search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்
    X

    புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்

    • நவீன அறுவை சிகிக்சை மூலம் அகற்றும் வசதி உள்ளது.
    • `டார்கெட்டட் தெரபி' என்ற அதிநவீன சிகிச்சை முறை உள்ளது.

    புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சைகள் குறித்தும், நோய் வருவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் புற்றுநோய் மருந்தியல் சிகிக்சை நிபுணர் டாக்டர் அருண் ரமணன் கூறியதாவது:-

    உலகில் புற்றுநோய் எந்த அளவுக்கு வேகமாக பெருகி வருகிறதோ, அந்த அளவுக்கு அதை கட்டுப்படுத்துவதற்கான புதிய மருந்துகளும், மருத்துவ சிகிச்சைகளும் வந்துள்ளன. அமெரிக்காவில் கிடைப்பது போன்ற உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சை நம் நாட்டிலும் கிடைக்கிறது. தமிழகத்தில் சென்னையில் கிடைக்கும் சிகிச்சை வசதி தென் மாவட்டங்களிலும் உள்ளது. பரிசோதனையின் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் வசதியும் வந்துவிட்டது.

    டாக்டரிடம் வரும் புற்று நோயாளிகளில் பலர், ''நான் நன்றாகத்தானே இருந்தேன் சார்... எனக்கு எப்படி இந்த நோய் வந்தது?'' என்று கேட்பார்கள். பொதுவாக இந்த நோய் தாக்கினால் ஆரம்பநிலையில் எந்த அறிகுறியும் தெரியாது. புற்றுநோய் தாக்கி, அது முற்றிய நிலைக்கு வரும் போதுதான் உடல்நிலை பாதிக்கும். அப்போதுதான் தெரியவரும்.

    நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பது மிகவும் நல்லது. எனவே ஆரோக்கியமாக இருந்தாலும் 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அப்படி செய்து கொள்ளும்பட்சத்தில், நோய் தாக்கி இருந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினம்.

    இப்போதெல்லாம் புற்றுநோய் தாக்கிய முழு உறுப்பையும் அகற்றாமல், பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நவீன அறுவை சிகிக்சை மூலம் அகற்றும் வசதி உள்ளது. ஏதாவது ஒரு உறுப்பை புற்றுநோய் தாக்கி இருந்தால், அந்த உறுப்பு பாதிக்காத வகையில் தாக்குதலுக்கு உள்ளான குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் `டார்கெட்டட் தெரபி' என்ற அதிநவீன சிகிச்சை முறை உள்ளது. மேலும் புற்றுநோய் கிருமியை எதிர்த்து போராடும் `இம்மியூனோ தெரபி' சிகிச்சையும் வந்து இருக்கிறது.

    புற்றுநோய் சிகிச்சைக்கு புதிதாக `டோஸ்டார்லிமாப்' என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மருந்தை, அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில் அவர்கள் குணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கும் இந்த மருந்து, பல கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டுக்கு வரும்.

    10 சதவீத புற்றுநோய் மரபு ரீதியாக, அதாவது தாத்தா-பாட்டி, அப்பா-அம்மாவுக்கு இருந்து பிள்ளைகளுக்கு வந்தாலும், மீதி 90 சதவீதம் வாழ்க்கை முறை, காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவே வருகிறது.

    நாம் உண்ணும் உணவு, காய்கறி, பழங்கள், அருந்தும் தண்ணீர், பால் என எல்லாவற்றிலுமே ஏதாவது ஒருவகையில் ரசாயனம் கலந்து இருக்கிறது. பயிர்கள், செடிகளுக்கு பூச்சிமருந்து தெளிக்கப்படுகிறது. இதுபோன்ற ரசாயனம் ஏற்படுத்தும் பாதிப்பால் நோய் உண்டாகும் ஆபத்து இருக்கிறது. எனவே காய்கறிகளை நன்றாக கழுவிய பிறகே சமைக்கவேண்டும். பழங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகே சாப்பிட வேண்டும்.

    மேலும் எண்ணெயில் அதிகம் பொறித்த உணவு, செயற்கையாக அதிக நிறம் கலந்த உணவு ஆகியவையும் புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் `கார்ட்னோஜென்' என்ற ஒருவகை ரசாயனம் உருவாகும்.

    இது நம் உடலுக்குள் புற்றுநோயை உண்டாக்குவதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்துவிடும். எனவே இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுவாக பொறித்த உணவை தவிர்த்து ஆவியில் வேகவைத்த, புரதச்சத்து நிறைந்த உணவையே உண்ண வேண்டும், கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    ரசாயன கலவை காரணமாக, அதிகம் மேக்கப் (ஒப்பனை) போட்டுக் கொள்வது, தலைக்கு சாயம் பூசுவது ('டை அடிப்பது'), அதிக சாயம் கொண்ட ஆடைகளை அணிவதுகூட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

    இதேபோல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கி குடிப்பது, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உண்பது கூட தீங்கு விளைவிக்கக்கூடியதுதான்.

    நல்ல தூக்கம், நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சுறுசுறுப்பாக இருப்பது, சத்தான உணவு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி மற்ற நோய்களையும் தவிர்க்கலாம்.

    இவ்வாறு டாக்டர் அருண் ரமணன் கூறினார்.

    Next Story
    ×