என் மலர்
சினிமா செய்திகள்
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.
இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் சென்சார் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒவ்வொரு விஜய் ரசிகரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் விருப்பம் தெரிவித்த தோடு ’மாஸ்டர்’ பொங்கல் என்ற ஹேஷ்டேக்கையும் வைரலாக்கினர்.

இந்த நிலையில் சற்று முன் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த ஒரு அறிவிப்பும் வெளிவந்துள்ளது. ’மாஸ்டர்’ தெலுங்கு வெர்ஷனில் இடம்பெற்ற சிட்டி ஸ்டோரி என்ற பாடல் நாளை மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பபட்டது.

தற்போது அடுத்த அறிவிப்பாக சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கான போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் சிட்டி ஸ்டோரி என்ற பாடல் நாளை வெளியாக இருக்கிறது.
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒவ்வொரு விஜய் ரசிகரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் விருப்பம் தெரிவித்த தோடு ’மாஸ்டர்’ பொங்கல் என்ற ஹேஷ்டேக்கையும் வைரலாக்கினர்.

இந்த நிலையில் சற்று முன் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த ஒரு அறிவிப்பும் வெளிவந்துள்ளது. ’மாஸ்டர்’ தெலுங்கு வெர்ஷனில் இடம்பெற்ற சிட்டி ஸ்டோரி என்ற பாடல் நாளை மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பாடல் தமிழில் குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், விஜய்சேதுபதி மாளவிகா, மோகனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் அன்பு கேங் என்று அழைப்படுபவர்களின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் அர்ச்சனா குறைவான வாக்குகள் பெற்றதால் எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அர்ச்சனாவை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் அர்ச்சனாவை சந்தித்து இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் ரசிகர்கள் இவர்களை அன்பு கேங் என்று அழைத்து வருகின்றனர்.
புதிய தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கிய டி.ராஜேந்தர் தற்போது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதில் டி.ராஜேந்தர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்ட நிலையில் அதன் தலைவராக டி.ராஜேந்தர் பொறுப்பேற்றார்.
ஏற்கனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக டி.ராஜேந்தர் இருந்து வரும் நிலையில் அதன் விதிமுறைகளின்படி வேறு எந்த சங்கத்திலும் பதவி வகிக்க கூடாது. இதனால் தற்போது டி.ராஜேந்தர் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் யார் என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்தாண்டு மரணமடைந்தனர். அவற்றின் தொகுப்பை காணலாம்.
2020, சினிமா மற்றும் சின்னத்திரைக்கு மிக மோசமான ஒரு வருடம் தான். இந்தாண்டு திரையுலகில் எதிர்பாராத மரணங்கள், அதிர்ச்சி தரும் தற்கொலைகள் என ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதன் தொகுப்பை காணலாம்.

விசு
எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு. சினிமாவில் குடும்ப சென்டிமென்டை வைத்து ஏராளமான படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கும் இவர் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அவரது அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சிறு நீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த விசு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22 மார்ச் 2020 அன்று மரணம் அடைந்தார்.

சேதுராமன்
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் சேதுராமன் ஒரு தோல் சிகிச்சை நிபுணரும் கூட. இவர் தனியாக கிளினிக் நடத்தி வந்தார். ஏராளமான சினிமா பிரபலங்கள் அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சேதுராமன் மரணமடைந்தார். 34 வயதில் அவர் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜீன் டெய்ச்
துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குட்டி எலியும், அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள் நிறைந்த தொடர் தான் டாம் அண்ட் ஜெர்ரி. வயது வரம்பின்று அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த கார்ட்டூன் தொடரை இயக்கியவர் ஜீன் டெய்ச். ஆரம்ப காலத்தில் ராணுவத்திலும், விமானியாகவும் பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்கி வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி காலமானார். அவருக்கு வயது 95.

