என் மலர்
பொது மருத்துவம்
- கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்
- முட்டையில் உள்ள ஊட்டச்சத்துகள் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிறியதாக இருந்தாலும் ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்தாக இருப்பதுதான் முட்டை. ஒவ்வொரு நாளும் 27% அமெரிக்கர்கள் முட்டையை வேகவைத்தோ, ஆம்லெட்டாகவோ அல்லது சாண்ட்விச்சின் ஒரு பகுதியாகவோ எடுத்துக்கொள்கிறார்கள். காரணம் முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் முட்டையை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடும்போது உடலில் நிகழும் மாற்றம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
ஒரு முட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்
கலோரிகள்: 71
மொத்த கொழுப்பு: 5 கிராம்
புரதம்: 6.24 கிராம்
வைட்டமின் பி12: 0.5 மைக்ரோகிராம்
வைட்டமின் டி: 1.24 மைக்ரோகிராம்
கால்சியம்: 24 மி.கி.
கோலின்: 169 மி.கி.

கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்
முட்டையில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள்
புரதம்
முட்டையில் அதிகளவு புரதம் உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் பசியை கட்டுப்படுத்தும். முட்டைகள் தசைகளைப் பராமரிக்கவும், திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதியில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் டி
முட்டையில் நிறைந்துள்ள பலவிதமான வைட்டமின்கள் பல நன்மைகளைத் தருகின்றன. இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பயோட்டின் (Biotin), மற்றும் ஃபோலேட் ஆகியவை அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன.
கோலின்
செல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான கோலின், முட்டையில் உள்ளது. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிப்பதைத் தவிர, கோலின் கொழுப்பைக் கடத்துவதற்கும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, முட்டைகள் கருவின் வளர்ச்சிக்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவை மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வைட்டமின் பி12
இரண்டு முட்டைகள் ஒரு நாளைக்குத் தேவையான பி12- ல் மூன்றில் ஒரு பங்கை கொடுக்கின்றன. இந்த வைட்டமின் "சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும், நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை ஆதரிப்பதற்கும் அவசியம்.
ஆக்ஸிஜனேற்றிகள்
முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
தினசரி முட்டை எடுத்துக்கொள்ளலாமா?
ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது. வயதானவர்கள், அதிக புரதத் தேவைகள் உள்ளவர்கள் ஒருநாளைக்கு இரண்டு முட்டை எடுத்துக்கொள்ளலாம். எப்போதாவது அதிகமாக சாப்பிடுவது பிரச்சனையில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கும்மேல் சாப்பிடுவது நீரிழிவு, அதிக கொழுப்பு அல்லது இதய நோய் உள்ளவர்களுக்கு உகந்ததாக இருக்காது. அவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளலாம். புரதச்சத்துக்கு வெறும் முட்டையை மட்டும் நம்பியில்லாமல், மீன் போன்ற மற்ற புரதச்சத்து நிறைந்தவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
- ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாம்!
- ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.
ஆலிவ் எண்ணெய், சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இருந்தபோதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் ஆலிவ் எண்ணெயின் முழு பலனையும் அறிந்தால் கண்டிப்பாக அதனை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். ஆலிவ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.
மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்
இதயத்திற்கு நன்மை பயக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் (Monounsaturated Fats - MUFAs) ஆலிவ் எண்ணெயில் நிறைந்துள்ளது. மேலும் 13.8% நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. அதேசமயம் 10.5% பாலிஅன்சாச்சுரேட்டட் உள்ளது. அதாவது ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இருப்பினும் ஆலிவ் எண்ணெயின் முக்கிய கொழுப்பு அமிலம் ஒலிக் அமிலமாகும். நிறைவுறா கொழுப்பான ஒலிக் அமிலம் மொத்த எண்ணெய் உள்ளடக்கத்தில் 71% ஆகும். ஒலிக் அமிலம் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் புற்றுநோயுடன் தொடர்புடைய மரபணுக்களில் கூட நன்மை பயக்கும் பண்புகளை விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆக்ஸிஜனேற்றிகள்
1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயில் தினசரி மதிப்பில், 13% வைட்டமின் E-யும், 7% வைட்டமின் K-யும் உள்ளது. மேலும் பாலிஃபீனால்கள், வைட்டமின் E, ஸ்குவாலீன் போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன. இவை இருதய மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும். அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதோடு, ரத்தக் கொழுப்பை ஆக்சிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
புற்றுநோய், இதய நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, வகை 2 நீரிழிவு நோய், அல்சைமர், கீல்வாதம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு அடிப்படை காரணம் நாள்பட்ட அழற்சி எனக் கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் உள்ள முக்கிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த நோய்களுக்கு எதிராகப் போராடுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் முக்கியமானது ஓலியோகாந்தல் கலவை. இது இப்யூபுரூஃபன் (ibuprofen) போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் போலவே செயல்படுவதாகவும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம், சி-ரியாக்டிவ் புரதம் அழற்சிகளைக் குறைக்கின்றன.
