search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rathasaptami"

    • ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. இதனையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார். நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    சாமி வீதி உலாவை காண கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இன்று அதிகாலை 5-30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    அப்போது மாட வீதிகளில் இருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து கோவிந்தா கோவிந்தா என விண்ணைமுட்டும் அளவுக்கு பக்தி பரவ சத்துடன் கோஷமிட்டனர். வாகன ஊர்வலத்தின் முன்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷம் வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடந்தது.

    மாலை 4 முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும் 6 முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலை யான் வீதிஉலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் உலா வருகிறார்.

    ரதசப்தமி விழாவை காண வந்த பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், மோர் உள்ளிட்டவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன.

    சுகாதார துறை சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

    மேலும் நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு மலிகா கார்க் தலைமையில் 650 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் காட்சியளிப்பது பரவசத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    • மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம்.
    • நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம்.

    ரத சப்தமி அன்று காலையில், சுமங்கலிகள் ஏழு எருக்கம் இலைகளை (தலை மீது 3, வலது புஜத்தில் 2, இடது புஜத்தில் 2 ) அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம். ஆண்கள் எருக்கம் இலைகளில் அட்சதை மட்டுமே வைத்து நீராட வேண்டும். நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம். நீராடும்போது கீழ் கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைச் சொல்வது நன்மை தரும்.

    ஸப்த ஸப்தப்ரியே தேவி ஸப்த வோதைக தீபிகே

    ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்

    யதா ஜன்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸி ஜன்மஸி

    தன்மே சோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்தஸப்தயீ

    ஏதத் ஜன்ம க்ருதம் பாபம் யத்ச ஜன்மாந்த ரார்ஜிதம்

    மனோவாக்காய ஜம் பாபம் ஜ்ஞாதாஜ்ஞாதேச புன

    சூரிய அர்க்கியமும்.. மந்திரமும்..

    சூரியனுக்கு அர்க்கியம் கொடுக்கும்போது, வலது கையில் அட்சதை, பூ, சந்தனம், குங்குமம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, பாலும் தண்ணீரும் கலந்த நீரை ஒரு கிண்ணத்தில் இடது கையால் எடுத்து, வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் நீரானது, ஒரு நல்ல தட்டில் (பித்தளை அல்லது செப்பு) விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் கீழே சொல்லியுள்ள மந்திரத்தை சொல்லவும்.

    ஸப்த ஸப்திவஹ ப்ரீத ஸப்தலோக ப்ரதீபன்

    ஸப்தமீ ஸஹிதோதேவ க்ருஹாணார்க்யம் திவாகர

    திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்

    இதி ஸப்த விதம் பாபம் ஸ்நாநான் மே ஸப்தஸப்திதே

    ஸப்தவ்யாதி ஸமாயுக்தம் ஹர மாகரி ஸப்தமி

    • வருகிற 16-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது.
    • தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    திருமலை:

    திருச்சானூர் பத்மாவதி கோவிலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரதசப்தமி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 8.45 முதல் 9.45 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10.15 முதல் 11.15 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.45 முதல் 12.45 வரை கருட வாகனம், மதியம் 1.15 மணி முதல் 2.15 மணி வரை சின்னசேஷ வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனம், இரவு 8.30 முதல் 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் சாமி மாட வீதியில் உலா நடக்கிறது.

    மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலின் கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் உள்ள தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    இதையொட்டி, பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் அபிஷேகம், லட்சுமி பூஜை, ஆர்ஜித கல்யாணோற்சவம், குங்கும அர்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல்சேவை, வேதாசிர்வச்சனம் ஆகிய சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலுடன் இணைந்த ஸ்ரீசூர்யநாராயண சுவாமி கோவிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அஸ்வ வாகனத்தில் பக்தர்களுக்கு சாமி காட்சியளிக்கிறார்.

    ரத சப்தமியை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதன்படி காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

    அதன்பின்னர் நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலிக்கட்டை மற்றும் இதர வாசனை திரவியங்களின் புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நேற்று கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஸ்வர்ணகுமாரி வழங்கிய திரைச்சீலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    ×