இர்பான் கான்
30 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வந்தவர் இர்பான் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட்டிலும் தி அமேசிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆப் பை, ஜுராசிக் வேர்ல்டு போன்ற படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இர்பான் கான் (வயது 53) கடந்த ஏப்ரல் 29-ந் தேதி காலமானார். கடந்த சில ஆண்டுகளாக லண்டன் சென்று புற்றுநோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ரிஷி கபூர்
40 ஆண்டுகளாக பாலிவுட் படங்களில் நடித்து வந்த ரிஷி கபூர், கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் 102 நாட் அவுட் என்கிற படத்தில் நடித்தார். இதையடுத்து ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அமெரிக்கா சென்று ஓராண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

சிரஞ்சீவி சர்ஜா
தென்னிந்திய சினிமாவை உலுக்கிய மரணங்களில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணமும் ஒன்று. நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சர்ஜா கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்தார். 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். சிரஞ்சீவி சர்ஜா (வயது 39)கடந்த 2018-ம் ஆண்டுதான் பிரபல நடிகையான மேக்னா ராஜை காதலித்து கரம்பிடித்தார். சிரஞ்சீவி சர்ஜா உயிரிழக்கும் போது அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங்
பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் என்றால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம். இவரது மரணம் கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்திருந்தார். 34 வயதே ஆன சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா? என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாக அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சாச்சி
கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் சாச்சி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிருத்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தின் மூலம் இயக்னராக அறிமுகமானார். இவரது இரண்டாவது படமான அய்யப்பனும் கோஷியும் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. 48 வயதே ஆன இயக்குனர் சாச்சி கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

சாட்விக் போஸ்மேன்
உலக மக்களை பெரிதும் கவர்ந்த படம் அவெஞ்சர்ஸ். இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த வகையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாட்விக் போஸ்மேன். 43 வயதான இவர் கடந்த 4 வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம்.

வடிவேல் பாலாஜி
சின்னதிரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு போல் காமெடி செய்வதால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார். பிரபல காமெடி நிகழ்ச்சிகளான ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 42.

புளோரண்ட் பெரேரா
நடிகர் விஜய்யின் புதிய கீதை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவனர் புளோரண்ட் பெரேரா. இதையடுத்து இவர் கயல், எங்கிட்ட மோதாதே, வேலையில்லா பட்டதாரி 2, ராஜா மந்திரி, தொடரி போன்ற படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உயிரிழந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் மரணம், இசை உலகுக்கே பேரிழப்பு என்றே சொல்லலாம். பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பின்னணி பாட்கராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். பாடகர் எஸ்.பி.பி. கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி லேசான கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனாவில் இருந்த மீண்ட அவர் உடல்நலக்குறைவு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

ஷான் கானெரி (முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்)
ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. இதில் முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த அக்டோபர் 31-ந் தேதி காலமானார்.

தவசி
‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு நடிகராக அறிமுகமானார் தவசி. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்த இவர், அப் படத்தில் இடம்பெற்ற 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக்கின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்திலும் இவர் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தவசி கடந்த நவம்பர் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சித்ரா
பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் தனது காதலரான ஹேம்நாத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். வரும் பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஷாநவாஸ்
மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ் (வயது 37). இவரது சொந்த ஊர் நரணிபுலா. கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து பிரபல நடிகர் ஜெயசூர்யாவை கதாநாயகனாக வைத்து "சூபியும் சுஜாதாவும்" படத்தை இயக்கினார். இந்தாண்டு ஓடிடி-யில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஷாநவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மூளைச்சாவு அடைந்ததால் டிசம்பர் 23-ந் தேதி உயிரிழந்தார்.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமி படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளதாம்.
ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார். பூமி படத்தை கடந்த மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல் மாதவனின் மாறா, விஷாலின் சக்ரா போன்ற படங்களும் பொங்கலுக்கு ஓடிடி-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றிலிருந்து குடும்பத்தினரை பாதுகாக்க ‘கேஜிஎப்’ நடிகர் யஷ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
கொரோனா பரவல் தடுப்பு முன் எச்சரிக்கையோடு மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதையும் மீறி சில படப்பிடிப்புகளில் நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் கேஜிஎப் இரண்டாம் பாகம் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் யஷ் வீட்டுக்கு செல்லாமல் ஓட்டலில் தங்கினார். படப்பிடிப்பை அதிரடி சண்டை காட்சிகளுடன் படமாக்கினார்கள். சண்டை கலைஞர்களுடன் யஷ் சகதியில் புரண்டும், அடித்தும் நடிக்க வேண்டி இருந்தது.