பக்கவாதத்தை தடுக்க உதவும்
இரத்த உறைவு அல்லது இரத்தப்போக்கு காரணமாக மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, மரணம் ஏற்படுவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது. 2014ஆம் ஆண்டு 841,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆலிவ் எண்ணெய் சாப்பிட்ட இவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 2020ல் ஆலிவ் எண்ணெய் உட்கொள்ளலுக்கும், பக்கவாத ஆபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டது.

புற்றுநோய் அபாயத்தை ஆலிவ் எண்ணெய் குறைக்கிறது
இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், மத்திய தரைக்கடல் நாடுகளில் இதய நோய் அபாயங்கள் குறைவாக இருந்தன. இது அந்நாடுகளின் உணவுமுறை பழக்கத்தை ஆய்வுசெய்ய வழிவகுத்தது. அப்போது அவர்கள் உணவில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் முக்கியப் பொருளாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஆலிவ் ஆயில் ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டது.
எடை இழப்பு
ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கின்றன என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. காரணம் இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA) பசியைக் கட்டுப்படுத்தவும், உடலில் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இருப்பினும், எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்பதையும், ஆலிவ் எண்ணெய் விதிவிலக்கல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
அல்சைமர் நோயை எதிர்த்து போராடும்
அல்சமைர் நரம்புச்சிதைவு நிலைகளில் ஒன்றாகும். இது மறதி நோய்க்கும் வழிவகுக்கும். அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணம் மூளை செல்களுக்குள் பீட்டா-அமிலாய்டு (Beta-amyloid) பிளேக்குகள் குவிவதாகும். ஆலிவ் எண்ணெய் இந்த பீட்டா- அமிலாய்டு சுரப்பிகளை தடுக்கும் என்றும், அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்
ஆலிவ் எண்ணெய் வகை 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்க உதவும். அதுபோல ஆலிவ் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் CRP (சி-ரியாக்டிவ் புரதம்) அளவைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி) பாக்டீரியாவுக்கு எதிராக போராடக்கூடிய பண்பு ஆலிவ் எண்ணெயில் உள்ளது.
- வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன.
- வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற உப்பு சேர்க்காத வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
ஆரோக்கிய உணவுமுறை பட்டியல் என்று இப்போது எடுத்தால் அதில் கண்டிப்பாக நட்ஸ் இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது நமது உணவுகள் சத்தானதாக இல்லை. அதனால் உடல் ஆரோக்கியத்தைப்பெற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. அப்படிப்பட்ட நட்ஸ் வகைகளில் முக்கியமான ஒன்றுதான் அக்ரூட் பருப்பு, அதாவது வால்நட்ஸ். ஒருகாலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே இதனை சாப்பிட்டு வந்தார்கள். அப்படி அரச குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் (ALA) சிறந்த மூலமாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படும் ஒரே பருப்புவகை வால்நட்ஸ் ஆகும். அதிக கொழுப்பு பெரும்பாலும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது இதய நோய்களை ஏற்படுத்துகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன.
மூளை ஆரோக்கியம்
வால்நட்ஸில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பாலிபினால்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டை மெதுவாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடல் ஆரோக்கியம்
குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை எளிதாக்கவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகின்றன. வால்நட்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் வால்நட் சாப்பிடும் பெரியவர்களுக்கு குடலின் நுண்ணுயிர் உற்பத்தி அதிகமாக இருப்பதாகக் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன
புற்றுநோய் தடுப்பு
குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வால்நட்ஸில் காணப்படும் சேர்மங்களை கொண்டு யூரோலிதின் (தசைகளின் வலிமையை மேம்படுத்த உதவும் ) கலவையை உற்பத்தி செய்கின்றன. இந்த யூரோலிதின்கள் சில புற்றுநோய்களுக்கான ஆபத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்.
எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
அமெரிக்க விவசாயத் துறை பரிந்துரைப்படி, அமெரிக்காவில் வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதிகமாக எடுத்துக் கொண்டால் கலோரி அளவு அதிகமாகி விடும். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன. கலோரிகளைப் போலவே வால்நட்ஸில் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. வால்நட்டில் உள்ள ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள் நீண்டநேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் எளிதில் பசி எடுக்காது. மேலும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியத்தை தருகிறது.
எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?
வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற பச்சையாக எடுத்துக்கொள்ளவேண்டும். வாங்கும்போது உப்பு சேர்க்காததாக பார்த்து வாங்குங்கள். ஓட்மீலில் கலந்து சாப்பிடலாம்.
- மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம் நிறைந்தது.
- ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் நாடுகளில் பின்பற்றப்படும் பாரம்பரிய உணவுமுறை!
