களை பெற முடியும்.

     கார்போஹைட்ரேட் கலந்த உணவு வகைகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். நரம்புத் தளர்ச்சி, கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைபாடு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இவை மன அழுத்தத்துடனும் தொடர்புடையவை. முழு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவைகளில் கார்போஹைட்ரேட் அதிகம் நிரம்பி இருக்கும். அவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பீன்ஸ், சோயா, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பன்னீர் போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுகளையும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியவை. மன நலனை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. திராட்சை, பெர்ரி பழங்களையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

     ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு வகைகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், மனச்சோர்வு அறிகுறிகளை குறைக்கவும் உதவும். அதனால் அதனோடு தொடர்புடைய மீன் வகைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

    மதிய உணவில் வெண்ணெய் சேர்த்து கொள்வதும் சிறப்பானது. அதில் உள்ளடங்கி இருக்கும் நல்ல கொழுப்பு, மூளை சீராக செயல்பட துணைபுரியும். காளான்களும் மன நலனுக்கு நன்மை சேர்ப்பவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.

    நல்ல மனநிலைக்கு வித்திடும் உணவு பட்டியலில் வெங்காயம் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் சமையலில் சேர்ப்பது புற்றுநோயில் இருந்து காக்கவும் உதவும்.

    தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் அதிகம் உள்ளது. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. அதனால் தினமும் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பீன்ஸ் இதயத்திற்கும், மனநலனுக்கும் நன்மை சேர்க்கும். அதுவும் தவறாமல் உணவில் இடம்பெற வேண்டும்.

    • டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும்.
    • வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

    தூக்கம்…! மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.

    ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான். நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும்…

    நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.

    பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி' வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்கச் செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.

     பசலைக்கீரையை பொறுத்தவரையில் அதில் இரும்புச் சத்து அதிகம். தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

    கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.

     பாதாம்

    பாலைப் போலவே, பாதாமிலும் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதிபடுத்தி மூளையின் சக்தியை அதிகரித்து, உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதேநேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் உட்கொண்ட பிறகு நன்றாக தூங்குங்கள்.

     டார்க் சாக்லேட்

    பாதாம் தவிர, டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

     வாழைப்பழம்

    ஊட்டசத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு உதவியாக இருக்கும். வாழைப்பழத்தில் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கும் ஊட்டசத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இது இயற்கையாகவே உங்களுக்கு தூக்கத்தை வழங்குகிறது.

     சூடான பால் அருந்துதல்

    ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல தூக்கத்திற்கு நல்ல பானமாகும். பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் அதிகமாக இருப்பதால், இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை அளிக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

    • முன்னோர்கள் சொன்ன மூலிகைகளில் முக்கியமானது ஆடாதோடை.
    • மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடாதோடை.

    நம் முன்னோர்கள் மனிதனுக்கு வரும் வியாதிகளை கண்டறிந்து அதற்கான மூலிகைகளையும் கண்டுபிடித்து அதைப்பற்றி நம்மக்கு கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் ஆங்கில வைத்தியத்துக்கு அடிமையானதால் அதை இந்த சமூகம் கண்டுகொள்ளவே இல்லை. முன்னோர்கள் சொன்ன மூலிகைகளில் முக்கியமானது ஆடாதோடை ஆகும்

    மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடாதோடை. ஆடாதொடையின் முக்கிய செயல் சளியை வெளியே கொண்டுவருவதாகும்.

    பலருக்கு தொண்டையில் சளி கட்டி கொண்டு இருமல் முதல் மூச்சிரைப்பு வரை வந்து கொண்டேயிருக்கும். இந்த பிரச்சினை சரியாக இதன் இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர தொண்டை சளி சரியாகி உடல் எப்பொழுதும் வலுவாக இருக்கும்.

