என் மலர்
பெண்கள் உலகம்
- இந்த பேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
- பேஸ் பேக், சரும எரிச்சலைப் போக்கி, சருமத்துக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.
தற்போதைய குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், சருமத்தில் ஈரப்பசை வேகமாக நீங்கி, வறட்சி ஏற்படுகிறது. இந்நாட்களில் உண்டாகும் பொதுவான பிரச்சனை தான் இது.
இந்த சரும வறட்சியைப் போக்க தினம் தவறாமல் மாய்சரைசரை பயன்படுத்த வேண்டும். அதேசமயம் முகத்துக்கு ஒரு சில 'பேஸ் பேக்'குகளையும் போட வேண்டும்.
இதனால் சரும வறட்சி தடுக்கப்படுவதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் 'பளிச்'சென்று பிரகாசமாக ஆகும்.
இந்த விஷயத்தில், கற்றாழை வெகுவாக உதவும். கற்றாழையைக் கொண்டு அடிக்கடி பேஸ் பேக் போடும்போது சருமம் நீரேற்றத்துடனும், மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
கற்றாழையைப் பயன்படுத்தி பேஸ் பேக்குகள் தயாரிக்கும் விதம்...
பேஸ் பேக் 1:
இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1 ஸ்பூன் கிரீம் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
பேஸ் பேக் 2:
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் ½ ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக், சருமத் தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தை ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
பேஸ் பேக் 3:
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், சிறிது பாலில் ஊற வைத்த 4-5 குங்குமப்பூ இதழ்களுடன், ½ டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
பேஸ் பேக் 4:
இந்த பேஸ் பேக்குக்கு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக், சரும எரிச்சலைப் போக்கி, சருமத்துக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கும்.
- பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும்.
- காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.
* வேகவைத்த கேரட் அல்லது பரங்கிக்காய், பாதி வறுத்த துவரம் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி தயாரித்தால் ருசி அபாரமாக இருக்கும்.
* பழைய சாதத்தை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ரவை, மைதா கலந்து கடுகு, மிளகாய், வெங்காயம் தாளிதம் செய்து வார்க்கும் தோசை புது மாதிரியாக இருக்கும்.
* கோதுமை மாவு ஒரு கப், மைதா மாவு அரை கப், வறுத்த உளுந்தம்மாவு ஒரு ஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் வெடிக்காது. எண்ணெய்யும் குடிக்காது.
* கத்தரிக்காய். வெண்டைக்காய், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் என எந்த பொரியலுக்கும் சிறிது சீரகப்பொடியை பச்சையாக தூவி இறக்கி விடுங்கள். பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும். தேங்காய் சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
* இஞ்சியை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் இஞ்சி சாற்றை கலந்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கிவிடவும். ஊறுகாய் போல ருசியாக இருப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
* சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன்பு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்புப்போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து, சுவையாகவும் இருக்கும்.
*வடித்த சுடு கஞ்சியில் நறுக்கிய வாழைப்பூவை போட்டு விட்டால் வாழைப்பூவில் உள்ள பால் கஞ்சியில் கலந்து விடும். பிறகு பூவை சுத்தமாக அலசி எடுத்துக்கொள்ளலாம்.
* காய்கறிகள் லேசாக வாடிப்போய் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்திடுங்கள். அதில் காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.
* வாழைத்தண்டை சிறிதாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கடுகை இடித்து சேர்த்து புளிக்காத தயிரும் கலந்து சாலட்டாக மாற்றி சுவைக்கலாம்.
* 50 கிராம் புதினாவை காய வைத்து இடித்து தூளாக்கி அதனை 10 கிலோ அரிசியில் தூவி வையுங்கள். வண்டு விழாது. சோற்றுக்கும் நல்ல சுவை கிடைக்கும்.
* தேங்காய் பால் பிழிந்தெடுத்த பின்பு அந்த துருவலை வைத்து துவையல் அரைக்கலாம். காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுந்தம் பருப்பு போன்றவைகளை வறுத்து புளியும் சேர்த்து அரைக்க வேண்டும். உப்பும், கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* புட்டு வேக வைத்த பின்பு, குழாயில் இருந்து அதை எளிதாக எடுக்க வேண்டுமானால் முதலிலே குழாயின் உள்ளே சிறிதளவு நெய்யை சேர்த்து விடுங்கள். புட்டு அதிக ருசியாகவும் இருக்கும்.