இதய நோய்களை தடுக்க பெரும்பாலும் மெடிட்டரேனியன் டயட் முறையை பின்பற்ற மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு காரணம் மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம், கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வலியுறுத்தும் உணவு முறையாகும். இது, ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நாடுகளில் பல காலங்களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய உணவு முறையாகும். நாளடைவில் இந்த டயட் பிற நாடுகளுக்கும் பரவி, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வகை உணவிலிருந்து கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
மத்தியத் தரைக்கடல் உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் குறைவாக இருப்பதற்கான சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
தூக்கம்
மத்தியத் தரைக்கடல் உணவுமுறை ஆரோக்கியமான தூக்கமுறைக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுமுறை தூக்கத்தை மேம்படுத்தும் என்றும், தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறதும் என்று கூறப்படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு
மத்தியத் தரைக்கடல் உணவில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகள் நிறைந்துள்ளன. இவை சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.
மன ஆரோக்கியம்
மத்தியத் தரைக்கடல் உணவுமுறை மன ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த உணவுகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கின்றன. மனச்சோர்வை குறைக்கின்றன.
நீரிழிவு நோய்
மத்தியத் தரைக்கடல் உணவைப் பின்பற்றுபவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் இந்த உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
எடை மேலாண்மை
உடல் எடையை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது.

சிவப்பு இறைச்சிக்கு பதில் உணவில் கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள்...
மத்தியத் தரைக்கடல் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். முதலில் உணவுமுறையில் பழங்களை சேர்க்க தொடங்குங்கள். பின்னர் ப்ரோக்கோலி அல்லது கேரட் போன்ற காய்கறிகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து தானிய வகைகளை உணவில் சேர்க்க தொடங்குங்கள். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு, பன்றி இறைச்சி) சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக மீன் மற்றும் மற்ற கடல் உணவுகளை சாப்பிடுங்கள். இந்த சிறிய மாற்றங்கள் காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
மெடிட்டரேனியன் டயட்டை ஃபாலோ செய்தால் தவிர்க்கவேண்டிய உணவுகள்
- அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
- வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா மற்றும் பிட்ஸா போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
- கொழுப்பு நிறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்.
- அதிகம் சோடியம் உள்ள உணவுகள்.
- நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் (மாட்டிறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் போன்றவை).
- பேஸ்ட்ரிகள், சோடாக்கள், மிட்டாய்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்.
- மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர்.
- மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும்.
புற்றுநோய் வருவதற்கான காரணிகள் என்ன? பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணங்கள் என்ன? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? ரஷ்யா கண்டறிந்த புற்றுநோய் தடுப்பூசி உண்மையில் பயனளிக்குமா? புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கியுள்ளார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கென்னி ராபர்ட்.
புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
செல்களின் அபரித வளர்ச்சிதான் புற்றுநோய். ஒரு செல்லின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுகோலில்தான் இருக்கவேண்டும். உடலில் ஒரு செல் அதிகமாக வளராமல் இருப்பதற்கும், நேர்க்கோட்டில் வளர்வதற்கும் ஒரு இயக்கமுறை உள்ளது. இந்த இயக்கமுறை கட்டுப்பாட்டை இழப்பதுதான் புற்றுநோய். புற்றுநோய் வர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மரபுரீதியானது. இரண்டாவது 'ஸ்போராடிக்'. திடீரென ஏற்படும் மரபணு மாற்றங்கள், உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் ஒரு தாக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வரும்.
மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணம் என்ன?
இயல்பாகவே ஹார்மோன் மாற்றங்களால் மார்பு வீக்கமடையும். இந்த ஹார்மோன் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதாவது சமநிலையை இழக்கும்போது மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே அதற்கான பயத்தை உண்டாக்கும். அநேக நேரங்களில் மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர். மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலி இல்லாத கட்டியாகத்தான் துவங்கும். வேர்க்கடலை அல்லது நெல்லிக்காய் அளவில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும். வலி இல்லாமல் வரக்கூடிய கட்டிகளை கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் வலியுடன் வரக்கூடிய கட்டிகள் புற்றுநோய் கட்டியாக இல்லாமல் இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
நீர்க்கட்டி, புற்றுநோய் கட்டியை வேறுபடுத்துவது எப்படி?
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தினமும் கைகளால் சுயமார்பு பரிசோதனை செய்யவேண்டும். ஏதேனும் மாற்றங்கள், அதாவது கட்டிகள், வீக்கம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும். அப்போது மருத்துவர் அது நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியாக என்பதை கூறிவிடுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட கட்டியா என்பதை கண்டுபிடிக்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் எனப்படும் எக்ஸ்-கதிர் சோதனையை செய்து என்ன கட்டி என்பதை கண்டறியலாம். இதுதான் முதல்படி.
ரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயை அறிய முடியுமா?