    பலருக்கு வயிற்றில் பூச்சி இருந்து கொண்டு பசிக்காமலும், உடல் சோர்வும் காணப்படும். இந்த வயிற்று பூச்சிகளை போக்கும் தன்மை கொண்டது இது. கபகொல்லி, சளிக்கொல்லி போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. சிலருக்கு காய்ச்சல் வந்து பாடாய் படுத்திக்கொண்டே இருக்கும். காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

    ரத்தத் தட்டணுக்களை அதிகரிக்கும்:

    கொசுக்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, டெங்கு சுரத்தைப் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ரத்தத் தட்டுகளின் (Platelets) எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு சுரத்தில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்பது உங்களில் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் போது, பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல், உடல் முழுவதும் சிவந்த நிறமுள்ள புள்ளிகள் தோன்றல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும். டெங்கு சுரத்தில் குறையும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை ஆடாதொடையின் இலைகளுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சுரத்தைக் குறைப்பது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சளி, இருமல், சுர நோய்களை விரட்டி அடிப்பது என முழுமையான மூலிகை நாயகனாகத் திகழ்பவர் நம்ம ஆடாதொடை! ஒன்று அல்லது இரண்டு ஆடாதொடை இலைகளை மையாக அரைத்து, சுத்தமான தேன் கலந்து உட்கொள்ள மேற்குறிப்பிட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும். ஆடாதொடை இலைச் சாற்றில் சில சொட்டுகள் தேன் கலந்து ருசியான மருந்தாகவும் பருகலாம்.

    நுரையீரல் பாதையைத் தூய்மையாக்கும்:

    காரணமன்றி சளி, இருமல், சுரம் உங்களை அடிக்கடி தொந்தரவு செய்கிறதென்றால், ஆடாதொடையின் துணையை நாடுங்கள். பின் சளி, இருமல், சுரம் போன்ற எதிரிகளைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமிருக்காது. நெடுங்காலமாக நுரையீரல் பாதை தொற்றுகளைப் போக்குவதில் ஆடாதொடை முக்கியப் பங்கு வகிக்கிறது. தொண்டையில் உண்டாகும் கரகரப்பையும் ஆடாதொடை சேர்ந்த மருந்துகள் இதமாக்கும்.

    • ஆவாரம்பூவின் மருத்துவ குணங்களை அறியலாம்.
    • ஆவாரம்பூ குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.

    பொதுவாக கிராமப்புறங்களில் ஆவாரம் பூவை அதிகம் பயன்படுத்துகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக்கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம் பூவை பயன்படுத்துகின்றனர்.

    சங்க காலத்தில் `மடல் மா' ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

    "ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்ற பழமொழியில் இருந்து ஆவாரம்பூவின் மருத்துவ குணங்களை அறியலாம். பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரை தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் மிகக் கடுமையான வறட்சியையும் தாங்கி தன்னிச்சையாக வளரக்கூடியது. ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து "ஆவாரைப் பஞ்சாங்கம்" என்று அழைக்கப்படுகிறது.

    மருத்துவ குணங்கள்

    * ஆவாரைப் பஞ்சாங்கத்தை தினம் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு வெண்ணீர் பருகிவர நீரிழிவு (சர்க்கரை) நோய், உடல் சோர்வு, நாவறட்சி, தூக்கம் இன்மை ஆகியவை நீங்கும்.

     * ஆவாரம் பூ, இலையின் கொழுந்தை சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குறையும்.

    * சிலருக்கு உடலில் துர் நாற்றம் வீசும். அவர்கள் ஆவாரம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் துர்நாற்றம் நீங்கும்.

     * ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும்.

    * உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும்.

    * ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.

    * சிலருக்கு உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து, நீர் விட்டு அரைத்துக் குழப்பிப் படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட கண்களின் சிவப்பு மாறும்.

     * ஆவாரம் பூக்களை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

     ஆவாரம் பூ பொடி

    ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம்புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து, இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும். தினமும் காலை, மாலை, அரைத் தேக்கரண்டி அளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.

    • உலகத்தை மிகவும் சுவாரசியமானதாகவும், சுதந்திரமானதாகவும் மாற்றும்.
    • செயற்கை நுண்ணறிவுடன் ப்ராக்சிமிட்டி சென்சார் இணைக்கப்பட்டுள்ளது.

    பார்வை இழந்தவர்களுக்கும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாதாரணமாக செய்யும் வேலைகளுக்கும் கூட பிறரை எதிர்பார்த்திருக்கும் சூழல் உள்ளது.

    குறிப்பாக பார்வை இழப்பு, மஸ்குலர் டீஜெனரேஷன், டயாபடிக் ரெட்டினோபதி, ரெட்டினைடிஸ் பிக்மென்டோஸா, கிளக்கோமோ, கண்புரை மற்றும் பிற பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாதனத்தை வழங்கலாம். இது அவர்களின் இருண்ட உலகத்தை மிகவும் சுவாரசியமானதாகவும், சுதந்திரமானதாகவும் மாற்றும்.

