அழகுக் குறிப்புகள்
null

தீபாவளிக்கு மருதாணி போடுவீர்களா? இதை செய்யுங்க!

Published On 2025-10-14 18:00 IST   |   Update On 2025-10-14 18:05:00 IST
  • எல்லாருக்கும் மருதாணி ஒரே அளவாக சிவக்காது. சிலருக்கு நன்றாக சிவக்கும்; சிலருக்கு குறைவாக சிவக்கும்!
  • அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகளை பயன்படுத்துங்கள்!

பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் பண்டிகை தினத்திற்கு முன்தினம் இரவு கையில் மருதாணி வைக்காமல் பெண்கள் தூங்கமாட்டார்கள். ஏன் ஆண்களும் வைத்துக்கொள்வர். மற்ற பண்டிகைகளைவிட தீபாவளி அப்படித்தான் போகும். தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்துக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருக்க அதிகாலையில் எண்ணெய்க்குளியல் போட சொல்வார் அம்மா. எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் கையை கழுவி, சகோதரர், சகோதரிகளிடத்தில் சென்று யார் கை அதிகமாக சிவந்திருக்கு என்று பார்த்தபின்தான் முகம் கழுவுவோம். அப்படி ஒரு ஆர்வம் மருதாணி போடுவதில். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.

பலரும் மருதாணி போட காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது. வீட்டில் நாம் அனைவரும் ஒரேநேரத்தில் மருதாணி போட்டாலும், எல்லோருக்கும் ஒரே அளவு சிவந்திருக்காது. சிலருக்கு அதிகமாக சிவந்திருக்கும், சிலருக்கு மிதமான அளவில் சிவந்திருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக சிவந்திருக்கும். அதற்கு காரணம் அவரவரது உடல்நிலை. இருப்பினும் ஈரம் எளிதில் காய்வதாலும் பலருக்கு சிவந்திருக்காது. சிலர் மருதாணி வைத்துவிட்டு அப்படியே தூங்கும்போது கையில் இருந்து விழுந்துவிடும். இந்நிலையில் மருதாணி எளிதில் சிவக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 


மருதாணியை அரைத்த உடனேயே போடவேண்டும்

* இலைகளிலேயே அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகள் இருக்கும். அதனை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு, கொஞ்சம் சர்க்கரை கலந்துவிட்டு பின்னர் மருதாணி போடலாம். இது நல்ல சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக, மருதாணி காய காய அதன்மீது விட்டுவருவதும் நல்ல நிறத்தை கொடுக்கும். 
* அதுபோல யூக்கலிப்டஸ் தைலத்தை மருதாணி வைத்துள்ள இடத்தில் தடவினால் நல்லநிறம் கொடுக்கும். 
* மருதாணியை கழுவ சோப்புத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது நிறத்தை நீக்கும். அதுபோல மருதாணி போட்டு சிறிது நேரத்திலேயே எடுத்துவிடக்கூடாது. அதனால்தான் பலரும் தூங்குவதற்கு முன் கையில் மருதாணி வைத்து தூங்குவார்கள். பகலில் வேலைகள் நிறைய இருக்கும். அதனால் மருதாணியை உடனே எடுக்கவேண்டிய சூழல்வரும். முடிந்தவரை இரவு நேரத்தில் போட்டுவிட்டு, காலையில் கையை கழுவுங்கள்.
* கிராம்பை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மருதாணி அரைக்கும்போது பயன்படுத்தினால் நல்ல சிவப்பாக நிறம் இருக்கும்.
* அதுபோல முதலில் கைக்கழுவ தண்ணீரை பயன்படுத்தாமல், கடுகு எண்ணெயை பயன்படுத்தி மருதாணியை நீக்க வேண்டும். கடுகு எண்ணெய்க்கு பதில் யூக்கலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தலாம். 

அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. 

Tags:    

Similar News