ரத்த பரிசோதனையை வைத்து புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான நடைமுறை என்பது இல்லை. இரத்த பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும். ஆனால் மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயை அடையாளம் காணலாம். மரபியல் ரீதியான அதாவது ஒருவருக்கு எந்த வயதில் புற்றுநோய் வந்ததோ, அவர்களின் சந்ததியினருக்கு அந்த வயதிலோ அல்லது அதற்கு 10 வருடங்களுக்கு முன்போ சில சோதனைகளை செய்து அவர்களுக்கு புற்றுநோய் வருமா என்பதை அறியமுடியும். ரத்தத்தில் தெரியக்கூடிய புற்றுநோய்கள் இருக்கின்றன.
அவற்றை சிஏ (CA-Cancer Antigen), CA-125 சோதனைகள் மூலம் அறியலாம். புற்றுநோயை உறுதிப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் இந்த சோதனை முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றுநோயின் ஆரம்பநிலையிலோ, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது சிகிச்சை முடியும்போதோ, நம் ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் ரத்த சிவப்பணுக்களுடன் சுழற்சியில் இருப்பதைதான் Circulating DNA cells என சொல்வோம். இந்த சோதனையை நாம் அனைவருக்கும் செய்யமுடியாது.
புற்றுநோய் இருந்து, பின்னர் முழுவதும் மறைந்து, பின்னர் மீண்டும் வந்து, சிகிச்சையை தொடரவேண்டும் என்பவர்களுக்கு மட்டும்தான் ரத்த பரிசோதனை எடுக்க அனுமதி உண்டு. மற்றபடி பொதுமக்களுக்கு ஒரு ரத்த பரிசோதனை மூலம் மட்டும் புற்றுநோய் உள்ளதா? இல்லையா என்பதை சொல்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
பெரும்பாலான புற்றுநோய்களுக்கு காரணிகள் உள்ளன. ஜீன்வழியாக தொடரும் புற்றுநோயை தவிர்க்க இயலாது. 8 மணிநேர தூக்கம், சரியான உடல்எடை, புகை மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது, உடல்பருமனை தவிர்ப்பது மூலம் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 9-14 வயதிற்குள் உள்ளோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியதன் மூலம் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறைந்துள்ளது. வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைபிடிப்பது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தாலே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தவிர்த்துவிடலாம். இவைதான் பொதுவாக தவிர்க்கவேண்டியவை.
'என்டரோமிக்ஸ்' போன்ற புற்றுநோய் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாதது ஏன்?
'என்டரோமிக்ஸ்' ஒரு mRNA தடுப்பூசி. விலங்குகளிடம் கோலோரெக்டர் கேன்சருக்கு இதை பயன்படுத்தி பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கான முழுமையான தகவல்கள் இன்னும் இல்லை. அவர்கள் வெளியிட்ட தரவுகள்படி ஆரம்பநிலையில் இதனால் பயன் உள்ளது. ஆனால் இது புற்றுநோய் வருவதை தடுக்குமா என்றால் தடுக்காது.
- ஆரம்ப நிலை சர்க்கரை நோயை, யோகா 100% குணமாகும்!
- விடியற்காலை 3-4.30 வரை யோகா பயற்சி செய்வது சிறந்த பலனை தரும்.
உண்மையில் யோகா என்றால் என்ன? தியானம் செய்தால் நமது மனம் மற்றும் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா? உடல்நலப் பிரச்சனைகள் சரியாகுமா? உள்ளிட்ட நம்மிடையே இருக்கும் சில பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார் யோகா பேராசிரியர் சந்துரு.
யோகம் என்றால் என்ன? யோகா என்றால் என்ன?
யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. ஜோதிடத்தில் நிறைய யோகங்கள் உள்ளன. யோக கலைகளில் யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். கலப்பிடுதல், ஒன்றோடு ஒன்று இணைவது எனக்கூறலாம். பரமாத்மாவோடு, ஜீவாத்மா ஒன்றிணைதல்தான் யோகா. அதற்காக செய்யக்கூடிய பயிற்சிகள்தான் யோக பயிற்சிகள். யோகா, உடல்நலம், மனநலத்தை நன்றாக வைத்துக்கொள்ளும். ஆத்ம பலம் கொடுக்கும். ஆனால் அதனுடைய இறுதி, இறைநிலையோடு இணைவதுதான். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்வோம்.
யோகா பக்தியுடன் தொடர்புடையதா?
யோகா பக்தியுடன் தொடர்புடையதுதான் என்று முழுமையாக சொல்லமுடியாது. இறைநிலை, யோகம் என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என சொல்லப்படுவதுண்டு. புறவழிப்பாடு, அகவழிப்பாடு, அகத்துள்ளேயே வழிபாடு என சொல்லப்படுகிறது. இவ்வாறு படிநிலைகள் பல உள்ளன. படிநிலைகள் பலவாக இருந்தாலும், முதல்படி பக்தி. உச்சப்படி ஞானம். இன்று யோகாவில் பெரியநிலைக்கு சென்றவர்கள் பக்திநிலையை மறைக்கிறார்கள். ஒருசிலர் பக்தியில் இருந்து வந்ததுதானே எனக் கூறுகிறார்கள்.
யோகாவிற்கு குருமார்கள் அவசியமா?