* சூடான பானங்களை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றுவதற்கு முன்னால் டம்ளரின் அடியில் ஒரு துணியை போடுங்கள். எவ்வளவு சூடான திரவத்தை ஊற்றினாலும் கண்ணாடி டம்ளர் உடையாது.
- முழு தானியங்கள் ஊற வைத்து சாப்பிடுவதால், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதால் எண்ணெயில் வறுக்க கூடாது.
- முழு தானியங்களை ஊற வைக்காமல் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
குயினோவா அல்லது தினை போன்ற முழு தானியங்களை ஊற வைத்து சாப்பிடுவது ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்களை நீக்கி உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச அனுமதிப்பதோடு மென்மையாகவும், ஜீரணிக்க எளிதாகவும் ஆக்கும் என்பதால் சாப்பிடுவதற்கு முன்பு முழு தானியங்களை ஊற வைக்க வேண்டும்.
முழு தானியங்கள் ஊற வைத்து சாப்பிடுவதால், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பதால் எண்ணெயில் வறுக்க கூடாது. முழு தானியங்களை ஊற வைக்காமல் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்ஸ் மற்றும் விதைகள் கொட்டைகள் மற்றும் பாதாம் போன்றவற்றை ஊற வைப்பது அவற்றில் உள்ள பைடிக் அமிலத்தைக் குறைத்து நொதிகளை செயல்படுத்துவதோடு, எளிதாக ஜீரணிக்கச் செய்து, அவற்றின் ஊட்டச்சத்துக்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. ஊற வைத்த பாதாம், பச்சை கொட்டைகள் மற்றும் விதைகளுடன் ஒப்பிடும் போது ஜீரணிக்க எளிதாக இருப்பதால், நட்ஸ் மற்றும் விதைகள் கொட்டைகளை ஊற வைத்தே சாப்பிட்டு பழகுங்கள்.
- தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது.
- ஊறுகாயாக தயாரித்தும் ருசிக்கலாம்.
நெல்லிக்காயில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பன்னீர் நெல்லிக்காய், மினி ஆப்பிள் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் இது பெல் ஆப்பிள், வேக்ஸ் ஆப்பிள், ஜாவா ஆப்பிள், ரோஸ் ஆப்பிள், லவ் ஆப்பிள், வாட்டர் ஆப்பிள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பில்லாந்தேசி குடும்பத்தை சேர்ந்தது. இதன் விதைகள் கரும்பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலை பிரதேசங்களில் அதிகம் விளைகிறது.
ஊட்டச்சத்து:
இந்த நெல்லிக்காயில் நார்ச்சத்து வைட்டமின்கள் ஏ, பி1, சி, ஈ மற்றும் கனிமங்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
நன்மைகள்:
* ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
* கண் பார்வையை மேம்படுத்தும்.
* சளி இருமலை குறைக்கும்.
* முடி வளர்ச்சிக்கு உதவும்.
* கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எப்படி சாப்பிடலாம்?
பன்னீர் நெல்லிக்காயை தேன் அல்லது பன்னீருடன் கலந்து சாப்பிடலாம். ஊறுகாயாக தயாரித்தும் ருசிக்கலாம். பன்னீர் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் எடையை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
- முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும்.
- மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.
சமையலறையில் வேலை செய்யும் போது, மனதில் கொள்ள வேண்டிய பல சிறிய குறிப்புகள் உள்ளன. இவை சமையலறை வேலைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உணவின் சுவையையும் அதிகரிக்கின்றன. உங்களுக்கு பல சமையலறை குறிப்புகளைப் பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த சமையல் குறிப்புகள் உங்கள் சமையலை எளிதாக்கும் மற்றும் சிறந்த சுவையை அளிக்கும்.
* முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும். எனவே நீங்கள் முட்டையை எண்ணெயில் சேர்க்கும் போதெல்லாம், முதலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும், பின்னர் முட்டையைச் சேர்க்கவும். இது முட்டை வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டாமல் தடுக்கும்.
* உருளைக்கிழங்கு அதிகமாக வேகாமல், கொதிக்கும் போது வெடிப்பதைத் தடுக்க விரும்பினால், உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் வினிகரைச் சேர்க்கவும்.
