search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மீனாட்சியம்மன் கோவில்"

    • 21-ந்தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
    • 22-ந்தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது.

    மதுரை:

    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின் 12 மாதங்களும் மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனைத்தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும்.

    மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (12-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந்தேதி) விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப்போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்.

    மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டும்போது பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. 21-ந்தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    22-ந்தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது.

    இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி ஏப்.23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்.23-ந்தேதிக்கு பதிலாக மே 11-ந்தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

    • கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
    • தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மதுரை:

    மதுரை சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 23-ந்தேதி சித்திரா பவுர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தர உள்ளனர். நடப்பாண்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக நடத்தி வருகிறது.

    இந்த சூழலில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், பானகம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்பேரில் இனிவரும் ஆண்டுகளில் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பிறகே நீர், மோர் பந்தல், அன்னதானம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வழங்க வேண்டும்.

    அதேபோல் கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர். இந்த நேர்த்திக்கடனின்போது தோல் பையில் நிரப்பிய தண்ணீரை துருத்தியின் மூலமாக பீய்ச்சி அடிப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிலர் தோல் பையில் சிறிய மோட்டார் பொருத்தி அதிவேகத்தோடு நீரை பீய்ச்சி அடிப்பதுடன் வாகனத்தில் வரும் அழகர், அழகருடன் பயணிக்கும் பட்டர்கள், பெண்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதையொட்டி அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (7-ந்தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே சமயம் உயரழுத்த மோட்டார் பம்பு, மின் மோட்டார்கள் ஆகியவற்றின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கள்ளழகர் அழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு வரும் வரை இடையில் உள்ள எந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என ஐகோர்டு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
    • 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.

    மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.

    24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.

    • மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
    • அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள்.

    சென்னை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்களாக மதுரை அண்ணா நகரை சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனி வேல்ராஜன், கே.கே.நகர் சீனிவாசன், அரசரடி மீனா ஆகிய 5 பேரை நியமித்து இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கடந்த மே 23-ந்தேதி மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள். அறங்காவலர்கள் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.
    • ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    மதுரை:

    மதுரை வலையங்குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த மாநாடு வெற்றி பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.

    கிழக்கு நுழைவு வாயில் வழியாக கோவிலுக்குள் சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்த அவர் பிரகாரங்கள் வழியாக சுற்றி வந்தார். பொற்றாமரை குளத்தின் படிக்கட்டுகளில் நின்றவாறு கோவில் அழகை ரசித்தார்.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இன்று இரண்டாவது நாளாக அவர்கள் சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டனர். இதையடுத்து கனிமொழி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி கோவிலுக்குள் சென்ற சிறிது நேரத்தில் கனிமொழி எம்.பி.யும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். இருவரும் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    ஆனால் இருவரும் வெவ்வேறு பிரகாரங்களில் இருந்தனர். அவர்கள் சந்திக்கவில்லை என்று உடன் சென்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் முதலில் எடப்பாடி பழனிசாமியும், அதன் பிறகு கனிமொழி எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் கோவிலை விட்டு வெளியே வந்து புறப்பட்டு சென்றனர்.

    இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.
    • மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரம்மாண்ட முறையில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு கடந்த 20-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் அ.தி.மு.க. தலைமை எதிர்பார்த்தது போல தொண்டர்கள் குவிந்ததால் மாநாடு மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும், வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றி கிடைக்கும் என்றும் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். நேற்று மாலை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் அழகர் கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக சேலத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மதுரைக்கு காரில் புறப்பட்டார். அவர் காலை 8.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு நுழைவாயில் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க, அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க என்று திரண்டு நின்ற தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை கொடுக்கப்பட்டது.

    மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதி, முக்குருணி விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள், பொற்றாமரைக்குளம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட சம்பவம் மதுரை அ.தி.மு.க. தொண்டர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி பின்னர் காரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் அதிகாலை முதலே திரண்டதால் அந்த பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன்.
    • கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அருகே உள்ள கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் கருமுத்து கண்ணன் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது மரண செய்தி அறிந்ததும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருவதுடன் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    மரணமடைந்த கருமுத்து கண்ணன் கடந்த 1953-ம் ஆண்டு தொழிலதிபர் கருமுத்து தியாகராஜர்-ராதா தம்பதியருக்கு ஒரே மகனாக பிறந்தார். இவர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் கலைக் கல்லூரி, திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், நூற்பாலைகளில் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    மிகச்சிறந்த நிர்வாகியாக போற்றப்பட்ட கருமுத்து கண்ணன் கடந்த 18 ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தொடர்ந்து பதவி வகித்தார்.

    இவரது பதவி காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பல்வேறு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. அங்கு குளிர்சாதன வசதி, தகவல் மையம், சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்கம் பிரதிஷ்டை உள்ளிட்ட ஆன்மீக பணிகள் நேர்த்தியாக செய்யப்பட்டன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உப கோவில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த கருமுத்து கண்ணன் ஏற்பாடு செய்தார்.

    மேலும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க துரித நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சியம்மன் கோயில் உள்ள வசந்த ராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதிலுள்ள தூண்கள் சேதம் அடைந்தது.

    அதனை மீண்டும் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கருமுத்து கண்ணன், அந்த பணிகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வந்தார். மத்திய அரசின் ஜவுளிக்குழு தலைவராக பதவி வகித்துள்ள அவருக்கு தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், கவுரவ பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கருமுத்து கண்ணனுக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களும் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களுக்கு தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மதுரைக்கு விரைந்துள்ளனர்.

    எனவே கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கருமுத்து கண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    அவரது இறுதி சடங்குகள் மற்றும் உடல் தகனம் நாளை பிற்பகலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×