search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரதசப்தமி"

    • ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. இதனையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார். நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    சாமி வீதி உலாவை காண கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இன்று அதிகாலை 5-30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    அப்போது மாட வீதிகளில் இருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து கோவிந்தா கோவிந்தா என விண்ணைமுட்டும் அளவுக்கு பக்தி பரவ சத்துடன் கோஷமிட்டனர். வாகன ஊர்வலத்தின் முன்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷம் வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடந்தது.

    மாலை 4 முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும் 6 முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலை யான் வீதிஉலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் உலா வருகிறார்.

    ரதசப்தமி விழாவை காண வந்த பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், மோர் உள்ளிட்டவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன.

    சுகாதார துறை சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

    மேலும் நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு மலிகா கார்க் தலைமையில் 650 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் காட்சியளிப்பது பரவசத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    • மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம்.
    • நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம்.

    ரத சப்தமி அன்று காலையில், சுமங்கலிகள் ஏழு எருக்கம் இலைகளை (தலை மீது 3, வலது புஜத்தில் 2, இடது புஜத்தில் 2 ) அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம். ஆண்கள் எருக்கம் இலைகளில் அட்சதை மட்டுமே வைத்து நீராட வேண்டும். நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம். நீராடும்போது கீழ் கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைச் சொல்வது நன்மை தரும்.

    ஸப்த ஸப்தப்ரியே தேவி ஸப்த வோதைக தீபிகே

    ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்

    யதா ஜன்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸி ஜன்மஸி

    தன்மே சோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்தஸப்தயீ

    ஏதத் ஜன்ம க்ருதம் பாபம் யத்ச ஜன்மாந்த ரார்ஜிதம்

    மனோவாக்காய ஜம் பாபம் ஜ்ஞாதாஜ்ஞாதேச புன

    சூரிய அர்க்கியமும்.. மந்திரமும்..

    சூரியனுக்கு அர்க்கியம் கொடுக்கும்போது, வலது கையில் அட்சதை, பூ, சந்தனம், குங்குமம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, பாலும் தண்ணீரும் கலந்த நீரை ஒரு கிண்ணத்தில் இடது கையால் எடுத்து, வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் நீரானது, ஒரு நல்ல தட்டில் (பித்தளை அல்லது செப்பு) விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் கீழே சொல்லியுள்ள மந்திரத்தை சொல்லவும்.

    ஸப்த ஸப்திவஹ ப்ரீத ஸப்தலோக ப்ரதீபன்

    ஸப்தமீ ஸஹிதோதேவ க்ருஹாணார்க்யம் திவாகர

    திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்

    இதி ஸப்த விதம் பாபம் ஸ்நாநான் மே ஸப்தஸப்திதே

    ஸப்தவ்யாதி ஸமாயுக்தம் ஹர மாகரி ஸப்தமி

    • வருகிற 16-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது.
    • தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    திருமலை:

    திருச்சானூர் பத்மாவதி கோவிலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரதசப்தமி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 8.45 முதல் 9.45 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10.15 முதல் 11.15 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.45 முதல் 12.45 வரை கருட வாகனம், மதியம் 1.15 மணி முதல் 2.15 மணி வரை சின்னசேஷ வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனம், இரவு 8.30 முதல் 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் சாமி மாட வீதியில் உலா நடக்கிறது.

    மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலின் கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் உள்ள தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    இதையொட்டி, பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் அபிஷேகம், லட்சுமி பூஜை, ஆர்ஜித கல்யாணோற்சவம், குங்கும அர்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல்சேவை, வேதாசிர்வச்சனம் ஆகிய சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலுடன் இணைந்த ஸ்ரீசூர்யநாராயண சுவாமி கோவிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அஸ்வ வாகனத்தில் பக்தர்களுக்கு சாமி காட்சியளிக்கிறார்.

    ரத சப்தமியை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதன்படி காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

    அதன்பின்னர் நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலிக்கட்டை மற்றும் இதர வாசனை திரவியங்களின் புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நேற்று கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஸ்வர்ணகுமாரி வழங்கிய திரைச்சீலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    • இன்று மதியம் புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
    • இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா இன்று காலை தொடங்கியது.

    இன்று ஒரேநாளில் ஏழுமலையான் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ரதசப்தமி விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிய தொடங்கினர். இதனால் 4 மாட வீதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன சேவையும், 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன சேவையும் நடந்தது. மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகனமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை அங்குள்ள புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடுவார்கள்.

    மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலாவும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா நடக்கிறது.

    ரதசப்தமியொட்டி கோவிலில் இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதியில் நேற்று 59,695 பேர் தரிசனம் செய்தனர். 30,286 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கோவில் வாசலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரதசப்தமி பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு நடந்தது.

    அன்றைய தினம் திருமங்கலகுடியிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் வாசலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. விழாவில் மாங்கல்ய தாரணம், தீபாராதனையை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் திருக்கல்யாண உபயதாரர் திருமங்கலகுடி காளிமுத்து ராஜமுநேந்திரர் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

    • அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும்.
    • ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது.