* தக்காளி வதக்குவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, தக்காளியின் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இது அவை வேகமாக வேகவும், வதக்கவும் உதவும்.
* கடாயில் மசாலாப் பொருட்கள் கருகினால், உடனடியாக ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும். அவ்வாறு செய்வதால் மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.
* ஒரு முட்டை புதியதா என்பதைக் கண்டுபிடிக்க, அதை தண்ணீரில் போடுங்கள். மூழ்கினால், அது புதியது. அது மிதந்தால், பழையது.
* பக்கோடாவை மொறுமொறுப்பாக செய்ய விரும்பினால் உருண்டைகள் மிகவும் மொறுமொறுப்பாக இருக்க, சிறிது அரிசி மாவை கடலை மாவுடன் கலக்கவும். இது உருண்டைகளை இன்னும் மொறுமொறுப்பாக மாற்றும்.
* எந்த காய்கறி போட்டு குழம்பு செய்தாலும் கெட்டியாகவில்லை என்றால், ஒரு ஸ்பூன் வறுத்த கடலை மாவைச் சேர்க்கவும். இது குழம்பு கெட்டியாக வைக்க உதவும்.
- அதிக நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு, இதயத் தசைகள் விறைப்பாகின்றன.
- நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதும், அதிக நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதும் இதய ஆரோக்கியத்துக்கு அவசியமானது.
நம் உடம்பு ரத்த ஓட்டத்தின் மையமாக உள்ள இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம். அதற்கு சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும், ஒரு பழக்கத்தைக் கைவிட வேண்டும் என இதய சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதய ஆரோக்கியத்தைக் காக்க உணவுகள் மட்டும் போதாது. நல்ல உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். ஆனால் நல்ல உடல் செயல்பாடுகளே நீண்ட ஆயுளுக்கு அடிகோலும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.
நீண்டநேரம் படுத்த நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு இதயத்தில் ரத்தம் 'பம்ப்' செய்யப்படும் செயல்திறன் குறைவாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய வலிமை அதிகரிக்கும். நாள் முழுக்க உடலியக்கத்துடன் இருக்க இயலாவிட்டாலும், அதிக நேரம் அமர்ந்தே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அமர்ந்த வாழ்க்கை முறை, இதய ஆரோக்கியத்துக்கு எதிரானது. அதிக நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு, இதயத் தசைகள் விறைப்பாகின்றன. இதனால் நெகிழ்ச்சித்தன்மை குறைகிறது. நாளடைவில் இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதும், அதிக நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதும் இதய ஆரோக்கியத்துக்கு அவசியமானது.
உடற்பயிற்சி செய்வது, இதய செயல்பாட்டுக்கு நேரடியாக நன்மை செய்யக்கூடியது. இது இதய தசைகளை வலுப்படுத்துகிறது. அன்றாட ஏரோபிக் உடற்பயிற்சிகள், இதயத் தசைக்கு நெகிழ்ச்சித்தன்மை, வலிமையை அளிக்கின்றன.
இதனால் ஆயுள் அதிகரிக்கும் வாய்ப்பு கூடுகிறது. உடல் செயல்பாடு, இதயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அமர்ந்து பணிபுரிபவர்கள், ஒவ்வொரு 30 நிமிடம் அல்லது ஒரு மணிநேரத்தில் எழுந்து, 5 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம். இது இதய வலிமையைப் பராமரிக்க உதவும். இந்த ஒரு பழக்கத்தை பின்பற்றினாலே இதயநோய் வாய்ப்பு வெகுவாகக் குறையும்.
ஓர் ஆய்வில், வாரத்துக்கு 4 முதல் 5 முறை தீவிர உடற்பயிற்சி செய்தவர்களின் இதயம், 20 வயதுக்குள் இருப்பவர்களின் செயல்திறனை ஒத்து இருந்தது.
மாறாக, உடற்பயிற்சிகளே செய்யாதவர்கள் எந்த நல்ல மாற்றங்களையும் காட்டவில்லை. உடற்பயிற்சி செய்வது எந்த வயதிலும் இதயத்தைப் பராமரிக்க
உதவும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கும் முன் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற மிதமான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் கூட போதும். அதேநேரம், வாரத்தில் ஒன்றிரண்டு முறை தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.