உலகில் இருக்கும் அனைத்து வித்தைகளுக்கும் குரு என்பவர் வேண்டும். குருவிடம் கற்றப்பிறகு நீங்கள் தனியாக செய்யலாம். ஆரம்பத்தில் குருவேண்டும்.
மனதை யோகாவால் கட்டுப்படுத்த முடியுமா?
எடுத்தவுடனேயே மனதை கட்டுப்படுத்த முடியாது. அலையும் எண்ணங்களை நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது. மன அலைச்சுழலை குறைக்கமுடியும். முறையான நீண்ட கால பயிற்சிக்குப்பின் மனதை கட்டுப்படுத்தலாம்.
உடல்நலத்திற்கு யோகா எந்தவிதத்தில் பயனளிக்கிறது?
சில ஆசனங்களை செய்ய வேண்டும். சிசுபால ஆசனம், பட்டர்ஃப்ளை ஆசனம் அவற்றில் முக்கியமானவை. இந்த இரண்டு ஆசனங்களையும் தினசரி செய்துவந்தால், முதுகு தண்டுவடம் நன்றாக இருக்கும். ஸ்ரீ ரவிசங்கரால் உருவாக்கப்பட்ட சுதர்சன கிரியா மூச்சுப் பயிற்சியை தினமும் மேற்கொள்ளலாம். உடலுக்கு நல்லது. இதனை எல்லோரும் செய்யலாம்.
எந்தவிதமான நோய்களை யோகா தடுக்கும்?
சிறுவயதில் இருந்தே ஒருவர் முறையாக யோகா செய்தால் எந்த நோயும் அவருக்கு வரவே வராது. மரணத்தையே வெல்லலாம் என சொல்கிறார்கள். சர்க்கரை, மன அழுத்தம் இருப்பவர்கள் யோகா செய்தால், அவை 100% குணமாகும். ஒருவேளை நோய் முற்றி இருந்தால், யோகா பயிற்சியின் மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு என்று உள்ள பயிற்சிகளை செய்தால், கண்ணாடியே போடவேண்டாம். ஆனால் அதனை தினமும் செய்யவேண்டும். உடற்பயிற்சியில் கண்பயிற்சிக்கென இரண்டு நிமிடங்களை ஒதுக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் செய்தாலே கண்ணாடி போட்டிருக்கும் அனைவரும் கண்ணாடியை எடுத்துவிடலாம். அதுபோல உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை இருக்கும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தவும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் யோகாவில் பயிற்சிகள் உள்ளன.
காலை வேளையில்தான் யோகா செய்ய வேண்டுமா?
யோகா, காலையில்தான் செய்யவேண்டும். அதுதான் சிறப்பு. உடற்பயிற்சி காலையில் செய்யவேண்டும். தியானம் விடியற்காலையில் செய்யவேண்டும். அனைவரும் 4.30 - 6 பிரம்மமுகூர்த்தம் சிறந்தது எனக் கூறுவார்கள். ஆனால் அதைவிட சிறந்தது 03 - 4.30 ரிஷிமுகூர்த்தம். அது அமைதியான நேரம். பெரும்பாலும் யாரும் அந்த நேரத்திற்கு எழுந்திருக்க மாட்டார்கள். 8 கோடி பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அதில் 8 லட்சம் பேர்தான் எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் எழுந்து, கண்ணைமூடி அமர்ந்து, குருமார்கள் எந்த தியானத்தை சொல்லிக் கொடுத்தார்களோ அதை செய்யவேண்டும். ஆரம்பத்தில் அரைமணிநேரம் செய்தாலும், மூன்று, நான்கு வருடங்களுக்கு பிறகு 1 மணிநேரம் தியானம் செய்யவேண்டும். தியானம், உடற்பயிற்சியை ஒரு 6 மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால், நமக்குள்ளே ஒரு உள்ளுணர்வு தோன்றும். நீங்கள் யாரிடமும் எதையும் கேட்கவேண்டிய அவசியமே வராது. தெளிந்த மனநிலை இருக்கும். தெளிவான சிந்தனை இருக்கும். ஒருவரை பார்த்தாலே அவரை எடைபோடும் தன்மை நமக்கு வந்துவிடும். தியானத்திற்கு அவ்வளவு சக்தி உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு யாரும் தியானம் செய்வதில்லை.
- வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும்.
- குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும்.
மழை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சி நிலைக்கு மாறிவிடும். அந்த குளிர் நீரில் குளியல் போடுவதற்கு பலரும் விரும்புவார்கள். ஆனால் குளிர்ந்த நீரை விட சுடு நீரில் குளியல் போடுவதுதான் மழைக்காலத்திற்கு சிறந்தது என்று ஒரு சிலர் கருதுவார்கள். இந்த இரண்டு குளியல் முறையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுடு நீர் குளியல்:
தண்ணீரை சூடுபடுத்தி மேற்கொள்ளும் இந்த குளியல் மூலம் வெளிப்படும் வெப்பம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
தசை வலி, மூட்டு வலியை குறைக்க உதவும்.
வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும். அதில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் தன்மை மற்றும் நச்சுக்களை நீக்குவதை எளிதாக்கும்.
தூங்க செல்வதற்கு முன்பு சுடுநீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். பின்னர் உடல் குளிர்ச்சி நிலைக்கு மாற்றமடையும்போது தூக்கத்தை வரவழைக்கும். நன்றாக தூங்குவதற்கு வழிவகை செய்யும்.
குளிர் நீர் குளியல்:
குளிர்ந்த நீர் நரம்பு மண்டலத்தை தூண்டி சுவாசத்தின் வழியே ஆக்சிஜனை உள்ளிழுப்பதை அதிகரிக்க செய்யும். உடலுக்குள் ஆக்சிஜன் செயல்பாட்டை மேம்படுத்தும். காலையில் சீக்கிரம் எழுவதற்கு வழிவகுக்கும்.
இந்த குளிர் குளியல் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தலாம். ரத்த நாளங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும். உடற்பயிற்சி செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்த பலனை அளிக்கும்.
- தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம்.
- தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது.
தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம். அதுவும் எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை ஆகிய மூன்றையும் ஒரேநேரத்தில் எடுத்துக்கொள்வோம். இவற்றால் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் வயிற்று உப்புசம், திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இவற்றை சரிசெய்ய மருத்துவ குணங்கள் கொண்ட, எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் தீபாவளி லேகியம் குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்
தீபாவளி லேகியப்பொடி
வெல்லம்
தேன்
நெய்
இஞ்சி
நல்லெண்ணெய்
செய்முறை
கடையில் தீபாவளி லேகிய மருந்து பொடி கிடைக்கும். அந்தப்பொடியை வைத்து தீபாவளி லேகியம் செய்வது எப்படி என பார்ப்போம். கடையில் கிடைக்கும் தீபாவளி லேகியப்பொடியை 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப 100 கிராம் இஞ்சி எடுத்துக்கொண்டு, அதன் தோலை நன்றாக சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக இஞ்சியை வெட்டி, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த சாற்றை அரைமணிநேரம் அப்படியே வைக்கவேண்டும். அதன் அடியில் வெள்ளை நிறத்தில் தண்ணீர் படியும். கீழே படிந்ததை விட்டுவிட்டு, மேலே நிற்கும் இஞ்சி தண்ணீரை தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், 200 கிராம் வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சுவது போல் கரைக்க வேண்டும். வெல்லம் சூட்டில் கரைந்தபின் அதில், எடுத்துவைத்துள்ள இஞ்சித்தண்ணீரை ஊற்றவேண்டும். பின்னர் லேகியப்பொடியையும் சேர்க்கவேண்டும். அந்தக் கலவையை தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கலவை கெட்டியாக மாறும்போது, கொஞ்சம் சொஞ்சமாக இடையிடையே நெய் மற்றும் நல்லெண்ணெயை சேர்க்க வேண்டும். வேண்டுமானால் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். கலவை, அல்வா பதத்திற்கு வந்தபின் இறக்கி ஆறவைக்க வேண்டும். நன்கு ஆறியபின், அதனை உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளலாம். தீபாவளி லேகியம் ரெடி.

பல்வேறு மூலிகைப் பொருட்களை உள்ளடக்கியதுதான் தீபாவளி லேகியம்
தீபாவளி லேகியத்தின் நன்மைகள்...
தீபாவளி மழைக்காலத்தில் வரும். அப்போது ஏற்படும் சளி, இருமல் பிரச்சனைக்கு இந்த லேகியம் நல்ல பலனைத்தரும். தீபாவளியின் போது நாம் எடுத்துக்கொள்ளும் எண்ணெய் பலகாரங்கள், உணவுகள் செரிமானக் கோளாறுக்கு வழிவகுக்கும். அப்போது இந்த லேகியம், செரிமான பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது. தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. இது கடைகளில் கிடைக்கும் என்றாலும் வீட்டில் தயாரிப்பது ஆரோக்கியமானது.
- மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
- ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?
கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.
"டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?
ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.
அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?
மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.
ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?
பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.
ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.
கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?
முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.
விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?
இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.
கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?
முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.
- குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள்.
- கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும்.
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான். பட்டாசுக்களை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் பட்டாசுக்களை வெடிக்கும்போது கட்டாயம் பின்பற்றவேண்டியவை பற்றி தெரிந்து கொள்வோம்.
* பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி தண்ணீர், முதலுதவி பெட்டியை உடன் வைத்திருங்கள்.
* வெடிக்கும் பட்டாசுகளை கையில் வைத்து தூக்கி எறியக் கூடாது.
* அருகில் தீப்பற்றும் எந்த பொருட்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
* பட்டாசுகளை வெடிக்க திறந்தவெளி பகுதியை தேர்ந்தெடுங்கள்.
* குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள்.
* வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும்.