    அவர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ளலாம், தேர்வுகளை எழுதலாம்.

     அதுமட்டுமல்லாமல் வெளியே உள்ள வாகனங்கள், தடைகள், போக்குவரத்து சிக்னல்கள், ஜீப்ரா கிராசிங்குகள், மரங்கள் மற்றும் வீட்டின் உள்ளே உள்ள ஜன்னல், திரை, டேபிள், லேப்டாப், மொபைல், பாட்டில் போன்ற பொருள்களை உணர்ந்து அவர்கள் பத்திரமாக நடமாட உதவும். எதிரில் இருக்கும் நபர்களை அடையாளம் காண்பதோடு, அவர்களின் தோராயமான வயது, அவர்கள் வெளிப்படுத்தும் சைகைகளையும் வெளிப்படுத்தும்.

    புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்க உதவும். படிப்பதைப் புரிந்துகொள்ள பிரத்யேக வசதிகள் உண்டு.

    ஆங்கிலத்துடன் கூடுதலாக இந்திய பிராந்திய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி முதலிய மொழிகளிலும் படிக்க முடியும்.

     பாதுகாப்புக்காக செயற்கை நுண்ணறிவுடன் ப்ராக்சிமிட்டி சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. நடக்கும்போது எதிர்வரும் தடைகளை சொல்வதோடு, எதன் மீதும் மோதாமல் இருக்க நேரத்துக்கு அலர்ட் குரலும் ஒலிக்கும். ஜி.பி.எஸ் -ஐ பயன்படுத்தி போக வேண்டிய இலக்கின் தூரத்தையும் தெரிந்துகொள்ள முடியும். தயாரிப்பின் விலை, மலிவு விலையில் அனைவரும் வாங்கும் வகையில் உள்ளது.

    இந்த ஸ்மார்ட் விஷன் கிளாஸை வாங்கி உபயோகித்து வருபவர்கள் எளிதாக பஸ் வருவதை இந்த தொழில்நுட்பம் தெரியப்படுத்துவதாகவும், வீட்டுக்குள் இருக்கும் பொருள்களை எளிதாக கையாளவும் படிக்கவும் உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.
    • விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

    வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து தோன்றியது. இதற்கு பெரியமுத்து என்று அர்த்தம்.

    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

    வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

    பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாக பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

    வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

    1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

    2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலை சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

    3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

    4. வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

    5. வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

    6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

    7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

    8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல்வலி, ஈறுவலி குறையும்.

    9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

    10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

    11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

    13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசி வர மறைந்துவிடும்.

    14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

    15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

    16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

    17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

    18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

    19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

    20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

    21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

    22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

    23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

    24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

    25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

    26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

    27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

    28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

    29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

    30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

    31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

    32. வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

    33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

    34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

    35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

    36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

    37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

    38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

    39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

    40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

    41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

    42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

    43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

    44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

    45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

    46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

    47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

    48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

    49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

    50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

    • இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள்.
    • ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது.

    அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் தான். நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… அதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.

    இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு. பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளைம் கூறுகிறது.

    இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள். இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக்கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது. பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பக புற்று ஏற்பட வாயப்பு இருக்கிறது. ஆனால் முன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களை போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குதலினால் இறக்கின்றனர்.

    ஏற்கனவே ஏ.எச்.ஏ எனபடும் அமெரிக்கன் இதய சங்கம் (அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்) இது குறித்து எச்சரித்துள்ளது. அத்துடன் இதற்காகவே மகளிர் இதயநோய் செயற்குழு ஒன்றினையும் அமைத்துள்ளது.

    நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக் கோளாறுகளில் அக்கறை காட்டபடாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.

    பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரபில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார். அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத் தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.

    அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது. இப்போதில் இருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.

    கொழுபையும், கொலஸ்ட்ராலைம் முடிந்த அளவுக்கு உணவில் இருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைம், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

    வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்ப்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடைபயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருபவர்கள் இளமைடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    எவராலும் எபோதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக்கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

    பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் முன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது.

    பாஸ்டனில் உள்ள பெண்கள் மருத்துவமனை, மெட்ரோபாலிடன் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், சராசரி எடையை விட அதிகமான எடை கூடியுள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்புகள் மற்றவர்களைவிட 80 சதவீதம் அதிகமாக இருந்தது அறியபட்டது.

