search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலை விபத்து"

    • மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.
    • தற்போது இறந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜியின் குடும்பத்துக்கும் இதே போன்று நிவாரணம் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பெரிய காலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், அங்கு வேலை பார்த்த 14 தொழிலாளர்கள் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களுக்கு, உடனடியாக பிம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில், 11 பேர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். 3 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதில் புதுச்சேரி பிருந்தாவனம் 3-வது குறுக்கு தெரு வெங்கடாசலம், காலாப்பட்டை சேர்ந்த ரகுபதி, யுவராஜ், கிளியனுார் அடுத்த தென் சிறுவலுாரை சேர்ந்த நெடுஞ்செழியன் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் தமிழக பகுதியான கிளியனூரை அடுத்த தென் சிறுவலூரை சேர்ந்த நெடுஞ்செழியன், (34) சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந் தேதி இரவு இறந்தார்.

    இந்த நிலையில் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜ் (வயது 18) சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில், மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.

    மேலும் நெடுஞ்செழியன் மனைவிக்கு தொழிற்சாலையில் நிரந்தர பணி வழங்கவும், அவரின் 2 மகன்களின் கல்லூரி படிப்பு செலவையும் ஏற்கவும் ஒப்புக்கொண்டது.

    அதன்படி தற்போது இறந்த காலாப்பட்டை சேர்ந்த யுவராஜியின் குடும்பத்துக்கும் இதே போன்று நிவாரணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர்.
    • ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். தொழிற்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும். தொழிற்சாலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன? சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? என அறிக்கை கேட்டுள்ளோம்.

    அது வந்தவுடன் மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்கப்படும். மக்கள் பாதிக்கப்பட்டால் அதை மீறி எந்த நிறுவனமும் நடத்த முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.

    தொழிற்சாலையை மூடுவது எளிது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    தெலுங்கானாவில் தேவைப்படும் நேரத்தில் முதல்-அமைச்சர் கவர்னரை சந்திப்பது இல்லை. கோப்புகளில் தெளிவுக்குக்கூட கேட்க முடியாத நிலை உள்ளது. இதை சுப்ரீம்கோர்ட்டில் தெளிவு படுத்தியுள்ளோம்.

    ஆனால் புதுவையில் சரியாக நடக்கிறது. என்னை பொறுத்தவரை நான் பொறுப்பாக நடந்து கொள்கிறேன். நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர். புதுவை, தெலுங்கானாவில் இதுவரை மக்களுக்காகத்தான வேலை செய்கிறேன்.

    தெலுங்கானாவில் கவர்னருக்கு புரோட்டோ கால் தருவதில்லை. கொடி யேற்ற விடுவதில்லை, கவர்னர் உரை இல்லை. இதையெல்லாம் யார் கேட்பது? எல்லா விதத்திலும் நாங்கள் வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறோம். என்னை பொறுத்தவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.

    வேகமாக, தன்னிச்சையாக வேலை செய்கிறேன் என குற்றம்சாட்டுங்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள். மிகப்பெரிய டாக்டராக இருந்து வந்த நான் நேர்மையாகவே செயல்படுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போராட்டங்களை தடுக்கும் வகையில் காலாபட்டு வருவாய் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • தீவிபத்தில் காயமடைந்தோரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தில்பணியில் இருந்த 14 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 11 தொழிலாளர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 தொழிலாளர்களுக்கு ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலாப்பட்டை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு களை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து போராட்டங்களை தடுக்கும் வகையில் காலாபட்டு வருவாய் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை கவர்னர் அனுமதியுடன் அரசு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்து நடந்த தொழிற்சாலையில் சட்டங்கள், விதிகள், குத்தகை, உரிம நிபந்தனைகள் மற்றும் பிற நிபந்தனைகளை மீறுவதைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து புதுவை மாவட்ட நீதிபதி 7 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து புதுவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட நீதிபதியுமான வல்லவன் விசாரணையை தொடங்கி உள்ளார்.

    விபத்தில் காயமடந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 11 தொழிலாளர்களும் தீக்காயங்களுடன் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிபத்தில் காயமடைந்தோரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    • தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
    • பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று தம்போவ் கவர்னர் மாக்சிம் யெகோரோவ் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ் கோவின் தென் கிழக்கே உள்ள தம்போவ் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று தம்போவ் கவர்னர் மாக்சிம் யெகோரோவ் தெரிவித்தார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் சில நாட்களாக ரஷியாவின் ஆயுத கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொழிற்சாலை விபத்தில் 12 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சோடியம் சல்பேட்டை அம்மோனியாவுடன் கலக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் போய்சர் நகரில் ஒரு ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஜவுளித்தொழிலில் பயன்படுத்தப்படும் காமாஅமிலம் தயாரிக்கும் பிரிவில் நேற்று மாலை 4.20 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இதனால் ஆலையின் மேற்கூரை சேதமடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் பலியான 3 தொழிலாளர்கள் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் சோடியம் சல்பேட்டை அம்மோனியாவுடன் கலக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×