* வெடித்த பட்டாசுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு வாளி தண்ணீரில் மூழ்க வைக்கவும்.
* நல்ல தரமான, உரிமம் பெற்ற பட்டாசுகளை வாங்கவும், தரத்தில் சமரசம் செய்ய வேண்டாம்.
* கால்களை முழுவதும் மூடும் காலணிகள் பயன் படுத்துங்கள். ஷூ பயன்படுத்துவது காலில் காயம் ஏற்படுவதை தடுக்கும்.
* கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும்.

* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பட்டாசுகளுக்கு அருகில் அனுமதிக்காதீர்கள். மற்ற வயது குழந்தைகளை அவர்களாகவே பட்டாசுகளை பற்றவைக்க அனுமதிக்காதீர்கள்.
* பட்டாசுகளை வெடிக்க நீண்ட பத்தியை பயன்படுத்தவும். பட்டாசுகளை பற்ற வைக்கும்போது முகத்தை பட்டாசுகளுக்கு அருகில் வைத்திருக்க வேண்டாம். குறிப்பாக குனிந்து பட்டாசு பற்றவைப்பதை தவிர்க்கவும்.
* ஒருபோதும் சீரற்ற முறையில் பட்டாசுகளை வீசாதீர்கள். ஒன்றுக்கு மேல் பட்டாசுகளை ஒன்றிணைத்து பற்ற வைக்காதீர்கள்.
* நைலான், பட்டு, சிந்தட்டிக் உடைகளை அணிய வேண்டாம். ஏனெனில் அவை விரைவாக தீப்பிடிக்கும். தீப்பிடிக்கக்கூடிய தளர்வான ஆடைகளையும் அணியாதீர்கள்.
* வீட்டின் உட்புறத்திலோ அல்லது வாகன நிறுத்துமிட பகுதியிலோ ஒருபோதும் பட்டாசுகளை பற்றவைக்காதீர்கள்.
* பெரிய தீக்காயங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரின் ஆடையை அகற்றி, அவர் மீது போர்வை போர்த்துங்கள்.
* கண்ணில் தீக்காயம் ஏற்பட்டால் கண்ணை அழுத்தி தேய்க்காதீர்கள். அது காயத்தை அதிகப்படுத்திவிடும்.
* பட்டாசு வெடித்த தீக்காயத்தின் மீது பற்பசை, எண்ணெய், மஞ்சள் தூள், மை தடவக்கூடாது. குளிர்ந்த நீரையோ, ஐஸ் கட்டியையோ கொண்டு ஒத்தடம் கொடுக்கக்கூடாது. தண்ணீரில் 10 நிமிடங்கள் கழுவி விட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
* பட்டாசுகளை பற்றவைக்கும்போது உங்கள் பாக்கெட்டில் பட்டாசுகளை வைத்திருக்கக்கூடாது.
* மின் கம்பங்கள் அல்லது கம்பிகளுக்கு அருகில் ஒரு போதும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
* பட்டாசு ஒருமுறை வெடிக்கவில்லை என்றால் மீண்டும் நெருப்பு பற்றவைக்க முயற்சிக்கக்கூடாது.
- வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.
- இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலருக்கும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இனிப்புகள், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகள். நம் வீடுகளில் சாப்பிடுவது மட்டுமின்றி, உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கொடுப்பதையும் தவிர்க்க இயலாது. தீபாவளி, கண்டிப்பாக இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது. ஆனால் தீபாவளி திண்பண்டங்களால் எடைக்கூடாமல் இருக்கவேண்டுமானால், கீழே குறிப்பிட்டுள்ளவற்றை கவனத்தில்கொண்டு சாப்பிடுங்கள்.
இனிப்புக்கு முன் புரதம் அல்லது நார்ச்சத்து
இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கும். இதனால் இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.
நீரேற்றம்
விழாக்காலங்களில் நமது கவனம் முழுவதும் கொண்டாட்டத்தில்தான் இருக்கும். வேளைக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதையே மறந்துவிடுவோம். அம்மா சுடும் வடை, வீட்டில் இருக்கும் இனிப்பை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்வோம். தண்ணீரும் போதுமான அளவு எடுத்துக்கொள்ளமாட்டோம். அதனால் எடை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். இதுவும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால் மற்ற திண்பண்டங்களை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டோம்.
சாப்பிட வேண்டுமா?
தீபாவளி என்பதால் உறவினர்கள் வீட்டிற்கு அதிகம் செல்லவேண்டியிருக்கும். அவர்களும் பாசத்தில் நிறைய உணவுகளை எடுத்துவந்து சாப்பிட கொடுப்பார்கள். அதை சாப்பிடுவதற்கு நம் வயிற்றில் இடமே இருக்காது. இருப்பினும் அவர்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக எடுத்துக்கொள்வோம். அதை செய்யவேண்டாம். உண்மையில் உங்களுக்கு சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடலாம் என தோன்றினால் மட்டும் சாப்பிடுங்கள். அவர்கள் கொடுத்த அன்பிற்காக துளி அளவு மட்டும் எடுத்து சாப்பிட்டால் போதுமானது. வயிறு நிரம்பியிருக்கும்போது அடுத்தடுத்து உணவை உள்ளே செலுத்தாதீர்கள்.