    சி.டி.சி. எனப்படும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாயப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.
    • அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

     ஆகவே சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும். எனவே இத்தகைய பிரச்சினை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளை விடாமல், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும்.

     • கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதில் இருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    • நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம்.

     • கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.

    • கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.

    • உடல் உறுப்புகளில் தோன்றும் நோய்களின் வெளிப்பாடே அரிப்பு.
    • நோய் வருவதற்கு முன்பே அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

    பெரும்பாலானவர்கள் `அரிப்பு' என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்றப் போகிறது என தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

    பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறப்புறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையில் உள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.

    கருவுற்ற காலங்களில் கர்பப்பை வாசல், பிறப்புறுப்பு போன்றவற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறப்புறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்து குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறப்புறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.

     குண்டாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறப்புறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு. அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • தசை நாண்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.
    • மணிக்கட்டு மற்றும் கையின் தொடர்ச்சியான இயக்கங்களுடன் தொடர்புடையது.

    முழங்கைகளில் வலி, விளையாட்டு பயிற்சி செய்யும் போது வலி அதிகரிப்பது இவை `டென்னிஸ் எல்போ' என்ற முழங்கை வாதத்தில் அதிகமாக காணப்படும். `டென்னிஸ் எல்போ' அல்லது `லேட்டிரல் எபிகாண்டிலைடிஸ்' என்பது முழங்கைகளில் ஏற்படுகின்ற ஒரு வாதம் ஆகும். இது முழங்கையில் உள்ள தசைகள் மற்றும் தசை நாண்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. `டென்னிஸ் எல்போ' பெரும்பாலும் மணிக்கட்டு மற்றும் கையின் தொடர்ச்சியான இயக்கங்களுடன் தொடர்புடையது.

    இதன் பெயர் `டென்னிஸ் எல்போ' என இருந்தாலும் டென்னிஸ் விளையாடாமல் கைகளால் தொடர் வேலை செய்யும் பிளம்பர்கள், கொத்தனார்கள், ஓவியர்கள், தச்சர்கள், இறைச்சி கடைக்காரர்கள், டிரைவிங், சமையல் செய்பவர்கள், கணினியைப் பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதிக நேரம் கைகளை பயன்படுத்தி வேலை செய்வது, முன் கை தசைகளை தொடர்ச்சியாக இயக்குவது மற்றும் தசை அழுத்தம் தரும் பணிகளை செய்யும் போது டென்னிஸ் எல்போ பாதிப்பு வருகிறது.

    அறிகுறிகள்:

    முழங்கைகளில் வலி, கைகளால் வேலை செய்தால் வலி அதிகரித்தல், நடுக்கம், கையை மடக்க முடியாமல் விறைப்பாக இருத்தல், முழங்கைகளில் வீக்கம், கைகளில் பலவீனம் போன்றவை காணப்படும்.

    இந்த நோயை எக்ஸ்-ரே, சி.டி. அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து அறியலாம். டென்னிஸ் எல்போ பிரச்சினைக்கு தீர்வாக கீழ்க்கண்ட சித்த மருந்துகள் பயன்தரும். இவற்றை அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

     1) பறங்கி ரசாயனம் 500 மி.கி. உணவுக்குப்பின் இரு வேளை.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கி., அயவீரச் செந்தூரம் 200 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. உணவுக்குப்பின் இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    3) முழங்கையில் வலி உள்ள இடத்தில் உளுந்து தைலம் வைத்து தேய்க்க வேண்டும்.

    4) கை தசைகளை வலுப்படுத்தும் புரத உணவுகள் மற்றும் பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

    • நவீன அறுவை சிகிக்சை மூலம் அகற்றும் வசதி உள்ளது.
    • `டார்கெட்டட் தெரபி' என்ற அதிநவீன சிகிச்சை முறை உள்ளது.

    புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சைகள் குறித்தும், நோய் வருவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் புற்றுநோய் மருந்தியல் சிகிக்சை நிபுணர் டாக்டர் அருண் ரமணன் கூறியதாவது:-

    உலகில் புற்றுநோய் எந்த அளவுக்கு வேகமாக பெருகி வருகிறதோ, அந்த அளவுக்கு அதை கட்டுப்படுத்துவதற்கான புதிய மருந்துகளும், மருத்துவ சிகிச்சைகளும் வந்துள்ளன. அமெரிக்காவில் கிடைப்பது போன்ற உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சை நம் நாட்டிலும் கிடைக்கிறது. தமிழகத்தில் சென்னையில் கிடைக்கும் சிகிச்சை வசதி தென் மாவட்டங்களிலும் உள்ளது. பரிசோதனையின் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் வசதியும் வந்துவிட்டது.