படிக்கட்டுகளில் ஏறுதல், குறுநடை என எந்த ஓர் உடலியக்கமும் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
முடிந்தவரை நமது வேலைகளை நாமே பார்த்துக் கொள்வதும், எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதும், இதய நோய்கள் நம்மை நெருங்காமல் தடுக்கும்.
- சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.
- சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.
* குட்டீசுக்கு வாங்கின பிஸ்கட்டுகள் மீந்து நமுத்துவிட்டதா?அவற்றை மிக்சியில் போட்டு பொடித்து, பால், சர்க்கரை, கிரீம், முந்திரி சேர்த்து, பிரிட்ஜில் வைத்து நல்ல ஐஸ்கிரீமாக பரிமாறலாம்.
* காலையில் செய்த ரவை உப்புமாவுடன் கரம் மசாலா சேர்த்து, பிரெட் துண்டுகள் இடையே உப்புமாவை நிரவி, 'டோஸ்ட்' செய்து சாண்ட்விச்சாக சுவைக்கலாம்.
* சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.
* கறி வகைகள் மீதமானால் வாணலியில் சீரகம், தக்காளி, வெங்காயம் வதக்கி, உடன் மீந்த காய்கறியையும் சேர்த்து மிக்சியில் அரைத்து துவையலாக்கலாம். சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.
* மீந்த சப்பாத்திகளை ரிப்பன் போல் வெட்டி எண்ணெயில் பொரித்து, சிறிது காரம், உப்பு சேர்த்து ஸ்னாக்ஸ் போல் மாலை வேளையில் தரலாம்.
- இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
- இவை அனைத்தும் உங்கள் தூக்கம் போதுமான அளவு ஆழமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.
தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது உடலின் ஒரு அத்தியாவசிய செயல்முறையாகும். தூக்கத்தை ஓய்வு நேரமாக நாம் நினைக்கிறோம், ஆனால் இந்த நேரத்திலும் கூட, உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். தூக்கத்தின் போது, உடல் ஆற்றலைச் சேமிக்கிறது, செல்களை சரிசெய்கிறது, மூளை நினைவுகளை ஒழுங்கமைக்கிறது. அதனால்தான் தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
எட்டு மணி நேரம் முழுமையாகத் தூங்கியும், சோர்வாக, தலைச்சுற்றலாக, சோம்பலாக உணர்ந்தால், அது வெறும் தூக்கமின்மை மட்டும் காரணம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
8 மணி நேரம் தூங்கிய பிறகும் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?
இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பலர் 8 மணிநேரம் முழுமையாக தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக உணர்கிறார்கள். கண்கள் திறந்தாலும், மனம் கனமாகவே இருக்கும், உடல் சோம்பலாகவே இருக்கும், நாளின் தொடக்கமே பாரமாகத் தெரிகிறது. பெரும்பாலும் மக்கள் இதை மன அழுத்தம் அல்லது வேலை அழுத்தம் என கருதுகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் வேறு ஒன்று. இதற்கு மிகப்பெரிய காரணம் தூக்கக் கோளாறு. இதன் பொருள் நீங்கள் இரவில் பல முறை எழுந்தாலும், அதை நீங்கள் உணரவில்லை. இதன் காரணமாக, தூக்கம் முழுமையாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் அதன் தரம் மோசமாக உள்ளது.
மோசமான தூக்கத்தின் அறிகுறிகள்
தூக்கம் மோசமாக இருப்பதற்கான சில அறிகுறிகள் சோர்வாக எழுந்திருத்தல், பகலில் மூளை மூடுபனி, மதியம் திடீரென சக்தி குறைந்து போதல், சாதாரணமாக உணர காஃபின் தேவைப்படுதல் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் உங்கள் தூக்கம் போதுமான அளவு ஆழமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.
தூக்கத்தைக் கெடுக்கும் பழக்கங்கள்
இரவு நேர காஃபின், மது, கனமான உணவு மற்றும் படுக்கையில் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துதல் ஆகியவை தூக்கத்தின் மிகப்பெரிய எதிரிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரகாசமான விளக்குகள் மற்றும் ஸ்க்ரோலிங் ஆகியவை மூளையை தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன, ஆழ்ந்த தூக்கத்தைத் தடுக்கின்றன.