அதிகளவு இனிப்பு பலகாரங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்
திரையை தவிர்க்கவும்
சாப்பிடும்போது டிவி பார்த்துக்கொண்டு அல்லது ஃபோனில் பேசிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் டிவி பார்க்கும்போதோ அல்லது ஃபோனில் பேசும்போதோ நமது கவனம் உணவில் இருக்காது. கவனச்சிதறல், உட்கொள்ளல் அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுங்கள்.
உடற்பயிற்சியை தொடரவும்
விடுமுறை என்றாலே நமக்கு ஓய்வுதான். அதுவும் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உணவுகள் அதிகரிக்கும்போது உடற்பயிற்சி தவிர்க்கப்படுகிறது. இது எடை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கூடுதல் முயற்சிகள் இல்லாமல், அதே எடையை நிர்வகிக்க உதவும் ஒரு மிகப்பெரிய வழியாகும்.
ஆரோக்கியமாக இருப்பதும், குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் நினைவுகளை போற்றுவதற்கான மற்றொரு வழியாகும். எனவே, இந்த தீபாவளியில் ஒரு சில எளிய முயற்சிகளை எடுப்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- இந்திய நகர்ப்புறங்களில் இனிப்பு உண்ணும் வீதம் கடந்த 18 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
- ஒவ்வொரு பண்டிகை நாளிலும் ‘அளவுக் கட்டுப்பாடு' முக்கியம்.
நீரிழிவு நோயை தடுக்க இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகளை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் கடந்த 2023-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 2021-ம் ஆண்டிலேயே இந்தியாவில் 10.1 கோடி நீரிழிவு நோயாளிகள், 13.6 கோடி முன்-நீரிழிவு நோயாளிகள் மற்றும் 31.5 கோடி உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் 'லோகல் சர்கிள்ஸ்' என்ற நிறுவனம் நடப்பு ஆண்டு நடத்திய ஆய்வில், 74 சதவீத நகர்ப்புற குடும்பத்தினர் மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் இனிப்புகளை உண்கிறார்கள் எனவும், திருவிழா காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதுதவிர 5 சதவீதம் பேர் தினமும் சர்க்கரை உட்கொள்கிறோம் என்றும், 26 சதவீதம் பேர் மாதத்திற்கு 15 முதல் 30 முறை வரை சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 43 சதவீதம் பேர் தங்களின் குடும்பத்தில் பெரும்பாலானோர் ''சர்க்கரை அடிமைகள்'' என்று கூறியுள்ளனர். அதேசமயம், 70 சதவீதம் பேர் ''சர்க்கரை அளவு 30 சதவீதம் குறைந்த மாற்று தயாரிப்புகள் கிடைத்தால் அவற்றை பயன்படுத்துவோம்'' எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டாக்டர்கள், நிபுணர்கள், தீபாவளி பண்டிகையால் இந்தியாவில் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவு அதிகரித்து உள்ளது என்றும், அதனால் நீரிழிவு மற்றும் முன் நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்திய நகர்ப்புறங்களில் இனிப்பு உண்ணும் வீதம் கடந்த 18 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது நகர்ப்புறங்களில் 10 குடும்பங்களில் 7 குடும்பங்கள் இனிப்புகளோடு சாக்லெட், பிஸ்கட், கேக் போன்ற இனிப்புகளையும் அடிக்கடி உண்பதாக தெரியவந்துள்ளது. தீபாவளி என்றாலே இனிப்புகள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், கேக்குகள் போன்ற சர்க்கரை நிறைந்த உணவுகளை தான் மக்கள் அதிகம் எடுத்து கொள்கின்றனர்.
இதோடு இறைச்சி வகைகள் மற்றும் பிரியாணியும் முக்கிய உணவாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தீபாவளி காலத்தில் நீரிழிவு நோயாளிகளில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி இனிப்புகளை அதிக அளவில் எடுத்து கொள்வதுதான்.
சமீபகாலமாக சிலர் இனிப்புகளுக்கு பதிலாக பாதாம், முந்திரி போன்ற பருப்புகளை பரிசாக வழங்க ஆரம்பித்து உள்ளார்கள். இது நல்ல முன்னேற்றம். உப்பு இல்லாத பருப்புகள் நல்லது. இனிப்புகளை ஒப்பிடும்போது இது மிகச்சிறந்தது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மகிழ்ச்சியோடு இனிப்புகளை அனுபவிப்பது தவறு அல்ல.
ஆனால் அவற்றை அளவுக்கு மிஞ்சாமல் எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனமான வழி. இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு பண்டிகை நாளிலும் 'அளவுக் கட்டுப்பாடு' முக்கியம். திருவிழாக்கள் மகிழ்ச்சியை தரட்டும். ஆனால் நோய்களை அல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