    சூரிய பாகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, 'ரத சப்தமி' ஆகும். இது 'சூரிய ஜெயந்தி' என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே 'ரத சப்தமி' என்கிறோம்.

    'சப்தம்' என்றால் 'ஏழு' என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும். உத்ராயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே 'ரத சப்தமி' என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் சூாியன் பயணிக்கும் தேரை இழுத்துச் சென்றும், 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகின்றன.

    இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

    7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

    கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

    ரத சப்தமி தினத்தில் மேற்கொள்ளக்கூடிய ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது. தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள்ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும் வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். குளித்து முடித்த பிறகு சூரிய பகவானை வழிபட்டு ஒரு மண் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி சூரிய ஒளி அப்பாலில் விழும் படி சூரியனுக்கு நைவேத்தியம் வைத்து, சூரியனுக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

    கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.

    மிகவும் அற்புதமான இந்த நாளில் தொடங்கும் தொழில், வியாபாரங்கள் பெருகும். பெண்கள் நற்கதியை அடைவார்கள். கணவனை இழந்த பெண்கள் இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன நமது புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்வது ஆன்மீக ரீதியான நற்பலன்களை தரும். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் பெருஞ்செல்வந்தர் ஆக உயர்வார்கள். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியமும், பலன்களும் உண்டு.முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். குல சாபங்கள் நீங்கும்.

    இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஜெ.மாணிக்கம்

    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
    • 29-ந்தேதி கிரிவலம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 28-ந்தேதி மாத சுத்த சப்தமியையொட்டி ரதசப்தமி விழா நடக்கிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி கே.வி.சாகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரதசப்தமியையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் ருத்ர பாதங்கள் அருகில் உள்ள சாயா உஷா தேவி சமேத சூரிய நாராயண சுவாமி சன்னதி அருகில் காலை 6 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மேலும் மூலவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு இரண்டாவது கால அபிஷேகம் நடக்கிறது.

    அதன் பின்னர் காலை 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா நடக்கிறது. இதே போல் 29-ந் தேதி ஆன்மிக சொற்பொழிவாளர் சாகன்ட்டி கோட்டீஸ்வர ராவ் தலைமையில் கிரிவலம் நடக்கிறது.

    ஸ்ரீ காளஹஸ்தி எல்லை பகுதியில் கைலாச கிரி மலைகள் வழியாக இந்த கிரிவலம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
    • அன்று ஒரேநாளில் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    சூரிய ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இது, திருமலையில் நடக்கும் 'மினி பிரம்மோற்சவ' விழா என்றும், 'ஒருநாள் பிரம்மோற்சவம்' என்றும் அழைக்கலாம். அன்று ஒரேநாளில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த வாகனச் சேவையை வழிபடும் பக்தர்களுக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் வாகனச் சேவையை வழிபடும் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    அதன்படி 28-ந்தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதி உலா, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    ரத சப்தமியையொட்டி 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • 24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. விழாவையொட்டி 7 வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். காலை 7 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்திலும், 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10 மணி முதல் 11 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை கருட வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    அதேபோன்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும், இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கஜ வாகன சேவை நடக்கிறது. முன்னதாக மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி முகமண்டபத்தில் தாயார் உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆர்ஜித கல்யாண உற்சவம், சாமவேத புஷ்பாஞ்சலி, சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

    ரதசப்தமியை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    • சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள்.
    • இதை சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள்.

    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் ரத சப்தமி முக்கியமானது. சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள். சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள். அதன்படி வருகிற 28-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் வைணவ கோவில்களில் ரத சப்தமி விழா நடக்கிறது.

    கோவில்களில் ரத சப்தமிக்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மம் திருப்பதியில் இருந்தபடியே அனைத்துக் கோவில் அதிகாரிகளை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி ஆலோசனை நடத்தினாா்.

    அப்போது இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், நாராயணவனம், நாகலாபுரம், கடப்பா ஆகிய கோவில்களில் ரதசப்தமியை முன்னிட்டு வாகனச் சேவையுடன் மூல மூர்த்தியை முறைப்படி தரிசனம் செய்ய அனைத்து முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். வாகனச் சேவைக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்களை முன்கூட்டியே பரிசோதிக்க வேண்டும்.

    கடப்பாவில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா் கோவிலில் தேரோட்டத்துக்காக தேர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தந்தக் கோவில்களில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்பாடு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    அதேபோல் ஜம்மு, சென்னை, ராமச்சோடவரம், சீ்தம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் மகா கும்பாபிஷேகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தந்தக் கோவில்களுக்கு தேவையான நகைகள், கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள், அர்ச்சகர், ஊழியர்கள், இதர பிரதிநிதிகள், பணியாளர்கள், சுகாதார ஏற்பாடுகள் போன்றவை விவாதிக்கப்பட்டது.

    கோவில்கள் தொடர்பான பணிகள் முன்னேற்றம் குறித்து பொறியியல் துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்குதல், மின் விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோவில் அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×