இரவில் தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கனமான இரவு உணவு செரிமானத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது உடல் முழுமையாக ஓய்வெடுப்பதைத் தடுக்கிறது, இதனால் அடிக்கடி தூக்கக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, காலையில் நீங்கள் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்கிறீர்கள்.
சிறந்த தூக்கத்திற்கு மருத்துவரின் ஆலோசனை
படுக்கைக்கு 8 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் பயன்பாட்டைக் குறைத்தல், படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவு உட்கொள்வது, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் படுக்கையறையை குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் வைத்திருப்பது ஆகியவை அடங்கும்.
தொலைபேசியிலிருந்து தூரம் அவசியம்.
உங்கள் தொலைபேசியை படுக்கைக்கு எடுத்துச் செல்வது தூக்கத்தின் தரத்திற்கு மிகப்பெரிய தீங்குகளில் ஒன்றாகும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்கத்திற்கு அவசியமான மெலடோனின் என்ற ஹார்மோனை அடக்குகிறது.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தபோதிலும் சோர்வு தொடர்ந்தால், அது தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஓய்வற்ற கால் நோய்க்குறி, மன அழுத்தம், மருந்துகள் அல்லது இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மேலும் குறிப்பிட்ட தகவலுக்கு நீங்கள் மருத்துவரை அணுகலாம்.
- இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது.
- புரோக்கோலி தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
பூங்கொத்து வடிவில் காட்சியளிக்கும் புரோக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறியப்படுகிறது.
இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவில் இருந்து இதற்கு பெயர் சூட்டப்பட்டது. தோற்றத்தில் காலிபிளவரை ஒத்திருக்கும். பூவாக மலரும் பகுதி பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். புரோக்கோலி குளிர் தட்பவெப்பநிலையில் வளரக்கூடியது. அதனால் கோடை காலத்தில் வளராது. இதை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கும். இதில் வைட்டமின்கள் சி. கே. பி9 மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகிறது. இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
- தினமும் புஷ்-அப் செய்வது உடலை நேராக வைத்திருக்க உதவும், முதுகெலும்பு சார்ந்த தசைகளை செயல்படுத்தும்.
- தண்டாலானது வயிறு மற்றும் முதுகெலும்பு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தண்டால் அல்லது 'புஷ்-அப்' என்பது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் செய்யக்கூடிய மிக எளிய உடற்பயிற்சி. கைகள், மார்பு பகுதிக்கு வேலை கொடுக்கும் இந்த உடற்பயிற்சியை தினமும் சரியான முறையில் செய்து வந்தால் கைகள், கால்கள், தொடை, இடுப்பு என ஒட்டுமொத்த உடல் தசைகளும் வலுப்பெறும். தினமும் தண்டால் எடுப்பதால் தசைகள் வலுவடைவது மட்டுமின்றி வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அவை குறித்து...
எடை இழப்பு:
தினமும் புஷ்-அப் செய்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும், உடலில் இருக்கும் கொழுப்பு குறையத் தொடங்கும். இந்த உடற்பயிற்சியை குறைந்த நேரத்தில் செய்தாலும் அதிக கொழுப்பை எரிக்க உதவும். எனவே எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.
ஆற்றல் அதிகரிப்பு:
நாளின் தொடக்கத்தை உற்சாகமான உடற்பயிற்சியுடன் தொடங்கினால் எண்டோர்பின், டோபமைன் போன்ற நல்ல ஹார்மோன்கள் வெளியிடப்படும். இதனால் நாள் முழுவதும் மனஅழுத்தம் இல்லாமல் மனநிலை நன்றாக இருக்கும்.
தோரணை மேம்பாடு:
தினமும் புஷ்-அப் செய்வது உடலை நேராக வைத்திருக்க உதவும், முதுகெலும்பு சார்ந்த தசைகளை செயல்படுத்தும். மேலும், உட்காரும், நடக்கும் நிலை மேம்படும். கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
முதுகு தசைகளுக்கு பலம்:
தண்டாலானது வயிறு மற்றும் முதுகெலும்பு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முதுகுத் தசைகள் பலப்பட்டு, முதுகு வலி குறையும்.
தோள்பட்டை, மார்பு பகுதியில் வலிமை:
தினமும் புஷ்-அப் செய்து வந்தால் உங்களது தோள்பட்டை மற்றும் மார்பு தசைகள் வலுப்படும். வலுவான தோள்கள் மற்றும் மார்பு, மேல் உடலை சமநிலையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், காயங்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.