கூட்டமாக நடிகர், நடிகைகள் பங்கேற்கும் காட்சிகளும் அதிகம் இருந்தன. இதனால் குடும்பத்தினர் பாதுகாப்பை கருதி நாயகன் யஷ் ஓட்டலிலேயே தங்கினார். கொரோனா பரிசோதனை முடிந்து தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே குடும்பத்தினரை சந்தித்தார். இதுபோல் மற்ற நடிகர்களையும் ஓட்டலிலேயே தங்கவைத்தார்.
எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.
எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராக 1 மணிநேரம் நடித்தது வெறும் கெளரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவாக இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமி அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கொடுத்து 4 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நடிகை பாயல் கோஷ் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான அனுராக் காஷ்யப் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இவர் மீது தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.
“அனுராக் காஷ்யப் வீட்டுக்கு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னிடம் தகாத முறையில் நடந்தார். 200-க்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து இருப்பதாக பெருமையாகவும் தெரிவித்தார்” என்றார். மும்பை ஓஷிவாரா போலீசிலும் புகார் அளித்தார். அனுராக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அனுராக்கை கைது செய்ய வேண்டும் என்று கங்கனா ரணாவத் வற்புறுத்தினார்.

இந்த நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வதாக பாயல்கோஷ் கண்டித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனுராக் காஷ்யப் மீது நான் புகார் கொடுத்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. அவருக்கு எதிரான ஆதாரங்களையும் கொடுத்து விட்டேன். ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் இறந்துபோனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா” என்று கூறியுள்ளார்.
ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது, அதன்படி கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டுள்ளனர். டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ராஜேஷ், விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ், பா இரஞ்சித், ஆனந்த் சங்கர், விஜய் மில்டன், சந்தோஷ் பி ஜெயக்குமார், சாம் ஆண்டன், அஸ்வத் ஆகியோர் வெளியிட்டனர். இப்படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ‘வா பகண்டையா’ என்ற படத்திற்காக இரண்டு பாடல்களை பாடினாராம்.
தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘வா பகண்டையா’.
‘வா பகண்டையா’ என்பது கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ‘வா பகண்டையா’ என்ற கிராமம் தான் கதைக்களம் என்பதால், படத்திற்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். ஹீரோவாக அறிமுக நடிகர் விஜய தினேஷ் நடிக்க, அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாக நடிக்கிறார். ஒளி ரெவல்யூசன் சார்பில் ப.ஜெயகுமார் இப்படத்தை தயாரிப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ப.ஜெயகுமார் கூறியதாவது: “காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த முழுமையான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், சமூகத்திற்கு தேவையான மெசஜ் ஒன்றை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்துள்ளது.

குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய “வெங்காட்டு சந்தையிலே விலை போகா வெள்ளரிக்கா...” மற்றும் “தாயவள் தந்த அன்பினை போல தேடிய செல்வம் தருமா...” என்று தொடங்கும் இந்த இரண்டு பாடல்கள் ரொம்பவே ஸ்பெஷல். காரணம், எஸ்.பி.பி அவர்கள் பாடிய கடைசி பாடல்கள் இவை.
தற்போது வரை எங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக இருக்கும் இந்த பாடல்கள் வெளியான பிறகு ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் பாடலாக இருக்கும். ஜனவரி மாதம் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம்.” என்றார்.






