search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Factory Accident"

    • நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர்.
    • ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். தொழிற்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும். தொழிற்சாலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன? சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? என அறிக்கை கேட்டுள்ளோம்.

    அது வந்தவுடன் மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்கப்படும். மக்கள் பாதிக்கப்பட்டால் அதை மீறி எந்த நிறுவனமும் நடத்த முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.

    தொழிற்சாலையை மூடுவது எளிது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    தெலுங்கானாவில் தேவைப்படும் நேரத்தில் முதல்-அமைச்சர் கவர்னரை சந்திப்பது இல்லை. கோப்புகளில் தெளிவுக்குக்கூட கேட்க முடியாத நிலை உள்ளது. இதை சுப்ரீம்கோர்ட்டில் தெளிவு படுத்தியுள்ளோம்.

    ஆனால் புதுவையில் சரியாக நடக்கிறது. என்னை பொறுத்தவரை நான் பொறுப்பாக நடந்து கொள்கிறேன். நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர். புதுவை, தெலுங்கானாவில் இதுவரை மக்களுக்காகத்தான வேலை செய்கிறேன்.

    தெலுங்கானாவில் கவர்னருக்கு புரோட்டோ கால் தருவதில்லை. கொடி யேற்ற விடுவதில்லை, கவர்னர் உரை இல்லை. இதையெல்லாம் யார் கேட்பது? எல்லா விதத்திலும் நாங்கள் வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறோம். என்னை பொறுத்தவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.

    வேகமாக, தன்னிச்சையாக வேலை செய்கிறேன் என குற்றம்சாட்டுங்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள். மிகப்பெரிய டாக்டராக இருந்து வந்த நான் நேர்மையாகவே செயல்படுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போராட்டங்களை தடுக்கும் வகையில் காலாபட்டு வருவாய் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • தீவிபத்தில் காயமடைந்தோரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தில்பணியில் இருந்த 14 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 11 தொழிலாளர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 தொழிலாளர்களுக்கு ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலாப்பட்டை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தொழிற்சாலை மீது குற்றச்சாட்டு களை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து போராட்டங்களை தடுக்கும் வகையில் காலாபட்டு வருவாய் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை கவர்னர் அனுமதியுடன் அரசு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்து நடந்த தொழிற்சாலையில் சட்டங்கள், விதிகள், குத்தகை, உரிம நிபந்தனைகள் மற்றும் பிற நிபந்தனைகளை மீறுவதைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து புதுவை மாவட்ட நீதிபதி 7 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து புதுவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட நீதிபதியுமான வல்லவன் விசாரணையை தொடங்கி உள்ளார்.

    விபத்தில் காயமடந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 11 தொழிலாளர்களும் தீக்காயங்களுடன் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிபத்தில் காயமடைந்தோரை உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

    ×