என் மலர்tooltip icon

    உலகம்

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.
    • 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

    காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் 2025-ஆம் ஆண்டு பாலஸ்தீனியர்களுக்கு மற்றுமொரு துயரமான ஆண்டாகவே அமைந்தது.

    காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆண்டாகவும் இது அமைந்தது. 

    காசா போர்

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.

    இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் பாதி பேர் மீடகப்பட்ட நிலையில் 96 பேர் இன்னும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

    தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 26 மாதங்களாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 70,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20,000 பேர் குழந்தைகள் ஆவர்.  1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    சுமார் 3,000 முதல் 4,000 குழந்தைகள் தங்கள் கை அல்லது கால்களை இழந்து ஊனமுற்றுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

    இனப்படுகொலை

    செப்டம்பர் 2025-ல் ஐநா விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

    உயிரிழப்புகள், பசி மற்றும் மருத்துவத் தேவைகளைத் தடுத்தல் போன்றவை இதற்கு ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டன.

    மக்களைக் கொல்லுதல், கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல், வாழ்க்கைச் சூழலை அழித்தல், பிறப்புகளைத் தடுத்தல் ஆகிய 4 குற்றங்களையும் இஸ்ரேல் திட்டமிட்டு தொடர்வதால் காசாவில் இஸ்ரேல் புரிவது இனப்படுகொலையே என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல, அவை காசா மக்களின் அன்றாட வாழ்வை முடக்குவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

    பசி, பட்டினி, பஞ்சம்:

    இஸ்ரேல் விதித்த கடுமையான தடைகளால் 2025-ல் பஞ்சம் உச்சத்தை அடைந்தது. போர் தொடங்கியதில் இருந்து 461 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலான மரணங்கள் 2025-ல் நிகழ்ந்தவை.

    5 வயதிற்குட்பட்ட 54,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன் அறிக்கையின்படி, காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்.

    காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

    மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    இடிபாடுகளாக எஞ்சிய காசா:

    அக்டோபரில் வெளியான ஐநா அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

    மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.

    போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிக்கை தெரிவித்தது.

    நவம்பரில் வெளியான ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) கடந்த நவம்பரில் வெளியிட்ட அறிக்கை, காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கிறது.

    அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

    காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

     அடிப்படை தேவைகளுக்கு அலைமோதும் காசா மக்கள்:

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காசாவின் அடிப்படை உள்கட்டமைப்பை முற்றிலுமாக முடக்கியுள்ளன.

    காசாவின் ஒரே மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்த மின் விநியோக அமைப்பில் 80% சிதைக்கப்பட்டுள்ளது.

    மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், சிறிய ஜெனரேட்டர்கள் மூலமும் மிகக் குறைந்த அளவே மின்சாரத்தைப் பெறுகின்றனர்.

    இஸ்ரேலின் குண்டுவீச்சுகள் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மற்றும் தண்ணீர் பம்பிங் நிலையங்களை அழித்ததால் மக்கள் உப்பு மற்றும் உலோக வாடை வீசும் பாதுகாப்பற்ற தண்ணீரை அருந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குழந்தைகளுக்கு தோல் வியாதிகள் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை உண்டாக்கி வருகிறது.

    மருத்துவமனைகள் போதிய மருந்துகள், மின்சாரம் மற்றும் உபகரணங்கள் இன்றி இயங்குகின்றன. மருத்துவர்கள் மொபைல் போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் அவலநிலை நீடிக்கிறது.

    சாலைகள் தகர்க்கப்பட்டுள்ளதால், மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மக்களைச் சென்றடைவதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.

    வெனிஸ் வெளிச்சம்

    இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

    பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

    ஐநா பொதுச் சபையும், தனி நாடு அங்கீகாரமும்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்சனை முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

    "தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

    இந்த ஐநா பொதுச்சபை கூடுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன.

    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் வைத்து, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.

    இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்தது. இதை இஸ்ரேலும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தது.

    டிரம்ப் அமைதி திட்டமும், கண்துடைப்பு போர் நிறுத்தமும்:

    அக்டோபர் 10, 2025 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    காசாவில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட அரசாங்கத்தை அமைப்பது, இஸ்ரேலியப் படைகளுக்குப் பதிலாக சர்வதேச அமைதிப் படையை நிலைநிறுத்துவது இதில் அடங்கும்.

    மேலும், ஒப்பந்தப்படி, டிசம்பர் 9-க்குள், ஹமாஸிடம் எஞ்சியிருந்த இஸ்ரேல் பணய கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலாக, இஸ்ரேல் சிறையிலிருந்த பாலஸ்தீனியர்களை விடுவித்தது.

    போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை.

    தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், நவம்பர் 30 வரை மட்டும் 352 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    2025-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையிலும், காசா மக்களின் துயரமும் கண்ணீரும் முடிவுக்கு வந்தபாடில்லை.  இதற்கிடையே 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் காசாவில் பல உதவி அமைப்புகளின் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

    • இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருக்கும்போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிடும்.
    • கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட தொடங்கிவிடும்.

    உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவு புத்தாண்டை கொண்டாட தொடங்கியது. இந்திய நேரப்படி, கிரிட்டிமாட்டியில் புத்தாண்டு சுமார் 8.5 மணிநேரம் முன்னதாகவே பிறக்கிறது. அதாவது இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருக்கும்போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிடும்.

    அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபாட்டி  2026-ஆம் ஆண்டை வரவேற்று, உலகின் முதல் நாடாக புத்தாண்டு கொண்டாட தொடங்கியது. கிரிபாட்டி தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சத்தாம் தீவில் (GMT +13:45) வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட மக்கள் 2026 ஐ வரவேற்று கொண்டாட தொடங்கிவிட்டனர்.

    உலக நாடுகள் ஒவ்வொன்றும் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்டும் இயங்குவதால் நாட்டுக்கு நாடு கொண்டாட்ட நேரம் வேறுபடுகிறது. பசிபிக் நாடான கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட தொடங்கிவிடும். 


    • பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
    • இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஆயுத மோதல் ஏற்படும் என்று அமெரிக்க சிந்தனைக் குழு ஒன்று கணித்துள்ளது. கவுன்சில் ஆன் பாரின் ரிலேஷன்ஸ் அமைப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அதிகரித்த பயங்கரவாதச் செயல்பாடு காரணமாக 2026-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மீண்டும் தலைதூக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களால் 2026-ல் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுத மோதல் ஏற்படுவதற்கு மிதமான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

    • டிசம்பர் 26 அன்று ராவல்பிண்டியில் திருமணம் நடைபெற்றது
    • தனிப்பட்ட நிகழ்வு என்பதால் பொதுவெளியில் கூறவில்லை

    பாகிஸ்தான் நாட்டின் முப்படை தளபதி அசிம் முனீரின் 3-வது மகளுக்கு திடீரென ரகசிய திருமணம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தகவலின்படி கடந்த 26-ந்தேதி அன்று ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் அவரது மகளின் திருமணம் நடைபெற்றது. மகள் மஹ்னுாரை, தன் சகோதரர் காசிம் முனீரின் மகனான அப்துல் ரஹ்மானுக்கு திருமணம் செய்து வைத்தார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். 

    அதேநேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் விழாவில் பங்கேற்றார். இவரை விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசிம் முனீர் வரவேற்றனர். அசிம் முனீரின் மருமகன் அப்துல் ரஹ்மான் முன்பு ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிவர் என்றும், தற்போது குடிமை பணிகளில், ராணுவ அதிகாரிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உதவி ஆணையராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த திருமணம், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு, ரகசியமாக நடத்தப்பட்டது. திருமணத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணைப் பிரதமர் இஷாக் தார், பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ், ஐ.எஸ்.ஐ. தலைவர் மற்றும் முன்னாள் ராணுவத் தலைவர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட சுமார் 400 விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.
    • இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக அடைய முயற்சி நடந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஜனாதிபதி டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினார். அப்போது இஸ்ரேல்-காசா போர், ஈரானின் அணுசக்தி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டிரம்ப் கூறுகையில், ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி உற்பத்தி நிலையங்களை குறிவைத்து கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

    இதனால் ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தற்போது ஈரான் அணுசக்தி திறன்களை கட்டமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு அணுசக்தி திட்டத்தை ஈரான் மீண்டும் தொடங்கினால் அதனை முற்றிலும் அழித்து சின்னாபின்னமாக்கப்படும். பின்னர் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் உள்பட 8 போர்களை தான் நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லை எனவும் டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட முறை அவர் இதுபோல் கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது தலையீட்டால் ரஷியா-உக்ரைன் போரும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தனது வீட்டை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய அதிபர் புதினே தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் பேசினார்.

    இதனை தொடர்ந்து இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவாக அடைய முயற்சி நடந்து வருகிறது. அதற்கு ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும்.

    மேலும் இந்த போரின்போது வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே அழிந்திருக்கும் என பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

    • மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
    • ஈரானின் முன்னாள் நிதியமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி புதிய மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஈரானின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஈரானிய நாணயமான 'ரியால்', அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

    போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

    நிலைமை மோசமடைந்ததையடுத்து, மத்திய வங்கி ஆளுநராக இருந்த முகமது ரெசா ஃபர்சின் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஏற்றுக்கொண்டார்.

    அவருக்குப் பதிலாக, ஈரானின் முன்னாள் நிதியமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி புதிய மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் போன்றவை இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

    • அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
    • அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார்.

    மாஸ்கோ அருகே உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து 91 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் ரஷியா நேற்று தெரிவித்தது.

    ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்ட பிரதமர் மோடி, "ரஷிய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

    போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான முயற்சிகளே சரியான வழி" என்று தெரிவித்துள்ளார்.

    அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார். அதே சமயம் விரைவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

    • பிரிவினைவாதிகளுக்கு கப்பலில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
    • துறைமுகம் மீது சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.

    ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. வடக்குப் பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தெற்குப் பகுதியை பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்த அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தெற்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இந்த படைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவி செய்து வருகிறது. அதேவேளையில் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பல் ஏமனில் உள்ள துறைமுகத்தில் காணப்பட்டதாக கூறி, சவுதி கூட்டுப்படைகள் கப்பல் மீது வான் தாக்குதல் நடத்தியது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து இரு தரப்பிலும் முழுமையான விவரங்களை குறிப்பிடவில்லை.

    இந்த நிலையில், ஏமனில் உள்ள மீதமுள்ள படைகளை திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்படவில்லை.

    • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
    • வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி, இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற இந்து இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கிக் கொன்றனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.

    விசாரணையில், கொல்லப்பட்டவர் ஆடை தொழிற்சாலை காவலாளியான பிஜேந்திர பிஸ்வாஸ் என்பதும், இச்சம்பவம் மைமன்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்ததும் உறுதிசெய்யப்பட்டது. அவரை சுட்டுக் கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா என அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடம் இருந்து சிறிய ரக துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • காசாவில் ஹமாஸ் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • ஸ்டாஃப்களின் செயல்பாடுகள் குறித்த தகவலை பரிமாற்றம் செய்ய சில அமைப்புகள் தவறியதாகவும் குற்றச்சாட்டு.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு காசாவில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. சில அமைப்புகள் ஹமாஸ் மற்றும் மற்ற பயங்கரவாத குழுவினருக்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக எல்லைகள் அற்ற டாக்டர்கள் அமைப்பு சில ஸ்டாஃப்களின் பணி என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க தவறி விட்டது எனத் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து வருகின்ற 1-ந்தேதி முதல் ஸ்டாஃப், நிதி மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக தகவல்களை பரிமாற்றம் செய்யவில்லை என்றால், காசாவில் செயல்பட தடைவிதிக்கப்படும் எனத் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கான எல்லைகள் அற்ற டாக்டர்கள் அமைப்பு பதில் அளிக்கவில்லை. ஆனால் மற்ற சர்வதேச அமைப்புகள் இது ஸ்டாஃப்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளன.