இதயம், நுரையீரலுக்கு நன்மை:
ஏரோபிக் மற்றும் வலிமை பயிற்சி இவை இரண்டின் கலவைதான் புஷ்-அப். எனவே தினமும் புஷ்-அப் செய்து வந்தால் இதயம் நன்றாக செயல்படுவதோடு, நுரையீரல் திறனும் அதிகரிக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியம்:
தண்டால், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு அபாயத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. எனவே எலும்புகள் வலுவாக, எலும்புத் தாது அடர்த்தி அதிகரிக்க தினமும் புஷ்-அப் செய்யலாம்.
புஷ்-அப் செய்யும்போது ஏதேனும் வலி அல்லது அசவுகரியம் ஏற்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
- தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.
- தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வயதாவது, எவருக்குமே கவலையை ஏற்படுத்தும் விஷயம்தான். அதிலும் பெண்கள், வயது கூடுவதை வெறுப்பார்கள்...
ஆனால், 50 வயது ஆனாலும், பெண்கள் சில உணவுப்பொருட்களை உட்கொண்டு வருவதன் மூலம், அழகு மாறாமல் திகழலாம், வயதான தோற்றத்தைத் தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
அந்த உணவுகள் விவரம்...
பழங்கள்
தினமும் ஏதாவது இரண்டு பழங்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி உட்கொள்ளும்போது அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கிறது. அதுவும் பப்பாளி, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் சரும செல்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. எனவே நீண்ட காலம் இளமையாக, அழகாக இருக்க விரும்பும் பெண்கள், எந்தப் பழம் பிடிக்குமோ அதை தவறாமல் சாப்பிடுங்கள்.
கீரைகள்
பசலைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த கீரைகளை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அவை எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்வதோடு உடலில் ஆற்றலும் நிலையாக இருக்கும். முக்கியமாக கீரைகளை அதிகம் உணவில் சேர்க்கும்போது, சருமத்தின் ஆரோக்கியமும் அழகும் மேம்படும்.
கொட்டைப்பருப்புகள், விதைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டைப்பருப்புகள், பூசணி, ஆளி விதைகள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் புரதங்களும் அதிகம் உள்ளன. இவற்றை தினமும் உட்கொள்ளும் போது, இவை இதயத்தை வலிமையாக வைத்துக்கொள்வதோடு, சருமத்தை பொலிவாகவும் இருக்கச் செய்யும்.
தயிர் அல்லது மோர்
தயிர் அல்லது மோரில் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்தை எளிமையாக்கும், குடல் ஆரோக்கியத்தைக் காக்கும் என்பது நிபுணர்கள் கருத்து. உடலில் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தாலே, பாதி சரும பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எனவே தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.
சிறுதானியங்கள், முழுத் தானியங்கள்
தினசரி உணவில் சிறுதானியங்கள் மற்றும் முழுத் தானியங்களை சேர்த்து வந்தால், அவை உடலில் இன்சுலினை சீராக வைத்துக்கொள்ள உதவும். நீண்ட நேரம் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும். அதுவும் இவற்றை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே, பெண்கள் வயது கூடிக் கொண்டே செல்லும்போதும் இளமையாகவும், பொலிவான சருமத்துடன் அழகாகவும் தோன்ற வேண்டும் என்றால், மேலே தெரிவிக்கப்பட்டுள்ள 5 உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நல்லது.
- உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும்.
- அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு கால் வயிற்றுக்கு நீர் குடித்தாலே சரியானது.
உடல் உழைப்பின்றி இருக்கையில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உணவைக் குறைக்க வேண்டும்.
உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும். அதனால் நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்பவர்கள் எளிதில் செரிக்கக் கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒரு கப் அளவான சாதம் எடுத்துக் கொண்டு அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு கால் வயிற்றுக்கு நீர் குடித்தாலே சரியானது.
இது மேலும் இவர்கள் கொழுப்பு சார்ந்த எண்ணெய் பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், நெய், தேங்காய் போன்றவற்றில் தயாரான உணவுப் பொருட்களைக் குறைத்தால் வீணாக உடலில் கூடும் கொழுப்புகளைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.






