குழந்தைகளுக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமை! என்ன செய்யலாம்?
- உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது.
- முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தைகள் சத்துள்ள பொருட்களை சாப்பிட முடியாது, உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கப்படும். உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் முறைகளைக் காண்போம்.
குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?
வளரும் குழந்தைகளுக்கு புதிதாக உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சாதம், முட்டை, வேர்க்கடலை, அவித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுக்க தொடங்குவார்கள். அப்படி இந்த பொருட்கள் ஒத்துகொள்ளவில்லை எனில் சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அரிப்பு, தோல் வெடிப்புகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலநேரங்களில் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மேலும் சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். அப்போது அது காலப்போக்கில் சரியாகிவிடும் என பெற்றோர் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அது ஒவ்வாமைதானா என உறுதிப்படுத்தி அதன்பின் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை வேறு எந்த முறையில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்துவர்.
குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்கள்...
- பால்
- முட்டை
- வேர்க்கடலை
- மரக்கொட்டைகள்
- மீன்
- கோதுமை
- சோயா
- ஷெல்ஃபிஷ்
மேற்கூறிய 8 உணவுகள்தான் 90% உணவு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?
முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும். ஆனால் சில ஒவ்வாமைகள் தொடர்ந்து நீடிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வேர்க்கடலை மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை கொடுக்கும் பொருட்களை உங்களின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். குழந்தைக்கு முட்டை அவித்து கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், மாற்று வழியில் எவ்வாறு அதனை கொடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் தொடர்ந்து அதனை கொடுத்துவரும்போது இந்த பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.
ஒவ்வாமையை தடுக்க என்ன செய்யலாம்?
ஒரு உணவுப்பொருள் குழந்தைக்கு ஒவ்வாமையை கொடுக்கிறது என்றால் அதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கவேண்டும். குழந்தையை பார்த்துக்கொள்பவர்களிடமும், பள்ளியிலும் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்து தெரிவித்தல் நல்லது. ஒவ்வாமை இருப்பவர்கள் எப்போதும் வெளியில் செல்லும்போது எபிநெஃப்ரின் ஆட்டோ-இன்ஜெக்டரை எடுத்துச் செல்வது நல்லது. குழந்தையின் பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையத்திலும் குழந்தைக்கு தேவையான மருத்தை வழங்குவது நல்லது.