    டாக்டரிடம் வரும் புற்று நோயாளிகளில் பலர், ''நான் நன்றாகத்தானே இருந்தேன் சார்... எனக்கு எப்படி இந்த நோய் வந்தது?'' என்று கேட்பார்கள். பொதுவாக இந்த நோய் தாக்கினால் ஆரம்பநிலையில் எந்த அறிகுறியும் தெரியாது. புற்றுநோய் தாக்கி, அது முற்றிய நிலைக்கு வரும் போதுதான் உடல்நிலை பாதிக்கும். அப்போதுதான் தெரியவரும்.

    நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பது மிகவும் நல்லது. எனவே ஆரோக்கியமாக இருந்தாலும் 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அப்படி செய்து கொள்ளும்பட்சத்தில், நோய் தாக்கி இருந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினம்.

    இப்போதெல்லாம் புற்றுநோய் தாக்கிய முழு உறுப்பையும் அகற்றாமல், பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நவீன அறுவை சிகிக்சை மூலம் அகற்றும் வசதி உள்ளது. ஏதாவது ஒரு உறுப்பை புற்றுநோய் தாக்கி இருந்தால், அந்த உறுப்பு பாதிக்காத வகையில் தாக்குதலுக்கு உள்ளான குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் `டார்கெட்டட் தெரபி' என்ற அதிநவீன சிகிச்சை முறை உள்ளது. மேலும் புற்றுநோய் கிருமியை எதிர்த்து போராடும் `இம்மியூனோ தெரபி' சிகிச்சையும் வந்து இருக்கிறது.

    புற்றுநோய் சிகிச்சைக்கு புதிதாக `டோஸ்டார்லிமாப்' என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மருந்தை, அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில் அவர்கள் குணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கும் இந்த மருந்து, பல கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டுக்கு வரும்.

    10 சதவீத புற்றுநோய் மரபு ரீதியாக, அதாவது தாத்தா-பாட்டி, அப்பா-அம்மாவுக்கு இருந்து பிள்ளைகளுக்கு வந்தாலும், மீதி 90 சதவீதம் வாழ்க்கை முறை, காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவே வருகிறது.

    நாம் உண்ணும் உணவு, காய்கறி, பழங்கள், அருந்தும் தண்ணீர், பால் என எல்லாவற்றிலுமே ஏதாவது ஒருவகையில் ரசாயனம் கலந்து இருக்கிறது. பயிர்கள், செடிகளுக்கு பூச்சிமருந்து தெளிக்கப்படுகிறது. இதுபோன்ற ரசாயனம் ஏற்படுத்தும் பாதிப்பால் நோய் உண்டாகும் ஆபத்து இருக்கிறது. எனவே காய்கறிகளை நன்றாக கழுவிய பிறகே சமைக்கவேண்டும். பழங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகே சாப்பிட வேண்டும்.

    மேலும் எண்ணெயில் அதிகம் பொறித்த உணவு, செயற்கையாக அதிக நிறம் கலந்த உணவு ஆகியவையும் புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் `கார்ட்னோஜென்' என்ற ஒருவகை ரசாயனம் உருவாகும்.

    இது நம் உடலுக்குள் புற்றுநோயை உண்டாக்குவதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்துவிடும். எனவே இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக பொறித்த உணவை தவிர்த்து ஆவியில் வேகவைத்த, புரதச்சத்து நிறைந்த உணவையே உண்ண வேண்டும், கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    ரசாயன கலவை காரணமாக, அதிகம் மேக்கப் (ஒப்பனை) போட்டுக் கொள்வது, தலைக்கு சாயம் பூசுவது ('டை அடிப்பது'), அதிக சாயம் கொண்ட ஆடைகளை அணிவதுகூட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

    இதேபோல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கி குடிப்பது, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உண்பது கூட தீங்கு விளைவிக்கக்கூடியதுதான்.

    நல்ல தூக்கம், நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சுறுசுறுப்பாக இருப்பது, சத்தான உணவு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி மற்ற நோய்களையும் தவிர்க்கலாம்.

    இவ்வாறு டாக்டர் அருண் ரமணன் கூறினார்.

    ×