    • நாடுகளின் ராணுவ பலம், ஆயுத இருப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய ராணுவ வலிமை குறியீடு கணக்கிடப்படுகிறது.
    • சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 142 நாடுகளில் இந்தியா 79-வது இடத்தில் உள்ளது.

    சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகள் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன.

    அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதி முதல் இந்த ஆண்டு இறுதி வரை அவ்வபோது வெளியாகி வந்த 2025 உலகளாவிய குறியீடுகளில் இந்தியா பெற்ற இடங்களை இங்கு பார்ப்போம்.

    பொருளாதார வலிமையை அளவிடும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் (IMF) குறியீட்டில் உலகளவில் 193 நாடுகளில் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.

    பணப்பரிமாற்றம் குறியீட்டின்படி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் 1-வது இடம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார் 129 பில்லியன் டாலர் பணத்தைத் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

    'எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் 151-வது இடத்தில் இந்தியா மிகவும் மோசாமான நிலையில் உள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான சவால்களால் இந்தியா கடந்த ஆண்டை விடப் பின் தங்கியுள்ளது.

    உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீனாவை விட இந்தியா இந்தப் பட்டியலில் பின்வரிசையில் உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், சமூக ஆதரவு மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

    ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் பட்டினி குறியீடு பட்டியலில் 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை "தீவிரமானது" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை பாலின இடைவெளிக் குறியீடு அளவிடுகிறது. இதில் இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் சறுக்கி உள்ளது.  இந்தியாவில் கல்வி மற்றும் பொருளாதாரப் பங்களிப்பில் பெண்களுக்கு முன்னேற்றம் தேவை என்பதை இந்தத் தரவரிசை சுட்டிக்காட்டுகிறது.

    புவி வெப்பமடைவதைக் குறைக்க நாடுகள் எடுக்கும் முயற்சிகளை பருவநிலை மாற்றச் செயல்பாட்டுக் குறியீடு (CCPI) மதிப்பிடுகிறது. இதில் இந்தியா 10 வது இடம் பிடித்துள்ளது. இந்த விஷயத்தில் ஜி20 நாடுகளிலேயே மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. குறிப்பாக பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு(EPI) படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றக் கொள்கைகளை கடைபிடிப்பதில் 180 நாடுகளில் இந்தியா 176வது இடத்தில் உள்ளது. காற்றுத் தரம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் இந்தியா அதிகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதை வைத்து ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியா 83-வது இடத்தில் உள்ளது. இந்தியக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.

    நாடுகளின் ராணுவ பலம், ஆயுத இருப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய ராணுவ வலிமை குறியீடு கணக்கிடப்படுகிறது. இதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் 4-வது சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

    டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு மூலம் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2024 ஊழல் குறியீடு ஒரு நாட்டின் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்து அளவிடுகிறது. இதில் 180 நாடுகளில் இந்தியா 96 வது இடம் பிடித்துள்ளது. இது நிர்வாகத்தில் இன்னும் வெளிப்படைத்தன்மை தேவை என்பதை உணர்த்துகிறது.

    ஒரு நாட்டின் கலாச்சாரம், அரசியல் விழுமியங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை மூலம் பிற நாடுகளை ஈர்க்கும் திறனை உலகளாவிய மென்சக்தி குறியீடு அளவிடுகிறது. அதன்படி இந்தியா இதில் 30வது இடத்தில உள்ளது. .

    நாட்டின் வணிகச் சூழல், சொத்துரிமை மற்றும் வரிச் சுமை போன்ற காரணிகளை வைத்து பொருளாதார சுதந்திரக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. இதில் இந்தியா 128 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் "பெரும்பாலும் சுதந்திரமற்றது" என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் சந்தை சீர்திருத்தங்களில் இன்னும் முன்னேற்றம் தேவை என இது குறிப்பிடுகிறது.

    வயதான காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிதிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய அமைப்பின் தரத்தை உலகளாவிய ஓய்வூதியக் குறியீடு மதிப்பிடுகிறது. இதில் 104 நாடுகளில் இந்தியா கடைசியாக இருக்கும் D பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு போதிய ஓய்வூதியப் பாதுகாப்பு இல்லாததே இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

    போக்குவரத்து வசதியை அளவிடும் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில் 139 நாடுகளில் இந்தியா 38-வது இடம் பிடித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் குறியீட்டில் 139 நாடுகளில் இந்தியா 38-வது இடம் பிடித்துள்ளது.

    சைபர் பாதுகாப்பு குறியீட்டில் 194 நாடுகளில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.

    பயங்கரவாதப் பாதிப்பு குறியீட்டில் 163 நாடுகளில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.

    உலகப் போட்டித்தன்மை குறியீட்டில் 69 நாடுகளில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது.

    எரிசக்தி மாற்றம் குறியீட்டில் 118 நாடுகளில் இந்தியா 71-வது இடத்தில் உள்ளது.

    மனித மேம்பாடு (HDI) குறியீட்டில் 193 நாடுகளில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது.

    சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் 142 நாடுகளில் இந்தியா 79-வது இடத்தில் உள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்தியா பொருளாதாரம், ராணுவம் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் முதல் 40 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.

    ஆனால், மக்களின் மகிழ்ச்சி, பசி, ஊடக சுதந்திரம் மக்களின் மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் போன்ற சமூகக் காரணிகளில் 100-வது இடத்திற்கு அப்பால் இந்தியா பின்தங்கியுள்ளது. 

    • ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டத்த கட்டுவதாக கேள்விப்பட்டேன்.
    • அது உறுதியானால், விளைவுகள் மிகவம் சக்தி வாய்ந்ததாக இருக்கும்- டிரம்ப்.

    இஸ்ரேல்- ஈரான் இடையில் சண்டை நடைபெற்றபோது, ஈரானில் உள்ள அணுசக்தி திட்டத்தை அமெரிக்கா போர் விமானம் மூலம் தாக்கி அழித்தது. பின்னர் இஸ்ரேல்- ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    ஈரான் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதற்கிடையே, ஈரான் அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டினால், அந்நாட்டை வீழ்த்துவோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டொனால்டு டிரம்ப் கூறுகையில் "தற்போது ஈரான் மீண்டும் அணுஆயுத திட்டங்களை கட்ட முயற்சி செய்து வருவதாக நான் கேள்விபட்டேன். அப்படி அவர்கள் செய்தால், நாங்கள் அவர்களை வீழ்த்த வேண்டியிருக்கும். அவர்களை வீழ்த்துவோம். அவர்களைச் சின்னாபின்னமாக்கி விடுவோம். ஆனால், அப்படி நடக்காது என்று நம்புகிறோம்.

    திரும்ப கட்டுவது உறுதியானால், விளைவுகள் அவர்களுக்கு தெரியும். கடந்த முறையை விட மிகவும் சக்திவாய்ந்த விளைவாக இருக்கும்" என்றார்.

    இந்த நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன், "எந்தவொரு கொடூரமான ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதில் கடுமையானதாகவும், அத்தகைய செயல்களைத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும்" என்றார். மேலும், நாங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு முழு அளவிலான போரில் இருக்கிறோம்; எங்கள் நாடு நிலையானதாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார்.

    ×